மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்

நண்பர்களே,

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும்,  முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான போர் யாருக்கு எதிராக யார் நடத்தும் போர் என்பது தெளிவாகும். பிப்ரவரி 20 ல் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் அவ்வாறான பகுத்தறிதலை உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.

வாருங்கள்,

உங்கள் குடும்பத்தினரோடு

உங்கள் நண்பர்களோடு

ஆம் நண்பர்களே, நம் மீதான போரை நாம் எதிர்ப்பதன் முதல்படி இது.

தொடர்புக்கு: (0091) 9710082506

(0091) 9444834519

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 14

பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய இலக்கிய நூல்களில் இருப்பதாக தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்) செயற்கையாக பால் உற்பத்தி, தேன் உற்பத்தி என்று உணவுப்பண்டங்களை வர்த்தகப் பண்டமாக்கும் தேவை அப்போது இருந்திருக்கவில்லை.

தெரியாத விஷயங்களான இவைகளை அல்லா தன்னுடைய வேதத்தில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதால், அதாவது அவற்றின் உற்பத்தி குறித்த அறிவியல் வளராத காலத்திலேயே சொல்லியிருப்பதால் இது இறைவனின் வேதம் தான் என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது. இது மதவாதிகளின் கோணம். பாலும் தேனும் பற்றி என்ன சொல்லியிருக்கிறது குரானில்?

……அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம். குரான் 16:66

……அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது…….. குரான் 16:69

வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது பால் உற்பத்தியாகும் இடமாக குரான் குறிப்பிடுவது. பால் உற்பத்தியாவது மார்பகங்களிளிருந்து அதாவது மடுக்களிளிருந்து தானே என்பவர்கள் மதவாதிகள் எடுக்கும் அறிவியல் வகுப்புகளையும் கவனிக்கவேண்டும். முன் காலத்தில் இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தனர். உண்ணப்படும் உணவானது கூழாக அரைக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குடல்களினால் உறிஞ்சப்பட்டு அது தான் பாலாகவும் இரத்தமாகவும் இன்ன பிற பொருட்களாகவும் மாறுகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக்கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் பால் உற்பத்தியாகிறது. இதுதான் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எனும் குரான் வசனத்திற்கு மதவாதிகளின் விளக்கம். இவர்கள் சொல்லும் இந்த அறிவியல் ஓரளவுக்கு சரியானது தான். ஆனால் இது பாலுக்கு மட்டும் அல்ல, உடலின் அனைத்து ஆற்றலும் இந்த பரிமாற்றத்தின் மூலம் தான் கிடைக்கிறது. நடப்பதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. கறிக்கோழியின் இறைச்சி எப்படிக்கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. சரிதான், உயிரினங்கள் அனைத்திற்கும் அது இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அது உண்ணும் உணவிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றன. அந்த உணவு வயிற்றில் அரைத்து கூழாக்கப்பட்டு குடல்களினால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. எஞ்சிய சக்கைகள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றன. இது பொதுவான அறிவியல். ஆனால் பால் எப்படி உற்பத்தியாவதாக அறிவியல் கூறுகிறது?

பிரசவ நேரம் நெருங்கியதும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது, இந்த புரோலாக்டின் மடுக்களை அடைந்ததும், ஆரஞ்சு சுளைகளை பிரித்துப்பார்த்தால் அதில் நெருக்கமாக இருக்கும் மொட்டுக்களைப்போல் மடுக்களில் இருக்கும் அல்வியோல் எனும் சுரப்பிகள் ஒரு வித திரவத்தை சுரக்கின்றன. இது தான் காம்புகள் வழியாக வெளியேற்றப்பட்டு பால் என அழைக்கப்படுகிறது. சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு ஒன்றுமில்லை. காம்புகளிளிருந்து கரக்கப்படுவது தான் பால் என்பது அனைவரும் அறிந்தது தான், முகம்மதுவும் கூட. அதை வித்தியாசமாக சொல்ல நினைத்த முகம்மது, உடலில் எங்கிருந்தோ உற்பத்தியாகி வருகிறது எனும் நினைப்பில் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்று பொதுவாக சொல்லி வைத்திருக்கலாம். அறிவியல் பூர்வமாக சொல்லவேண்டும் என்ற தேவை அன்று அவருக்கில்லை. ஆனால் இன்று இருக்கிறது.

தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது. அந்தக்காலத்தில் தேனீ மலர்களிலுள்ள தேனை வாயினால் உறிஞ்சி கொண்டுவந்து அடைகளில் சேர்த்து வைக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த குரான் வசனமோ வயிற்றிலிருந்து எனும் சொல் மூலம் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மையல்ல என்று அறிவியலை பேசுகிறது. இக்கால அறிவியலும் அதையே நிரூபித்திருக்கிறது என்கிறார்கள் மதவாதிகள். ஆனால் முகம்மதின் குரான் அறிவியலை பேசவும் இல்லை, குரான் சொல்வது போல அறிவியல் சொல்லவும் இல்லை என்பதே உண்மை.

குரான் தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுவதாக கூறுகிறது. வயிற்றிலிருந்து வெளிப்படுவதாக இருந்தால் உணவாக உண்டது செரித்து கழிவாக வெளிப்படுவதாக இருக்கும். தேனீ ஏன் தேனை சேமிக்கவேண்டும் எனும் ஆதாரக் கேள்வியோடு இது முரண்படுகிறது. வெயிர்காலங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் தேனீக்கள், குளிர்காலங்களில் சேமித்த தேனையே உணவாகக் கொள்கிறது. கூட்டிலிருக்கும் ராணித்தேனீ, ஆண் தேனீக்களின் உணவும் தேன் தான், அதாவது வேலைக்காரத் தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரிக்கின்றன. ஏனைய தேனீக்கள் அதை உண்கின்றன. என்றால் தேனீக்கள் தங்களின் கழிவுகளையே மீண்டும் உண்கின்றனவா? அவ்வாறல்ல, தேனீக்கள் உணவாக தேனை உண்ணும் போது வயிற்றுக்கும், சேகரிக்கும் போது வேறொரு பையிக்கும் அனுப்புகின்றன. வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது. எனவே குரான் வயிற்றிலிருந்து எனக் குறிப்பிடுவது தவறான கூற்றாகும்.

இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” இது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.

இந்த வசனத்தில் இருக்கும் இன்னொரு விஷயம் தேனீக்களின் நடனம். எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல் எனும் சொற்களை பிடித்துக்கொண்டு அதற்கு கொடுக்கும் அறிவியல் விளக்கம்தான் தேனீக்களின் நடனம். தேனீக்கள் தேன் கிடைக்குமிடம் பக்கத்தில் இருக்கிறதா தூரமாக இருக்கிறதா என்பதை பிற தேனீக்களுக்கு அறிவிக்க இரண்டு விதமாக பறந்து காண்பிக்கிறது. அருகில் என்றால் வட்டவடிவமாகவும் தூரமாக என்றால் வேறு வடிவிலும் பறக்கிறது. இதை தேனீக்களின் நடனம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நடனத்தை ஒடுங்கிச்செல் எனும் சொல்லில் ஒட்டவைத்து அறிவியலாக்கி களத்தில் இறக்கிவிட்டார்கள்.

இது இறை வசனம் என்றால், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்றால் இப்படி தப்புத்தப்பாக அறிவியல் சொல்லித்தருவது ஏன்? இல்லை முகம்மது தனக்கு தெரிந்தவற்றை வைத்து இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் என்றால் எப்போது திருத்தப்போகிறீர்கள் அல்லது திருந்தப் போகிறீர்கள்?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

மாவோவின் குழந்தைப்பருவம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௪


இறுதியாக எனக்கு 13 வயதாக இருக்கும்போது நான் ஆரம்ப பாடசாலையை விட்டு நீங்கினேன். கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிக்கு உதவியாக நீண்ட நேரம் எங்கள் பண்ணையில் நான் வேலை செய்யத்தொடங்கினேன். பகலில் ஒரு தொழிலாளியின் முழு அளவு வேலையையும் இரவில் தந்தையாரின் கணக்குப்புத்தகம் எழுதும் வேலையையும் செய்தேன். புராதன இலக்கிய நூலைத்தவிர கிடைக்கக்கூடிய அனைத்து நூல்களையும் விரும்பிப்பயின்றேன். இது எனது தந்தையாருக்கு கவலையூட்டியது, அவர் புராதன இலக்கிய நூலில் நான் சிறந்த ஆளூமை பெறவேண்டும் என விரும்பினார். சீன நீதிமன்றம் ஒன்றில் இவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், இவரது எதிரி புராதன இலக்கியத்திலிருந்து ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டைக் கூறி வழக்கில் இவரை தோற்கடித்திருந்தான்.

இதனால் தான் விசேடமாக நான் புராதன இலக்கியம் படிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். பின்னிரவுகளில் நான் படிப்பதை எனது தந்தையார் பார்க்காமல் இருப்பதற்காக அறையில் ஜன்னல் கண்ணாடிகலை மூடி இருப்பதாக செய்துவிடுவேன். இந்த வழிமுறையில் ஷென்ஷெ வெய் யென் (எச்சரிக்கை வார்த்தைகள்) என்ற நூலைப்படித்தேன். (இந்த நூல் சுங் குவாங் யிங் அவர்களால் எழுதப்பட்டது. இது பல ஜனநாயக சீர்திருத்தங்களை ஆதரித்தது. பாராளுமன்ற அரசு, புதிய கல்விமுறை, தொலைத்தொடர்புகள் ஆகியவற்றையும் வலியுறுத்தியது. துயரார்ந்த முறையில் முடிவுற்ற, 100 நாட்கள் சீர்திருத்தம், கிளர்ச்சி நடந்த1898 ஆம் ஆண்டு இந்த நூல் பிரசுரிக்கப்பட்டபோது, அமோக ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றது) இந்த நூலை நான் மிகவும் விரும்பினேன். பழைய சீர்திருத்த அறிவியலாளர்களில் ஒருவரான இந்த நூலாசிரியர் சீனாவின் பலவீனம் மேற்கத்திய நவீன உபகரணங்களை பெற்றுக்கொள்ளாமையிலேயே தங்கியிருக்கிறது என்று கருதினார். ரயில் பாதைகள், டெலிபோன்கள், தந்தி சாதனங்கள், நீராவிக்கப்பல்கள் ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். இத்தகைய புத்தகங்களைப் படிப்பது காலத்தை பாழாக்குவதாகும் என்று தந்தையார் கருதினார். நடைமுறை விடயங்களைக்கொண்டிருக்கும் புராதன இலக்கியம் போன்ற நூல்களை நான் படிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். இது அவர் தொடுக்கும் வழக்குகளை வெல்வதற்காவது பயன்படும்.

இந்தப் பண்டைய வீர வரலாறுகளையும் சீன இலக்கியங்களையும் நான் தொடர்ந்து படித்துவந்தேன். இத்தகைய கதைகளில் வினோதமாக இருக்கும் ஒரு விடயம், ஒரு நாள் எனக்கு தெரியவந்தது. நிலத்தை உழும் விவசாயிகள் எவரும் இக்கதைகளில் இடம்பெறாமையே எனது கருத்தை ஈர்த்த விடயமாகும். கதாபாத்திரங்கள் அனைவரும் போர் வீரர்களாகவும் அதிகாரிகளாகவும் அறிவியலாளர்களாகவுமே இருந்தனர். அவர்களில் ஒரு விவசாயி கூட கதாநாயகனாக இருக்கவில்லை. இது பற்றி இரண்டு வருடங்கள் வரை நான் யோசித்தேன். பின்பு இந்தக்கதைகளின் சாராம்சங்களை நான் ஆய்வு செய்தேன். அக்கதைகள் அனைத்தும் ஆயுதம் தரித்தவர்களையும், மக்களை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களையும் மையப்படுத்தியிருந்தது. இவர்கள் வயல் வேலை எதையும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்தக்கணிகளை தங்கள் உடமையாக தங்கள் கட்டுப்பாட்டினுள்ளும் வைத்திருந்தனர். அத்தோடு இவர்கள் காணிகளில் தங்களுக்காக வேலை செய்வதற்கு விவசாயிகளை வைத்துக்கொண்டவர்கள் என்பது வெளிப்படையாகியது.

எந்து தந்தையார் எனது இளம்பருவத்திலும் மத்திய வயதிலும் இறை நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் எனது தாயார் மிகுந்த ஈடுபாட்டோடு புத்தரை வணங்கினார். அவர் தனது குழந்தைகளுக்கு சமய போதனை செய்தார். எங்கள் தந்தையார் ஒரு இறை நம்பிக்கையற்றவர் என்பதையறிந்து நாங்கள் அனைவரும் வருந்தினோம். எனக்கு 9 வயதாக இருக்கும்போது எனது தந்தையாரின் பக்தியற்ற தன்மை குறித்து எனது தாயாரோடு தீவிரமாக கலந்துரையாடினேன். அவரை சமயத்திற்கு மாற்ற அப்போதும் பின்பும் பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். அவர் எங்களை ஏச மட்டுமே செய்தார், அவரது தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டு புதிய திட்டங்களை உருவாக்குவதற்காகப் பின்வாங்கினோம். ஆனால் அவர் கடவுளைப்பற்றி எவ்வித அக்கரையும் காட்டவில்லை.

