பெயரில் குடியரசு செயலில் முடியரசு

 

வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இப்படியான கைதுகளும், சித்திரவதைகளும், பொதுமக்களுக்கு சிரமங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடிமக்களுக்கான அரசை அதன் குடிகளில் சிலரே ஏன் தகர்க்க நினைக்கிறார்கள்?

 

இந்தக் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் அனைத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டியதும், பரிசீலிக்கப் படாமல் ஒதுக்கப்படுவதுமான கேள்வி. குடிமக்களில் பெரும்பாலானோர் அரசுகளின் மீது கோபமாகவும் வெறுப்பாகவுமே இருக்கிறார்கள். ஏனென்றால், அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை பாதிக்கிறது. அவர்களை தங்கள் வாழ்நிலைகளிலிருந்து கீழிறக்குகிறது. அதனால், தனித்தனி குழுக்களாக வெவ்வேறு பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களை போராடத் தூண்டும்படியாக நடந்து கொண்டிருக்கும் அரசை குடி மக்களுக்கான அரசு என்று கூற முடியுமா? ஆனால், பலர் அப்படி கூறிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் குடியரசு தினம் இன்னும் கொண்டாட்டமாய் நீடிக்கிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் அதன் பொருட்டே மக்களுக்கானதாக விளம்பப்படுகிறது. ஆனால் மெய்யில் அப்படி இருக்கிறதா?

 

இதை தற்போது மக்களிடையயே கொதிப்பில் இருக்கும் மீனவர் பிரச்சனையினூடாக பார்க்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக தோராயமாக 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தன் சொந்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா செய்ததென்ன? எல்லா முதலாளித்துவ நாடுகளும் தம் சொந்த மக்களை தன்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதும் போது கொன்று குவிக்க தயங்குவதில்லை. ஆனால் பிற நாடுகள் தம் குடிமக்களை கொல்லும் போது தன் பிம்பத்தை காத்துக் கொள்ள கொஞ்சமாவது எதிர்ப்பை காண்பிக்கும். ஆனால், ஐநூறுக்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் கிடப்பது தான் ஒரு குடியரசின் இலக்கணமா?

 

இதை இன்னும் அணுகிப் பார்த்தால் இந்திய குடியரசின் லட்சணம் என்ன என்பது வெளிப்படையாகிவிடும். மீனவர்கள் தொடர்ந்து தனித்தனியான பல அடையாள போராட்டங்களை நடத்தி சோர்ந்து நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருக்கும் பதிலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை இதைச் செய்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் இது தொடர்கிறது, மட்டுமல்லாது அதிகரித்திருக்கிறது. என்றால் அதன் நோக்கம் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அந்தக் கடல் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்தை இரண்டு அரசுகளுமே தடுக்க நினைக்கின்றன என்பதாகத் தான் இருக்க முடியும்.

 

90களில் நரசிம்மராவ் தொடங்கிய வெளிப்படையான மறுகாலனியாக்கத்தில் இந்திய இலங்கை கடற்பகுதியில் பன்னாட்டு மீன்பிடி நிறுவங்களுக்கு மீன்பிடித்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்தல் என்பது மீன்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டதல்ல மாறாக தகவமைதலை பயன்படுத்தி மீன்வளத்தை காக்கும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் மீன்பிடித்தல் என்பது முட்டைகள் குஞ்சுகள் தொடங்கி கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஒட்ட வழித்தெடுப்பதால் மீன்வளத்தை அழிக்கிறது. உலகமயமாக்க சூரையாடல்களால் உயர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்டவும், பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை எதிர்கொள்ள முடியாமையும் இணைந்து மீனவர்களை எல்லை தாண்டவும், தடுக்கப்பட்ட வலைகளை, மீன்பிடி முறைமைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இந்த காரணங்களால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக, இலங்கை மீனவர்களுக்கிடையேயும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகள் இந்திய மாநிலங்களுக்கிடையேயும், உலகமெங்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

 

இதை மீனவர்களை கொல்வதன் மூலமும், தொடர்ச்சியாக படகுகளை வலைகளை தாக்கி சேதப்படுத்துவதன் மூலமும் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி அந்த கடற்பகுதியிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையை இலங்கை செய்கிறது. அதற்கு முழுமையான ஆசியையும், ஆதரவையும் இந்தியா வழங்குகிறது. இதை மறைப்பதற்கு இந்தியா எல்லை தாண்டுவதையும், இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளையும் முன்னிருத்தி திசை திருப்புகின்றன.

