ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 6

முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. ‘நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்’ எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே வைத்துக்கொண்டு அதனை முழுமையாக புறிந்துகொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக குரான் குறிப்பிடும் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவைகளை ஒவ்வொரு முஸ்லீமும் நிறைவேற்ற வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது, ஆனால் அந்த வணக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்றால் அதற்கு குரானில் விளக்கம் கிடைக்காது. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனை குறித்து அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் இந்த தண்டனை பற்றிய விபரங்களை குரானில் தேடினால் இருக்காது. இப்படி விடுபட்ட, விளங்கிகொள்ள முடியாதவைகளுக்கு விளக்கமாக வருபவைகள் தாம் ஹதீஸ்கள் எனப்படுபவை.

ஹதீஸ் எனும் சொல்லிற்கு செய்தி அல்லது புதிய விசயம் என்பது பொருள். முகம்மது இறப்பதற்கு முன் ஆற்றிய கடைசிப் பேருரையில், “நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். ஒன்று இறைவனின் வேதம். மற்றது என்னுடைய வழிகாட்டுதல். இந்த இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார். இதில் என்னுடைய வழி காட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது தான் ஹதீஸ் எனப்படுகிறது. அதாவது முகம்மது கூறிய, செய்த அல்லது செய்வதற்கு அனுமதியளித்தவைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

முகம்மதிற்கு இறைச்செய்தி (வஹி) வரும்போது அவர் கேட்டுச்சொல்வதை உடனிருந்தவர்கள் எழுதிவைத்துக்கொள்வார்கள் அது குரான். அந்த குரானின் வாசகங்களில் ஐயம் ஏற்பட்டால் அல்லது செயல் முறையில் நடைமுறையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இன்னும் நடப்பு வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள், அறியாமைகள் ஏற்பட்டால் அவைகளை முகம்மதுவிடம் விளக்கம் கேட்பார்கள். அவர் அவைகளுக்கு வேண்டிய விளக்கங்களை அளிப்பார், இது தான் ஹதீஸ். ஆனால் அவ்வப்போது அவர் அளிக்கும் விளக்கங்களும் குறிப்புகளும் எழுதிவைக்கப்படவில்லை. முகம்மதின் சம காலத்தவர்கள், சற்றே பிந்தியவர்கள் போன்றவர்களுக்கு அது ஆவணமாக வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் பின்னர் வந்தவர்களுக்கு அவைகளின் தேவை தோன்றியது. அதனால் உமர் இப்னு அஜீஸ் (அபூபக்கருக்கு பின்னர் ஆட்சிசெய்த உமர் அல்ல இவர் இரண்டாம் உமர்) என்பவர்தான் முதன் முதலில் ஹதீஸ்களை தொகுக்கவேண்டியதன் தேவையறிந்து ஆபூபக்கர் இப்னு ஹஸம், இப்னு இஸ்ஹாக்,  ஸூஃப்யானுத் தவ்ரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, இப்னு ஜூரைஜ், அப்துல்லாஹ் இப்னு முபாரக் போன்றோர்களைக்கொண்டு நூல்களாகத்தொகுத்தார். எப்போது? முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து. இதனைத்தொடர்ந்து இமாம்கள் என இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் ஷாபி, ஹன்பலி, மல்லிக் ஆகியோர்களால் தனித்தனியே முஸ்னத் ஷாபி, முஸ்னத் அஹ்மது, முவத்தா போன்ற ஹதீஸ் நூலகள் தொகுக்கப்பட்டன. இவைகளில் முஸ்னத் அஹ்மது மட்டும் இன்னும் இருப்பதாக தெரிகிறது. மற்றவைகள் பற்றி தகவல் இல்லை.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். முகம்மது இறந்து நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகள் கழித்து இவைகளை எப்படி தொகுத்திருப்பார்கள் என்பது தான். செவி வழிச்செய்திகள் தான். இன்னாரிடமிருந்து இன்னார் கேட்டார், அவரிடமிருந்து இவர் செவியுற்றர் என்று தொகுத்தவர்களை அடைந்தவைகள் தான் தொகுக்கப்பட்டன. இவைகளில் முகம்மது சொல்லி செய்தவைகள் மட்டுமன்றி அவர் சொல்லாததும் செய்யாததும் அவரின் பெயரில் கலந்துவிடுவது இயல்பானது தான். இதனால் இவர்களுக்கு பிறகு வந்த அறுவர் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் தொகுத்து பல முறைகளில் சரிபார்க்கப்பட்டு தவறானவைகள் என அறியப்பட்டவைகளை எல்லாம் நீக்கி ஆறு தொகுப்புகள் வந்தன‌

1) முகம்மது இஸ்மாயீல் புஹாரி என்பவர் சுமார் ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸஹீஹுல் புஹாரி என்ற பெயரில் நூலாக்கினார்.

2) முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் என்பவர் சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸ்ஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் நூலாக்கினார்.

3) அபூதாவூது சுலைமான் அல் சஜஸ்தானி என்பவர் சுமார் ஐந்து லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 5200 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை சுனது அபீதாவூது என்ற பெயரில் நூலாக்கினார்.

4) அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ என்பவர் 4000 ஹதீஸ்களை ஜாமிஉத் திர்மிதி என்ற பெயரில் நூலாக்கினார்.

5) அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ என்பவர் 5700 ஹதீஸ்களை ஸூனனுந் நஸாயீ என்ற பெயரில் நூலாக்கினார்.

6) அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் என்பவர் 4300 ஹதீஸ்களை ஸீனனு இப்னுமாஜா என்ற பெயரில் நூலாக்கினார்.

இவர்கள் அனைவரும் கிபி 800 ம் ஆண்டிலிருந்து கிபி900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளாக இருந்தாலும் முதல் இரண்டு நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸ்ஹீஹ் முஸ்லிம் என்பவை தான் குரானுக்கு அடுத்தபடியான இடத்தில் உண்மையான, கலப்பில்லாத‌ ஹதீஸ் தொகுப்புகளாக ஏற்கப்பட்டுள்ளன.