எனது நூல் வாசிப்பு படிப்படியாக என்னை ஆளுமைப்படுத்த ஆரம்பித்தது, நானே இறை நம்பிக்கையற்றவனாக ஆகத்தொடங்கியிருந்தேன். எனது தாயார் என்மீது கவலைப்படத்தொடங்கினார் இறை நம்பிக்கைக்கான தேவைகள் பற்றிய எனது அறிவீனத்தினால் அவர் என்னை ஏசத்தொடங்கினார். ஆனால் இது பற்றி எனது தந்தையார் ஒன்றும் கூறவில்லை. பின்பு ஒருநாள் யாரிடமோ பணம் வாங்குவதற்காக வெளியில் சென்றார் வரும் வழியில் அவர் ஒரு புலியை எதிர்கொண்டார், ஆச்சிரியமாக அந்தப்புலி ஓடி மறைந்தது. எனது தந்தையார் அதைக்காட்டிலும் ஆச்சரியமடைந்தார். அவர் ஆச்சரியமான முறையில் தப்பிப்பிழைத்தது பற்றி அதிகரித்த அளவிலான வெளிப்பாடுகளைக் காட்டினார். தான் கடவுளர்களுக்கு பிழை செய்து விட்டேனா என எண்ணத்தொடங்கினார். அன்று தொடக்கம் அவர் புத்த சமயத்திற்கு கூடுதல் மதிப்பளிக்கத்தொடங்கினார். இதற்கிடையே சாம்பிராணிக்குச்சி கொளுத்தவும் ஆரம்பித்தார். இருப்பினும் சமய நம்பிக்கைகளில் தலையிடவில்லை, கஷ்டங்கள் ஏற்படும்போது மட்டும்தான் அவர் கடவுளை வணங்கினார்.

ஷெங்ஷி வெய் யென் என்ற நூல் எனது கல்வியை தொடருவதற்கான உத்வேகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அத்தோடு பண்ணையில் எனது உழைப்பின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இயல்பாகவே இதை எனது தந்தையார் எதிர்த்தார். இது பற்றி நாங்கள் இருவருமே பிரச்சனைப்பட்டோம். இறுதியில் நான் வீட்டை விட்டு ஓடினேன், ஒரு வேலையற்ற சட்ட மாணவனின் வீட்டுக்குச்சென்றேன். அங்கு ஆறு மாதங்கள் கல்வி கற்றேன். அதன் பின்பு ஒரு முதிய கல்விமானிடம் புராதன இலக்கிய நூலை மேலும் பயின்றேன். அத்தோடு பல சமகாலக் கட்டுரைகளையும் சில புத்தகங்களையும் படித்தேன்.

இந்த நேரத்தில் ஹூனானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என் முழு வாழ்க்கையிலும் செல்வாக்கை ஏற்படுத்தியது. நான் படித்த ஒரு சிறிய சீனப்பாடசாலைக்கு வெளியே பல வியாபாரிகள் சாங்காவில் இருந்து திரும்பி வருவதை மாணவர்களாகிய நாங்கள் அவதானித்தோம். அவர்கள் அனைவரும் ஏன் திரும்பிச்சென்றார்கள் என்று நாங்கள் அவர்களைக் கேட்டோம். நகரில் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக  அவர்கள் கூறினார்கள். அந்த வருடம் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தது சாங்காவில் பல்லாயிரக்கணக்கானோர் உண்ண உணவின்றி இருந்தனர். பட்டினி கிடந்தோர் உதவி கேட்டு ஒரு பிரதிநிதிக்குழுவை குடிசார் ஆளுனருக்கு அனுப்பினர்.

ஏன் உங்களிடம் உணவு இல்லை, நகரில் உணவு ஏராளமாக உள்ளது, என்னிடம் எப்போதும் ஏராளமாக உள்ளது என்று அந்த ஆளுனர் இறுமாப்புடன் கூறினார். ஆளுனரின் பதில் மக்களுக்கு கூறப்பட்டபோது அவர்கள் கடுமையாக ஆத்திரமுற்றனர். அவர்கள் பொதுக்கூட்டங்களை ஒழுங்கு செய்து ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்தனர். அவர்கள் ஆளுனரின் அரச பணிமனையைத் தாக்கினர் அரசின் அடையாளச் சின்னமான கொடிக்கம்பத்தை வெட்டினார்கள், ஆளுனரை துரத்தியடித்தார்கள். இதனையடுத்து சாங் என்ற உள்ளூர் விவகார ஆணையாளர் தனது குதிரையில் வெளியே வந்து அவர்களுக்கு உதவு முகமாக  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று மக்களிடம் கூறினார். இந்த வாக்குறுதிகளை வழங்கியதில் சாங் நேர்மையாக இருந்துள்ளார் என்பது வெளிப்படை ஆனால் சக்கரவர்த்தி இவரை வெறுத்ததோடு, இந்த மக்கள் கும்பலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக இவர்மீது குற்றமும் சாட்டினார். இவர் பதவி விலக்கப்பட்டு ஒரு புதிய ஆளுனர் வந்து சேர்ந்தார். அவர் உடனடியாக இந்தக் கிளர்ச்சியின் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இவர்களில் பெரும்பாலானவர்களின் தலை துண்டிக்கப்பட்டு அவர்களது தலைகள் எதிர்கால புரட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக கம்பங்களில் குத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையில் இந்த நிகழ்ச்சி பல நாட்களாக விவாதிக்கப்பட்டது. இது என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு அனுதாபம் காட்டினர். ஆனால் இது ஒரு பார்வையாளரின் நோக்கிலேயே அமைந்தது. தங்களுடைய சொந்த உயிரோடு வாழ்க்கையோடு ஏதாவது தொடர்புடையதாக இந்த நிகழ்ச்சி இருக்கிறதா என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதையொரு புரட்சியூட்டும் நிகழ்ச்சியாகவே அவர்கள் ஆர்வம் காட்டினர். இந்த நிகழ்ச்சியை ஒருபோதும் மறக்கவில்லை, புரட்சியாளர்கள் எனது குடும்பத்தைப்போலவே சாதாரண மக்கள் தான் என்பதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியால் நான் ஆழமாக ஆத்திரமுற்றேன்.

சில நாட்களுக்குப்பிறகு சாவோசான் என்ற இடத்திலே ஓர் ரகசிய சங்கமான கெலாவோ ஹூய் உறுப்பினர்களுக்கும்(ஹோ லுங் உறுப்பினராக இருந்த அதே சமயம்) ஒரு உள்ளூர் நில உரிமையாளர்களுக்குமிடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அவர் இந்தச் சங்கதினர் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் ஒரு சக்திமிக்க நில உடைமையாளராக இருந்தபடியால் தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை அங்கு சுலபமாகப் பெற்றர். கெலாவோ உறுப்பினர்கள்  தோற்றுப்போயினர். ஆனால் அவர்கள் அடிபணிவதற்க்குப்பதிலாக அரசுக்கும் அந்த நில உடைமையாளருக்கும் எதிராக கிளர்ச்சி செய்தனர். லியூ ஷான் என்ற ஒரு உள்ளூரிலிருந்து மலைக்கு அவர்கள் பின்வாங்கி அங்கு ஒரு கோட்டையை அமைத்தனர். அவர்களுக்கு எதிராக துருப்புகள் அனுப்பப்பட்டன. கிளர்ச்சிக்காரர்கள் கிளர்ச்சிக்கான பதாகையை தூக்கியபோது ஒரு குழந்தையை பலி கொடுத்ததாக ஒரு கதையை பரப்பிவிட்டனர்.  அந்தப்புரட்சியாளர்களின் தலைவர் மாவரைக்கும் கல் செய்யும் பாங் என்று அழைக்கப்பட்டார். புரட்சியாளர்கள் இறுதியாக அடக்கப்பட்டனர். பாங் ஓடித்தப்ப வேண்டியேற்பட்டது. இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் கண்களில் அவர் ஒரு மாவீரனாக மிளிர்ந்தார், ஏனென்றால் இந்தப்புரட்சிக்கு அனைவரும் அனுதாபம் காட்டினர்.

அடுத்தவருடம் புதிய நெல் அறுவடை செய்யப்படாமல் இருந்தபோது மாரிக்காலத்திலேயே கையிருப்பு முடிந்து விட்டிருந்தது. இதனால் எங்கள் மாவட்டத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏழைகள் பணக்கார விவசாயிகளிடம் உதவி கேட்டனர். காசு இல்லாமலேயே சோறு சப்பிடுங்கள் என்று ஒரு இயக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள். இதன் பொருள் பெரிய வீட்டில் அதாவது நில உடைமையாளர்களின் களஞ்சியத்தில் இருந்து உணவைப்பெறுவோம் என்பதே. எனது அப்பா ஒரு அரிசி வியாபாரியாக இருந்ததோடு எங்கள் மாவட்டத்தில் இருந்து நகரத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்பவராகவும் இருந்தார். இத்தட்டுப்பாட்டின் போதும் அப்படியே செய்துவந்தார். இவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி நெல் ஏழைகளால் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் கோபம் எல்லை கடந்ததாயிற்று. இதற்காக அவர்மீது நான் அனுதாபப்படவில்லை.

ஒரு முற்போக்குத் தீவிரவாத ஆசிரியர் கற்பித்த ஒரு உள்ளூர் ஆரம்பப்பாடசாலையில் நான் இருந்தமையும் இந்தக்காலத்தில் என் மீது செல்வாக்கை ஏற்படுத்தியது. அவர் ஒரு முற்போக்குவாதியாக கருதப்பட்டமை, அவர் புத்த சமயத்திற்கு எதிராக இருந்தமையாலும் கடவுளர்களை அகற்ற அவர் முயன்றமையாலுமேயாகும். கடவுளர் இல்லங்களை பாடசாலைகளாக மாற்றும்படி அவர் மக்களைக் கோரினார். பலரால் பலவாறாக விவாதிக்கப்பட்ட மனிதராக அவர் இருந்தார். அவரை நான் வியந்து பாராட்டினேன், அத்தோடு அவரது கருத்துக்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.

ஏற்கனவே புரட்சிக்குணம் கொன்டிருந்த  எனது இளம் மனதில் அடுத்தடுத்து நிகந்த இந்த நிகழ்ச்சிகள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தக்காலகட்டத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு அரசியல் உணர்வை நான் பெற்றுக்கொள்ளத்தொடங்கினேன். விசேடமாக சீனா துண்டாடப்பட்டதை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை படித்த பின்பு  இந்த உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. கீழ்காணும் வசனங்களோடு தான் அந்த துண்டுப்பிரசுரம் தொடங்கியிருந்தது. இது என் மனதில் இன்னும் பதிந்துள்ளது. அந்தோ சீனா அடிமைப்படுத்தப்படப்போகின்றது என்பதே அந்த வசனம். கொரியா தைவான் ஆகியவற்றை ஜப்பான் ஆக்கிரமித்துள்ளதையும் இந்தோசீனா பர்மா மற்றும் வேறு இடங்களில் இருந்த சீன ஆளுமைப்பிரதேசங்கள் இழக்கப்பட்டிருப்பதையும் இந்தப்பிரசுரம் எடுத்துக்காட்டியது. இதைப் படித்தபின்பு எனது நாட்டின் எதிர்காலம் பற்றி நான் மனம் தளர்ந்து போனேன். நாட்டைக் காப்பாற்றுவது அனைவரது கடமை என்பதை நான் உணரலானேன்.

