ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

கம்யூனிசம் என்றாலே ஏகாதிபத்திய எடுபிடிகளுக்கும், மதவாதிகளுக்கும்  வேப்பங்காயாய் கசக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சியை சாதிப்பதற்கும் சமத்துவத்தை கொண்டுவருவதற்கும் கண்ட இழப்புகளும் அதைக்கண்டு கலங்காத லட்சிய வேகமும் சாதாரணமானவையல்ல. அவர்கள் மீது தூற்றப்படும் அவதூறுகளும் கட்டப்படும் கட்டுக்கதைகளும் கொஞ்சமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவை அத்தனையும் மீறித்தான் மக்கள் மத்தியில் கம்யூனிசம் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சுரண்டலின் வேகமும் தீவிரமும் மக்களை கம்யூனிசத்தை நோக்கி திருப்பியுள்ள‌து. முதலாளியம் வீழ்ந்தே தீரும், கம்யூனிசம் நிச்சயம் வெல்லும். இது வெற்று முழக்கமல்ல வரலாற்று வழியிலான எதிர்கால உண்மை.

இன்று (டிசம்பர் 26) தோழர் மாவோவின் பிறந்தநாள். தோழர் மாவோவைப்பற்றி தெரிந்து கொள்வதும், உள்வாங்கிக்கொள்வதும் இன்றைய காலகட்டத்தின் மிகவும் இன்றியமையாத ஒரு தேவையாகும். 1994 ல் தோழரின் நூற்றாண்டு நினைவாக புதிய பூமி வெளியீட்டகம் வெளியிட்ட “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் சிறு நூலை (பதிப்புரை, முகவுரை, குழந்தைப்பருவம், சாங் ஷாவில் வாழ்ந்த நாட்கள், புரட்சிக்கு முன்னோடி, தேசியவாத காலகட்டம், சீன சோவியத் இயக்கம், செஞ்சேனையின் வளர்ச்சி, மாசேதுங்குடன் மேலும் சில செவ்விகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது) தொடராக இங்கு வெளியிடவிருக்கிறேன். நண்பர்களுக்கு தோழர் மாவோ பற்றிய சிறந்த அறிமுகமாகவும், தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல உதவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.

தோழமையுடன்

செங்கொடி

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

மூலம்: எட்ஹார் ஸ்னோ

தமிழில்: எஸ். இந்திரன்

சவுத் ஏசியன் புக்ஸ்

புதிய பூமி வெளியீட்டகம்.

பதிப்புரை

மார்க்சிய லெனினிசத்தின் பதிய படிநிலை வளர்ச்சிக்கு சீனப்புரட்சியின் அனுபவங்களை தகுந்த களமாக அமைந்தது. அதனை வளப்படுத்தி முன்னெடுத்ததில் தோழர் மாசேதுங்கின் வரலாற்றுப்பாத்திரம் மகத்தானது. அவரது பங்களிப்பு தனியே சீனதேசத்திற்கு மட்டும் உரியதன்று. உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெறுமதி மிக்க பொக்கிசமாக அமைந்தது. மேற்கில் தோற்றம் பெற்று ரஷ்யப்புரட்சியின் ஊடாக கிழக்கு உலகிற்குள் புகுந்த மார்க்சிச லெனினிசத்தை கையேற்றுப்பாதுகாத்து அதனை சீன நாட்டின் விசேச நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகித்து வெற்றிகண்ட நடைமுறைமைகளின் மூலம் மேலைக்காற்றை கீழைக்காற்று மேவி நிற்கும் நிலைக்கு உந்துவிசை கொடுத்தவர் தோழர் மாசேதுங் ஆவார். அவரது தத்துவார்த்த அரசியல் நடைமுறை வழிகாட்டல்கள் இன்றும் நமது நாடு போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மீட்சிக்கு ஒளிமிகுந்த வழிகாட்டியாக இருந்துவருகின்றன. அத்தகைய மாமேதையின் நூற்றாண்டு நினைவு(1893-1993) ஆண்டாகும். டிசம்பர் மாதம் 26ம் தேதி அவர் பிறந்த தினமாகும். அவரது நூற்றண்டு தின நினைவாகவே இந்நூல் வெளிவருகிறது. மாசேதுங் பற்றி அவரது காலத்தில் வெளியிடப்பட்ட உலகப்புகழ் பெற்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதே இந்நூலாகும் எட்ஹார் ஸ்னோ எனும் 30 வயதுடைய அமெரிக்க பத்திரிக்கையாளர் 1937ம் ஆண்டில் மாவோவையும் ஏனைய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து சேகரித்த அரிய தகவல்களை ஒன்று திரட்டி “சீனாவின் மீது செந்தாரகை” எனும் நூலினை எழுதி வெளியிட்டார். சீன மக்களின் நன்மதிப்பினையும், சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களின் நம்பிக்கையையும் பெற்ற எட்ஹார் ஸ்னோ பற்றி சில வார்த்தைகள் கூறுவது அவசியம்.

எட்ஹார் ஸ்னோ ஒரு அமெரிக்கப்பத்திரிகையாளர். அவர் மாவோவை சந்திப்பதற்கு முன்பாக ஏழு ஆண்டுகள் வரை சீனாவில் தங்கியிருந்து, சீன தேசம் பற்றிய பல விசயங்களை படித்துவந்தார். யென்சிங் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் கடமை புரிந்திருக்கிறார். சிகாகோ ட்ரிபியூன், லண்டன் டெய்லி ஹரால்ட் போன்ற பத்திரிக்கைகளுக்கு ஆசியப்பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருக்கிறார். இரண்டாவது உலக யுத்தத்தின் போது சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிக்கையின் இணை ஆசிரியராகவும், யுத்த நிருபராகவும் இருந்திருக்கிறார். யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில்  இந்தியா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைப்பற்றிய தகவல்களைத் தருவதில் புலமை பெற்ற பத்திரிக்கையாளராகத் திகழ்ந்தார். எட்ஹார் ஸ்னோ பல நூல்களை எழுதியுள்ளார், அவற்றுள் ஆசியாவுக்கான சமர், மக்கள் எமது பக்கம், ஆரம்பத்தை நோக்கிய பயணம், இன்றைய செஞ்சீனா, ஆற்றின் மறுகரை ஆகியன உள்ளடங்கும். ஸ்னோவும் அவரது மனைவியும் பல ஆண்டுகள் சீனாவில் வாழ்ந்தனர்.  சீன மொழியை ஸ்னோ கற்றறிந்து பல்வேறு தகவல்களை ஆதாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். சீன மக்களின் போராட்டங்களை நன்கு விளங்கிக்கொண்டு அதன் தாக்கங்களை மட்டுமன்றி  ஏற்படவிருக்கும் மாற்றங்களையும் அவரால் தெளிவாக உலகிற்கு எடுத்துக்கூற முடிந்தது.

முப்பதுகளில் சீனக் கம்யூனிஸ்டுகளை சிவப்பு வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் என ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள் பிரச்சாரம் செய்துவந்தனர். இத்தகைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் தலைமைப்பீடத்துடன் மேற்கத்திய பத்திரிக்கையாளர்களோ அரசியல் அவதானிகளோ தொடர்பு கொள்ளமுடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் சீனாவில் இடம்பெற்றுவந்த புரட்சிகரப்போராட்டம் பற்றிய உண்மைத்தகவல்களை மேற்குலக மக்கள் பெற்றுக்கொள்ளமுடியாதிருந்தது. இத்தகைய சூழலில் எட்ஹார் ஸ்னோவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுக்கொண்டது. அவர் ஒரு மனசாட்சி படைத்த நேர்மையான அமெரிக்கப் பத்திரிக்கையாளர் என்பதை வரலாறு அடையாளப்படுத்தியது.

1936ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் அமைந்திருந்த புரட்சிகர செந்தளத்திற்கு ஸ்னோ சென்றடைந்தபோது சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது பதிநைந்தாவது வயதை அடைந்திருந்தது. ஜப்பானியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த வடமேற்கு செந்தளத்திற்கு சன்யாட்சென் அம்மையாரின் சிபாரிசுடன் ஜூன் மாதத்தில் எட்ஹார் ஸ்னோ புறப்பட்டார். கம்யூனிஸ்டுகளுடன் ஓர் இலக்கிய முன்னணிக்கு கொள்கையளவில் தயாராக இருந்த காரணத்தினால் அவ்வேளை சியானில் நிலை கொண்டிருந்த மஞ்சூரியப்படையினரின் ஒத்துழைப்புடன் ஸ்னோ எல்லையைக்கடந்து கம்யூனிஸ்ட் தலைநகரான பா ஓ அன் சென்றடைந்து அங்கு தலைவர் மாசேதுங்கை சந்தித்தார்.

எட்ஹார் ஸ்னோ நான்கு மாதங்கள் சீன கம்யூனிஸ்ட்களின் செந்தளத்தில் தங்கியிருந்தார். அவ்வேளை தோழர் மாவோவிடமிருந்து பல்வேறு தகவல்களையும் கொள்கை விளக்கங்களையும் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் சேகரித்துக்கொண்டார். பல இரவுகள் கண்விழித்து மாவோவுடனான பேட்டியை ஸ்னோ பெற்றுக்கொண்டார். இச்சந்திப்பும் ஏனைய தலைவர்களுடனான தொடர்புகளும் ஸ்னோவிற்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது. மாவோவின் வாழ்க்கைக்குறிப்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமது சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பாத நிலையிலும் கூட அன்றைய தேவை கருதி மாவோ தனது வாழ்க்கைக்குறிப்புகளை ஸ்னோவிடம் எடுத்துக்கூறினார். அதே போன்று ஏனைய தலைவர்கள் பற்றிய  விபரங்களையும் ஸ்னோ சேகரித்துக்கொண்டார்.