இவர்கள் இது சரியான ஹதீஸ் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவாக ஹதீஸ் எனப்படுவது இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். முதலாவது சொல்லப்படும் செய்தி அடுத்தது அறிவிப்பாளர்கள் அதாவது தொகுத்த ஆசிரியருக்கு அந்த ஹதீஸ் யார் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்பது. ஒவ்வொரு ஹதீஸுக்கு பின்னாலும் குறைந்தது எட்டு பேராவது இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள், அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். அடுத்து அறிவிப்பாளர்களின் குணநலன்களில் ஏதாவது குறையிருக்கிறதா? அவர் பொய் சொல்லக்கூடியவரா? மறந்து விடக்கூடியவரா? என்று பார்ப்பார்கள். அறிவிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டவரா? என்று பார்ப்பார்கள் இப்படி சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு இவற்றில் சிக்கியவைகளை தள்ளிவிட்டு ஏனையவற்றையே தொகுத்தார்கள். இதன்படி அறிவிப்பவர்களில் ஆண்களில் முகம்மதின் நண்பர்களில் ஒருவரான‌அபூ ஹுரைரா என்பவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளராவார், இவர் 5300 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளர் முகம்மதின் மனைவியான ஆயிஷா, இவர் 2200 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.

ஹதீஸ்களை திரட்டிய ஆசிரியர்களின் உழைப்பு மிகமிகக் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். ஹதீஸ் ஆசிரியர்களின் தேடல் எப்படி இருந்தது என்பதற்கு நிறைய கதைகள் உலவுகின்றன. ஹதீஸ் சேகரிக்கச்செல்லும் போது ஒருவர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார், அவர் ஆட்டை ஏமாற்ற ஆட்டின் குட்டியைப்போன்ற ஒன்றை ஆட்டின் கண்முன் நிருத்தியிருந்தாராம். பாலுக்காக ஆட்டை ஏமாற்றுபவர் கூறும் ஹதீஸை ஏற்பதற்கில்லை என அவரின் ஹதீஸை கேட்காமலேயே திரும்பிவிட்டாராம். ஒருவேளை அவர் கறந்து முடித்து ஆட்டை ஓட்டிவிட்டு பாலை குடித்துக்கொண்டிருந்த போது சென்றிருந்தால் ஹதீஸ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லவா? அல்லது ஹதீஸை கேட்டுச்சென்ற பின் இதுபோல் நிகழ்ந்திருந்தால்? இன்னொருவர் தம் பொருட்களை திருட்டு கொடுத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருந்தாராம். களவு போன பொருட்களின் பாதிப்பு ஹதீஸிலும் வந்துவிட்டால் என்றெண்ணி அவரிடம் ஹதீஸை கேட்காமலேயே திரும்பினாராம். ஏற்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் ஆசிரியருக்கு தெரியாமல் இதுபோன்ற விசயங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்? இது தேவையில்லாத யூகம் என இவற்றை ஒதுக்கித்தள்ளலாம். ஆனால் இதனால் இந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும், இதனால் இந்த ஹதீஸை சேர்க்கவேண்டும் என்றெல்லாம் கூறவரவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்பட விரும்புவதெல்லாம், அதன் தோராயமான தன்மையைத்தான். இவைகளும் கூட முகம்மது இறந்து நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு ஆண்டுகள் வரையில் தான். முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஹதீஸ் உண்மையானதா இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தெரிவதற்கு அறிவிப்பாளர் வரிசை, தன்மை, அடையாளம் காணப்பட்டவரா என்பனவற்றையெல்லாம் விட அதன் உள்ளடக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் இரண்டு ஹதீஸ்களை கொள்வோம்.

ஹதீஸ் 1.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.

ஹதீஸ் 2.

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். தவறை உணர்ந்த அவன் இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான். பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு பாவமன்னிப்பு உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார். அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள். அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில் “மனசாட்சி அடிப்படையில் நடந்து” என்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.

இன்னொரு சமகால எடுத்துக்காட்டு ஒன்றை பார்ப்போம். புஹாரியில் முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று “முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததையெல்லாம் செய்ததாக கூறும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார்” என்று கூறுகிறது. ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.

இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு. முதலிடத்தில் இருக்கும் குரானிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கும் ஹதீஸ்களின் கற்பை தொட்டுப்பார்ப்பது மாற்றுக்குறைவானதாகவே இருக்கும். ஹதீஸ்களை பற்றி குறிப்பிடும் போது சொலவடையாக ஒன்றை கூறுவார்கள் “முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றன” என்று. பல்லாயிரம் ஹதீஸ்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவு தெளிவாக முகம்மதின் வாழ்வைச்சொல்லுகின்றன என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. எப்படியென்றால் குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.

ஆனாலும் ஹதீஸ் தொகுப்புகளின் காலத்திற்கு முன்பே முகம்மதின் வரலாறு தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…

இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்

ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக்
கருதப்படுவான்.

மேலே நீங்கள் கண்டது வெள்ளையர்களுக்கு எதிராக மக்களை அழைக்கும் சின்ன மருதுவின் திருச்சி அறிக்கை. மக்கள் நலனும் வெள்ளையர்களை எதிர்த்து காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடுவதும் வேறுவேறல்ல என அறிவிக்கும் முதல் அறிக்கை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திப்பு முதல் துந்தாஜிவாக் வரை கட்டியமைத்த கூட்டமைப்பை கட்டிக்காக்க தீரத்துடன் போராடிய மருதிருவரின் குருபூஜைகள் இப்போது கொண்டாடப்படுகின்றன. அவர்களின் தன்னலமற்ற வீரத்திற்காகவோ நாட்டுப்பற்றுக்காகவோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் தியாகத்திற்காகவோ அல்ல. ஜாதிக்காக. யார் கொண்டாடுவது? பார்ப்பனீயத்தின் அடிவருடிகளாக அடக்குமுறை சாதீயத்திமிரையே பெருமையாக முறுக்கித்திரியும் தேவர்சாதி குறும்பைகள். ஆண்டுதோறும் தேவர் குருபூஜை என்ற பெயரில் ஒரு ஜாதி வெறியனை கொண்டாடும் கொண்டாடும் கூட்டம், சின்ன மருது வெஞ்சினத்துடன் யாரை தன் அடிமயிருக்கு சமம் என கொதித்தெழுந்தானோ அவர்கள்; முதல் சுதந்திரப்போரை மக்கள் போராக‌ நடத்திக்காட்டிய அந்த நாயகர்களை சாதியப்பட்டியில் அடைத்து ஆதிக்கவெறியர்கள் விழா கொண்டாடுவதை, விடுதலை வேட்கை கொண்டவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