சியா ரான் என்ற இடத்தில் இருந்த ஒரு அரிசிக்கடையில் பயிலுனர் வேலைக்கு அனுப்ப ஆசிரியர் முடிவு செய்தார். இக்கடையில் அவருக்கு தொடர்புகள் இருந்தன, ஆரம்பத்தில் இதை நான் எதிர்க்கவில்லை. ஏனென்றால் இந்த வேலை ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இதே வேளை ஒரு மாறுபாடான ஒரு புதிய பாடசாலையை பற்றி கேள்விப்பட்டேன். அதில் சேர்வது என்று உறுதி பூண்டேன். எனது தாயாரின் குடும்பம் வாழ்ந்த சியாங் சியாங் சீ யென் கிராமத்தில் இந்தப்பாடசாலை இருந்தது. அங்கு கல்வி பயின்ற எனது மைத்துனன் இந்தப்புதிய பாடசாலையைப் பற்றியும் நவீன கல்வி முறையில் ஏற்பட்டுவரும் மாற்றமான நிலைமைகளைப் பற்றியும் எனக்கு எடுத்துக்கூறினார். அங்கு புராதன இலக்கிய நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேற்கு நாடுகளின் புதிய அறிவு விடயங்கள் பற்றி அதிகமாக போதிக்கப்பட்டதோடு, கல்வி முறைகளும் மிகுந்த முற்போக்கு தன்மை கொண்டவையாக இருந்தன. நான் மைத்துனரோடு சென்று பாடசாலையில் பெயர் பதிவு செய்துகொண்டேன். நான் சியாங் சியாங் கிராமத்தவன் என்றே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஏனெனில் அந்த பாடசாலை சியாங் சியாங் பகுதி மக்களுக்கு மட்டுமே கல்வி போதிக்கின்ற ஒரு பாடசாலை என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்தப்பாடசாலையில் எந்தப்பகுதியினரும் கல்வி பயிலலாம் என்று தெரிந்து கொண்ட பின்பு என்னை சியாங் ரான் ஊரவனாக அடையாளம் காட்டிக்கொண்டேன். எனது 5 மாதக்கல்விக்கான அனைத்துப்பொருட்களும் தங்கும் இடம் உணவு வசதிக்கும் 1400 செம்புக்காசுகளை நான் செலுத்தினேன். எனது வருவாயை பெருக்கும் சக்தியை இந்த உயர்தரக் கல்வி அதிகரிக்கும் என்று எனது நண்பர்கள் எனது தந்தையாரிடம் விவாதித்த பின்பு இறுதியாக இந்தக்கல்வியை தொடர்வதற்கு எனது தந்தையார் அனுமதித்தார். எனது வீட்டிலிருந்து 50 வி தூரத்திற்கு அப்பால்  நான் இருப்பது இதுவே முதற்தடவை. அப்போது எனக்கு வயது 16. இந்தப் புதமிய பாடசாலையில் இயற்கை விஞ்ஞானத்தையும் மேற்கத்திய புதிய பாடங்களையும் என்னால் படிக்க முடிந்தது. இந்தக்கல்லூரியில் கற்பித்த ஆசிரியரொருவர் ஜப்பானில் கல்வி பயின்றவராக இருந்தமை இங்கு மற்றொரு குறிப்பிடத்தகுந்த விடயமாகும். அவர் தனது தலைமயிர் பின்னல்களில் போலி முடி அணிந்திருந்தார் அவரது பின்னல் செயற்கை முடியால் ஆனது என்பதை இலகுவாக கூறமுடியும். அனைவரும் அவரைப்பார்த்து நகைத்ததோடு போலி வெளிநாட்டுப் பிசாசு என்று அழைத்தனர். நான் இதற்கு முன்பு இத்தனை அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளை ஒருசேரப் பார்த்ததில்லை. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நில உடைமையாளர்களின் ஆண் மக்கள். அவர்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். அத்தகைய பாடசாலைக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப  வெகுசில விவசாயிகளாலேயே முடியும். ஏனையவர்களை காட்டிலும் நான் மோசமான ஆடைகளை அணிந்திருந்தேன். என்னிடம் ஒரே ஒரு அழுக்கான சூட் மட்டும் தான் இருந்தது. கவுண்கள் மாணவர்களால் அணியப்படுவதில்லை, இதை ஆசிரியர்களே அணிந்தனர். வெளிநாட்டுப் பிசாசுகள் மட்டும்தான் அன்னிய ஆடைகளை அணிந்திருந்தனர். பணக்கார மாணவர்களில் பலர் எனது கந்தல் ஆடைக்காக என்னை வெறுத்தனர். இருப்பினும் அவர்களிடையே எனக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் எனது நல்ல தோழர்கள், அவர்களில் ஒருவர் தற்போது எழுத்தாளர். அவர் தற்போது சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார். அவர் பெயர் சீயே சான் (எமிசியாவ்)

சியாங் சியாங் பகுதியை சேராதவன் என்பதால் நான் வெறுக்கப்பட்டேன்.சியாங் சியாங் கை சேர்ந்தவனாகவும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவனாகவும் இருப்பது மிக முக்கியம். அங்கு ஒரு கீழ் மேல் மத்திய மாவட்டங்கள் இருந்தன. இவர்கள் பிராந்திய அடிப்படையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதி இருக்கிறது  என்ற விடயத்தில் இரு பகுதியினருமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்தப்பெயரில் நான் நடு நிலமை வகித்தேன். ஏனென்றால் நான் இந்தப்பகுதியைச் சார்ந்தவன் அல்லவே. இதன் விளைவாக மூன்று பகுதியினர் என்னை வெறுத்தனர். இதனால் நான் உளரீதியாக மனவருத்தம் அடைந்தேன். ஆசிரியர்கள் என்னை விரும்பினர். விசேடமாக புராதன இலக்கியம் படிப்பித்த ஆசிரியர்கள்  என்னை நேசித்தனர்.  ஏனென்றால் நான் இத்துறையில்  கட்டுரைகளை இலக்கிய நயத்தோடு எழுதினேன். ஆனால் எனது மனம் புராதன இலக்கிய நூலில் நாட்டம் கொள்ளவில்லை. எனது மைத்துனன் அனுப்பிய 2 நூலகளை நான் படித்துக்கொண்டிருந்தேன். ஒன்று காங் யூ வெய்யின் சீர்திருத்த இயக்கம் பற்றியதாகும் மற்றது சின் மின் சுங் பாயோ(நவீன மக்களின் பல்வேறு விடயங்களின் தொகுப்பு) இது லியாங் சீ ஷாவ் எழுதியது( லியாங் சீ ஷாவ் மஞ்சு ஆட்சிக்காலதின் இறுதியில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கட்டுரையாளர். இவர் ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கு தலைவராக இருந்ததன் விளைவாக நாடுகடந்து வாழ வேண்டி ஏற்பட்டது. 1911ல் இடம்பெற்ற முதலாவது புரட்சியின் அறிவியல் தந்தையர்களாக இவரும் காங் யூ வெய்யும் இருந்தனர்)

இந்தப்புத்தகங்களை அவற்றின் விடயங்கள் அனைத்தும் மனதில் பதியும் வரை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். காங் யூ வெய்யையும், லியாங் சீ ஷாவ்வையும் போற்றிப் பணிந்தேன். இதற்காக எனது மைத்துனருக்கு நான் மிகுந்த நன்றியுடையவானாகின்றேன். அப்போது இவரை ஒரு சிறந்த முற்போக்குவாதி என்று கருதினேன், பின்னரோ அவர் ஒரு எதிர்ப்புரட்சியாளராகவும் பிரபுத்துவக் குடும்ப உறுப்பினராகவும் இருந்ததோடு 1925 1927 இல் இடம்பெற்ற  மகத்தான் புரட்சிக்காலத்தில் அவர் பிற்போக்குவாதிகளோடு இணைந்து கொண்டார்.

பெரும்பாலான மாணவர்கள் போலி வெளிநாட்டுப் பிசாசை அவரது போலியான தலை மயிருக்காக வெறுத்தனர். ஆனால் நான் அவர் ஜப்பானை பற்றி அவர் கூறுவதை விரும்பினேன். அவர் இசையும் ஆங்கிலமும் படிப்பித்தார் அவரது ஜப்பானியப்பாடலொன்று மஞ்சள் கடல் சமர் என்று அழைக்கப்பட்டது. அந்தப்பாடலின் சில அழகான வரிகளை நான் தற்போதும் நினைவில் வைத்துள்ளேன்.

பாட்டுப்பாடும் சிட்டுக்குருவி ஆட்டம் ஆடும்

வானம் பாடி

வசந்தத்தின் இனிய பசும் வெளிகள்

செம்மை நிறத்தில் மாதுளை மலர்கள்

பச்சை வண்ண வில்லோ மரங்கள்

புரியுது! இது ஒரு புதிய காட்சி!

அப்போது ஜப்பானின் அழகை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. ரஷ்யா மீதான அதன் வெற்றியில் ஜப்பானின் பெருமையும் பலத்தையும் பற்றி இந்தப்பாடலிலிருந்து சிறிது என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. (ஜப்பானிய ரஷ்யப்போர் முடிவுற்றதையடுத்து பாரிய போர்ட்ஸ் மௌத் ஒப்பந்தம் ஜப்பானில் ஏற்படுத்திய  பாரிய மகிழ்சிப்பிரவாகத்தையும் இந்தப்பாட்டு எடுத்துக்கூறுகிறது) இன்று எங்களுக்குத்தெரிகின்ற ஒரு மிருகத்தனமான ஜப்பான் ஒன்று இருக்கிறது என்ற விடயம் அப்போது எனக்குத் தெரியாது.

இந்தப்போலி வெளிநாட்டுப் பிசாசிடம் நான் கற்றவை எவ்வளவோ, இந்தக்காலகட்டத்தில் தான் நான் முதலாவது பேரரசரும் ஆட்சி அதிகாரம் பெற்று பேரரசி டவாகர் (சுசி) ஆகிய இருவரும் இறங்துவிட்டதாக  கேள்விப்பாட்டேன். புதிய பேரரசர் சுவான் துவ் ஏற்கனவே இரண்டு வருடங்களாக நாட்டை ஆண்டுகொண்டிருந்த போதிலும் எனக்கு மேற்கூறிய விடயம் அப்போது தான் தெரியும். நான் இன்னும் பேரரசர் ஆட்சி முறைக்கு எதிரானவனாக மாறவில்லை. உண்மையில் நான் பேரரசரையும் பெரும்பாலான அரச அதிகாரங்கலைட்யும் நேர்மையான நல்ல விவேகமான மனிதர்கள் என்றே கருதினேன். காவ் யூ வெய்யின் சீர்திருத்தங்களின் உதவி மட்டுமே அவர்களுக்குத் தேவை. பண்டைய சீன ஆட்சியாளர்களின் சாதனைகளால் நான் பெரிதும் கவரப்பட்டேன். குறிப்பாக யா வோ ஷூன், சீன் ஷீஹ்வாங் டி, காள் வூரி ஆகியோரைப்பற்றிய பல புத்தகங்களை படித்திருந்தேன்.

யாவ் ஷூன் ஆகியோர் ஓரளவு இதிகாசப்ப்புகழ் படைத்த சீனாவின் முதல் பேரரசர்கள், வெய் மஞ்சள் ஆறுகளின் சமவெளிகளில் சீன சமுதாயத்தை உருவாக்கியமை, வெள்ளத்தை கட்டுப்படுத்தியமை (ஆறுகளின் பக்கவாட்டில் கட்டப்பட்ட பாதுகாப்பு அணைகள், கால்வாய்கள் மூலம்) ஆகியவற்றிற்கான  பெருமை இவர்களையே சாரும்.சின் ஷீ க்வாங் டி சீனப்பேரரசை ஒருங்கிணைத்தமை, சீனப்பெருங்சுவரை கட்டிமுடித்தவை ஆகியவற்றிற்கான பெருமையை பெருகிறார். ஹான் வூரி, ஹான் அரச வம்சத்தின் அத்திவாரங்களை உறுதிப்படுத்திய சிறப்பை பெற்றிருக்கின்றனர். சின் அரச வம்சத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்த அரச வம்சம்(பின்பு வந்த வராண் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து சீனவை 426 வருடங்கள் ஆட்சி செய்தது)

இந்தக்காலத்தில் வெளிநாட்டு வரலாறுகள் சிலவற்றையும் புவியியலையும் நான் கற்றேன். அமெரிக்கப்புரட்சியைப் பற்றி எடுத்துக்கூறிய  ஒரு கட்டுரையை படித்தபோதே நான் முதன் முதலில் அமெரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டேன். அக்கட்டுரையில் ஒரு சொற்றொடர் இவ்வாறு இருந்தது. எட்டு வருட இடர் மிகுந்த ஒரு போரின் பின்பு வாஷிங்டன் வெற்றி பெற்று தனது நாட்டை கட்டி எழுப்பினார். உலகின் மாவீரர்கள் என்ற புத்தகத்தில் தான் நெப்போலியன், ரஷ்யாவின் காத்ரினா, மகா பீட்டர் வெலிங்டொன், கிளாஸ்ட்ரோன்  ரூசோ மொன்டெச்க்க்யூ, லிங்கன்  ஆகியோரைப்பற்றி படித்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

இன்று ஜனவரி 26.

குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்?

90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை தாருங்கள் அல்லது நிர்ணயம் செய்ய அனுமதியுங்கள் என்று பலகாலமாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அரசு; கவர்ச்சியான திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாகப் போடவும், வந்தவிலைக்கு விற்றுவிட்டு வெளியேறவும், இப்படியான நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் சூறையாடுவதற்கும் வேண்டிய அனைத்தையும் செய்துவருகிறது.

பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடிநிறுவனங்களுக்கு ஆதரவாக சொந்தநாட்டு மீனவர்களை கடற்புற மேலாண்மை திட்டத்தின் மூலம் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளையும் நட்சத்திர ஓட்டல்களையும் கட்ட முதலாளிகளை அனுமதித்திருக்கிறது.