1936 ஆம் ஆண்டு அக்டோபரில் மேற்படி செந்தளத்திலிருந்து திரும்பிய ஸ்னோ தான் நேரடியாகப்பெற்ற தகவல்களையும் விபரங்களையும் தொகுத்து 1939 ஜூலையில் தனித்துவம் மிக்க நூலாக எழுதிமுடித்தார், அதுவே “சீனாவின் மீது செந்தாரகை” எனும் புகழ் பெற்ற ஆங்கில நூலாகும். முதல் தடவையாக சீனக் கம்யூனிஸ்டுகளைப்பற்றியும் தலைவர் மாசேதுங் மற்றும் தலைவர்கள் பற்றியும் தெளிவான ஒரு சித்திரத்தை இந்நூல் வழங்கியது. சீனக்கம்யூனிஸ்டுகளின் உன்னத நோக்கத்தையும் அவர்களது வீரம், தியாகம், அர்ப்பணிப்பு மிக்க வேலை முறை என்பன பற்றிய உணர்வும் உணர்ச்சியும் மிக்க பக்கங்களை இந்நூல் உலகிற்கு படம் பிடித்துக்காட்டியது. ஏகாதிபத்திய வாதிகளும் பிற்போக்கு சக்திகளும் தனது கொள்ளைத்தனமான சுரண்டலையும் அதன் கொடூரங்களையும் மூடி மறைத்து கம்யூனிஸ்டுகளை பயங்கரவாதிகள், பலத்காரவாதிகள், ரத்தவெறிபிடித்தவர்கள் என்று காட்டி நின்றவேளையில் அதனை முறியடிக்கும் ஒரு நேரடிச்சாட்சியாக ஸ்னோவின் கட்டுரைகள் அமைந்தன. எதிர்காலத்தில் சீனக்கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உலகில் கிடைக்கக்கூடிய் ஆதரவிற்கும் முக்கியத்துவத்திற்கும் இந்நூல் ஆரம்பத்துணையாகியது. இது ஒரு வரலாற்றுக்குறிப்பு மட்டுமன்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர் மாவோவின் தெளிவான திசைமார்க்கத்தையும் சுட்டிக்காட்டி நின்றது.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க “சீனாவின் மீது செந்தாரகை” நூலின் நான்காவது அத்தியாயமாக அமைந்துள்ள ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்‘ என்ற பகுதியே தமிழாக்கம் செய்யப்பட்டு இந்நூல் உருவம் பெறுகிறது. கம்யூனிசம் கம்யூனிஸ்டுகள் பற்றிய எதிர்நிலை பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய சூழலில் இதுபோன்ற நூல்களின் தேவை மிக அவசியமானதாகும். இந்நூலினை மாவோ அவர்களின் நூற்றாண்டு நினைவு நாட்களிலே வெளியிட்டு உதவுமாறு புதிய ஜனநாயகக்கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதனை நூல் உருவில் கொண்டுவருகிறோம். இதில் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

இந்நூலினை தமிழாக்கம் செய்த எஸ்.இந்திரன் அவர்களுக்கும் அதற்கு உதவிய ஏனைய தோழர்களுக்கும் நாம் நன்றியுடையவர்கள். இதனை எம்முடன் இணைந்து வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிருவனத்தினருக்கும் அழகுற அச்சிட்டுத்தந்த அச்சக உரிமையாளர் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

117, சென் அன்றூஸ் கீழைத்தெரு,

முகத்துவாரம்,

கொழும்பு 15,

இலங்கை.

20/12/1993.

கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 10

நாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம். சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு எல்லை என்று ஒன்றில்லை. பசுபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் தனித்தனி பெயர்களால் குறிக்கப்பட்டாலும் இவற்றிற்கிடையே எல்லை என்று ஒன்றில்லை, அந்தந்த பகுதியைக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல் என்றும் பசுபிக் பெருங்கடல் என்றும் அழைக்கிறோம். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதைப்போல் இரண்டு கடல்களுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதில்லை. ஆனால் குரானின் இந்த வசனங்களை கேளுங்கள், “அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்செய்தான்” “அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீற்மாட்டா” குரான் 55:19; 55:20. இந்த வசனங்கள் இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு? என்ன பண்புகளினாலான தடுப்பு? அவற்றின் செயல்பாடு? எதுவும் விளக்கப்படவில்லை.

இதுபற்றி மதங்கற்ற அறிவியலாளர்கள் கூறுவதைக்கேட்கலாமா? ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது? அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன? அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா? இப்படிப்போகிறது மதம் படித்த விஞ்ஞானிகளின் விஞ்ஞானம்.

பண்டைய கடலாடிகளுக்கு இது தெரிந்தே இருந்திருக்கிறது. பலநாடுகளுக்கு கடல்கடந்து வணிகம் செய்த வணிகர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடல் நீரின் தன்மை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் கண்களாலும் நாவினாலும் அறிந்து வைத்திருந்த அதை அறிவியலும் உறுதி செய்தது. எல்லா இடத்திலும் கடல் நீரின் உவர்ப்புத்தன்மை ஒரே திறத்தில் இருப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு ஏற்ப வளரும் கடற்றாவரங்கள் வசிக்கும் கடல் உயிரிகள் மண்ணின் தன்மை நீரோட்டங்களின் விளைவு கலக்கும் ஆற்றுநீரின் அளவு இவைகளின் அடிப்படையில் அந்த கடலின் உப்பு தாதுக்கள் மட்டுமல்லாது நீரின் தெளிவுத்தன்மை உட்பட பல மாறுதல்கள் இருக்கும். இவை வேறு வேறு கடல்களுக்கு என்று மட்டுமில்லை ஒரே கடலிலும் கூட பலப்பல மாறுதல்கள் இருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தான் சென்னையும், போர்ட் பிளேரும் (அந்தமான் நிகோபர் தீவுகள்) இருக்கின்றன, ஆனால் சென்னை மெரினாவிலும் போர்ட் பிளேர் கடற்கரையிலும் நீரின் தெளிவுத்தன்மை உட்பட எவ்வளவு வித்தியாசங்கள்? ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா? குரானின் வசனங்கள் தெளிவாகவே கடல்களின் எல்லை குறித்தே பேசுகின்றன. வசனம் 25:53 இன்னும் தெளிவாகவே இதனை குறிப்பிடுகிறது, “அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” கடல் நீரின் சுவை குறித்து கூறினாலும் இரண்டு கடல்களுக்கும் ஒரு வரம்பு இருக்கிறதென்றும், இரண்டினிடையே இருக்கும் தடைய அவைகளால் மீறமுடியாதென்றும் ஐயத்திற்கிடமின்றியே அறிவிக்கிறது.

கடலுக்குள் யாரும் எல்லைக்கோடு பிரித்து வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.

கடலைப்பற்றிய இன்னொரு மாபெரும் அறிவியல் உண்மையும் குரானில் காணக்கிடைக்கிறது. வசனம் 24:40 “அல்லது ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். பல இருள்கள். சில சிலவற்றிற்கு மேல் இருக்கின்றன. அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை”

இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நிலையை விவரிக்கும் இந்த வசனம். ஒருவனை அல்லா நேர் வழியில் செலுத்தவில்லை என்றால் அவனுக்கு எந்த நேர்வழியும் இல்லை என எச்சரிக்கிறது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் எனும் வாக்கியம் தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மை.

கடலில் ஆழத்தில் செல்லச்செல்ல வெளிச்சம் குறைந்து உள்ளங்கைகளை கூட பார்க்கமுடியாத அளவுக்கு இருட்டாகிவிடும். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத சங்கதி அல்ல. கடலோடு மனிதனுக்கு தோடர்பு ஏற்பட்ட பிறகு எளிதாக இதை மனிதன் கண்டிருக்கமுடியும். ஆனால் இதையும் பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பான கடல் நீரில் ஒளியின் நிறமாலை நிறங்கள் ஊடுருவும் ஆழம் பற்றிய தகவல்களை ஒன்றிணைத்து பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்கிறார்கள்

இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. அமெரிக்காவின் கடலாய்வு அறிவியலாளரான பேராசிரியர் வில்லியம் ஹை என்பவர் 1980 களின் தொடக்கத்தில் தாம் ஜித்தா பல்கலைக்கழகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அழைக்கப்பட்ட கதையை விளக்குகையில், தாம் குரானில் கூறப்பட்டிருக்கும் ஆழ்கடல் இருளை அறிவியல் ஆதாரங்களுடன் மெய்பிக்கும் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கோரப்பட்டதை விவரிக்கிறார். ஆனால் தான் அவ்வாறான அறிக்கையை அளிக்காமல் குரானில் கூறப்பட்டிருப்பதும் நிறங்களின் ஊடுறுவும் ஆழமும் தொடர்பில்லாதது என சொற்பொழிவாற்றியதாகவும், பின்னர் தன்னுடைய கட்டுரை மலரில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்குப்பதிலாக அதே தலைப்பில் பேராசிரியர் துர்க்கா ராவ் என்பரின் கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்கலாம், அறிவியல் உண்மை என மதவாதிகள் ஆராதிக்கும் விசயங்களையெல்லாம் அராய்ந்தால் அவைகளெல்லாம் சௌதி அரேபியாவில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக மட்டுமே இருப்பதைக்காணலாம். ஆக அனைத்து ஆற்றல்களையும் கொண்ட அவர்களின் அல்லாவைவிட அறிவியல் நிரூபணம் இஸ்லாத்தின் பரவலுக்கு அவசியம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.