 

இந்தியா பெயரில் மட்டுமல்ல தன்மையிலும் குடியரசாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 40 கிலோமீட்டர் கொண்ட குறுகிய கடற்பரப்பை இரு தரப்பு மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் எல்லை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். எந்த மாதிரியான மீன்பிடி முறையை பாவிப்பது என்பது குறித்து இரு தரப்பு மீனவர்களும் உகந்த இணக்கமான முடிவை எடுப்பதற்கு அரசு உதவ வேண்டும். குடிகளுக்கான அரசாக இருந்தால் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

 

ஆனால் இந்தியா செய்திருப்பதென்ன? பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்கி அதனை பாதுகாக்கிறது. எல்லையை வறையறை செய்யாமலும், அதேநேரம் எல்லை தாண்டாதே என்றும் குழப்புகிறது. மீன்பிடியை ஒழுங்கு செய்வதற்கு என்று சட்டம் கொண்டு வந்து பாரம்பரிய மீனவர்களுக்கு ஏற்க முடியாதபடி பலவிதமான கட்டுப்பாடுகளைச் சுமத்துகிறது. மீறினால் ஆயிரக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கவும், படகை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யும் அதேநேரம் பன்னாட்டு கப்பல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கடலை வழித்தெடுக்க துணை நிற்கிறது. கடலோர மீனவர்களிடையே தொண்டு நிறுவனங்களை, சுய உதவிக் குழுக்களை களமிறக்கி மெழுகுதிரி செய்தல், பொம்மை செய்தல் என்று மாற்றுத் தொழில்களை பயிற்றுவித்து மீன்பிடித்தலிலிருந்து வெளியேற ஊக்குவிக்கிறது. நீளமான கடற்பரப்பை பெற்றிருக்கும் இந்தியா, பல்லாயிரக்கணக்கான மீனவ குடிமக்களுக்கு எதிராகவும், சில பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இவைகளைச் செய்திருக்கிறது. என்றால் இது குடியரசா?

 

மீன்பிடி தொழிலில் மட்டுமல்ல, உழவு, நெசவு உட்பட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் அனைத்து தொழில்களிலும் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் செயல்பாடு மக்கள் விரோதமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு புதுப்புது வரிகளை அமல்படுத்துவதிலிருந்து இருக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பது வரை, முதலாளிகளுக்கு வரிச்சலுகையிலிருந்து லாபத்திற்கான உத்திரவாதம் வரை மக்களுக்கு எதிராகவே அரசுகள் பொதுநிதியை கையாளுகின்றன. இவைகள் ஒன்றும் கமுக்கமான செய்திகளல்ல.

 

எப்படி மக்களை பட்டினி போடும் மசோதவுக்கு உணவு பாதுகாப்பு மசோதா என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்ற எண்ணுகிறதோ அது போன்றே முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயல்படும் அரசுக்கு குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டிருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், இப்படி தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு கொண்டாட்டம் ஒரு கேடா என்று.

 

தொடர்புடைய பதிவுகள்

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு குடியரசு தினம்

தமிழக மீனவர்களை கொல்லச் சொல்வது இந்திய அரசு தான்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

 

கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து அவர் நழுவிக் கொண்ட பிறகு சாரமற்ற, வெற்றுகளுக்கு விளக்கமளித்து இத்தொடரை நீர்த்துப் போக வைப்பதை விட, இஸ்லாம் குறித்த தொடரின் மீதான விமர்சனங்களை மட்டும் கணக்கில் கொண்டு இத்தொடரை இன்னும் ஆழமாக கொண்டு செல்லலாம் என்று எண்ணியது தான். ஒருவேளை நண்பர் இஹ்சாஸ் மீண்டும் களத்திற்கு வந்து எல்லாவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும் எனக் கோரினால் அதை பின்னர் பரிசீலிக்கலாம்.