கைத்தறிகளுக்கும், எளிய விசத்தறிகளுக்குமான ரகங்களின் கட்டுப்பாட்டை நீக்கியதால் அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை சிறுவணிகத்தில் அனுமத்தித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறுவணிகர்களை வீதிக்கு விரட்டியிருக்கிறது.

எல்லாத்தரப்பு மக்களையும் ஓட்டாண்டியாக்கும் திட்டங்களை சில முதலாளிக்களுக்கு ஆதரவாக செயல்படுத்தி பெரும்பான்மை மக்களை வதைக்கும் அரசை குடிகளுக்கான அரசு என்று எப்படி சொல்வது?

நாட்டின் மிகப்பெரிய அமைப்பான ராணுவமும், காவல்துறையும்  யாரைப் பாதுகாக்கிறது? தண்ணீர் இல்லை என்பதிலிருந்து வேலையில்லை என்பது வரை யார் எதற்காக போராடினாலும் காவல்துறைதான் குண்டாந்தடியோடு வருகிறது. தீவிரவாதம் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் போலிமோதல் கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் அரங்கேற்றுகிறது ராணுவம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிரந்தரமாக தங்கியிருந்து மக்களை சிதைத்து வருகிறது. ராணுவத்தின் மக்களை காக்கும் அரும்பணிக்கு எடுத்துக்காட்டுகள் கீழே,

ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்ற பெயரை செவியுற்றிருக்கிறீர்களா?

7300 கோடி செலவில் சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் செயல்படுத்தப்படவிருக்கும் ராணுவ நடவடிக்கைக்கு தான் ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்று பெயர். ராணுவ நடவடிக்கை என்பது அரசு சொல்லும் பெயர் ஆனால் எதார்த்தத்தில் இது மக்களுக்கு எதிரான போர். இதற்கு அரசு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகளின், நக்ஸல்களின் தீவிரவாதம் பெருகிவிட்டது என்பது. ஆனால் மெய்யான காரணம் அதுவல்ல. இந்தப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்கள் நக்ஸல்கள், இப்போது பல படைப்பிரிவுகளையும், போர்விமானம், எழுவூர்திகளையும், செயற்கைக்கோள் கண்காணிப்பையும் கொண்டு நக்ஸல்களையும் மாவோயிஸ்டுகளையும் அழிக்கப் புறப்பட்டிருப்பதன் காரணம் அந்தப்பகுதியின் கனிமவளங்கள். உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனிவளங்களும் காட்டு வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கும் அந்த வனப்பகுதியை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டி விற்க அந்தப்பகுதியிலிருக்கும் பழங்குடிகளை விரட்டியடிக்க வேண்டும். இதற்கு எதிராக அம்மக்களை விழிப்புணர்வூட்டி போராடத்தூண்டி வருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இதற்காகத்தான் அவர்களை வேட்டையாடத்துடிக்கிறது அரசு.

இது குடியரசு என்று கூறிக்கொண்டே தன் சொந்த குடிமக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? குடியரசு, ஜனநாயகம் என்ற போர்வையில் முதலாளிகளுக்கான அரசாக நடந்துகொண்டு மக்களை வதைப்பது. அவர்களின் உழைப்பையும், வாழ்வையும் வாழ்விடத்தையும் அபகரிப்பவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவுவது. இதை புரிந்துகொண்டு போராடினால் அவர்களை கிரீன்ஹன்ட் என்றபெயரில் அழிப்பது; இதை புரியாமல் இருந்தால் குடியரசு என்ற பெயரில் அல்வா கொடுப்பது.

அல்வாவை ருசித்து புறங்கை நக்க நாம் என்ன அஃறினைகளா?

ஆபரேசன் கிரீன்ஹன்ட் குறித்து விரிவாக அறிந்து கொள்ள

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

  • நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
  • போராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்!
  • மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

ஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2- வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. செல்பேசி 94448 34519

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 13


வானத்திலிருக்கும் பற்பல கோள்களிடையே தொழிற்படும் விசைகள் குறித்து நியூட்டன் விரிவாக விளக்கியிருக்கிறார். நியுட்டனின் தேற்றங்களைப் போல் அவர் அறிந்து வெளிப்படுத்துவதற்கு முன்பே யாருக்கும் அறியாமல் குரான் விளம்பியிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் குரானின் தேற்றங்களை பாருங்கள்.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.

இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ என்பதன் பொருள் தெரியுமா? அதன் பொருள் தான் ஈர்ப்புவிசை. புவி ஈர்ப்பு விசை என்றால் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் கண்களால் பார்க்கமுடியாத தூண் என்று பொருள். மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் ஏன் மீண்டும் புவியை நோக்கி வரவேண்டும் என்று தேவையில்லாமல் சிந்தித்த நியூட்டன் அதற்குப்பதிலாக குரானைப் படித்திருந்தால் இன்னும் சுலபமாக தன்னுடைய விண் பொருட்களுக்கு இடையேயான ஆற்றல்கள் குறித்த அறிவியல் விதிகளை தந்திருக்கலாம்.

அறிவியல் வளராத காலங்களில் அனுபவம் அதிகம் பெற்ற முதியவர்களிடம் தங்கள் ஐயங்களை இளையவர்கள் கேட்ப்பார்கள். நீண்ட தூரம் போனால் என்னவாகும்? பூமி முடிந்து கீழே விழுந்து விடுவோம். காற்று எப்படி வீசுகிறது? பொழுது போகாத தேவதைகள் வானிலிருந்து காற்றை வாயால் ஊதுகிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி அந்தரத்தில் நிற்கின்றன? தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி தூண்கள் இருப்பதாக தெரியவில்லையே? என்று சிறுவர்கள் கேட்டால் தலையில் குட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் முகம்மது பார்க்கமுடியாத தூண்கள் என்று வசனத்தை கட்டி அனுப்பிவிட்டார். இன்றோ அது ஈர்ப்புவிசை எனும் அறிவியல் ஆடை கட்டிக்கொண்டு வந்துநிற்கிறது.

ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும்  என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?

தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது? இது ஒரு புறமிருக்கட்டும் இதே வசனம்  வேறொரு குரானில் “அவன் வானங்களை தூணின்றியே உயர்த்தியுள்ளான் நீங்கள் அவற்றை பார்க்கிறீர்கள்.” என்று இருக்கிறது.

……..சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்……..குரான் 31:29

முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம். குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும். அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 என்றொரு வசனம். இந்த ஒற்றை வசனம் இரண்டு அறிவியல் பேருண்மைகளை உணர்த்துகிறது என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் அண்மைகால அறிவியலை தான் இந்த வசனம் சூரியன் சென்றுகொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் உணர்த்துகிறது. இரண்டு, சூரியனின் ஆயுட்காலம் இன்னும் 300 கோடி ஆண்டுகள் தான் அதன்பின் செம்பூதமாகி, தன் ஆற்றலை படிப்படியாக இழந்துவிடும் இதைத்தான் அதற்குரிய இடத்தை நோக்கி எனும் வார்த்தைகள் மூலம் உணர்த்துகிறது. இப்படி இவர்கள் அந்த வசனம் சுமக்கமுடியாமல் தள்ளாடும் அளவிற்கு அதன் தலையில் அறிவியலை ஏற்றிவைக்க, குரானை எழுதிய முகம்மது இந்த வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளைச்சொல்கிறார்.

புகாரி ஹதீஸ் எண் 3199 அபூ தர் எனும் முகம்மதின் தோழர் அறிவிக்கிறார்,” நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.

குரானை எழுதிய இவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவிடமிருந்து மக்களுக்காக குரானை கொண்டுவந்த தூதரின் விளக்கம் இப்படி இருக்கிறது, ஆனால் இவர்களோ குருவி தலையில் பனங்காயை இல்லையில்லை யானையையே ஏற்றி வைக்கிறார்கள்.

அர்ஷ் – இறைவனின் சிம்மாசனம். சஜ்தா – வணக்கம்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

மாவோவின் குழந்தைப்பருவம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௩


பல்வேறு விசயங்கள் சம்பந்தமாக நான் ஒப்படைத்த ஐந்து அல்லது ஆறு தொகுதி கேள்விகளைப்பற்றி, தலைவர் மாவோ 12 இரவுகள் வரை என்னுடன் கதைத்திருக்கிறார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில சம்பவங்களில் தனது சொந்தக்கடமைகள் பற்றி அல்லது தன்னைப்பற்றி அவர் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. அத்தகைய தகவல்களை அவர் எனக்கு தருவார் என்று நான் எதிர்பார்ப்பது பயனற்றது என்று நான் நினைக்கத் தொடங்கியிருந்தேன். தனிப்பட்டவர்கள் அல்லது அவர்களின் செயற்பாடுகள் வெகு முக்கியத்துவம் குறைந்தவை என்று அவர் வெளிப்படையாகவே கருதினார். நான் சந்தித்த ஏனைய கம்யூனிஸ்டுகளைப்போலவே குழுக்கள் நிறுவனங்கள், படைகள், தீர்மானங்கள் சமர்கள், தந்திரோபாயங்கள், வழிவகைகள் மேலும் பற்பல விசயங்கள் பற்றி கதைப்பதையே அவர் வழிமுறையாக கொண்டிருந்தார். தனிப்பட்ட அனுபவங்களைப்பற்றி அவர் ஒருபோதும் கதைத்ததில்லை.

இலக்கு தழுவாத விடயங்களைக்கூட விரித்துரைப்பதில் அவர் காட்டிய தயக்கமும், தனிப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவரது தோழர்களது அருஞ்சாதனைகளைப்பற்றி கூறுவதில் காட்டிய தயக்கமும் தன்னடக்கம் காரணமாகவோ அல்லது என்னைப்பற்றிய பயம் அல்லது சந்தேகம் காரணமாகவோ அல்லது இந்த மனிதர்களில் பெரும்பாலானோர்களின் உயிர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பணய விலை பற்றிய உணர்வு காரணமாகவோ ஏற்பட்டிருக்கலாம் என்று நான் சில காலமாக நினைத்தேன். இதற்கான காரணங்கள் நான் மேற்குறிப்பிட்ட விடயங்களல்ல, கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலானவர்கள் உண்மையாகவே தங்கள் தனிப்பட்ட சாதனைகள் பற்றிய விடயங்களை ஞாபகத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை நான் பிற்காலத்திலேயே உணர்ந்தேன். நான் தனிப்பட்டவர்களின்வாழ்க்கை வரலாறுகளை தொகுக்கத்தொடங்கியபோது இந்தக் கம்யூனிஸ்டுகள் , தங்கள் இளமையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பற்றிச் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற போதிலும் செங்சேனையின் வீரர்களாக தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை எங்கோ மறந்துவிட்டார்கள் என்பதை நான் மீண்டும் கேள்விகள் கேட்டாலொழிய அவர்களைப்பற்றி ஒருவரும் ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ரணுவம் சோவியத் அமைப்புகள் கட்சி ஆகியவை பற்றிய விடயங்களே அவர்களிடமிருந்து வெளிவந்தன. சமர்கள் பற்றிய திகதிகள், சூழ்நிலைகள் இதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரம் இடங்கலிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் பற்றி இந்த மனிதர்கள் காலவரையறையற்ற முறையில் கதைப்பார்கள். ஆனால் இந்த நிகழ்வுகள் கூட்டு முயற்சி என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுபோல் தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்த இடத்தில் வரலாறு படைத்திருந்தார்கள் என்பதால் அல்லது செஞ்சேனை அந்த இடத்தில் களிச்சாதனை புரிந்திருந்தது என்பதினால் தான் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அத்தோடு ஒரு கோட்டின் முழுமையான அடிப்[படை உந்து சக்தியின் பிரதிநிதிகளாக அவர்கள் சண்டையிட்டிருந்தார்கள் என்னைப்பொருத்தமட்டில் இது ஒரு ருசிகரமான கண்டுபிடிப்பு. ஆனால் எனது தகவல் சேகரித்து வெளியிடும் பணியில் இது ஒரு சிரமமான விடயம்.