 

தேவர் ஜெயந்தி வருகிறது என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள் பயத்துடன் நாட்களை கழிக்கவேண்டிய அளவுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஜாதீய அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. மன்னர் பரம்பரை என்று கூறிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிடுவதை எந்தக்கட்சி அரசானாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது இங்கு. மருதிருவரையும் சாதித்தூபம் போட பயன்படுத்துவதையும் இந்த நோக்கில்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு.

 

எந்தக்கட்சி அரசானாலும் இப்படி சாதி வெறியர்களுக்கு துணைபோவது ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல் என்று பொதுமைப்படுத்தி குறுக்கிவிடவும் முடியாது, அதையும் மீறி உணர்வு ரீதியான காரணமும் இருக்கிறது. அன்று தங்களின் எழுச்சி மிக்க வீரத்துடன் மக்களையும் இணைத்து வெள்ளையர்களை எதிர்த்து போராடிய போது “எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை” என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் கூறினான். அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையர்களுக்கும் புறியவில்லை, இன்று ஆண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கும் புறியவில்லை அவர்கள் ஏன் போராடினார்கள் என்று. அன்னியன் நம்மை ஆள்வதா? என்று கொதித்தெழுந்தது அன்றைய இளைஞர் கூட்டம். நாங்களும் அன்னியர்கள் தாம் என்று தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் மூலமும் நிரூபித்துவருகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். எங்கே நம் இளைஞர் கூட்டம்?

 

சொந்த மக்களின் வயிறிலடிக்கும் துரோகிகளிடமும், சாதிவெறிக்கும்பலிடமும் அடையாளம் தெரியாமல் கரைந்துபோய்விடுவதற்கா அன்று அவர்கள் போராடினார்கள்? இல்லை, அவர்களின் வரலாறு நமக்கு போராடும் துணிவையும், ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் தீரத்தையும் ஒருங்கே ஊட்டும் உணவு. அதை நாம் மீட்டெடுப்போம், கடைப்பிடிப்போம்.

 

மருதிருவரின் போராட்ட வரலாற்றை சுருக்கமாக தெரிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்

குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே  பகுதி 5


முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதி பாதுகாத்துவைக்குமாறு ஒரு குழுவை நியமித்து பணித்திருக்கத்தேவையில்லை, ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான். அப்படி இருக்கும்போது தொழுகையின்போது ஓதுவதை கட்டாயமாக்கி மனப்பாடமாகவும், எழுதிவைத்து திட ஆதாரமாகவும் பாதுகாக்கும் தேவை முகம்மதுக்கு இல்லை. ஆகவே முதன்மையானது இரண்டாம்பட்சமானது எனும் பேதமின்றி குரானை பாதுகாக்கும் தெரிவுதான் முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனால் அவரின் மரணத்திற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே வரிசைப்படி இல்லை எனக்கூறி அது அழிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? என்பது தான் மையமான கேள்வி. அதுவும் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முகம்மது தான் அழகிய முன்மாதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துவைத்திருக்கும் நிலையில் குரான் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.

 

அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.

 

இப்படி குரானை உஸ்மானுக்கு முன் உஸ்மானுக்கு பின் என்று பிரித்து குரானின் பாதுகாப்பில் கேள்வி எழுப்புவதன் காரணம் என்ன? குரான் வசனம் 31:27

 

“பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்”

 

என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது? அல்லா அனைத்தும் அறிந்தவன் முக்காலமும் உணர்ந்தவன், எல்லாம் தெரிந்த அவனுக்கு பின்னர் தாளும் மையும் வரவிருப்பது தெரியாமலா போயிருக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால் தாளும் மையும் தேவையில்லாமலேயே கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும் எனும் இன்றைய நிலை அந்த எல்லாம் அறிந்த அல்லாவுக்கு தெரியவில்லையல்லவா? இன்றைய முன்னேற்றங்கள் தெரியவில்லை அதனால் அதை குறிப்பிடவில்லை ஆனால் அன்றைய காலத்திற்கு சற்றைக்கு பின்னான முன்னேற்றங்கள் தெரியும் அதனால் அதை குறிப்பிட்டுள்ளான் என்பது முரணில்லையா? இஸ்லாமியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒன்று அல்லாவுக்கு எதிர்காலம் முழுமையாக தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின் காலத்திற்குப்பின் குரானில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும். இந்த இரண்டில் எதை ஏற்பார்கள்? எதை மறுப்பார்கள்?

 

 

முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஸ‌ஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்

 

“ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது”

 

என்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கண‌வனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஸ‌ஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?

 

குரானை எழுதுவதற்கென்றே முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரானை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பதில்லை, அந்த எழுத்து முக்கியமானதல்ல அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. அந்த குரானுக்கும் தற்போதைய குரானுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கும் முஸ்லீம்கள், ஆய்ஷாவின் அந்த வரிகளை கவனித்துப்பார்க்கவேண்டும். “அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது” முகம்மது இறந்தபிறகு குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூற முன்வந்த முகம்மதின் மனைவி யாரால் எப்போது மாற்றப்பட்டது என கூற முன்வரவில்லை. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமானது

சிங்களம் சென்றுவந்தோம், தமிழர்களையும் கண்டோம்

இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரில் ஏதிலிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் ராணுவக்காவலுக்குள் விடப்பட்டுத்தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் கண்ணீரை துடைத்துவரும்(!) திட்டத்துடன் அனுப்பபட்ட நாடாளுமன்ற பத்துப்பேர் குழு திரும்பிவந்திருக்கிறது. இந்த ஐந்து நாள் பயணத்தில் ஐந்து மணிநேரம் மட்டும் தமிழர்களை பார்வையிட்டுவிட்டு மீதி நேரங்களில் ராஜபக்சேவுடனும், அரசின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பதிலுமே செலவிட்டுள்ளது. பின்னர் சென்னையில் முதல்வரை சந்தித்தனர், முதல்வரும் இன்னும் பதினைந்து நாட்களில் 58 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்தார் அத்துடன் எல்லாம் முடிந்தது. ஆனால் இவைகள் யாரை ஏமாற்ற?