குடை என்றதும் நமக்கு மழைதான் நினைவுக்கு வரும் ஆனால் குடையை ‘ஸம்சியாஹ்’ (வெயில் தாங்கி)என அழைக்கும் சௌதியின் பண்பாடு மழைக்கும் அவர்களும் உள்ள உறவை நமக்கு விளக்கும். கடந்த நவம்பர் இறுதியில் சௌதியின் வணிகத்தலைநகரான ஜித்தாவில் மழை கொட்டித்தீர்த்தது. கிடைக்கும் இடங்களிலெல்லாம் மழைநீர் புகுந்தது. ஜித்தாவின் புறநகர்ப்பகுதியில் அந்த இடத்தையே தலைகீழாக புறட்டிப்போட்டதுபோல் உருக்குலைந்து கிடந்தது. பல வீடுகள் இடிந்து சரிந்தன, சாலைகள் இருந்த சுவடின்றி அரித்துச்செல்லப்பட்டன. மழைவெள்ளத்தில் சருகைப்போல் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் குப்பையைப்போல் குவிந்து கிடந்தன. ஜித்தாவின் அதிமுக்கிய சாலையான தரிக் அல் மதீனா பல நாட்களுக்கு தண்ணீர் வடியாமல் தேங்கிக்கிடந்தது. எழுபது பேர் மரணம் என அரசு தரப்பிலும் நூறுக்கு அதிகமிருக்கும் என அதிகாரபூர்வமற்றும் தகவல்கள்.

நாற்பது, நாற்பத்தைந்து செமீ மழைகளை கண்டும் கடந்தும் சென்ற நமக்கு ஆறு செமீ மழைக்கு நூற்பேர் மரணம் என்பது அதிர்ச்சி தான். பொதுவாக மழைச்சாவுகள் அல்லது இயற்கை சீற்றத்தினாலான சாவுகள் என்பது எல்லோரும் நினைப்பதுபோல் இயற்கை மரணமோ இயற்கையினாலான மரணமோ அல்ல. அவை கொலைகள், இயற்கை சீற்றத்தை கணித்து அதை மக்களை காக்கும் வகையில் பயன் படுத்தவேண்டியது அரசின் கடமை. அந்தக்கடமையை செய்யாத அலட்சியமும், இயற்கையை அதன் இயல்புக்கு மாறாக பணவெறியுடன் சூரையாடுவதும் சேர்ந்து மக்களை செய்யும் கொலைகள் தான் இயற்கைச்சீற்றம் என்ற பொதுவான அடைமொழியில் அடையாளப்படுத்தப்படுகிறது. பாலைவன நாட்டில் மழையை எதிர்பார்த்திருக்க முடியாது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்றதொரு மழையில் 30பேர் மரணித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அப்போதைவிட அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இப்போதோ நூறு பேர். பொருளாதாரத்தில் வளர்ந்த ஒரு நாட்டில் ஆறு செமீ மழைக்கு நூறு பேர் எப்படி மரணமடைந்தார்கள்?

சௌதியில் மக்கள் வாழும் பரப்பைவிட சாலைகளின் பரப்பு அதிகம் என்று விளையாட்டாய் கூறுமளவிற்கு சாலைகளும் கார்களும் அதிகம். எந்த இடத்திற்கும் தடங்கலின்றி வேகமாகச்சென்று வர ஏதுவாக மேம்பாலங்களும் தரைமட்டத்திற்கு கீழிருக்கும் கீழ்ப்பாலங்களும் அதிகம். ஆனால் இப்படியான பாலங்களிலோ ஏன் சௌதியின் பொது உள்கட்டமைப்பு வசதிகள் எதிலும் முறையான வடிகால் அமைப்புகள் கிடையாது. இதனால் கீழ்பாலங்களில் திடீரென மழைவெள்ளம் சூழ்ந்து கொள்ள மீண்டு வெளியேற முடியாமல் போனதுதான் மரண எண்ணிக்கை அதிகரித்ததற்கான முக்கிய காரணம். இதை இயற்கையின் சீற்றம் என்று சொல்வதா? அரசின் அலட்சியம் என்று சொல்வதா? ஆனால் மக்களோ வேறு விதமாக சொன்னார்கள்.

மழை பெய்த இந்த காலம் இஸ்லாமியர்களின் புனிதக்கடமையான ஹஜ்ஜின் காலம். உலகெங்கிலிமிருந்து பல லட்சம் மக்கள் ஹஜ் செய்வதற்காக புனித நகரமான மக்காவில் கூடியிருந்த நேரம். ஜித்தாவிற்கு அடுத்திருக்கும் நகரம் தான் மக்கா. ஜித்தாவில் பெய்த மழை சற்றே தள்ளி மக்காவில் பெய்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களல்லவா செத்துப்போயிருப்பார்கள். என்னே ஆண்டவனின் கருணை. இதுதான் மக்கள் எண்ணமாக இருந்தது. ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை புனிதப்பள்ளிகளை விரிப்பதற்காக செலவு செய்யும் சௌதி அரசு, அதில் ஒரு விழுக்காட்டை வடிகால் வசதிக்காக செய்திருந்தால் இத்தனை உயிர்கள் மடிந்திருக்கவேண்டிய அவசியமில்லையே. நெருக்கடியான சமயங்களிலெல்லாம் ஆளும் வர்க்கத்தை காக்க கடவுள் ஓடி வருவது எவ்வளவு குரூரம்.

மன்னர் அப்துல்லா வெள்ளச்சேதங்களுக்காக அறிவித்துள்ள நிவாரணத்தொகை இன்னொரு குரூரம். சௌதி சட்டப்படி சௌதியல்லாத யரும் கடைகளுக்கு உரிமையாளராக முடியாது. ஆனால் சௌதியில்  சாலையோர சிறுசிறு வர்த்தகக்கடைகளை நடத்திக்கொண்டிருப்பது பெரும்பாலும் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள். உரிமம் ஒரு சௌதியின் பெயரில் இருக்கவேண்டும் என்பதால் சௌதி ஒருவருக்கு மாதந்தோறு ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு கடையை நடத்துவார்கள். ஒருவரே பல கடைகளுக்கான உரிமத்தை வைத்திருப்பதால் எந்த வேலையும் செய்யாமலேயே வாழ்வை கழிக்கும் அளவிற்கு சௌதிகளுக்கு பணம் கிடைத்துவந்தது. இப்படி இருப்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் மன்னரோ உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளார். வெளிநாட்டினரோ கடைகளையும் இழந்து அதற்கான நிவாரணத்தொகையும் கிடைக்காமல் தலையில் கைவைத்துக்கொண்டுள்ளனர். அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யமுடியுமா? மூச்…. உயிர் போய்விடும். இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களில் மலையாளிகள் அதிகம்.

நூறு பேர் மரணித்திருந்தும், ஜித்தாவின் புறநகர்பகுதி முழுவதுமாக நாசமடைந்திருந்தும், மைய அரசமைப்போ, ராணூவமோ நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. உள்ளூர் மெட்ரோ நகரியம் தான் முழுவேலைகளையும் செய்து வருகிறது. ஆனால் இதே நேரத்தில் சௌதி ராணுவம் யெமன் எல்லைக்குள் ஊடுறுவி யெமனியர்களை சுட்டுக்கொண்டிருந்தது. சௌதி எல்லைக்காவல் படையினர் மூவரை யெமனி ஷியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்படுவதை அடுத்து சௌதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் இதில் உள்ளாடும் அரசியல் வேறானது.

வட யெமன் தென் யெமன் என்று இரண்டு நாடுகளாக இருந்த யெமன் 1990களில் ஒன்றாக இணைந்தது. தென் யேமன் அரேபியாவின் முதல் மார்க்ஸிய அரசாகும். சோவியத் யூனியன் தென் யெமனுக்கு தேவையான உதவிகளை வழங்கிவந்த நிலையில் பனிப்போரின் உச்சத்தில் உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனுடன் ஆட்சியாளர்களுக்கிடையேயான அதிகாரப்போட்டியும் நாட்டை சீரழிக்க ஒன்றிணைவதை தவிர வேறு வழியில்லாமல் போனது. ஆனால் தொடர்ந்து தென்யெமன் புறக்கணிக்கப்பட்டு எந்தஒரு நலத்திட்டங்களும் தென்யெமனில் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மீண்டும் பிரிவினை கோரிக்கை தலைதூக்கியது. அல்ஹுத்தி தலைமையில் அஷ்ஷபாப் அல் மூமின் எனும் இயக்கம் பிரிவினைக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திவந்தது. இந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்கிய அரசு அதன் தலைவரையும் கொன்றது. பின்னர் இதுவே கொரில்லாக்குழுவாக மாறியது. யெமனின் பெரும்பான்மையினர் சன்னி பிரிவனைச்சேர்ந்த முஸ்லீம்கள், போராடும் இயக்கத்தினரோ ஷியாபிரிவினர் இதனால் இப்போராட்டம் ஷியா சன்னி பிரச்சனையாக திரிக்கப்பட்டது. ஆண்டுக்கணக்காக போராடினாலும் அரசால் இவர்களை முழுமையாக அடக்க முடியவில்லை. இவர்களுக்கு ஈரான் உதவுவதாக யெமன் குற்றம் சாட்டிவருகிறது.

சௌதியிலும் அதிகாரத்தில் இருப்பது சன்னி பிரிவினர் தான். இங்கும் யெமனை ஒட்டிய எல்லைப்பகுதியில் ஷியாக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஏற்கனவே நஜ்ரான் பகுதியில் முன்னர் ஷியாக்கள் கிளர்ச்சியில் இறங்க அரசு மிருகத்தனமாக அடக்கியது. பாலஸ்தீனத்தில் ஷியாக்களின் அமைப்பான ஹிஸ்புல்லா தீவிரமாக இயங்கிவரும் நிலையில் தமது எல்லையில் இன்னுமொரு ஷியா இயக்கம் வலுவடைவதை சௌதி விரும்பவில்லை. இதனால் ஆயுத நிதி உதவிகளை யெமன் அரசுக்கு வழங்கிவந்தது. தற்போது சௌதி ராணுவத்தினரை கொன்றதாக காரணம் கூறி (பாலஸ்தீனர்களை தாக்குவதற்கு இஸ்ரேல் கூறும் அதே காரணம்) நேரடியாகவே களத்தில் இற‌ங்கியுள்ளது. வடயெமனை விட தென்யெமனில் கனிம வளங்களும் எண்ணெய் வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்தப்பிரதேசம் அமைதியாக இருக்கவேண்டியது ஆளூம் வர்க்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் அவசியமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சௌதியின் பைட்டர் ரக விமானங்கள் குண்டுவீசி வருகின்றன. தற்போது ராணுவமும் எல்லைகடந்து தாக்குதல் நடத்திவருகிறது. பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி யெமன் எல்லைபகுதிகளான கமீஸ் முஷய்த், அபஹா, ஜிசான், நஜ்ரான், முஹைல் போன்ற பகுதிகள் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

சொந்த நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் மீட்புக்கு ராணுவத்தை அனுப்பமறுக்கும் அரசு, மூன்று பேர் இறந்ததாக காரணம்கூறி இன்னொரு நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பி மக்களை கொல்கிறது. எந்த நாட்டு அரசாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் மக்களை நோக்கியதாக ஒருபோதும் இருப்பதில்லை. ஜனநாயகமானாலும் மன்னராட்சியானாலும் இதுதான் நிலை. யாருக்கான அரசாக இருப்பது என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாகவே இருக்கின்றன. மக்கள் புரியவேண்டியது தான் மிச்சமிருக்கிறது.

பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 9
தாலமியின் உலகப்படம்

தாலமியின் உலகப்படம்

குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் இப்படி கூறியிருக்க முடியுமா? எனவே முகம்மது கூறியது இறைவனின் வாக்கைத்தான் என்பது நிரூபணமாகிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். மெய்யாகவே பூமி உருண்டை வடிவம் என்பதை  மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே கடவுள் சொல்லிவிட்டாரா?

பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44  இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது?

வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த‌ மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?

பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது  அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.

பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள்.  விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்?  விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர்.  பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால்  பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர்  பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்.

அனைவருக்கும் அருள் பாலித்த‌ லிபரான் அறிக்கை

மாட்சிமை தாங்கிய ஆட்சிமை வழங்கும்(!) பெருமை மிகு பாராளுமன்றத்தில் வெளியிடும் முன்பே நாளிதழ்களில் வெளியாகி விட்டது லிபரான் அறிக்கை. அடுக்குமா இது, இந்தியாவுக்கே தலைகுனிவல்லவா எகிரிக்குதிக்கின்றன ஓட்டுக்கட்சிகள். காட் ஒப்பந்தம் முதல் இப்போதைய அணு ஒப்பந்தம் வரை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே நடப்புக்கு வந்தபோதெல்லாம் அடங்கியிருந்த கோபம் லிபரான் அறிக்கையில் பொங்கி வழிகிறது. 17 ஆண்டுகள் 48 முறை கால நீட்டிப்பு சற்றேறக்குறைய 8 கோடி ரூபாய் செலவு இவ்வள‌வையும் செரித்துவிட்டு லிபரான் அறிக்கை தந்திருக்கும் சாறு வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே, மற்றும் காங்கிரஸ் அமைச்சர் வகேலா உட்பட அறுபதிற்கும் மேற்பட்டோர் மசூதி இடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் என அறிவித்திருப்ப‌து. 92 டிசம்பர் 6க்கு மறுவாரத்தில் தேனீர்கடைகளில் பேசப்பட்ட உண்மையை கண்டுபிடிக்க 17 ஆண்டுகள்; கோபம் வரவேண்டிய இந்த இடத்தில் யாருக்கும் கோபம் வரவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் நாளிதழ்களில் வந்துவிட்டதால் இரு அவைகளும் அமளியில் அதிர்ந்தது. ஏன்? ஏனென்றால் மெய்யாகவே இது கோபமில்லை, கோபமாக வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சி.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேதுறையில் ஊழல் நடந்திருக்கிறது, அதை விசாரிக்கவேண்டும் என்று தற்போதைய அமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக சிபிஐ க்கு கடிதம் எழுதியதால் காங்கிரசுக்கு  என்ன செய்வது என்று தர்மசங்கடம். தங்கவிலை எகிறுவது போல் நாளுக்கு நாள் மது கோடாவின் சொத்துக்கணக்கு எகிறுவதால் ஏதாவது செய்து திசைதிருப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம். அலைவரிசை ஊழலில் திமுகவை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழல்,  இவைகளை மந்திரம் போட்டாற்போல் மறக்கடிக்க வைக்கும் ஒன்றாக கிடைத்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே ஆளும் கும்பலுக்கு மகிழ்ச்சி.

ஆர் எஸ் எஸ் மோகன் பகவத்தை நேரடியாக எதிர்த்து அறிக்கை விட்ட ராஜ்நாத், தேர்தல்களில் அடிக்கு மேல் அடிவாங்கிய கலக்கத்திலும் பிரதமர் கனவு தகர்ந்து போன அதிர்ச்சியிலும் அத்வானி. இனியும் ராமன் பயன்படமாட்டான் என்று பரணில் வீசியாயிற்று வேறு யாரைச்சொல்லி  நடத்திச்செல்வது என்ற குழப்பத்தில் கட்சி. ஒரு வழியாக அடுத்த தலைவரை தேர்வு செய்து விட்டாலும் மல்லுக்கு நிற்கும் சுஷ்மாவையும் மனோகர் ஜோஷியையும் என்ன செய்வது என்ற கவலை. எல்லாவற்றுக்கும் மேலாக லிபரானை காரணம் காட்டி காங்கிரஸ் பழி வாங்கினால் அதை எப்படி கட்சிக்கான ஓட்டாக மாற்றுவது என்ற யோசனை. இவ்வளவிலிருந்தும் ஆசுவாசப்பட அருமணியாய் வாய்த்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே காவிக்கும்பலுக்கு மகிழ்ச்சி

ஆண்டு தோறும் டிசம்பர் 6 நினைவு நாளைப்போல் கொண்டாட மக்களை பழக்கி விட்ட போதிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு இத்தனை ஆண்டுகளாக சட்டரீதியாகவே இழுத்தடிக்கப்பட்டபோதிலும், பாபர் பள்ளியை சொல்லியே அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியாக  ஓரளவு ஒன்று திரட்டிவிட்ட போதிலும்; இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஆதரவை இப்படியே தக்கவைக்க முடியும் எனும் வேளையில் மிகச்சரியாய் வந்த லிபரான் அறிக்கையும், எதிர்பார்த்தது போலவே இந்து பாசிசங்களை குற்றம் சாட்டி வந்ததும் மதவாத கும்பல்களுக்கு மகிழ்ச்சி

லிபரான் அறிக்கையுடனேயே தாக்கல் செய்யப்பட்ட மேல் நடவடிக்கை திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை குறித்த எந்த உருப்படியான திட்டமும் இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு உறுதி என்று நாளிதழ்கள் வாயிலாக சவடால் அடிப்பதில் எந்தக்குறைவும் இல்லை. ஆக திட்டமிட்ட நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுவிட்டது. இதில் பார்வையாளர்களான மக்கள் தான் வழக்கம் போல் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கிறார்கள்.

நடப்பு ஆண்டில் மட்டும் பல‌முறை சர்க்கரை விலை  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு கொள்முதல் விலையோ உயர்த்தப்படுவதில்லை. கரும்பு கொள்முதல் விலை சட்டத்தை எதிர்த்து கரும்பு விவசாயிகள் ஒன்றுகூடி தலைந‌கரில்  போராட்டம் ஒன்றை நடத்திக்காட்டினார்கள். லிபரான் அறிக்கை சுனாமியில் கரும்பு கட்டுமரங்கள் தூக்கிவீசப்பட்டன. ஒட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் ஒருங்கிணைவையும் தளராத போராட்டத்தையுமே கோரி நிற்கின்றன. அதை நோக்கி நகர்வது தான் மக்களின் முன்னுள்ள ஒரே தெரிவாக இருக்கிறது. இதையும் தன் லிபரான் அறிக்கை கசிவு உணர்த்தி நிற்கிறது.

பிரபஞ்சமும் அதனை கட்டுப்பட அழைத்த குரானும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 8


நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள  இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள்.  இந்த பெரு வெடிப்புக்கொள்கை குரானில் கூறப்பட்டிருக்கிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவான குரானில் இன்றைய அறிவியல் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்? எனவே குரான் இறைவனால் அருளப்பட்டது என்பது அவர்களின் வாதம்.

 

பிரபஞ்சம் குறித்து குரான் கூறுவதென்ன?

 

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30

 

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11

 

இந்த இரண்டு வசனங்களும் தான் பெருவெடிப்புக்கொள்கையை விளக்குவதாக இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள். முதல் வசனத்தில் வானங்களும் பூமியும் இணைந்திருந்ததாகவும் பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இரண்டாவது வசனமோ வானத்திற்கு முந்தைய நிலை புகை என்றும் அதை பின்னர் வானமாகவும் பூமியாகவும் மாற்றியதாக குறிப்பிடுகிறது. இந்த இரண்டின் பொருளும் எப்படி பெரு வெடிப்புக் கொள்கையை பேசுவதாக அறியப்படுகிறது? விண்மீன்கள் (ந‌ட்சத்திரங்கள்) தோன்றுவதற்கு முன் அதாவது ஆரம்பகால பிரபஞ்சத்தில் 72 விழுக்காடு கரும்பிண்டமாக இருந்தது எனவும் இக்கரும்பிண்டங்களின் திணிவிலிருந்து விண்மீன்கள் தோன்றின என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். கரும்பிண்டங்கள் என்பது எந்த ஒரு பொருளுமாக இல்லாமல் ஆற்றலாக இருந்தன. இந்த இடத்தில் இதை பொருலாக இல்லாமல் ஆற்றலாக என்பதை புகை என்பதாக உருவகப்படுத்தி, அந்தப்புகையிலிருந்து நட்சத்திரங்களும் ஏனைய பொருட்களும் தோன்றின என்பதாக பொருள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட வசனங்கள் பெருவெடிப்புக்கொள்கையை கூறுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

 