ஏனைய கேள்விகள் அனைத்திற்கும் திருப்திகரமான முறையில் பதில்கள் வழங்கப்பட்ட பின்பு ஓர் இரவில் நான் தனிப்பட்ட வரலாறு என்று தலைப்பிட்டிருந்த பட்டியலை தலைவர் மாவோ பார்த்தார். அதில் ஒரு கேள்வியை பார்த்துவிட்டு புன்முறுவல் பூத்தார். நீங்கள் எத்தனை முறை திருமணம் செய்துள்ளீர்கள்? நான் தலைவர் மாவோவிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள் உண்டு என்று கேட்டதாக ஒரு வதந்தி பின்பு பரவியது. இருப்பினும் ஒரு சுய வாழ்க்கை வரலாற்றுத்தொகுப்பிற்கான விடயங்களை வழங்குவதன் அவசியத்தையிட்டு அவர் பற்றுறுதி அற்றவராக காணப்பட்டார். ஆனால் அது ஒரு வகையில் ஏனைய விடயங்கள் பற்றிய தகவல்களை காட்டிலும் அதிகரித்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் வாதிட்டேன். நீங்கள் எத்தகைய மனிதர் என்று மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். நீங்கள் கூறுவதை அவர்கள் படிக்கும்போது உங்களைப்பற்றிக்கூறப்படும் சில பிழையான வதந்திகளையும் உங்களால் தவிர்க்கமுடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படும் பல்வேறு தகவல்களை அவருக்கு ஞபகமூட்டினேன். அவர் ஆற்றொழுக்காகபிரெஞ்சு மொழி பேசக்கூடியவர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் அவர் ஒரு படிப்பறிவற்ற விவசாயி என்று கூறுகின்றனர். அரை உயிரோடு உள்ள ஒரு காசநோயாளி என்று வேறொரு அறிக்கை கூறுகிறது. வேறு சிலர் அவர் ஒரு பைத்தியக்கார தீவிரவாதி என்று கூறுகின்றனர், என்றெல்லாம் அவருக்கு நான் ஞாபகப்படுத்தினேன். தன்னைப்பற்றிய விடயங்களையிட்டு விவாதிப்பதில் மக்கள் ஏன் தங்கள் காலத்தை வீணாக்கவேண்டும் என்பது குறித்து ஓரளவு ஆச்சிரியப்பட்டவர் போன்று அவர் காணப்பட்டார். தன்னைப்பற்றிய இந்த தகவல்கள் திருத்தப்படவேண்டும் என்று அவர் ஒத்துக்கொண்டார். பின்பு நான் எழுதிக்கொடுத்த வரிசையின் படி அந்த விடயங்கலை மீண்டும் ஒருமுறை பார்த்தார்.

சரி நான் உமது கேள்விகள் அனைத்தையும் வெறுமனே ஒதுக்கிவிடுகிறேன். அதற்க்குப்பதிலாக என்னுடைய வாழ்க்கை பற்றிய பொதுவான தோற்றத்தை தருகிறேன். இது சிறிதளவு கூடுதலக்க விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்தோடு இறுதியில் உமது அனைத்துக்கேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்பட்டும் இருக்கும். தொடர்ந்து இரவுகளில் இடம்பெற்ற பேட்டிகளில் நாங்கள் ஒரு வகை சூழ்ச்சிக்காரர்கள் போலவே தோற்றமளித்தோம். அந்தக்குகையினுள்ளே சிவப்புத்துணி விரிக்கப்பட்டிருந்த ஒரு மேசையில் எங்களிருவருக்குமிடையே ஒளிவிடு மெழுகுதிரிகளின் வெளிச்சத்தில் முடங்கியபடி எங்கள் கடமையில் ஈடுபட்டோம். எனக்கு நித்திரை வரும்வரை நான் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கருகிலேயே வூ லியாவ் பிங் இருந்துகொண்டு மென்மையான தென் பகுதிப்பேச்சு வழக்கு மொழியில் மாவோ எனக்கு கூறியவற்றை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார். வடபகுதிப்பேச்சு வழக்கு மொழியிலிருந்து அது வினோதமான பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. மாவோ அவரது நினைவிலிருந்த அனைத்து விடயங்களையும் கூறினார். அவர் பேசப்பேச நான் எழுதிகொண்டிருந்தேன். இவை மீள மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்பட்டு அதன் விளைவாகத்தான் இந்த வரலாற்றுத்தொகுப்பு உருவாயிற்று. பொறுமை வாய்ந்த வூ அவர்களின் சொற்றொடர் அமைப்பில் மேற்கொண்ட சில அவசியமான திருத்தங்களைத்தவிர இந்தத்தொகுப்பிற்கு இலக்கிய நயம் ஊட்டும் எந்த முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

சியாங் தான் மாவட்டத்திலுள்ள ஷாங் ஷாங் என்ற ஊரில் நான் பிறந்தேன். ஹூனான் மாகாணத்திலுள்ள இந்த ஊரில் நான் 1893ஆம் ஆண்டு பிறந்தேன். எனது தந்தையார் பெயர் மாவோ ஜென் ஷெங், திருமணமாகும் முன்பு என் தாயாரின் கன்னிப்பெயர் லென் சி மென்.

எனது தந்தையார் ஒரு ஏழை விவசாயி. அவர் இள வயதிலேயே கடுமையான கடன் தொல்லை காரணமாக ராணுவத்தில் சேரவேண்டி ஏற்பட்டது. அவர் பல வருடங்கள் ராணுவ வீரனாக கடமை புரிந்தார். பின்பு அவர் ஊர் திரும்பினார். அங்கு நான் பிறந்தேன். கவனமாக சேமிப்பதன் மூலமும் சிறு வர்த்தகங்கள் மூலமும் ஏனைய முயற்சிகள் மூலம் சிறிது பணத்தை சேர்த்தெடுத்து அவரால் தனது நிலங்களை மீள வாங்கிக்கொள்ள முடிந்தது.

நடுத்தர விவசாயிகளாக இருந்த எங்கள் குடும்பம் அப்போது 15 மு (ஒரு ஹெக்டேருக்கு சமம்) நிலப்பரப்புள்ள காணியை கொண்டிருந்தது. இந்தக்காணியிலிருந்து 60 ரான் (ஒரு ரான் என்பது 133 ராத்தலுக்குச்சமம்) அரிசியை அவர்கலால் உற்பத்தி செய்ய முடிந்தது. எங்கள் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் 35 ரான் அரிசியை உணவாகக்கொண்டனர். அதாவது ஒருவருக்கு 7 ரான் அரிசி. இதன் மூலம் வருடாந்தரம் 25 ரான் அரிசி மேலதிகமாக மிகுந்திருந்தது. இந்த மேலதிகமான வருவாயை பாவித்து எனது தந்தையார் ஒரு சிறிய மூலதனத்தை செர்த்தெடுத்தார். காலப்போக்கில் மேலும் 7 மு பரப்புக்கொண்ட காணியை வாங்கினார். இது எங்கள் குடும்பத்திற்கு பணக்கார விவசாயிகள் தகு நிலையை கொடுத்தது. அப்போது எங்களால் 84 ரான் அரிசியை உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது.

எனது அப்பா ஒரு நடுத்தர விவசாயியாக இருந்த சமயம் தானிய போக்குவரத்து விற்பனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் சிறிது பணத்தை சேர்த்துக்கொண்டார். அவர் பணக்கார விவசாயியாக வந்த பின்பு தனது நேரத்தில் பெரும்பகுதியை மேற்படி வியாபாரத்தில் செலவிட்டார். அவர் ஒரு முழு நேர பண்ணைத் தொழிலாளியை வேலைக்கமர்த்திக் கொண்டதோடு தனது மனைவியையும் மக்களையும் பண்ணை வேலையில் ஈடுபடுத்தினார். பண்ணைக்கடமைகளில் நான் ஆறு வயதாக இருக்கும் போது ஈடுபடத்தொடங்கினேன். எனது தந்தையாரின் வியாபாரத்திற்கென்று கடை எதுவும் இருக்கவில்லை. அவர் ஏழை விவசாயிகலிடமிருந்து தானியங்கலை வாங்கி நகர்ப்புற விcவசாயிகளுக்கு அவற்றை விற்றர். அங்கு அவற்றிற்கு சிறிய கூடிய விலை கிடைத்தது. அரிசி மாவாக அறைக்கப்படும் மாரிக்காலத்தில், பண்ணை வேலைக்காக மேலும் ஒரு தொழிலாளியை வேலைக்கமர்த்திக்கொண்டார். ஆகவே அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் ஏழு பேருக்கு உணவு வழங்க வேண்டியிருந்தது. எனது குடும்பம் சிக்கனமாகவே உணவுப்பொருட்களை பயன்படுத்தியது. ஆனால் எப்போதும் அவை எங்களுக்கு போதுமான அளவாக இருந்தது.

எனக்கு எட்டு வயதான போது நான் ஒரு உள்ளூர் ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயின்றேன். 13 வயது வரை அங்கேயே தொடர்ந்து கல்வி பயின்றேன். அதிகாலையிலும் இரவிலும் நான் பண்ணையில் வேலை செய்தேன். பகலில் நான் கன்பூஷியன் அனலெக்ற்ஸ், நான்கு புராதன் இலக்கியங்கள் ஆகியவற்றை படித்தேன். எனது சீன ஆசிரியர் கடுமையான கட்டுப்பாட்டைப் பேணும் வகுப்பைச்சார்ந்தவர். வெகு கடுமையானவர். அவர் மாணவர்கலை அடிக்கடி அடிப்பார். இதன் காரணமாக, எனக்கு 10 வயதாக இருக்கும்போது நான் பாடசாலையை விட்டு ஓடிப்போனேன். வீட்டிலும் நான் அடிவாங்க வேண்டி வரும் என்பதால் நான் வீட்டிற்கு திரும்புவதற்கு பயப்பட்டேன். எங்கோ ஒரு சமவெளிப்பகுதியில் இருக்கும் என்று நான் நினைத்திருந்த நகரத்தை நோக்கி நான் நடங்தேன். அவ்வாறு மூன்று நாட்கள் அலைந்து திரிந்தேன். இறுதியில் எனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டேன். எனது பயணத்தின்போது ஒரு சுற்று வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தேன் என்பதையும் வீட்டிலிருந்து ஒரு 8 லீ அளவுதான் எனது பயணம் முன்னேறியிருந்தது என்பதையும் பிற்பாடு அறிந்து கொண்டேன்.

நான் வீட்டுக்கு திரும்பிய பின்பு ஆச்சரியத்திற்குறிய வகையில் நிலைமைகள் ஓரளவு முன்னேற்றமடைந்தன. எனது தந்தையார் ஓரளவு புரிந்துணர்வோடு நடந்து கொண்ட அதேவேளை எனது ஆசிரியரும் சிறிது கட்டுப்பாடாக நடந்து கொண்டார். எனது ஆட்சேப நடவடிக்கையின் பெறுபேறு என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு வெற்றிகரமான வேலை நிறுத்தமாக அமைந்தது.

நான் சிறிதளவு கல்வியை பெற்றவுடனேயே குடும்பத்தின் கணக்குப்புத்தகங்களை நான் எழுதத்தொடங்கவேண்டும் என்று எனது தந்தையார் விரும்பினார். கணிதமானியை பயன்படுத்துவதற்கும் நான் பழகவேண்டும் என்றும் அவர் விரும்பினார். இதை எனது தந்தையார் வலியுறுத்தியமையால் இந்தக்கணக்குகளை இரவில் நான் செய்யத்தொடங்கினேன். அவர் ஒரு கடுமையான வேலை வாங்குபவர், நான் சோம்பியிருப்பதை அவர் வெறுத்தார். கணக்கு வேலைகள் ஒன்றும் இல்லாவிட்டால், பண்ணைக்கடமைகளில் என்னை அவர் ஈடுபடுத்தினார். அவர் ஒரு முன்கோபக்காரர், அவர் என்னையும் எனது சகோதரனையும் அடிக்கடி அடிப்பார். அவர் எங்களுக்கு எவ்வித பணத்தையும் தரமாட்டார். ஒவ்வொரு மாதம் 15ம் திகதியும் தனது தொழிலாளர்களுக்கு சலுகையாக அரிசியோடு முட்டையும் வழங்குவார், ஆனால் ஒருபோதும் இறைச்சி கொடுக்கமாட்டார். என்னைப்பொருத்தவரை எனக்கு முட்டையும் தரமாட்டார், இறைச்சியும் தரமாட்டார்.

எனது தாயார் ஒரு கருணை நிறம்பிய பெண்மணி, தாராள குணமும் இரக்க சிந்தனையும் கொண்டவர். தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அவர் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார். பஞ்ச காலங்களின் போது யாராவது அரிசி கேட்டுவந்தால், அவர்களுக்கு அவறை வழங்குவதை வழமையாக கொண்டிருந்தார். ஆனால் எனது தந்தையின் முன்னிலையில் அவ்வாறு அவரால் செய்ய முடியாது, அவர் தான தருமங்களை அனுமதிக்கவும் மாட்டார். இந்த விடயத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் பல தடவை சண்டை பிடித்திருக்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் இரண்டு குழுக்கள் இருந்தன, ஒரு கட்சியில் வீட்டு ஆளுனரான அப்பா இருந்தார். எதிர்க்குழுவில் நான் அம்மா தம்பி சில வேளைகளில் வீட்டு தொழிலாளியும் இருந்தோம். இந்த எதிர்க்கட்சியின் கூட்டு முன்னணியில் கருத்து வேறுபாடு ஒன்று இருந்தது. எனது தாயார் மறைமுகமான தாக்குதலை ஆதரித்தார். உணர்ச்சிகளை வெளிப்படையாகக்காட்டுவதையும் வெளிப்படையான புரட்சி முறைகளையும் கண்டித்தார். இதை சீன பண்பாட்டு முறை என்று அவர் கூறுவார்.