முதலில் இந்தக்குழு இந்திய அரசின் சார்பில் செல்லவிருப்பதாக கூறப்பட்டது, பின்னர் கட்சியின் செலவில் செல்வதாக மாற்றப்பட்டது. அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் என்று முதலிலும், கூட்டணிக்கட்சியினர் மட்டும் என்று பின்னரும் அறிவிக்கப்பட்டது. நாடகம் நடத்துவதற்குக்கூட தாம் தயாரில்லை என மைய அரசு நிலைப்பட்டிருப்பதையே இவை காட்டுகின்றன. என்றாலும் அரசின் சார்பில் சென்றிருந்தாலும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் சென்றிருந்தாலும் இந்தக்காட்சிகளில் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டிருக்கப்போவதில்லை என்பது தான் நிஜம். இந்தக்குழுவில் தமிழர்கள் பிரச்சனைகளில் அதிகம் உணர்ச்சிவயப்படக்கூடியவர் என்று அறியப்படுபவரான திருமா “முகாம் நிலைகள் திருப்திகரமாக இருக்கிறது என எமது குழுவில் யாரும் சொல்லவில்லை. நாம் திருப்தி அடையவும் இல்லை. ஆயினும் முகாம்களில் 1500 மருத்துவப்பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்பதனையும் மறுப்பதற்கில்லை.” என்று தெரிவித்துள்ளார். திரைப்பட நகைச்சுவை காட்சி போல கஷ்டப்படுகிறார்கள் ஆனால் கஷ்டப்படவில்லை என்று கூறுவதற்குத்தான் இவர்கள் சென்றது, இதற்குத்தான் சோனியாகாந்தி, கருணாநிதி, ராஜபக்சே, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்களுடன், “இந்திய உறவுகளே! வருக! வருக!!” என்று வரவேற்கும் சுவரொட்டிகள் யாழ்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்தன. இந்திய அரசின் திட்டத்துடன், இந்திய ராணுவ உதவியுடன், ராணுவ தளவாடங்கள் இன்னும் அனைத்துவகை உதவிகளுடன் தான் தமிழர்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற உண்மையை இதுபோன்ற சோபையற்ற நாடங்களின் மூலம் மறக்கடித்துவிட முடியுமா?

58 ஆயிரம் பேர் பதினைந்து நாட்களில் திருப்பியனுப்பப்படுவர் எனும் கருணாநிதியின் அறிக்கையை, இலங்கை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா மறுத்துள்ளார். “தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது” என்கிறார் அவர். இலங்கை அரசின் கொள்கைப்படி தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். என்ன இலங்கை அரசின் கொள்கை? தமிழர்களை மொத்தமாக குடியமர்த்தி தமிழர் பகுதிகளாக மீண்டும் இருக்கவிடப்போவதில்லை சிங்களவர்களையும் சேர்த்து குடியமர்த்திவிடவேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் கன்னிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இனவழிப்பு முடிந்ததிலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றனர்.

மூன்று லட்சம் தமிழர்களை இத்தனை மாதங்களாக முட்கம்பி சிறைகளுக்குள் ஏன் அடைத்து வைத்திருக்கவேண்டும்? ஏகாதிபத்தியங்களுடனான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சிறப்பு பொருளாதார மையங்களை எங்கு எவ்வளவு அளவில் அமைப்பது எந்த்ந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றுவது? அவர்களின் வேலை வாய்ப்பிற்கான (அதாவது முதலாளிகளின் தேவைக்கு) கட்டுமானங்களுக்கு யார் பொறுப்பேற்பது? என்பன போன்ற பேரங்களில் இன்னும் நிறைவு எட்டப்படவில்லை. அடுத்து போர்க்குற்றங்களுக்கான தடயங்களை அழிப்பது. இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் தமிழர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். போர் நடந்து கொண்டிருந்தபோது அவர்களின் உரிமைகளைப்பற்றி பேசாமல் தமிழர்களை கொல்கிறார்கள் என்று இரக்கத்தை காட்டி உரிமைகளை மறைத்ததுபோலவே இப்போதும் சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறார்கள், குடிதண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள், மாற்றுடை இல்லாமல் அவதிப்படுகிறார்கள், பருவமழை வந்தால் தாங்கமுடியாத துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்று அவர்களின் சிரமங்களை காட்டி உண்மையை மறைக்கிறார்கள்.

இங்கிருந்து சென்ற குழு, அது அரசுக்குழுவானாலும் தனிப்பட்ட குழுவானாலும்; அனைத்துக்கட்சியானாலும் தனிக்கட்சியானாலும் தமிழர்களை இத்தனை காலமாய் அடைத்துவைத்திருக்கும் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தமுடியுமா இவர்களால்? இலங்கை அரசுக்கு எப்படி அவைகளை மறைக்கும் தேவையிருக்கிறதோ அதேபோல் இந்திய அரசுக்கும் இருக்கிறது. அந்த தேவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமா? இதை உணராமல் இன்னும் இந்திய அரசின் தயவில் ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடும் என நம்புவது முட்டாள்தனமானது. இந்த முட்டாள்தனத்திலிருந்து வெளிவருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையின் முதற்படி.