 

கடல்கள் பற்றிய அந்த கட்டுரையில் குரானின் கூற்றுகளான இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். 1) கடல்களுக்கு இடையிலான தடை. 2) ஆழ்கடலின் இருள். இந்த இரண்டு அம்சங்களில் நண்பரின் மறுப்பு என்ன? முதல் அம்சத்தில், இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு இல்லையென செங்கொடி மறுக்கவில்லை. மாறாக பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்ததை அறைகுறையாக முகம்மது கேட்டு கூறிவிட்டார் என்று நான் கூறியிருப்பதாக அவராகவே முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் அவ்வாறன்றி தெளிவாகவே கடல்களுக்கு இடையே தடுப்பு இருக்கிறது என்பதை மறுத்திருகிறேன். இரு கடல்களுக்கிடையே எல்லை இருக்கிறது என்பதே போர்வையில் வடிகட்டிய முட்டாள் தனமாக இருக்கும் போது, அங்கு தடுப்பு இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? இரு கடல்களுக்கு இடையே ஒரு தடுப்பு இருக்க முடியும் என்றால் முழுமையாக இரண்டு கடல்களும் தனித்தனியே பிரித்து காட்டப்பட வேண்டும். உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? அந்தந்த பகுதிகளை முன்னிட்டு தனித்தனியான பெயர்களில் வழங்கி வருகிறோம். நிலங்களால் பிரிக்கப்படாதவரை தனித்தனியான இரண்டு கடல்கள் என உலகில் எதுவுமில்லை.

 

இதையே பர்சக் எனும் அரபுச் சொல்லை திணித்து நான் கூறியதை வேறொன்றாக திரித்திருக்கிறார். முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்ளும் போது மதவாதிகள் செய்யும் வழக்கமான உத்தி தான் இது. குறிப்பிட்ட அந்த 25:53 வசனத்திற்கு ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு பர்சக் எனும் சொல்லுக்கு வரம்பு என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள். திரை அல்லது தடுப்பு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த வரம்பு என்ற சொல்லைக் கொண்டா கடல்களுக்கு எல்லை இல்லை என கூறுகிறேன். கடல்களுக்கு இடையேயான தடுப்பு என்று தான் நானும் கூறியிருக்கிறேன். ஆனால் குரான் அந்த வசனத்தில் தெளிவாக இரண்டு கடல்கள் என்று தான் கூறியிருக்கிறது. அரபுச் சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் விளக்க வேண்டுமென்றால், இரண்டு கடல்கள் என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள் ஒரு கடல் என்று தான் மூலத்தில் இருக்கிறது என்று அடித்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூற வேண்டுமென்றால் திரை குறித்த வசனங்களே தேவையற்றுப் போய் குரானிலிருந்து நீக்க வேண்டியதிருக்குமே. அதனால் தான் பர்சக்கை பிடித்துக் கொண்டு பல்டியடித்திருக்கிறார்.

 

கடல்களுக்கிடையே திரையோ தடுப்போ இல்லை என்பதற்கு சில விளக்கங்களையும் அந்த கட்டுரையில் தந்திருந்தேன். கடலடி நீரோட்டங்கள் கண்டங்களைக் கூட கடந்து வெகுதூரம் செல்கின்றன. கடல்கள் கலக்கக் கூடாது என்பதற்குத்தான் தடுப்பு மற்றவற்றுக்கு இல்லை என்று கூறும் நண்பர், நீரோட்டங்கள் கடல் நீரல்ல என்றொரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கலாமே. அருசொற்பொருள் விளக்கமோ, உருட்டி, நழுக்கும் மழுப்பலோ கூட செய்ய முடியாது என்பதால் தான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாரோ! ஒரே கடலின் இருவேறு பகுதிகளில் கூட கடல் நீரின் தன்மையில் வித்தியாசங்கள் இருக்கின்றன (எகா தமிழ்நாடு, அந்தமான்) என்பதை எடுத்துக் காட்டியிருந்தேன். அதற்கும் கள்ள மௌனம் தான் பதில். உண்மையிலேயே குரான் அல்லா கொடுத்தது தான் என நண்பர் இஹ்சாஸ் நம்பினால் இதற்கும் பதில் என்ற போரவையில் எதையாவது உளறியிருக்கலாமே. விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக் கூட முடியாத அளவில் குரானே உளறிவிட்டது என்பதை அறிந்ததால் தான் மௌனமாகி விட்டாரோ!

 

வெவ்வேறு கடல் பகுதிகளின் தன்மைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை எனும் அனுபவ அறிவை செவியுற்று, கடல்களுக்கு இடையில் திரை அல்லது தடுப்பு இருக்கிறது என்று உருட்டிப் புரட்டி பொய்யை அரங்கேற்றியது. அதற்கு விளக்கமாக ஒருபுறம் உப்பாகவும் மறுபுறம் இனிமையான சுவையாகவும் இருப்பதாக சிறுபிள்ளையும் நகைக்கக்கூடிய வகையில் பிதற்றியிருப்பது. இவை போதாதா குரானும் அல்லாவும் முகம்மதின் உருவாக்கம் தான் என்பதற்கு?