எனக்கு 13 வயதாக இருந்தபோது தந்தையாருடன் விவாதிப்பதற்கான, ஒரு வலிமைமிக்க எனது சொந்த விவாதக்கருப்பொருளை நான் கண்டுபிடித்தேன். அவரது பாணியிலேயே புராதன இலக்கிய நூலிலிருந்து நான் அவற்றை உணர்ந்திருந்தேன். என் மீதான என் தந்தையாரின் விருப்பமான குற்றச்சாட்டுகள், எனது பெற்றோர் மீது நான் காட்டும் அவமரியாதை, சோம்பேறித்தனம் ஆகியவையாகும். இதற்குப் பதிலுரையாக புராதன இலக்கிய நூலிலிருந்து நான் சில எடுத்துக்காட்டுகளைக் கூறினேன். அதில் மூத்தவர்கள் அன்பும் பாசமும் காட்டவேண்டும் என கூறப்பட்டிருந்தது. நான் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கு பதிலுரையாக இளையவர்களைக்காட்டிலும் பெரியவர்கள் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்றிருந்ததை எடுத்துக்காட்டி கூறினேன். அதோடு எனது தந்தையார் என்னைக்காட்டிலும் 3 மடங்கு வயது கூடியவர், ஆகையால் அவர் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்று நான் கூறினேன். நான் அவரது வயதை அடையும் போது அவரைக்காட்டிலும் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என்று பிரகடனம் செய்தேன்.

தகப்பனார் தொடர்ந்து செல்வத்தைச் சேர்த்தார். அந்தச் சிறிய கிராமத்தில் அது ஒரு பெரிய பொக்கிசமாக கருதப்பட்டது. அவர் தானக மேலும் பல காணிகளை வாங்கவில்லை, ஆனால் அவர் ஏனைய மக்களுடைய காணிகளின் மீதான பல கடன் ஈடுகளைச்செலுத்தி அக்காணிகளைக் கையேற்றார். அவரது மூலதனம் 2000 அல்லது 3000 சீன டொலர்களாக உயர்ந்தது. (மாவோ சீனப்பணமான யுவான் என்ற சொல்லையே பயன்படுத்தினார். இந்தச்சொல் பெரும்பாலும் சீன டொலர் என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் சீனாவின் கிராமப்புறத்தில் 1000 யுவான் காசாகக் கையிறுப்பானது ஒரு பெருந்தொகையாகக் கருதப்பட்டது)

எனது அதிருப்தி அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில் எழுந்த இச்சொற் போராட்டம் தொடர்ந்து விருத்தியடைந்தது. (மேலே குறிப்பிட்ட அரசியல் கலைச்சொற்களை தனது விளக்கங்களில் மாவோ நகைச்சுவையாக பயன்படுத்தினார். இந்த நிகழ்சிகளை நினைவுகூறும் போது சிரித்துக்கொண்டே கூறினார்) ஒரு நிகழ்ச்சி எனக்கு விசேடமாக நினைவிலிருக்கிறது. எனக்கு வயது 13ஆக இருந்தபோது எனது தந்தையார் பல விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர்கள் அங்கு இருக்கும்போது எனக்கும் தந்தையாருக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் அனைவர் முன்னிலையிலும் என்னை சோம்பேறி பிரயோசனம் இல்லாதவன் என்று அப்பா ஏசினார்.இது எனக்கு கோபமூட்டியது நானும் அவரை ஏசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அம்மா என்பின்னால் ஓடி வந்து என்னை வீட்டுக்கு திரும்புமாறு இணங்கவைக்க முயன்றார். நான் குளத்தின் விளிப்பிற்குச்சென்று யாரவது என்னை நெருங்க முயன்றால் குளத்தில் குதிக்கப்போவதாக அவரை அச்சுறுத்தினேன். இந்த சூழ்நிலையில் கோரிக்கைகளும் எதிர்கோரிக்கைகளும் உள்நாட்டு உத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விடுக்கப்பட்டன. நான் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் நிலத்தில் விழுந்து வணங்கவேண்டும் என்றும் அப்பா வலியுறுத்தினார் நான் முழங்காலை தாழ்த்தி வணங்குவதாகக் கூறினேன். அதுவும் அப்பா என்னை அடிக்கக்கூடாது என்று உறுதியளித்தால் தான் அவ்வாறு செய்வதாகக் கூறினேன். இதன் மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு நான் வெளிப்படையான கிளர்ச்சி மூலம் எனது உரிமைகளை பாதுகாக்க முனையும் போது அவர் விட்டுக்கொடுத்தார், ஆனால் நான் பல்கீனமாகவும் கீழ்படிவாகவும் நடந்தால் என்னை அவர் ஏசவும் கூடுதலாக அடிக்கவுமே செய்தார்.

இதன் பிரதிபலனாக அப்பாவின் கடுமை இறுதியில் அவரைத்தோற்கடித்தது. நான் அவரை வெறுக்கத்தொடங்கினேன். நாங்கள் அவருக்கு எதிராக ஒரு உண்மையான ஐக்கிய முன்னணீயை உருவாக்கினோம். அந்த வேளை இது எனக்கு பெரும்பாலும் நன்மையாகவே முடிந்தது. இது என்னை எனது வேலைகளில் மிகவும் கவனமும் திறமையும் உள்ளவனாக்கியது. அவர் என்னை குறைகூறி தண்டிப்பதற்கு இடம்தராத வகையில் எனது கணக்குப்புத்தகங்களை கவனமாக எழுதவைத்தது. எனது தந்தையார் இரண்டு வருடம் பாடசாலையில் பயின்றிருந்தார், அத்துடன் கணக்குப்புத்தகங்கள் எழுதுவதற்குப் போதுமான கல்வியும் கற்றிருந்தார். எனது தாயார் முழுமையான கல்வியறிவு இல்லாதவர். நான் புராதன இலக்கிய நூல்களை படித்துள்லேன் ஆனால் அவறை வெறுத்தேன். பண்டைய சீன கற்பனைக்கதைகளையே நெஆன் விரும்பிப்படித்தேன். விசேடமாக புரட்சிகள் பற்றிய கதைகளை விரும்பினேன். யோ பெய் சுவான் (யோ பெய்யின் வரலாற்றுத்தொகுப்பு) சுய் ஹூ சுவான் (தண்ணீர் விளிம்பு) பான் ராங் (ராங்கிற்கு எதிரான புரட்சி) சான் குவோ (மூன்று முடியாட்சிகள்) சி யூன் சீ (மேற்குப்பகுதியில் பயணங்கள்) ஆகிய நூல்களை நான் படித்தேன். வெகு இளமையிலேயே இந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களை தீய புத்தகங்கள் என்று வெறுத்த எனது முதிய ஆசிரியரின் தீவிர கண்காணிப்பின் மத்தியிலும் இவற்றை நான் படித்தேன். இவற்றை நான் பாடசாலை நேரங்களிலும் படித்தேன். ஆசிரியர் என்னைக் கடந்து செல்லும் போது அவற்றை புராதன இலக்கிய நூலால் உருமறைப்பு செய்து கொள்வேன். இதுபோன்றே எனது பாடசாலை நண்பர்களும் படித்தார்கள். நாங்கள் இந்தக்கதைகளை மனதில் இருத்தக்கூடிய அளவிற்கு படித்தோம். இவற்றைப்பற்றி பல தடவைகள் விவாதித்தோம். கிராமத்தில் உள்ள முதியவர்களைக்காட்டிலும், இந்த நூல்களை நாங்கள் அதிகம் படித்திருந்தோம். அந்த முதியவர்களும் இந்தக்கதைகளை விரும்பினார்கள். அத்தோடு இந்தக்கதைகளை அவர்கள் எங்களோடு பகிர்ந்து கொள்வதுமுண்டு. மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வயதில் படித்த இந்த நூல்களினால் நான் வெகுவாக ஆளுமைப்படுத்தப்பட்டேன் என்று நம்புகிறேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012

சில மாதங்களுக்கு முன்பு, மாயன் நாள்காட்டியில் 2012 ல் உலகம் அழியப்போவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மாயன் கலாச்சாரத்தை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அதற்கு அறிவியல் புனைகதை பூசி உலவவிட்டிருக்கிறார்கள் திரைப்படவடிவில், அதுதான் 2012.

மாயன் சமூகத்தை ஆராய்வதற்கு எவ்வளவோ தலைப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக, சிறப்பான தங்கள் கலாச்சாரத்தை பேணி வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், திடீரென மறைந்து போனதன் காரணம் என்ன? என்பதை கருப்பொருளாக கொண்டிருந்திருக்கலாம். வெறிபிடித்த ஸ்பெயின் காலனியாக்கவாதிகள் போரில் கொல்லமுடியாத அம்மக்களை உதவி என்ற பெயரில் அம்மை நோய்க்கிருமிகள் கொண்ட போர்வையை வழங்கி கொத்துக்கொத்தாக கொன்று தீர்த்ததை பரவலாக்கி அம்பலப்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அவர்களின் அரசியலுக்கு உகந்ததாக இருந்திருக்காது. இருக்கை நுனியில் அமர்ந்து நகம்கடிக்கும் ரசிகர்களுக்கும் உகந்ததாக இருந்திருக்காது.

பிரமாண்டமான வரைகலை உத்திகளின் பரபரப்பை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஏகாதிபத்தியவாதிகளின் சிந்தனை நெருக்கடியான கட்டத்தில் எப்படி மக்கள் விரோதமானதாக இருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர்த்துகிறது. 2012ல் உலகம் அழியப்போகிறது என்று 2009லேயே தெரிந்து கொண்ட பின்பும் மக்களைக்காக்க எந்த முயற்சியும் செய்யாமல் ஏகாதிபத்திய முதல்நிலை நாடுகளின் தலைவர்களும் பணக்கார பொறுக்கிகளும் தப்பிச்செல்வதற்கு கப்பல் தயாரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நிஜத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை ஏற்கமறுக்கும் நாடுகளையும் அதன் மக்களையும் குண்டுவீசி கொல்லும் அமெரிக்க நாட்டின் அதிபர் நிழலில் தப்பிப்போக வாய்ப்பிருந்தும் மக்களுக்கு சேவைசெய்தே மடிகிறார். ஆஹா இது போன்ற தலைவர்களல்லவா நாட்டுக்கு வேண்டும்.

பைபிளில் (குரானிலும்) ஒரு கதை உண்டு. நோவாவின் (நூஹ்) காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த மறுக்க கோபம்கொண்ட கடவுள், நோவாவையும் அவரைச்சார்ந்தவர்களையும் கப்பல் கட்டச்செய்து தப்பவைத்து ஏனையவர்களை பெருவெள்ளம் கொண்டு அழிக்கிறார். இந்தக்கதையைத்தான் ராமநாராயணனின் வேப்பிலை அம்மன் அளவுக்கு இல்லாமல் அறிவியல் என்று சுற்றி இருக்கிறார்கள். உலகமக்களுக்கு அன்பை போதிக்கும் ஒரு கதையை எழுதி அது ஐநூறு படிகளே விற்ற நூலின் எழுத்தாளன் தான் கதையின் நாயகன். உலகம் அழியப்போகிறது என்று தனக்கு தெரிந்த உண்மையை உலகிற்கு சொல்ல காலம் இல்லாமல் மயிர் கூச்செரியும் சாகசம் செய்து தன் குடும்பத்தை காக்கிறார். துப்பாக்கியை வைத்துதான் ஆய்வு செய்வீர்களா என்று ஓரிடத்தில் வசனம் பேசுகிறார் நாயகன். உலகம் முழுவதிலும் ஆயுதங்களை முன்னிட்டே ஆய்வுகள் நடக்கின்றன என்பதை தெரியாத இந்த எழுத்தாளரின் நூல் தான் புதிய உலகிற்கு வேதமாக  எடுத்துச்செல்லப்படுகிறது.

பில்லியன் டாலர் லாபம் கிடைத்தது என்று விருந்து கொண்டாடும் முதலாளிதான் அதிபருக்கு அடுத்த இடத்திலிருந்து செயல்களை தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறான் என்பதை வெளிப்படையாக்குகிறது படம். இந்த முதலாளியோடு வாதம் செய்து தான் அறிவியலாளன் மக்களில் சிலரை கப்பலில் பயனிக்கச்செய்கிறான். கப்பலை செய்த தொழிலாளிகள் முதல் உலகம் அழியப்போகிறது என கண்டுபிடித்தவர் வரை எல்லோரும் அழிந்துபோக மில்லியன் டாலர் கொடுக்கமுடிந்தவர்கள் இங்கு ஏழைகளாக சித்தரிக்கப்படுகின்றனர். புதிய உலகின் ஏதுமற்ற வர்க்கம்?

யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் தயாரிக்கப்படும் கப்பலைப் பற்றி தகவல் தெரிந்த அனைவரும் வரிசையாய் கொல்லப்படுகிறார்கள். உலக அழிவையும் அதிலிருந்து தப்ப திட்டங்கள் தரும் அறிவியலாலனும் கூட கண்காணிக்கப்படுகிறான். இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் அதிபர் எல்லாம் முடிந்தபின் மக்களுக்கு அறிவிக்கிறாராம். ஆனால், தொடக்கத்திலிருந்தே இந்த அழிவை மக்களுக்கு அறிவிப்பதையே நோக்கமாக கொண்டவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் காட்டப்படுகிறான். தனக்குத் தெரிந்த தகவலைக்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பவன் கதாநாயகன், எதிர்வரும் அழிவை மக்களுக்கு சொல்ல நினைப்பவன் பைத்தியக்காரன். முதலாளியமும் இதையே தான் சொல்கிறது, உன்னை மட்டுமே பார் சமூகம் உனக்கு தேவையில்லை என்று.

சூரியனின் நெருப்பு விசிறல்கள் அதிகரித்து நியுட்ரினோக்களின் விளைவால் புவியின் உள்வெப்பம் அதிகரிப்பதால் பூமி பிளந்து எரிமலைக் குழம்புகள் வீசியடிக்கின்றன. ஆனால் இவ்விளைவுகளால் பூமியை மூழ்கடிக்கும் அளவிற்கு பெருவெள்ளம் எப்படி ஏற்படுகிறது?

வரைகலை உத்திகளால் மக்களை பிரமிப்புக்கு உள்ளாக்கி ஒருவித அயர்ச்சியுடன் வெளித்தள்ளும் இதுபோன்ற படங்களைவிட குறைகளிருந்தாலும் விழிப்புணர்வை தூண்டும் நாகரீக கோமாளி, ஈ போன்ற நம்மஊர் படங்கள் பல மடங்கு சிறந்தவை.

முந்தைய திரைப்பட மதிப்புரைகள்

உன்னைப்போல் ஒருவன்

தனம்

சுப்பிரமணியபுரம்

பருத்தி வீரன்

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 12

கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள்.

(திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக… குரான் 86:11

……..வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான். குரான் 6:125

இவைகளெல்லாம் விண்வெளி குறித்து குரானில் கூறப்படும் வசனங்களில் சில. மேற்கண்ட இந்த வசனங்களிலெல்லாம் மிகப்பெரிய அறிவியல் உண்மை சொல்லப்பட்டிருப்பதாக உங்களுக்கு தெரிகிறதா? ஆனால் இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள அரிதான பல உண்மைகளை இந்த வசனங்கள் உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள்.

வசனம் 86:11 ஐ எடுத்துக்கொள்வோம் ‘பொழியும் மழையை உடைய’ என்பதில் ஒன்றுமில்லை. அதற்கு விளக்கமாக அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பத்திரும்ப என்பதில் தான் மதவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் ஒழிந்துகொண்டிருக்கிறது. மழை திரும்பத்திரும்ப வருகிறது, இதில் என்ன அறிவியல் இருக்கிறது? ஆனால் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் இது திரும்பத்தரும் வானம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் எதை திரும்பத்தருகிறது? மழையை திரும்பத்தருகிறது. ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது. மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது.

அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வானம் திருப்பி அனுப்புவதாக கூறிக்கொண்டு அதையே மாபெரும் அறிவியல் உண்மையாக கூறுவதை என்னவென்பது. பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின்  பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.

வசனம் 55:33 ல் ‘வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல’ என்று வருவதை இன்று மனிதன் விண்வெளிக்கு சென்றுவருவதோடு பொருத்தி இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று இன்னொரு அறிவியலை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வசனத்தில் அதிகாரம் என வரும் சொல்லை ‘வல்லமையும் என் அனுமதியும்’ என்று விளக்குகிறார்கள். அதாவது அல்லா அனுமதிக்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வல்லமையை பெற்றபிறகு தான் செல்லமுடியும் என்று பொருளாம். இந்த வல்லமை தான் விடுபடு வேகம் என்று கூறுகிறார்கள். பூமியின் புவியிர்ப்பு விசையை மீறி நாம் விண்ணில் செல்லவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே புவியை தாண்டிச் செல்லமுடியும். அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் புவியின் காற்று மண்டல எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான். இந்த விடுபடு வேகம் குறித்த அறிவியலைத்தான் அந்த வசனம் சொல்கிறது என்று சத்தியம் செய்கிறார்கள். இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.

அடுத்த வசனமான 6:125 ல் அல்லா ஐன்ஸ்டினுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். இந்த வசனம் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமின்றி நடைபெற இயலாது என அல்லா கூறுவதாக வருகிறது. அல்லா ஒருவனின் இதயத்தை விரித்துவிட்டால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வான். அவனின் இதயத்தை சுருக்கிவிட்டால் அவனால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது. இது தான் இந்த வசனம் கூறும் செய்தி. இதில் இதயத்தை சுருக்குவதற்கு ஒரு உவமை கூறப்படுகிறது, வானத்தில் ஏறிச் செல்பவனைப்போல என்று. இந்த உவமையில் தான் விஷயம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒரு விதி வருகிறது. ஒரு பொருளின் விரைவைப் பொருத்து அதன் உருவம் சுருங்கும் ஆற்றல் கூடும். உருவம் சுருங்குவடையும் ஆற்றல் கூடுவதையும் சாதாரண வேகத்தில் உணரமுடியாது. ஒளியின் வேகத்திற்கு (ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிமி) அருகில் விரையும்போது தான் அதை உணர முடியும். இதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடு. இந்த அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா? சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார். இதில் சுருங்குதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நெஞ்சு அல்லது இதயத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லை. இதயம் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு உறுப்பு எனும் அறிவியல் தெரியாமல் இறக்கப்பட்ட வசனமல்லவா இது? ஒரு பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்களே, மறு பாதியையும் எடுத்துக்கொண்டால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஆற்றல் கூடிவிடும் என்றாகிறதே. ஒருவேளை அல்லா அப்படித்தான் கூறியிருப்பாரோ.

புதிதாக வெளிவரும் குரானின் மொழிபெயர்ப்புகள் அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய வசனங்களாகவே வெளிவருகின்றன. பழைய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் புதிய மொழிபெயர்ப்புகளை செய்பவர்கள் அறிவியல் இல்லாமல் வெறும் ஆன்மீக குரானை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் முகவுரை

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௨

முகவுரை

சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னதத் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவரான மாவோ அவர்களின் நூறாவது ஜனன தினமாகிய 1993 டிசம்பர் 26ம் தேதியை நினைவு கூறுமுகமாக மாவோவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் உங்களுக்குத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். மாவோவை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வெளியீடுகள் பெருமளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள போதிலும் தமிழில் அவ்வாறான வெளியீடுகள் வந்தனவா என்பது கேள்விக்குறியே. தேசியப்பத்திரிக்கைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளிவந்த, வெளிவரும் கட்டுரைகள், செய்திகள் பெரும்பாலானவை மாவோவின் சாதனைகளை கொச்சைப்படுத்துபவையாகவும் திரிபுபடுத்துபவையாகவும் இருக்கின்றன. தலைவர் மாவோவை நினைவு கூறும்போது அவர் சாதித்தவை எவை, அவர் எத்தகைய சூழ்நிலைகளில் இவற்றை சாதித்தார். அவர் சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் காட்டிச்சென்ற பாதை என்ன என்பவற்றை நாம் கற்றுணர்ந்தால் மட்டுமே நமது நாட்டிலும் ஒரு சுரண்டலற்ற, இன அடக்குமுறை இனப்பாகுபாடு அற்ற சகல மக்களுக்கும் சமத்துவமான  சுபீட்சமான மக்கள் சமுதாயமொன்றை கட்டியெழுப்பும் பணியில் முன்னேறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களாவோம்.

ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள் மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும் விளக்கினார். சீனாவில் ஒரு சக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி  ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.

ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில் நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மற்றுமொரு சாதனையாகும்.

அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ் ஐக்கியப்படுத்தி ஜனநாயகப்புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை விடுதலைக்காக போராடும் அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.

சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக மாவோ விளங்கினார்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் என்றும் இல்லாத இன ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு பேரினவாதப் போக்கு அதன் உச்சகட்டத்தை அடைந்துள்ள இவ்வேளையில் இந்த நாட்டு மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு என்ன வழியென்பதை மாவோ அவர்கள் காட்டிய பாதை மூலமே கற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அமைப்பு வழங்குவதன் மூலமே சாத்தியமென புதிய ஜனநாயக கட்சியும் அதன் முன்னோடியான கம்யூனிஸ்ட் கட்சியும் 1955 இல் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளன. இனங்கள் யாவும் சமமானவை என்ற நிலைபாட்டிலேயே  தீர்வு ஒன்று அமையவேண்டும்.

சீனாவில் அரசியல் அமைப்பின் முகவுரையிலேயே சீனா பல இனங்களைக்கொண்ட ஒரு நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனங்கள் யாவும் சமமானவை என்றும் ஓர் இனம் வேறு ஓர் இனத்தை அடக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்கள் முழுச்சனத்தொகையில் 8.04 வீதமானவர்கள் மட்டுமே. இந்த 8.04 வீதத்தினருள் 55 இனங்கள் உள்ளன. பெரும்பானமை இனத்தைச் சேர்ந்த  மாவோ அவர்கள் பெரும்பான்மை ஹான் இனத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சீனாவின் சகல இன மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், உலகின் சகல அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும் விளங்கினார்.

சீனாவின் யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் சிறுபான்மை இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை உத்திரவாதப்படுத்தும் வகையில் சுயாட்சி அமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இனங்களுக்கிடையேயான ஐக்கியத்திற்கு வழி சமைக்கப்பட்டது.

சீனாவில் சிறுபான்மை இனத்தவர்கள் சனத்தொகையில் 8.04 வீதம் மட்டுமே என்ற போதிலும் சுயாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலப்பரப்பானது 62 மூ (அறுபத்தியிரண்டு வீதம்) என்பது குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பித்தலாட்டக்காரர்கள் சீனாவைப்பார்த்து தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா?

சீனாவின் சிறுபான்மை இனங்களை கிண்டல் செய்யும் அவமானம் செய்யும் முகவரிகள், இடப்பெயர்கள், குறியீடுகள் யாவும் முழுச்சீனாவிலிருந்தும் அகற்றப்படவேண்டுமென்ற கட்டளையை சீன மத்திய அரசாங்கம் 1951ம் ஆண்டிலேயே விடுத்திருந்தது. சகல அரசாங்க அமைப்புகளிலும் சகல சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். ஆகச்சிறிய சிறுபான்மை இனமான ஷெஷான் (சுமார் இரண்டாயிரம் பேர்) தேசிய மக்கள் காங்கிரசில்  ஒரு பிரதிநிதியை கொண்டிருக்கிறது.

சீனா முழுமையாக விடுதலையடையுமுன்பே உள்மங்கோலிய சுயாட்சிப்பிரதேசம் 1947 மே மாதம் 1ம் தேதியே நிறுவப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது. சீனாவின் சிறுபான்மை இனங்கள் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் கொண்டிருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. கிங்கியாங் உய்குர் சுயாட்சிப்பிரதேசம் பதினாறு லட்சம் கிலோமீட்டர் பரப்புடையது. அதாவது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒன்று, சனத்தொகை ஒன்றரைக்கோடி அளவேயாகும். திபெத் சுயாட்சிப்பிரதேசத்தின் நிலப்பரப்பு பன்னிரண்டு லட்சம் சதுர கிலோமீட்டராகும், இது சீனாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒன்றாகும், அதன் சனத்தொகையோ சுமார் இரண்டு கோடியாகும். சீனாவில் ஐந்து சுயாட்சிப்பிரதேசங்கள் உள்ளன. அவற்றிற்கு வெளியேயும் குறிப்பிட்ட ஐந்து இனங்களும் பரந்து வாழ்கிறார்கள். அங்கும் கூட இவர்களுக்கு சுயாட்சி அமைப்புகள் உள்ளன. இது தான் சோசலிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இடையேயான வித்தியாசம்.

எனவே சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது. மாவோவின் வழிகாட்டலில் சீனக்கம்யூனிஸ்ட் தலைமையில் உருவாக்கப்பட்ட சுயாட்சி அமைப்புக்கான சட்டத்தை நாம் கற்றறிந்து நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஐக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

நா. சிறி மனோகரன்

இலங்கை சீன நட்புச்சங்கம்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

செங்கொடியும் பசுங்கொடிகளும்.

inimai 04.01.2010. 04:27

அஸ்ஸலாமு அலைக்கும்,

தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்றுரிந்தாலும் இதற்கு பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

http://senkodi.wordpress.com/

மேலும், செங்கொடியின் தளத்திலேயே சில சகோதரர்கள் விவாதத்திற்கு அழைத்தும் அவர் மறுத்துவிட்டார்.