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே  பகுதி 4

டாப்கபி அருங்காட்சியகத்தில் உள்ள குரான்

இதில் முரண்பாட்டை காணமுடியுமா? இதைப்போல் ஒன்றை உருவாக்கிக்காட்டமுடியுமா? எனும் இரண்டு கேள்விகளை அடுத்து, குரான் இறைவனால் இறக்கப்பட்டதுதான் என்பதற்கு எடுத்துவைக்கப்படும் இன்றியமையாத இன்னொன்று அன்றிலிருந்து இன்றுவரை அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத ஒரே வேதம் இது தான் என்பது. அதற்கு சான்றாக இரண்டு குரான் படிகள் இன்றும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரின் அருங்காட்சியகத்தில் ஒரு படியும், துருக்கியின் இஸ்தான்புல் நகரின் டாப்கபி அருங்காட்சியகத்தில் ஒருபடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இன்னும் விரிவாக அறிந்துகொள்ள குரான் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்வது தேவையானதாகும்.

சற்றேறக்குறைய கிபி 610 ல் முகம்மதுவின் 40ஆவது வயதில் தொடங்கி 633ல் அவர் இறக்கும் வரை 23 ஆண்டுகளில் ‘வஹி’யாக வெளிப்பட்டதுதான் குரான். ஆண்டவனின் சிறப்பு பணியாளரான ஜிப்ரீல் என்பவர் முகம்மதுவுக்கு கற்றுக்கொடுக்கொடுக்கும் நிகழ்வு தான் ‘வஹி’ என்பது. அந்தந்த காலகட்ட பிரச்சனைகள் தேவைகளுக்கு ஏற்ப சிலச்சில வசனங்களாக அவ்வப்போது இறங்கியது(!) முகம்மது தனித்திருக்கும்போதும், மக்களுடனிருக்கும் போதும் வசனங்கள் இறங்கியிருக்கின்றன. ஆனால் ‘வானவரை’ பார்த்தவர்களோ அல்லது அவர் வந்து சென்றதுக்கான தடையமோ கிடையாது. இதன் காரணமாக ஆண்டவனே நேரடியாக முகம்மதின் மனதில் சில வசனங்களை போட்டதாகவும் கூறுவர். இப்படி முகம்மதுவுக்கு வெளிப்படும் குரான் வசனங்களை மனனம் செய்து தன் தோழர்களிடம் கூறுவார், அவர்கள் அதை தோல்களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைத்துக்கொள்வர். குரானை எழுதிவைத்துக்கொள்வதற்காக ஒரு குழுவையும் முகம்மது நியமித்திருந்தார். அவர்களில் முகம்மதுவுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்ற அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, முஆவியா ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். இப்படி தொகுக்கப்பட்ட குரான் இன்றைய குரானிலிருந்து வேறுபட்டது, இன்றுள்ளதைப்போல் வரிசைப்படுத்தப்படாமல் வசனங்களின் மொத்தமான தொகுப்பாக இருந்தது. யாருக்கு எந்தப்பகுதி வேண்டுமோ அதை எடுத்து படித்துக்கொள்ளலாம். முஸ்லீம்களின் வணக்கமுறையான ஐவேளை தொழுகையின் போதும் குரானின் பகுதிகள் ஓதப்படும் இது முஸ்லீம்கள் குரானை மறந்துவிடாமலிருக்க முகம்மது செய்த ஏற்பாடு.

முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. ஸைத் பின் ஸாபித் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு முகம்மது தொகுத்திருந்த குரான் , மனப்பாடாம் செய்து வைத்திருந்தவர்களின் உதவியுடன் ஒரு குரான் தயாரிக்கப்பட்டு அதுவே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. ஐயம் ஏற்படும் வேளைகளில் இந்த குரானின் அடிப்படையிலேயே தீர்வுகள் பெறப்பட்டன. இந்த குரான் அபூபக்கருக்கு பிறகு வந்த உமரின் ஆட்சியிலும் அதிகாரபூர்வமானதாக இருந்தது. உமருக்குப்பின் அவரின் மகளும் முகம்மதின் மனைவியுமான ஹப்ஸா என்பவரிடத்திலும் இருந்தது. உமருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான் மீண்டும் ஒரு குரானை தொகுக்க முற்படுகிறார். உஸ்மான் தானே தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வசனங்களை அத்தியாயமாக ஒழுங்குபடுத்தி இன்றிருக்கும் வரிசைப்படி ஒரு குரான் தயாரிக்கப்பட்டு, அது பல படிகள் எடுக்கப்பட்டு விரிவடைந்திருந்த பல ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அப்படி அனுப்பிவைக்கப்பட்ட குரான் படிகளில் இரண்டு தான் ரஷ்யாவிலும் துருக்கியிலும் இருக்கிறது, அதாவது முகம்மதின் மரணத்திற்குப்பின் கால் நூற்றண்டு கழிந்து. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் உஸ்மான் தனது ஆட்சியில் தயாரிக்கப்பட்ட குரானைத்தவிர ஏனைய அனைத்து குரானையும் எரித்துவிடுமாறு உத்தரவிடுகிறார். அதன் படி அனைத்தும் எரிக்கப்படுகின்றன, முகம்மது தயாரித்திருந்தது, அபூபக்கர் காலத்தில் தயாரிக்கப்பட்டு ஹப்ஸாவிடம் இருந்தது என அனைத்தும் எரிக்கப்படுகின்றன. ஏனைய குரான்களை அழிப்பதற்கு உடன்பட மறுத்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்களும் வற்புறுத்தப்பட்டு அனைத்தும் அழிக்கப்படுகிறது. இன்று நடைமுறையில் இருக்கும் அனைத்து குரானும் உஸ்மான் காலத்தில் தயாரிக்கப்பட்டதின் அடிப்படையிலேயே அச்சிடப்படுகின்றன.

இந்த இடத்தில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி, உலகம் உள்ளவரை தோன்றும் அனைத்து மனிதர்களுக்கும் அழகிய முன்மாதிரி முகம்மது தான் என்பதில் எந்த முஸ்லீமுக்கும் ஐயம் எழும் வாய்ப்பே இல்லை. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் செருப்பு, வாள் வைத்திருந்த தோலுறை கூட பத்திரப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முகம்மது எதன் அடிப்படையில் சமூகத்தை திரட்டினாரோ, உலகம் உள்ளவரை எந்த இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறினாரோ அந்த இறைவனால் முகம்மதுவுக்கு வழங்கப்பட்டு அவரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்ட குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது. இது ஏன்?