முதலில் வானம் என்பது என்ன? உயரத்தில் நீலமாக தெரிவதா? பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் வெளிதான் வானம் எனப்படுகிறது. நட்சத்திரங்கள், கோள்கள் உள்ளிட்ட அனைத்துபொருட்களையும் உள்ளடக்கிய பெரு வெளியை பிரபஞ்சம் என்றால் பருப்பொருட்களை நீக்கியபின் இருக்கும் வெளி வானம் எனலாம். ஆனால் குரான் கூறுகிறது வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான் என்று. விண்மீன்கள் கோள்கள் முதலான பொருட்களை புகையாக இருந்தபோது நாடினான் என்றிருந்தாலும் கூட கொஞ்சம் அறிவியல் வாசம் அடித்திருக்கும்.  தொடர்ந்து அவர்கள் வானம் என்பதை பூமியை தவிர்த்த அனைத்தும் என்பதாக பொருள் கொள்ளச்சொல்கிறார்கள். ஏனென்றால் குரானின் படி அப்படி பொருள்கொண்டால் தான் அந்த வசனங்களுக்கு அறிவியல் சாயம் பூச முடியும். வானங்களும் பூமியும் இணைந்திருந்த போது என்றும், அதற்கும் பூமிக்கும் கூறினான் என்றும் குரான் வானத்தையும் பூமியையும் மட்டுமே குறிப்பிடுகிறது. எனவே பூமியை தவிர்த்த அனைத்தும் வானம் என்று எடுத்துக்கொண்டு சுலபமாக பொருள் பண்ணிக்கொண்டார்கள். ஆனால் குரானில் மற்றொரு வசனம் வானமும் அதன் பொருட்களும் வேறு வேறு என்று தெளிவாக அறிவிக்கிறது. வசனம் 41:12 …………. கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்………….. இந்த வசனத்தில் இருக்கும் விளக்குகளால் எனும் சொல் விண்மீன்கள் கோள்களை குறிக்கிறது. எனவே வானம் என்பதற்கு பூமியை தவிர ஏனைய அனைத்தும் என்று பொருள் கொள்வது குரானின் படியே முரணானது.

 

வானத்தை கண்களுக்கு புலனாகும் ஒரு பொருளாக கருதுவதும், அது புகையிலிருந்து உருவானதாக நினைப்பதும் மனிதன் மேகத்தை பார்த்ததன் திரிபாக கொள்ளலாம். வசனம் 50:6 ……………. அதில் எந்த ஓட்டைகளும் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் நிறமாலையின் நீல நிற‌த்தை பிரதிபலிக்கும் நீலப்பின்னணியை அதன் சீறான தன்மையையே குரான் வானம் என குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.  மீண்டும் இரண்டாவது வசனத்தை கவனியுங்கள் புகையாக இருந்த வானத்தை நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது அதற்கும் பூமிக்கும் கூறினான் என்று. ஆக குரானின் இந்த வசனங்களில் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுவது போல் எந்த அறிவியல் கூறுகளும் இல்லை. மரபுவழி புராணங்களின் துணையுடன் சாதாரண மனிதன் கூறிவிட முடிகிற இந்த வசனங்களை அறிவியலுடன் முடிச்சுப்போடுவது இவர்களின் வெற்று பிதற்றல்கள் தானேயன்றி வேறில்லை.

ஒரு சிங்குலாரிடியிலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கொள்கையின் எந்த சாயலும் இல்லாத மேற்கண்ட இரண்டு வசனங்களும் இன்னொன்றையும் தெளிவாக்குகிறது. வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது. பூமியின் அருகிலிருக்கும் வானத்தை விளக்குகளால் அலங்கரித்ததாய் கதைக்கிறது.

 

மதவாதிகள் தேடுவதெல்லாம் அறிவியலோடு ஐக்கியமாகிப்போகின்ற வசனங்கள், அதைவைத்துக்கொண்டு அதற்குள் அறிவியலை வளைத்து  நுழைத்துவிடுகிறார்கள். பின்னர் அவர்களே ஆச்சரியப்பட்டு ஆஹா குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பித்துவிட்டது என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை இறைவன் எனும் ஒன்றை இவர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு கூடிய ஒரு ஆற்றலை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதை.

 

முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லைப்பெரியாற்று அணைக்குப்பதிலாக வேறு புதிய அணை கட்டியே தீருவது என்று சாத்தியமுள்ள எந்த வழியையும் விட்டுவைக்காமல் கங்கணங்கட்டி செயல்படுகிறது கேரள அரசு. அமெரிக்கப்படங்களுக்கு இணையான வரைகலை உத்திகளுடன் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதுபோல் குறுந்தகடுகளை வெளியிட்டு மக்களை ஏய்த்தது தொடங்கி இப்போதுஅணையில் நீர்கசிகிறது என்று குழு அமைத்து ஆராய அனுப்பியது வரை அடுக்கடுக்காக அக்கிரமங்கள் புரிந்துவருகிறது. ரப்பருக்கான விலை வீழ்ச்சியடைந்து தோட்டங்களில் வேலையிழந்து மக்கள் தவித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அலட்சியப்படுத்திய அரசு, விலை உயர்வு குறிட்ட போராட்டங்களின்போது போராடிய மக்களை குண்டாந்தடிகளைக்கொண்டு அடித்து நொருக்கிய அரசு, முல்லைப்பெரியாற்றில் மக்களுக்காக கவலைப்படுவதாக காட்டுவது அப்பட்டமான நடிப்பு. இதில் காங்கிரஸ் கயவாளிகளுக்கும், போலிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அன்று நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு, இன்று வழக்கை மேலும் தாமதப்படுத்துவதற்க்காக தனிப்பெஞ்சுக்கு அனுப்பியிருக்கிறது போலிகளின் அரசு.

 

அப்படி என்னதான் காரணம் அந்த அணையை முடக்க நினைப்பதற்கு? மெய்யாகவே அணை பலமிழந்து தான் இருக்கிறதா? அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவார்களா? இவர்கள் மக்களிடம் சொல்லும் காரணங்களைவிட வேறு காரணக்கள் இதன் பின்னால் இருக்கின்றன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது முல்லைப்பெரியாற்று அணைப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன (இதை எதிர்த்து அபோது போராட்டங்களும் நடைபெற்றன) பின்னர் 1976 ல் பெரியாற்று அணைக்கு 40கிமீ கீழே இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் 800 மெகாவாட் மின் உற்பத்திக்காக கட்டியது கேரள அரசு. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறை கூட அந்த அணை முழுக்கொள்ளளவை எட்டவில்லை. இந்த அணை கட்டப்பட்ட பின்னர்தான் கேரள அரசு முழு மூச்சுடன் முல்லைப்பெரியாற்று அணை பழுதடைந்திருப்பதாக பரப்பத்தொடங்கியது. பெரியாற்று அணை இருக்கும்வரை இடுக்கி அணைக்கு நீர்கிடைக்காது என்று உணர்ந்த கேரள அரசு 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவான கே.கே.தாமஸ் என்பவர் தலைமையில் அணை பலமின்றி இருப்பதாகவும் நீர்மட்டத்தின் அளவை குறைக்கவேண்டும் எனவும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய மைய அரசு அணை பலமாக இருப்பதாக அறிவித்தது. ஆனாலும் கேரள தமிழக அரசுகளிடையே அணையை பலப்படுத்துவது என்றும் அதுவரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துக்கொள்வது என்றும் ஒப்பந்தமாகியது. தனடிப்படையில் 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டது. அணை கேரளப்பகுதியில் இருந்தாலும் அணையின் நிர்வாகம் தமிழகத்திடம் இருந்தது. இதற்கு வாடகையையும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு வழக்கிவருகிறது, இருந்தாலும் மூன்று ஆண்டுகளில் முடியவேண்டிய பலப்படுத்தும் பணி கேரளாவின் பல்வேறு முட்டுக்கட்டைகளால் 1985 வரை நீண்டது. பணி முடிவடைந்த பின்னும், மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை நீர்மட்டத்தை உயர்த்துவாதால் பாதிப்பு ஒன்றுமில்லை என சான்றிதழ் வழங்கிய பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த இதுவரை கேரளா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில் தான் உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த ஆணையிட்டது. அதை கேரள சட்டமன்றத்தில் சிறப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் முறியடித்தது. இப்போது 136 அடியில் இருக்கும் அணையின் நீர்மட்டம் கடந்த 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் முழுக்கொள்ளளவான 152 அடிவரை எந்தப்பாதிப்புமில்லாமல் நிரம்பியிருந்தது, இன்னும் சிற்ப்பாக 1943 ஆம் ஆண்டு கொள்ளளவை விட இரண்டு அடி அதிகமாக அதாவது 154 அடிவரை நிரம்பியிருந்தது. அணை பலமற்று இருப்பதாக கேரளா தொடர்ந்து கூறிவருவதற்கு ஒரே காரணம் அது நூற்றாண்டுப்பழமை வாய்ந்தது என்பது மட்டும்தான். நில நடுக்கம் வந்தால் தாங்காது என்பதெல்லாம் அதிக பட்சம். எந்த கட்டிடத்திற்கு நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் என்று உறுதியளிக்கமுடியும்? இந்தியாவின் எந்த அணைக்கு இத்தகைய உறுதியளிக்கப்பட்டுள்ளது? மாறாக தமிழகத்தின் கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக இயங்கிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா அணை உடைந்துவிடும் என்று பரப்பியிருப்பது திட்டமிட்ட பொய் என்றாலும், கேரள மக்கள் அணை உடைந்து தாங்கள் கடலில் கரைந்து விடுவதாய் நம்புகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதுவும் உண்மையல்ல என்பதுதான் உண்மை. முல்லைப்பெரியாற்று அணையின் உபரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளைனைத்தும் மக்கள் வசிக்காத அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இடுக்கி மாவட்டம் உட்பட அணை உடைந்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக குறிக்கப்படும் ஐந்து மாவட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிமுதல் 4600 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன. ஆனால் முல்லைப்பெரியாற்று அணையோ கடல் மட்டத்திலிருந்து 2850 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது 2850 அடி உயரத்தில் இருக்கும் அணை உடைந்து அதை விட சற்றேறக்குறைய ஆயிரம் அடி அதிக உயரத்திலிருக்கும் பகுதி மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவார்களாம். இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பது மட்டுமல்ல, அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டபோது வெளித்தெரிந்த பகுதிகளில் அவசரம் அவசரமாக ரப்பர் முதலாளிகளும் ஊடக முதலாளிகளும் விடுதிகளும், பொழுதுபோக்கு மையங்களும் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அணை உடைந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் முதலாளிகள் கல்லாக்கட்டும் விடுதிகளும் பொழுதுபோக்கு மையக்களும் மூழ்கிவிடும் என்பதே உண்மை. எதை வைத்து இவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லித்திரிகிறார்கள்?