நண்பர் செங்கொடி அவர்களுக்கு,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
முஸ்லீமாக பிறந்து, முஸ்லீம் பெயர் கொண்ட தாங்கள் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதன் மூலம் பிறபலம் அடையலாம் என்று தாங்கள் இஸ்லாத்தைப்பற்றி தவறாக எழுதி வருகிறீர்கள்.
கீழ்க்கண்ட விவாதத்திற்கு தாங்கள் தயாரா?
இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 11,12 ஆகிய தேதியில் சென்னையில் வைத்து TNTJ PJ..அவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் விவாதம் நடைபெறவுள்ளது. எனவே தாங்களோ அல்லது தங்கள் இயக்கம் சார்பாகவோ அதில் கலந்து விவாதிக்க விரும்பினால் ஏற்பாடு செய்து தருவேன்.
தலைப்பு
1. இறைவன் இருக்கிறான். அவன்தான் இப்பிரபஞ்சத்தை படைத்தான்.
2.குர் ஆன் இறைவேதம். அதில் மூடநம்பிக்கையோ மனிதனுக்கு கேடு விளைவிப்பவையோ இல்லை.
3.சொர்க்கம், நரகம், மறுமை வாழ்க்கை உண்டு.

இந்த ஒப்பந்த விவரம் அறிய http://www.onlinepj.com/vimarsanangal/pakiranga_vivatham/

என்ற தளத்திற்கு சென்று (விமர்சனங்கள் ‍‍‍பகுத்தறிவாளர்களுடன் பகிர‌ங்க விவாதம் ) பார்க்கவும்.

அப்துல் லத்தீப்

செங்கொடி, மேல் செப்டம்பர் 30th, 2009 இல் 10:38 மாலை சொன்னார்:

நண்பர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு,

தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அழைப்பது தான் முறையா? நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் பார்த்தேன். சென்னையில் நடைபெறவிருக்கும் இதில் என்னால் கலந்து கொள்ள இயலாது, காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான். மேலும் திராவிடர் கழகம் போன்ற ஒரு அமைப்பினருடன் சேர்ந்து விவாதத்தில் பங்கெடுப்பதும், அமைப்பிலிருந்து யாரேனும் பங்கெடுக்கலாமா என்பதும் கலந்து பேசித்தான் சொல்லமுடியும்.

என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார். ஒரே நிபந்தனை, உங்களிடம் முன்பே கூறிய்து தான் இஸ்லாம் மட்டும் தான் சரியானது எனும் முன்முடிவை தவிர்த்துவிட்டு உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்த தயாரா என்பது தான். தயாரென்றால் யாருடனும் எப்பொழுதும். இனி பதில் உங்கள் புறமிருந்து.

தோழமையுடன்
செங்கொடி//

தங்களின் மேலான மறுப்புறையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து,

இனிமை.

Admin Rpl ? va alaikumus salam ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாதத்தில் தான் உடனுக்குடன் கேள்வி கேட்க முடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டு பிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச் சேர்ந்தவர்களோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்குப் பயப்பட வேண்டியதில்ல. அவர்களே மூட நம்பிக்கையின் ஒட்டு மொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனை கூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிக் கொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேலிக் கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நாம்

நம்புவதால் தான் விவாதத்துக்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாத்தின் மூலம் அதை அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்துக்கு முன்பே தோற்று விட்டதாக எழுதிக் கேட்பது மடத்தனமானது இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர்க் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிக்கலாம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையைத் தோலுரிக்க நாம் தாயார்.
************************************************************************************************

சில நாட்களுக்கு முன்பு பிஜே ஆன்லைன் எனும் தளத்தில் இடம்பெற்ற செங்கொடி குறித்த கேள்விபதில் இது. பல நண்பர்கள் இதுபோல் நேரடி விவாதத்திற்கு செல்லுங்கள் என்று பின்னூட்டமாகவும் தனி அஞ்சலாகவும் கேட்டிருந்தனர். ஏற்கனவே இது குறித்து பதில் கூறியிருப்பதால் இப்போது அவசியமில்லை என‌ எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வரும் பின்னூட்டங்கள் இதையே மையப்படுத்தி இருந்ததால் மீண்டும் கூறுவதில் பிழையொன்றுமில்லை எனும் எண்ணத்தில் இதை எழுதுகிறேன். ஏற்கனவே நான் எழுதியவற்றை (கொஞ்சம் விரிவாக‌) தொகுத்து தருகிறேனேயன்றி புதிதாக இதில் ஒன்றுமில்லை.

இஸ்லாம் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே என்ற பெயரில் நான் எழுதிக்கொண்டிருக்கும் தொடர்கட்டுரையை நான் எழுதுவதன் நோக்கம் குறித்து நுழைவு வாயில் எனும் பகுதியில் தெளிவுபடுத்தியிருந்தேன். இவ்வுலகில் மக்களின் துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் யார் காரணமாக இருக்கின்றனர்? அதை எவ்வழியில் தீர்க்கமுடியும்? என்பதை அறிந்துகொள்வதற்கு, இறந்தபிறகு கிடைப்பதாக நம்பப்படும் சொர்க்க நரகம் பற்றிய நம்பிக்கை தடையாக இருப்பதால் அதை தகர்க்கமுனையும் என்னளவிலான முயற்சிதான் இக்கட்டுரைகள். இது தொடர்பாக எழுப்பப்படும் ஐயங்களுக்கும் (அதில் சாறமிருந்தால்) விடையளித்துவருகிறேன். இன்னும் எழுப்பப்படுபவைகளுக்கு விடையளிப்பேன், அது கட்டுரையை எழுதுபவன் எனும் முறையில் என்னுடைய கடமையாகும். மாறாக இப்படி எழுதுவதால் குறிப்பிட்ட ஒருவருடன் நேரடி விவாதத்திற்கு போய்த்தான் ஆகவேண்டும் என்றால்…………

நேரடி விவாதம் என்பதும் எழுத்து விவாதம் என்பதும் விவாத வகைகளே, இதில் ஒன்று வீரமானது மற்றது கோழைத்தனமானது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டுக்கும் தனிப்பட்ட இயல்புகள் இருக்கின்றன. நேரடி விவாதம் என்பது ஒரே தளத்தில் நின்று வாதாடுபவர்களுக்கு பொருத்தமானது. எழுத்துவடிவ விவாதம் என்பது வேறுபட்ட தளங்களைச் சார்ந்தவர்களும் வாதிடுவதற்கு பொருத்தமானது. எடுத்துக்காட்டாக குரான் ஹதீஸின் அடிப்படையில் இருவர் வாதிட்டால், இருவருமே குரானின் வசனங்களிலிருந்தோ, ஹதீஸ் தொகுப்புகளிலிருந்தோ தான் மேற்கோள்களை காட்டுவர். இருவருமே அவைகளில் புலமையானவர்களாக இருப்பதினால் ஒருவர் கூறியதை மற்றொருவர் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. எனவே நேரடி விவாதம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். இஸ்லாமியர் ஒருவரும் கம்யூனிஸ்ட் ஒருவரும் விவாதம் செய்தால், குரானில் இந்த வசனம் இப்படி கூறுகிறது என ஒருவர் குறிப்பிட்டால் மற்றவர் அப்படி கூறப்பட்டிருக்கிறதா? என சரிபார்க்கவேண்டும். மூல‌தனத்திலிருந்தோ ஏனைய மார்க்ஸிய நூல்களிலிருந்தோ ஒருவர் சில மேற்கோள்களை காட்டினால் மற்றவர் அப்படி இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு நேரடி விவாதத்தில் வாய்ப்பு இல்லை. ஒருவர் கூறுவதை நம்பி பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவர் எடுத்துவைக்கும் கருத்துகளுக்கான ஆதாரங்களை சான்றுகளை அது உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இணையத்தின் வாயிலாக சிரமமின்றி எடுத்துவைக்கலாம். நேரடி விவாதத்தில் இதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. ஒருவர் தொடுக்கும் கேள்விகளை சிந்தித்து விளங்கி பதில் கூறுவதற்கான கால அவகாசம் நேரடி விவாதத்தில் கிடையாது. அந்த நேரத்தில் தோன்றுவதைக்கொண்டே பதில் கூறும் நிலை ஏற்படும். இதுபோன்ற இன்னும் பலவற்றினால் நேரடி விவாதத்தைவிட எழுத்து விவாதமே பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஆனால் இதில் சில எதிர்க்கூறுகளும் உள்ளன. நேரடி விவாதம் விரைந்து முடிந்துவிடும் எழுத்துவிவாதம் நீண்டு கொண்டிருக்கும்.

விவாதிப்பதன் பலன் என்ன? யார் அறிவாளி, யாருக்கு அதிக விவரங்கள் தெரியும் என காட்டிக்கொள்வதற்கா? நிச்சயம் இல்லை. சரியானவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும், நடப்பு நிலையை உரசிப்பார்ப்பதற்குமான உரைகல். தன்னுடைய நிலையை பரிசீலனைக்கு உட்படுத்தமாட்டேன் என்று கூறும் யாரும் விவாதத்தில் பதில் கூற முனைவாரே தவிர உண்மைகளை உணர்ந்து கொள்ள முன்வரமாட்டார்கள். என்னைப்பொருத்தவரை நான் பலருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன் (கவனிக்கவும் நேரடி விவாதத்தில்) முதலில் நான் எடுத்துவைப்பதே, கம்யூனிசம் தவறு என என்னை நீங்கள் உணரச்செய்துவிட்டால் உங்கள் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டு தொழ வருவதற்கு நான் தயார். அதே நேரம் இஸ்லாம் தவறு என உங்களை நான் உணரச்செய்துவிட்டால் இஸ்லாத்தை விட்டுவிடுவதற்கு நீங்கள் முன்வருவீர்களா? என்பது தான் என்னுடைய முதல் கேள்வியாக இருக்கும். இதுவரை யாரும் இதை ஏற்றுக்கொண்டவர்களும் இல்லை கம்யூனிசம் தவறு என நிரூபித்தவர்களும் இல்லை. இதே அடிப்படையில் தான் நண்பர் அப்துல் லத்திப் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கையிலும் கூறியிருந்தேன். இஸ்லாம் பொய் என்று எழுதித்தந்தால் தான் விவாதிப்பேன் என நான் கூறவில்லை மாறாக விவாதத்தின் முடிவில் உங்களுடைய நிலையை நிரூபிக்கமுடியாமல் போனால் உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்துவீர்களா? என்பது தான் கேள்வி. இங்கு தோல்வி என்று ஒன்றுமில்லை. பரிசீலனைக்கே முன்வரமாட்டோம் என்பவ‌ர்களோடு விவாதிப்பதில் பயன் என்ன?

மூடநம்பிக்கையின் மொத்தவடிவமாக இருப்பதால்தான் பயப்படுகிறீர்கள் என்று பதிலும் பல பின்னூட்டங்களும் தங்களை மறைத்துக்கொள்கின்றன.  நான் நேரடி விவாதத்திற்கு வரமாட்டேன் என சொன்னதில்லை. எழுத்துவடிவ விவாதம் சிற‌ந்தது என்று தான் கூறுகிறேன். நேரடி விவாதத்திற்கும் நான் தயாரகவே உள்ளேன். ஆனால் இப்போது இயலாது, காரணம் நான் இந்தியாவில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நானே உங்களை தொடர்புகொள்கிறேன் என முன்பு நண்பர் ஷேக் தாவூது அவர்களின் தளத்திலேயே பின்னூட்டம் இட்டுள்ளேன். மாறாக எங்கள் இயக்கத்தவர்களுடன் பேசி ஏற்பாடு செய்யுங்கள் என்றால் அது என்னுடைய வேலை இல்லை. அவசரம், அவசியம்  என்றால் தொலைபேசி இலக்கம் தருகிறேன், நேரடியாக பேசிக்கொள்ளலாம்.

என்னைப் பொருத்தவரை நேரடி விவாதமானாலும், எழுத்துவடிவ விவாதமானாலும் நான் ஆயத்தமாகவே உள்ளேன். எழுத்து வடிவ விதமென்றால் இந்த நொடியிலிருந்தே, நேரடி விவாதமென்றால் இப்போது நாள் குறிக்கமுடியாது. இது தான் என்நிலை. பிஜே அவர்கள் தளத்தில் நிறைய விவாதங்கள் இருக்கின்றன, நேரடியும் எழுத்தும் கலந்து. அப்படி இருக்கும் போது நேரடியாக வந்தால் மட்டுமே என்பது ஏன்? எழுத்து வடிவில் தொடங்கலாம்.

இவ்வாறு ஒரு இடுகையை இடுவதற்கு காரணமான நண்பர் இனிமை அவர்களுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.