இதற்கு பதில் கூறுமுகமாக, முகம்மது தொகுத்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது முறையாக தொகுக்கப்படாமல் தனித்தனி வசனத்தொகுதிகளாக இருந்தது. அதன் அடைப்படையில்தான் இது தொகுக்கப்பட்டிருக்கிறது எனவே வித்தியாசமில்லை, முகம்மது இருக்கும் போது மனனம் செய்திருந்தவர்கள் தான் தொகுத்தார்கள், எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றெல்லாம் காரணங்களாக அடுக்குகிறார்கள். ஆனால் முக்கியமான விசயம் என்னவென்றால் ஐயம் என்று வந்துவிட்டால் ஒப்பிட்டு பார்ப்பதற்கு முகம்மது தொகுத்த குரான் இன்று இல்லை, உஸ்மான் காலத்தில் தொகுத்தது தான் இருக்கிறது. வரிசை மாறியிருக்கும் என்பது தானே அதை அழித்ததற்கு கூறும் காரணம், வரிசை மாறினால் என்ன வசனம் அதே வசனம் தானே அழிக்கும் தேவை ஏன் எழுந்தது? வரிசையை வசன எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டிய அவசியமில்லை எப்படியும் இருக்கலாம். இன்று இருக்கும் குரான்களில் கூட வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் வசனத்தை ஒப்பிடுவதற்கு திடனான ஆதாரம் ஒன்றுமில்லை. உஸ்மானுக்கு பிறகு குரானில் மாற்றமில்லை என்றால் அதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 25 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா? முஸ்லீம்கள் நேர்மையாக சிந்தித்துப்பார்க்கும் நேரமிது.

முதன் முதலில் முகம்மதுவுக்கு வஹீ வந்த ஹீரா குகை

இரண்டாவது கேள்வி, அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் அவரின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு உமரிடம் வருகிறது. உமரின் ஆட்சிக்காலத்திற்குப்பின் அது உஸ்மானின் பொறுப்பில் வந்திருக்கவேண்டும். ஏனென்றால் அது வெறும் நூலல்ல, வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஆவணம். உமருக்குப்பின் அந்த ஆவணம் உஸ்மானின் பொறுப்பில் வராமல் உமரின் மகளான ஹப்ஸாவின் பொறுப்பில் போகிறது. இது ஏன்? இதனால் தான் உஸ்மானால் குரான் மீண்டும் தொகுக்கப்பட்டதா? இதன் காரணமாகத்தான் உஸ்மான் தான் தொகுத்ததை தவிர மற்றவற்றை எரித்து விட உத்தரவிட்டாரா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் நேர்மையான பதில் கிடைக்காதவரை குரான் பாதுகாக்கப்பட்டது என்பது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.

நோபல், ஒபாமா, தகுதி: வெட்கக்கேடு

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்படவிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படி ஒரு செய்தி வெளியானதிலிருந்து, ஒபாமாவின் தகுதி குறித்தும், நோபல் பரிசின் தகுதி குறித்தும் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஒபாமாவுக்கு அமைதி நாயகன் என்று விருது வழங்குவது சரி என்றாலும் தவறு என்றாலும் ஒரு செய்தி எல்லோரிடமும் நிருவப்படுகிறது, அது நோபல் போன்ற பரிசுகள் தகுதி பார்த்தே வழங்கப்படுகின்றன என்பது. மேற்குலகம் வழங்கும் பரிசுகளோ, சலுகைகளோ, பாராட்டுதல்களோ, பழிதூற்றுதல்களோ எதுவாகினும் அரசியல் காரணங்களுக்காகவே அளிக்கப்படுபவை என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. டைனமெட்டை கண்டுபிடித்த அறிவியலாளரான ஆல்பிரட் நோபலின் மன உளைச்சலிலிருந்து பிறந்த நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக அங்கீகரிக்கப்படுவதே கபடத்தனமானது என்பதை எந்தெந்த சூழல்களில் யாருக்கெல்லாம் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைக்கொண்டே கண்டுகொள்ளலாம்.

 ”இந்தப்பரிசு என்னுடைய செயல்களுக்கானதல்ல, அமெரிக்கத்தலைமையின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்” என்று தனக்கு விருது தந்த நோக்கத்தை ஒபாமா மிகத்தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். பதவியேற்று ஒரு ஆண்டுகூட நிறையாத ஒரு அதிபர் இதைவிடத் திறமையாக இந்த காமடியை மறைத்திருக்க முடியாது. ஆனால் விருதுக்கான தேர்வுக்கமிட்டியின் தலைவர் டி ஜான் ஜாக்லாண்ட் கூறுகிறார் “மொத்தம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 205 பேர்களில் 204 பேரையும் பின்னுக்குத்தள்ளி தேர்வுக்குழுவின் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி ஒபாமாவுக்கு மட்டுமே இருந்தது” பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மற்றவர்களில் ஒரு சிலரைக்கூட அவர் அடையாளம் காட்டவில்லை. இது ஒருபுறமிருக்க, நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைக்க கடைசித்தேதி பிப்ரவரி 1 அதாவது ஒபாமா பதவியேற்று 12 நாட்கள் கழித்து. அதிபருக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன் யாருக்குமே தெரியாத ஒபாமா, பதவியேற்ற 12 நாட்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

கடந்த ஒன்பது மாதங்களில் ஒபாமா செய்ததென்ன? நிறைய பேசியிருக்கிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை கட்டியமைப்போம் என்றார், ஈராக், ஆப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப அழைக்கப்படும் என்றார், குவாண்டனோமோ சிறைச்சாலை மூடப்படும் என்றார், எகிப்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பொருளற்ற சொல் இனி பயன்படுத்தப்படமாட்டாது இஸ்லாத்திற்கு அமெரிக்கா எதிரியல்ல என்றார். ஆனால் நடப்பதென்ன? அமெரிக்காவைத்தவிர வேறு யாரும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது எனும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தான் இன்னும் மிரட்டிக்கொண்டிருக்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான(!) போர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, சிறைக்கொடுமைகள் இன்னும் கொடூரமாகிக்கொண்டிருக்கின்றன. பின் எதற்குத்தான் ஒபாமாவுக்குப் பரிசு?