 

தமிழ் தேசியவாதிகள் என்று சிலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களை இந்தியா படுகொலை செய்வதையே இரண்டு மலையாள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம் என்று கூறுபவர்கள் இவர்கள். கன்னடம் ஆந்திரா கேரளம் ஆகியவை தமிழகத்தின் நீராதார உரிமையை மறுப்பது தேசிய இனச்சிக்கலினால் தான் என அடித்துக்கூறுகிறார்கள். ஆனால் தேசிய இனக்கூறுகள் வளராத கேரளாவில், பிராந்தியக்கட்சிகள் ஏதும் இல்லாத கேரளாவில் முல்லைப்பெரியாற்றுச் சிக்கலின் பலன் யாருக்குச் சேர்கிறது? கேரளாவிலிருக்கும் முதலாளித்துவ நலன் பாடும் அரசு இந்தச்சிக்கலை மேலும் மேலும் வளர்த்து புதிய அணையை கட்ட நினைப்பதன் காரணம கேரள தேசியமா? மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்வது போல் காட்டி மக்களை ஏமாற்றி காப்பாற்ற நினைப்பது மக்களையா? முதலாளிகளையா? அன்னிய முதலீட்டில் பின் தங்கி இருக்கும் கேரளாவில் மின் உற்பத்தியை அதிகரிப்பது ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கா? அன்னிய தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கா?

 

மைய மாநில அனைத்து அரசுகளுக்கும் திட்டமாக இருப்பது முதலாளிகளின் வளர்ச்சிதானேயன்றி ஒருபோதும் மக்களின் வளர்ச்சியல்ல. தமிழக அரசின் நோக்கமும் ராமனாதபுர மதுரை மாவட்ட விவசாயிகளின் நலனா? உள்நாட்டின் குறுந்தொழில்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தி வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடுங்கள் என அறிவுரை கூறும் அரசு, பன்னாட்டு நிருவனங்களுக்கு ஒரு நொடி நேரம் கூட நிறுத்தாமல் மின்சாரம் வழங்கிவருகிறது. விவசாயிகளை நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறை கூறும் அரசுகள் அதை ஒருபோதும் பாட்டிலில் அடைத்துவிற்கும் நிருவனங்களுக்கு சொல்வதில்லை. எல்லா இடங்களிலும் அந்ந்தந்த பகுதிமக்களைவிட எல்லாவிதத்திலும் பன்னாட்டு முதலாளிகள் தான் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதில் தேசிய நலன்களைக்கூறி ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிரியாக காட்டுவது அந்த முதலாளிகளுக்குத்தான் சாதகமாக அமையுமேயன்றி எப்போதும் மக்களுக்கு சாதகமானதாக அமையாது. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக இதை மாற்றாதவரை எந்த ஆற்றுச்சிக்கலையும் தீர்க்கமுடியாது.

குரான் கூறுவது அறிவியலாகுமா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி: 7

இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கட்டுமானங்களான‌ அல்லாவின் ஆற்றல், குரான், ஹதீஸ்கள் ஆகிய மூன்றும் முஸ்லீம்கள் சொல்லிக்கொள்வதுபோல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும், முரண்பாடற்றும், ஐயந்திறிபறவும் அமைந்திருக்கவில்லை என்றாலும்; இஸ்லாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் எனும் கூற்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாது இஸ்லாமை சாராத பிற மதங்களை சார்ந்தவர்களிடமும் குறிப்பிட்ட சிறுஅளவு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம், ஒன்று மதக்கோட்பாடுகளில் நம்பிக்கைக்கைகளில் பிடிப்புற்று நடந்துகொள்ளும் அல்லது பிடிப்புற்று நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளும் முஸ்லீம்களின் இயல்பு. இரண்டு மதக்கோட்பாடுகளுக்கு, வேத வசனங்களுக்கு ஏற்ப வளைக்கப்படும் அறிவியல். எல்லா மதங்களுமே இயல்பில் அறிவியலை மறுத்தாலும் நடைமுறையில் அறிவியலுக்கு தாம் எதிரியல்ல என காட்டிக்கொள்ள முயல்கின்றன. இந்த நடைமுறை தற்கால இஸ்லாமிய மதவாதிகளால், மதப்பரப்புரையாளர்களால் வெகுவாகவும், தொடற்சியாகவும் எடுத்துக்காட்டப்பட்டு; அதையே, ஏனைய மதங்களைப்போல் அறிவியலை அனுசரித்துச்செல்வதில்லை அறிவியலை தன்னுள்ளே அடக்கிக்கொண்டது தான் இஸ்லாம் என்பதற்கான ஆதாரமாகவும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாம் என்பது மெய்யான ஒன்றாகவும் அதன் கோட்பாடுகளும், இறையியலும் மட்டும்தான் உலகில் ஈடேற்றம் பெறுவதற்கான ஒரே வழியாகவும் முன்வைக்கின்றனர். அவ்வாறன்றி, இஸ்லாமும் ஏனைய மதங்களைப்போலவே பிற்போக்குத்தனங்களையும், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளையும், முரட்டுத்தனமான கருத்துமுதல் வாதத்தையுமே தன்னுள் கொண்டுள்ளது.

 

இஸ்லாம் மதமல்ல மார்க்கம் அதாவது வாழ்க்கைக்கான வழிகாட்டி எனவே அதை மதம் என்று கூறுவது தவறு என்பவர்கள், ‘இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை, அது ஒரு மனிதனுக்கு அவன் வாழ் நாளில் அனைத்து கணங்களுக்கும் தேவையான குறிப்புகளை வழங்கி அவனை வழி நடத்துகிறது என்றும் இதில் கட்டாயம் ஒன்றுமில்லை என்றும் ஏனைய மதங்களின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் தவறான பாதையை உணர்த்தி அவர்களை அழைக்கவும் செய்வதால் இது மதமல்ல மார்க்கம் என்கிறார்கள். சரியோ தவறோ தனக்கென ஒரு வாழ்முறையை அல்லது வாழ்க்கைக்கான வழிமுறையை சொல்லாத மதம் எது? பார்ப்பனீய இந்து மதத்தில் சாதிய்ய படிமுறைகள் வாழ்முறையாக இருக்கிறது. பௌத்தத்தில் ஆசையை துறப்பது வழிமுறையாக இருக்கிறது. கன்பூசியத்தில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வது வாழ்முறையாக இருக்கிறது. கிருத்தவத்தில் சகித்துக்கொள்வது வாழ்முறையாகவும், இஸ்லாத்தில் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொள்வது வாழ்முறையாகவும் இருக்கிறது. இவைகளை அடிப்படையாகக்கொண்ட சட்டங்களின் வாயிலாக தம்மை பின்பற்றுபவர்களின் வாழ்வில் தமக்கிசைந்த கட்டுக்கோப்பை கொண்டுவரவே எல்லா மதங்களும் விரும்புகின்றன. இதில் இஸ்லாத்திற்கு என்ன தனிச்சிறப்பு? எல்லா மதங்களும் தமக்குள் செய்தே ஆக வேண்டுமென்று சிலவற்றையும் சில விதிவிலக்குகளையும் கொண்டிருக்கின்றன. எல்லாமதங்களும் விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன இதில் இஸ்லாத்தில் மட்டும் விலக்கிருக்கிறதா என்ன? உலகில் பார்ப்பனீய இந்து மதத்தை தவிர ஏனைய மதங்கள் தங்களின் மதத்திற்கு வருவோரை மகிழ்வுடன் வரவேற்கவே செய்கின்றன. இதில் இஸ்லாமை மட்டும் மார்க்கம் என விளிக்கவேண்டிய தேவை என்ன? மார்க்கம் என்றால் வழி என்று பொருள், வழி என்றானால் அதில் பயணிக்கும் மக்களுக்கு தம் வழியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வேண்டும். எல்லா மதங்களுமே தம்மை பின்பற்றும் மக்களை மூளை இல்லாத பிறப்பாகவே பார்க்கின்றன. அவர்களின் செயல்கள் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. இதில் எங்கே சுதந்திரம் வருகிறது? மதம் என்பதன் பொருள் என்ன? பரிசீலனைக்கு இடமின்றி ஒரே விதமான சிந்தனையினூடான வெறி என்பது தான். இந்த இலக்கணத்தினின்று இஸ்லாம் மாறுபடுகிறதா என்ன? பின் எப்படி அதை மதம் எனவழைக்காமல் மார்க்கம் என்றழைப்பது?

 

 

பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பற்றி பேசும்போது ஒரு கண்ணோட்டத்தை வகுத்துக்கொண்டு அதன்படி பேசுவார்கள். கிமு கிபி என்பது போல் காலத்தை இஸ்லாத்திற்கு முன் இஸ்லாத்திற்கு பின் என்று பிரித்துக்கொண்டு முகம்மதுக்கு முன்னுள்ள காலம் அறியாமைக்காலம் என்ற தொனியிலிருந்துதான் பேசுவார்கள். இந்த அடிப்படையில் இருந்துதான் குரானின் வசனங்கள் அறிவியலை (அதாவது அந்த நேரத்தில் கண்டறியாததாக கருதப்படும் அறிவியலை) மெய்ப்பிப்பதால் இது முகம்மதின் வாக்காக இருக்கமுடியாது. கடவுள் என்ற ஒரு சக்தி இருந்து, அது எல்லாவற்றையும் அறிந்திருந்து கூறியதால் தான் இப்படி சாத்தியமாயிற்று என்ற திசையில் பேசுவார்கள். ஆனால் மெய்யாக இவர்கள் குறிப்பிடுவதுபோல் குறிப்பிட்ட வசனம் அறிவியல் கூறுகளை விளக்குமா? என்றால் இருக்காது சாதாரணமாக அந்த வசனம் வெளிப்பட்ட சூழல் குறித்த, தேவை குறித்த விளக்கமாக இருக்கும், ஆனால் அதை பிரித்து, நுணுகி, யூகம் செய்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலோடு ஏதாவது விதத்தில் ஒத்துப்போவது போல் பொருள் கொண்டு, ஆஹா குரான் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என விதந்து போற்றுவார்கள். இவைகளையும் மீறி குரானின் வசனங்களை அறிவியல் நேரடியாக ம‌றுக்கும் வேளைகளில் அது யூகத்தின் அடிப்படையிலான கோட்ப்பாடுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியலல்ல என திருப்பிப்போடுவார்கள்.