ஒபாமா ஏன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஒபாமா ஏன் அமைதி நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஒரே பதிலை கொண்ட இருவேறு கேள்விகள். அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு கருப்பர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றதும், இனி அமெரிக்காவின் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம் இருக்கும் என்று இங்கு ஆரூடம் கூறியவர்கள் அனேகம். ஆனால் ஆப்கான் போர் பாகிஸ்தானின் மீதும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு விரிவடைந்ததையும், ஈராக்கை தொடர்ந்து ஈரான் மீதும் போர் மேகங்களை சூழவைத்திருப்பதையும் கண்டு அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். யார் அதிபரானாலும் அமெரிக்காவின் போக்கில் ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அமெரிக்காவின் கொள்கைகளை தீர்மானிப்பது அதிபர்களல்ல, பெரு நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் தான். கண்களின் பார்வையை கண்ணாடி மாற்றுமா என்ன? அப்படி வந்த ஒரு கண்ணாடிதான் ஒபாமா. வெளிநாடுகளுக்கு சென்றவிடமெல்லாம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்த, தன் கோரப்பற்களை மறைக்கவியலாத அதிபராக வலம்வந்த புஷ் சொந்த நாட்டு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இதனால் இற்று விழுந்த அமெரிக்க பிம்பத்தை தூக்கி நிருத்த தேவைப்பட்ட ஒரு பதிலியாகத்தான் முதலாளிகளுக்கு ஒபாமா தேவைப்பட்டார். அந்த பதிலியின் பிம்பத்தைக் காப்பதற்க்குத்தான் நோபல் பரிசும். 12 நாட்களிலேயே நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் பொருள் ஒபாமா சொல்வதுதான் அமெரிக்கத் தலைமையின் மீதான நம்பிக்கை அதாவது கருப்பர் எனும் திரையால் அமெரிக்க நிஜத்தை மறைக்கத் தேவைப்படும் அதிகாரத்திற்கான நம்பிக்கை.

பசியால் சுருண்டு கிடக்கும் ஒருவனுக்கு உண்ணவைத்து கைதூக்கி விடுவதற்குப் பதிலாக என்ன கொடுப்பது ரொட்டியா? சோறா? என்று விவாதம் செய்வதைப்போல, ஒபாமாவுக்கு ஏன் பரிசு கொடுத்தார்கள் எனும் காரணத்தை உணர்ந்து எதிர்வினையாற்றாமல் தகுதி குறித்து விவாதம் செய்வது மக்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகும்.

குரானின் சவாலுக்கு பதில்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 3

“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார், அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும்? அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,

“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.

“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42.

தன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.

“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51

ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?

சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,

“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”

இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,

“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”

அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.

குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”

இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,

“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”

முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா?

முகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா? இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?

கடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது? அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும்? மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன்? எப்படி? நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி?

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்… இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி….அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா  துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

யங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.

அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

னால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?

ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

லகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை  குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

து இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது…

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

மல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

********************************

உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்க்கான இந்த விமர்சனம் வினவு தளத்திலிருந்து எடுத்து மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. வினவு தளத்தில் இதற்கு இடப்பட்டுள்ள பின்னூட்டங்களோடு சேர்த்து படித்துப்பார்ப்பது இன்னும் விரிந்த அனுபவத்தை தரும்.
நன்றி:  vinavu.com

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 2

அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.

அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம்.

இப்படி அனைத்து சக்திகளையும் ஒருங்கே வைத்திருப்பதால் தான் பூமியில் மனிதரை படைப்பதற்காக மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அதில் வசதிகளுடன் பூமியை அமைத்து மனிதனை வாழச்செய்ய முடிந்திருக்கிறது. இப்படி ஆண்டவன் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பதன் நோக்கம் என்ன? மனிதர்கள் அவனை வணங்கவேண்டும் என்பதே. ஆக முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக, மனிதன் தன்னை படைத்தவனை வணங்குவதற்க்காக.

குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது. இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?

அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?

முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு. அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?

அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது.

இந்த இரண்டு இடர்பாடுகளும் இல்லாமல் அல்லாவின் ஆற்றல் செயல்படமுடியாது. அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன். தொடர்ந்து நாம் இந்த கற்பனைக்கோட்டையை சுற்றிவருவோம்.

ஊழலில் 19வது இடம்; வெட்கப்படுவது மட்டும் போதாது.

மழைக்காலம் வெயில் காலம் என பருவகாலம் மாறுவதைபோல மக்கள் பேசும் விசயங்களும் ஊடகங்கள் அடியெடுத்துக்கொடுப்பதைக்கொண்டு அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். ஒருமுறை வங்கிகள் நிறுவனங்கள் திவால் பேசுபொருளாயிருக்கும், மறுமுறை போராட்டங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாய் விளம்பப்படும், மற்றொரு முறை அரசியல்வாதிகளின் வீரதீர விசாரங்கள் பிரிதொரு முறை வழக்கு விவகாரங்கள், இப்போதோ ஊழல். அண்மையில் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேசனல் என்ற அமைப்பு அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகளின் அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பத்தொன்பதாவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. ஊழல் குற்றம் தவறு என்பதையெல்லாம் மக்கள் எப்போதோ மறந்துவிட்டனர், அது வாழ்நெறியாக மாறிக்கொண்டிருக்கிறது இப்போது. தேச பக்தர்கள் வெட்கித்தலை குனிகிறார்களாம், இன்னும் சிலரோ பதினெட்டு நாடுகளுக்கு பிறகுதானே என ஆறுதல் பட்டுக்கொள்கிறார்களாம். இந்த வெட்கத்தையும் ஆறுதலையும் பொசுக்குவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டுமோ…

அரசியல்வாதிகளால் தான் எல்லாம் கெட்டது, அதிகாரிகள் ஒழுங்காக செயல்பட்டாலும் அரசியல்வாதிகள் விடுவதில்லை என்று சிலர். அரசியல்வாதிகள் தவறு செய்தாலும் அவர்களை தண்டிப்பதற்கு தேர்தல் இருக்கிறது, அதிகாரிகளை எப்படி தண்டிப்பது என்று இன்னும் சிலர். தனக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக மக்கள் தான் தொடங்கி வைக்கின்றனர் என்று வேறு சிலர். ஆனால் ஊழல் லஞ்ச விவகாரங்களில் ஒரு பகுதியினரை கைகாட்டும் போது மற்ற பகுதியினர் தப்பித்துக்கொள்ள ஏதுவாகிறது என்பதே உண்மை. ஏனென்றால் அரசியலமைப்பு மட்டுமன்றி, நிர்வாகம், நீதித்துறை, காவல் துறை, ராணுவம் என நாட்டின் அனைத்து அமைப்புகளுமே ஊழலில் புரையோடிப்போய் கிடக்கின்றன. அரசுத்துறைகளில் இப்படியென்றால் தனியார் துறைகளிலோ ஊழலும் திருட்டுத்தனமும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக, வியாபாரதந்திரமாக நுணுக்கமாக இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்த அனேக ஊழல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மிக மிக சொற்பமே அதிலும் தண்டனையை அனுபவித்தவர்கள் வெகு அபூர்வம். சட்டம் இதுபோன்றவர்கள் தப்பிப்பதற்கு சாதகமாக இருப்பதது தான் இப்படி ஊழலில் ஊறிப்போனதற்கு காரணமா? அல்லது நேர்மையான தலைவர்கள், அதிகாரிகள் அமையாதால்தான் ஊழல் ஊற்றெடுத்துவிட்டதா? பல்வேறு காரணங்களுக்காக இத்தகைய முறைகேடுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன, இங்குமட்டுமல்ல எல்லா நாடுகளிலும். வியாபாரப்போட்டி என்ற பெயரில் சக உற்பத்தியாளர்களை கவிழ்ப்பதற்கு அனைத்து வகை உத்திகளையும் கையாளும் முதலாளிகள். உற்பத்திச்செலவை குறைப்பது என்ற பெயரில் அரசுகளின் துணையுடன் செய்யப்படும் வரி ஏய்ப்புகள். தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழியவிடப்படும் அரசு துறைகள். முதலாளிகளின் லாபத்திற்காக செய்யப்படும் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு ஊழல் முறைகேடுகள் கருவியாக தேவைப்படுகின்றன. ஊழலை தடுக்க முடியாததற்கு இது ஒரு முக்கியமான காரணம். நேர்மையான தலைவர்கள் வந்து திறமையான சட்டங்கள் தந்தாலும் முதலாளிகள் இருக்கும்வரை ஊழலையும் திருட்டுத்தனத்தையும் நீக்கமுடியாது.

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இன்னொரு வகை ஊழலும் செய்கிறார்கள், பொதுவான ஊழலைப்போல இவை மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிப்பதில்லை மாறாக சமயங்களில் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெற்றுவிடுகின்றன. மாணவர்கள் தேர்வுகளுக்கு படிப்பதற்கே மின்சாரம் இன்றி தட்டுப்பாட்டுடன் இருக்கும் நிலையில் தொகா பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபம் தரும் தொகா பெட்டிகள் வழங்கும் திட்டம் மக்கள் மேல் திணிக்கப்படும் ஊழலல்லவா. ஆண்டுக்கணக்காக சாலை வசதி வேண்டும் என கிராமமக்கள் போராடும் போதெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ரிலையன்ஸ் நாடு முழுவதும் அமைக்கும் கொள்முதல் நிலையங்களின் வசதிக்காக கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு மக்களுக்கான திட்டமாக பீற்றிக்கொள்வது மக்கள் மேல் திணிக்கப்படும் ஊழலல்லவா. தேர்தல் வந்துவிட்டால் கொள்ளையடித்ததில் சிறு பகுதியை வீசி எறிந்துவிட்டு மக்களிடம் ஓட்டை பொறுக்கிக்கொள்வது; தங்களை தட்டிக்கேட்கும் தார்மீக உரிமையை தந்திரமாக பறிக்கும் வகையில் மக்களையே ஊழல்மயப்படுத்துவதை ஊழல் என்று சொல்லாமல் இருக்கமுடியுமா?

நாட்டின் பொருளாதாரத்தையே உரசிப்பார்க்கும் ஊழல்கள் தொடங்கி, தாங்களே ஊழல்மயப் படுத்தப்படுவது வரை மக்கள் ஒரு செய்தியாகவே பார்க்கிறார்கள். ஆனால் யதர்த்தத்தில் மக்களின் வாழ்வை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஊழலில் சுழலும் பணமெல்லாம் ஏதோஒரு வகையில் மக்களிடம் சேரவேண்டியவை. தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்று ஒன்றை கொண்டுவந்து வெளிப்படையான நிர்வாகம் என்று மார்தட்டினார்கள் இன்று அதிலிருந்து ஒவ்வொன்றாக விதிவிலக்குகள் தருகிறார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன் சுவிஸ் வங்கியின் கருப்புப்பணம் பற்றி பேசப்பட்டது, இன்னமும் சுவிஸ் கணக்குகளில் அந்த பல லட்சம் கோடிகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன தனிச்சொத்தாக. மக்களின் பிரதிநிதிகள் இதைப்பற்றி கேள்வி எழுப்புவார்களா? அவர்களின் சொத்துக்களை முடக்க அவர்களே முனைவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால் நாமும் அப்படி இருக்க முடியாதே. வெட்கப்பட்டுக்கொண்டோ, ஆறுதலடைந்துகொண்டோ இருக்கும் நேரமல்ல இது. ஏனென்றால் நம்மை பாதிக்காத நமக்கு வெளியிலுள்ள பிரச்சனையல்ல. எனவே வெட்கத்தை கொளுத்திவிட்டு வெளிப்படையாக களம் இறங்குவோம் ஊழலுக்கு எதிராக மட்டுமல்ல, அதை தக்கவைத்திருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், அதை தாங்கும் கேடயமாக இருக்கும் ரெட்டை ஆட்சி முறைக்கு எதிராகவும் கூட.