 

குரானில் மட்டுமல்லாது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் பலவற்றில் அறிவியலின் கூறுகள் மறைபொருளாக தலைகாட்டி இருக்கின்றன. “மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை” இது கம்பராமாயணத்தில் வருவது. இதனைக்கொண்டு கம்பனுக்கு விமானம் பற்றிய அறிவு இருந்தது என்று கொள்ள முடியுமா? “அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது அது அருகேயும் உள்ளது, அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது” ஈசோ உபனிசத்தில் இருக்கும் இதை க்வாண்டம் மெக்கானிசம் பற்றியது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்” என எழுதிய ஔவையாருக்கு அடர்த்தி பற்றிய கோட்பாடுகள் ஆர்கிமிடீஸுக்கு முன்பே தெரியும் என்று முடிவுக்கு வரலாமா? “சாணிலும் உளன் அனுவை சதகூறிட்ட கோணிலும் உளன்” என்பதில் அணுப்பிளவு பற்றி வருகிறது, திருக்குறளில் நிர்வாகவியல், குறுந்தொகையில் உளவியல், பட்டினப்பாலையில் நகர் நிர்மாணம், சீவக சிந்தாமணியில் தொலைக்காட்சி, திருப்பாவையில் வானியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் மட்டுமல்ல உலகிலுள்ள பல மொழிகளின் பண்டை இலக்கியங்களில் இதுபோல் பற்பல அறிவியல் கூறுகளை கூறலாம். லூயி கார்ல், ஐன்ஸ்டீனுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை தன்னுடைய கதைகளில் விளக்கியதாக கூறுகிறார்கள். பாராசூட், கருவியல் உட்பட ஏராளமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே படமாக வரைந்து வைத்தவர் லியானர்டோ டாவின்சி. அறிவியல் தெளிவு ஏற்படுவதற்கு முன்பே எப்படி இவைகளை அவர்களால் கூற முடிந்தது? முகம்மதுவுக்கு அல்லா போல வேறு ஏதோ ஒரு கடவுள் அவர்களுக்கு கூறிச்சென்றனரா? இவைகளையெல்லாம் அவர்களின் கற்பனைத்திறனுக்கு சான்றாக கூறமுடியுமேதவிர சம்பந்தப்பட்டவர்களின் தெய்வீகத்தொடர்புகளுக்கு சான்றாக ஆகாது.

டாவின்ஸி வரைந்த படம்

இஸ்லாமியர்களின் அறிவியல் தாகம் எப்படிப்பட்டது? வேத வசனங்களை அறிவியல் வயப்பட்டு பொருள் விளக்குபவ‌ர்கள், அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லா வசனங்களையும் அணுகுவார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். அணுகியிருந்தால் குரானில் சொல்லப்படும் ஜின்களை எப்படி மெய்ப்பிப்பது எனும் பார்வை அவர்களுக்கு தோன்றியிருக்கும். ஆனால் ஜின்களின் இருப்பை பொருத்தவரை எந்த ஆதாரமோ, அறிவியல் விளக்கங்களோ அவர்களுக்கு தேவையில்லை. அல்லா குரானில் கூறியிருப்பது மட்டுமே போதுமானது, ஜின்கள் எனும் உயிரினங்கள் உலகில் இருக்கின்றன, அதை யாரும் மெய்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. இதே போல் ஏனைய வசனங்களையும் எடுத்துக்கொள்ளலாமே, குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பிப்பதாக நிரூபித்தாக‌ வேண்டிய அவசியமென்ன? பார்ப்பனீய இந்து மதத்தை பொருத்தவரை அது அறிவியலுக்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும். கிருத்தவமோ கலிலியோ, புருணோ என்று வரலாறுகளை வைத்திருக்கிறது. ஆகவே இஸ்லாம் மட்டுமே இதுபோன்ற மதங்களிலிருந்து வேறுபட்டு அறிவியலை அரவணைத்துச்செல்கிறது எனும் தோற்றத்தை உண்டாக்குவதன் மூலம் எங்கள் மதமே உயர்ந்தது எனவே அதில் வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்று ஆள் பிடிக்கும் வேலைதானே தவிர வேறொன்றும் இல்லை. எனவே மதவாதிகளின் கைகளில் அறிவியல் வஞ்சகமாக பயன்படுவதற்கு எதிராக இனி குரானின் வசன‌ங்களை அலசுவோம்.

ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 6

முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. ‘நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்’ எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே வைத்துக்கொண்டு அதனை முழுமையாக புறிந்துகொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக குரான் குறிப்பிடும் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவைகளை ஒவ்வொரு முஸ்லீமும் நிறைவேற்ற வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது, ஆனால் அந்த வணக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்றால் அதற்கு குரானில் விளக்கம் கிடைக்காது. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனை குறித்து அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் இந்த தண்டனை பற்றிய விபரங்களை குரானில் தேடினால் இருக்காது. இப்படி விடுபட்ட, விளங்கிகொள்ள முடியாதவைகளுக்கு விளக்கமாக வருபவைகள் தாம் ஹதீஸ்கள் எனப்படுபவை.

ஹதீஸ் எனும் சொல்லிற்கு செய்தி அல்லது புதிய விசயம் என்பது பொருள். முகம்மது இறப்பதற்கு முன் ஆற்றிய கடைசிப் பேருரையில், “நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். ஒன்று இறைவனின் வேதம். மற்றது என்னுடைய வழிகாட்டுதல். இந்த இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார். இதில் என்னுடைய வழி காட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது தான் ஹதீஸ் எனப்படுகிறது. அதாவது முகம்மது கூறிய, செய்த அல்லது செய்வதற்கு அனுமதியளித்தவைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

முகம்மதிற்கு இறைச்செய்தி (வஹி) வரும்போது அவர் கேட்டுச்சொல்வதை உடனிருந்தவர்கள் எழுதிவைத்துக்கொள்வார்கள் அது குரான். அந்த குரானின் வாசகங்களில் ஐயம் ஏற்பட்டால் அல்லது செயல் முறையில் நடைமுறையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இன்னும் நடப்பு வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள், அறியாமைகள் ஏற்பட்டால் அவைகளை முகம்மதுவிடம் விளக்கம் கேட்பார்கள். அவர் அவைகளுக்கு வேண்டிய விளக்கங்களை அளிப்பார், இது தான் ஹதீஸ். ஆனால் அவ்வப்போது அவர் அளிக்கும் விளக்கங்களும் குறிப்புகளும் எழுதிவைக்கப்படவில்லை. முகம்மதின் சம காலத்தவர்கள், சற்றே பிந்தியவர்கள் போன்றவர்களுக்கு அது ஆவணமாக வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் பின்னர் வந்தவர்களுக்கு அவைகளின் தேவை தோன்றியது. அதனால் உமர் இப்னு அஜீஸ் (அபூபக்கருக்கு பின்னர் ஆட்சிசெய்த உமர் அல்ல இவர் இரண்டாம் உமர்) என்பவர்தான் முதன் முதலில் ஹதீஸ்களை தொகுக்கவேண்டியதன் தேவையறிந்து ஆபூபக்கர் இப்னு ஹஸம், இப்னு இஸ்ஹாக்,  ஸூஃப்யானுத் தவ்ரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, இப்னு ஜூரைஜ், அப்துல்லாஹ் இப்னு முபாரக் போன்றோர்களைக்கொண்டு நூல்களாகத்தொகுத்தார். எப்போது? முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து. இதனைத்தொடர்ந்து இமாம்கள் என இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் ஷாபி, ஹன்பலி, மல்லிக் ஆகியோர்களால் தனித்தனியே முஸ்னத் ஷாபி, முஸ்னத் அஹ்மது, முவத்தா போன்ற ஹதீஸ் நூலகள் தொகுக்கப்பட்டன. இவைகளில் முஸ்னத் அஹ்மது மட்டும் இன்னும் இருப்பதாக தெரிகிறது. மற்றவைகள் பற்றி தகவல் இல்லை.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். முகம்மது இறந்து நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகள் கழித்து இவைகளை எப்படி தொகுத்திருப்பார்கள் என்பது தான். செவி வழிச்செய்திகள் தான். இன்னாரிடமிருந்து இன்னார் கேட்டார், அவரிடமிருந்து இவர் செவியுற்றர் என்று தொகுத்தவர்களை அடைந்தவைகள் தான் தொகுக்கப்பட்டன. இவைகளில் முகம்மது சொல்லி செய்தவைகள் மட்டுமன்றி அவர் சொல்லாததும் செய்யாததும் அவரின் பெயரில் கலந்துவிடுவது இயல்பானது தான். இதனால் இவர்களுக்கு பிறகு வந்த அறுவர் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் தொகுத்து பல முறைகளில் சரிபார்க்கப்பட்டு தவறானவைகள் என அறியப்பட்டவைகளை எல்லாம் நீக்கி ஆறு தொகுப்புகள் வந்தன‌

1) முகம்மது இஸ்மாயீல் புஹாரி என்பவர் சுமார் ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸஹீஹுல் புஹாரி என்ற பெயரில் நூலாக்கினார்.

2) முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் என்பவர் சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸ்ஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் நூலாக்கினார்.

3) அபூதாவூது சுலைமான் அல் சஜஸ்தானி என்பவர் சுமார் ஐந்து லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 5200 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை சுனது அபீதாவூது என்ற பெயரில் நூலாக்கினார்.

4) அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ என்பவர் 4000 ஹதீஸ்களை ஜாமிஉத் திர்மிதி என்ற பெயரில் நூலாக்கினார்.

5) அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ என்பவர் 5700 ஹதீஸ்களை ஸூனனுந் நஸாயீ என்ற பெயரில் நூலாக்கினார்.

6) அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் என்பவர் 4300 ஹதீஸ்களை ஸீனனு இப்னுமாஜா என்ற பெயரில் நூலாக்கினார்.

இவர்கள் அனைவரும் கிபி 800 ம் ஆண்டிலிருந்து கிபி900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளாக இருந்தாலும் முதல் இரண்டு நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸ்ஹீஹ் முஸ்லிம் என்பவை தான் குரானுக்கு அடுத்தபடியான இடத்தில் உண்மையான, கலப்பில்லாத‌ ஹதீஸ் தொகுப்புகளாக ஏற்கப்பட்டுள்ளன.

இவர்கள் இது சரியான ஹதீஸ் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவாக ஹதீஸ் எனப்படுவது இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். முதலாவது சொல்லப்படும் செய்தி அடுத்தது அறிவிப்பாளர்கள் அதாவது தொகுத்த ஆசிரியருக்கு அந்த ஹதீஸ் யார் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்பது. ஒவ்வொரு ஹதீஸுக்கு பின்னாலும் குறைந்தது எட்டு பேராவது இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள், அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். அடுத்து அறிவிப்பாளர்களின் குணநலன்களில் ஏதாவது குறையிருக்கிறதா? அவர் பொய் சொல்லக்கூடியவரா? மறந்து விடக்கூடியவரா? என்று பார்ப்பார்கள். அறிவிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டவரா? என்று பார்ப்பார்கள் இப்படி சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு இவற்றில் சிக்கியவைகளை தள்ளிவிட்டு ஏனையவற்றையே தொகுத்தார்கள். இதன்படி அறிவிப்பவர்களில் ஆண்களில் முகம்மதின் நண்பர்களில் ஒருவரான‌அபூ ஹுரைரா என்பவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளராவார், இவர் 5300 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளர் முகம்மதின் மனைவியான ஆயிஷா, இவர் 2200 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.

ஹதீஸ்களை திரட்டிய ஆசிரியர்களின் உழைப்பு மிகமிகக் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். ஹதீஸ் ஆசிரியர்களின் தேடல் எப்படி இருந்தது என்பதற்கு நிறைய கதைகள் உலவுகின்றன. ஹதீஸ் சேகரிக்கச்செல்லும் போது ஒருவர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார், அவர் ஆட்டை ஏமாற்ற ஆட்டின் குட்டியைப்போன்ற ஒன்றை ஆட்டின் கண்முன் நிருத்தியிருந்தாராம். பாலுக்காக ஆட்டை ஏமாற்றுபவர் கூறும் ஹதீஸை ஏற்பதற்கில்லை என அவரின் ஹதீஸை கேட்காமலேயே திரும்பிவிட்டாராம். ஒருவேளை அவர் கறந்து முடித்து ஆட்டை ஓட்டிவிட்டு பாலை குடித்துக்கொண்டிருந்த போது சென்றிருந்தால் ஹதீஸ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லவா? அல்லது ஹதீஸை கேட்டுச்சென்ற பின் இதுபோல் நிகழ்ந்திருந்தால்? இன்னொருவர் தம் பொருட்களை திருட்டு கொடுத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருந்தாராம். களவு போன பொருட்களின் பாதிப்பு ஹதீஸிலும் வந்துவிட்டால் என்றெண்ணி அவரிடம் ஹதீஸை கேட்காமலேயே திரும்பினாராம். ஏற்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் ஆசிரியருக்கு தெரியாமல் இதுபோன்ற விசயங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்? இது தேவையில்லாத யூகம் என இவற்றை ஒதுக்கித்தள்ளலாம். ஆனால் இதனால் இந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும், இதனால் இந்த ஹதீஸை சேர்க்கவேண்டும் என்றெல்லாம் கூறவரவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்பட விரும்புவதெல்லாம், அதன் தோராயமான தன்மையைத்தான். இவைகளும் கூட முகம்மது இறந்து நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு ஆண்டுகள் வரையில் தான். முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஹதீஸ் உண்மையானதா இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தெரிவதற்கு அறிவிப்பாளர் வரிசை, தன்மை, அடையாளம் காணப்பட்டவரா என்பனவற்றையெல்லாம் விட அதன் உள்ளடக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் இரண்டு ஹதீஸ்களை கொள்வோம்.

ஹதீஸ் 1.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.

ஹதீஸ் 2.

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். தவறை உணர்ந்த அவன் இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான். பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு பாவமன்னிப்பு உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார். அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள். அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில் “மனசாட்சி அடிப்படையில் நடந்து” என்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.

இன்னொரு சமகால எடுத்துக்காட்டு ஒன்றை பார்ப்போம். புஹாரியில் முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று “முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததையெல்லாம் செய்ததாக கூறும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார்” என்று கூறுகிறது. ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.

இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு. முதலிடத்தில் இருக்கும் குரானிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கும் ஹதீஸ்களின் கற்பை தொட்டுப்பார்ப்பது மாற்றுக்குறைவானதாகவே இருக்கும். ஹதீஸ்களை பற்றி குறிப்பிடும் போது சொலவடையாக ஒன்றை கூறுவார்கள் “முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றன” என்று. பல்லாயிரம் ஹதீஸ்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவு தெளிவாக முகம்மதின் வாழ்வைச்சொல்லுகின்றன என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. எப்படியென்றால் குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.

ஆனாலும் ஹதீஸ் தொகுப்புகளின் காலத்திற்கு முன்பே முகம்மதின் வரலாறு தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…

இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்

ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக்
கருதப்படுவான்.

மேலே நீங்கள் கண்டது வெள்ளையர்களுக்கு எதிராக மக்களை அழைக்கும் சின்ன மருதுவின் திருச்சி அறிக்கை. மக்கள் நலனும் வெள்ளையர்களை எதிர்த்து காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடுவதும் வேறுவேறல்ல என அறிவிக்கும் முதல் அறிக்கை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திப்பு முதல் துந்தாஜிவாக் வரை கட்டியமைத்த கூட்டமைப்பை கட்டிக்காக்க தீரத்துடன் போராடிய மருதிருவரின் குருபூஜைகள் இப்போது கொண்டாடப்படுகின்றன. அவர்களின் தன்னலமற்ற வீரத்திற்காகவோ நாட்டுப்பற்றுக்காகவோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் தியாகத்திற்காகவோ அல்ல. ஜாதிக்காக. யார் கொண்டாடுவது? பார்ப்பனீயத்தின் அடிவருடிகளாக அடக்குமுறை சாதீயத்திமிரையே பெருமையாக முறுக்கித்திரியும் தேவர்சாதி குறும்பைகள். ஆண்டுதோறும் தேவர் குருபூஜை என்ற பெயரில் ஒரு ஜாதி வெறியனை கொண்டாடும் கொண்டாடும் கூட்டம், சின்ன மருது வெஞ்சினத்துடன் யாரை தன் அடிமயிருக்கு சமம் என கொதித்தெழுந்தானோ அவர்கள்; முதல் சுதந்திரப்போரை மக்கள் போராக‌ நடத்திக்காட்டிய அந்த நாயகர்களை சாதியப்பட்டியில் அடைத்து ஆதிக்கவெறியர்கள் விழா கொண்டாடுவதை, விடுதலை வேட்கை கொண்டவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

 

தேவர் ஜெயந்தி வருகிறது என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள் பயத்துடன் நாட்களை கழிக்கவேண்டிய அளவுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஜாதீய அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. மன்னர் பரம்பரை என்று கூறிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிடுவதை எந்தக்கட்சி அரசானாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது இங்கு. மருதிருவரையும் சாதித்தூபம் போட பயன்படுத்துவதையும் இந்த நோக்கில்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு.

 

எந்தக்கட்சி அரசானாலும் இப்படி சாதி வெறியர்களுக்கு துணைபோவது ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல் என்று பொதுமைப்படுத்தி குறுக்கிவிடவும் முடியாது, அதையும் மீறி உணர்வு ரீதியான காரணமும் இருக்கிறது. அன்று தங்களின் எழுச்சி மிக்க வீரத்துடன் மக்களையும் இணைத்து வெள்ளையர்களை எதிர்த்து போராடிய போது “எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை” என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் கூறினான். அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையர்களுக்கும் புறியவில்லை, இன்று ஆண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கும் புறியவில்லை அவர்கள் ஏன் போராடினார்கள் என்று. அன்னியன் நம்மை ஆள்வதா? என்று கொதித்தெழுந்தது அன்றைய இளைஞர் கூட்டம். நாங்களும் அன்னியர்கள் தாம் என்று தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் மூலமும் நிரூபித்துவருகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். எங்கே நம் இளைஞர் கூட்டம்?

 

சொந்த மக்களின் வயிறிலடிக்கும் துரோகிகளிடமும், சாதிவெறிக்கும்பலிடமும் அடையாளம் தெரியாமல் கரைந்துபோய்விடுவதற்கா அன்று அவர்கள் போராடினார்கள்? இல்லை, அவர்களின் வரலாறு நமக்கு போராடும் துணிவையும், ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் தீரத்தையும் ஒருங்கே ஊட்டும் உணவு. அதை நாம் மீட்டெடுப்போம், கடைப்பிடிப்போம்.

 

மருதிருவரின் போராட்ட வரலாற்றை சுருக்கமாக தெரிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்