 

இரண்டாவதாக ஆழ்கடலின் இருள், முகம்மது குரானில் சொல்வதற்கு முன்னால் கடலில் ஆழமாகச் செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து இருள் பரவும் என்பது யாருக்குமே தெரியாததா? ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கடலுக்குள் செல்ல இயலாது என்றொரு அற்புத ஆழிமுத்தை கண்டெடுத்திருக்கிறார் நண்பர். முத்து எடுத்தவர்கள் எல்லாம் கடலின் மேல் மிதந்து கொண்டே தான் முத்தெடுத்தார்களா? கடலின் மேற்பரப்பில் பயணம் செய்தாலும் கூட அடியாழத்தில் வெளிச்சம் ஊடுருவாது என்பதை அறிந்து கொள்ள முடியும். கடலில் தவறி விழும் ஒரு பொருளை கவனித்தாலே தெரிந்துவிடுமே, முதலில் கண்ணாடி போல் தெளிவாக தெரியும் அந்தப் பொருள் கீழே செல்லச் செல்ல படிப்படியாக மங்கி பார்வையிலிருந்து மறைந்து விடும். அவ்வளவு ஏன், கடலின் மேற்பரப்பிலிருந்து பார்த்தால் வெவ்வேறு ஆழங்களில் நீந்தும் மீன்களின் காட்சித் தோற்றத்தைக் கொண்டே கூறிவிடலாமே கடல் நீரின் ஒளி ஊடுருவும் தன்மையை. இதற்கு மேலதிகமாக அந்த வசனத்தில் என்ன இருகிறது?

 

அறிவியல் கண்டுபிடிப்பான நிரப்பிரிகையின் ஒளி ஊடுருவும் தன்மைக்கும் அந்த வசனத்துக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் நுணுக்கமாக கேள்வி எழுப்பினால் குரான் ஒன்றும் அறிவியல் நூலல்ல என்று ஜல்லியடிக்கும் நண்பர், அதற்கு முன்னால் நவீன அறிவியலைத்தான் குறிப்பிட்ட வசனங்கள் பேசுகின்றன என்று கூறுவதற்கு அந்த வசனங்களில் தகுதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டாமா? என்னிடம் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் நண்பர் அதற்கு முன்னால் அந்த வசனம் அறிவியலைத்தான் பேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்க வேண்டாமா?

 

மதம் நுழைய நுழைய அறிவு வெளியேறிவிடும் என்று பெரியார் கூறியதற்கான நடப்பு எடுத்துக்காட்டுகள் இது போன்று இஸ்லாத்திற்காக எகிறிக் குதிக்கும் பதிவர்கள் தாம். என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்குவதில்லை, எப்படி அதை மறுக்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. இருப்பதெல்லாம் இஸ்லாத்தைக் குறை கூறுவதா எனும் உணர்ச்சிக் கொதிப்பு, மறுக்க வேண்டுமெனும் ஆர்வக் கோளாறு, கொஞ்சம் இரவல் தகவல், நிறைய நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக வெட்டிக் கலக்கி தாளித்து இறக்கி விடுவது. உண்டாலல்லவா தெரியும் உணவின் தரம்.

 

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 
   செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨
   செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩
  செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்  
  செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫
   செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6
  செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7
  செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8 
  செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9  
 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10
 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள

மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கருவி நெருப்பை உண்டாக்குவது. நெருப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் பண்டைய காலத்தில் ……?

நெருப்பு என்பது ஆயுதம்,

நெருப்பு என்பது ஆற்றல்,

நெருப்பு என்பது பாதுகாப்பு,

நெருப்பு என்பது முன்னேற்றம்,

நெருப்பு என்பது வல்லமை,

நெருப்பு என்பது வாழ்வு.

இன்று கருவிகள் இல்லாமல் ஒரு நொடியும் இல்லை என்ற நிலையிலிருக்கும் மனிதன், தொடக்க கால மனிதர்கள் நெருப்போடு கொண்டிருந்த உறவை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா? முழுமையாக இல்லாவிட்டாலும் அதை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள வாய்ப்பை தந்திருக்கிறது ”நெருப்பைத்தேடி” Quest For Fire எனும் திரைப்படம்.

இன்றைக்கு எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்க்கையின் சிறு பகுதியை விவரிக்கிறது இந்த திரைப்படம். நியாண்டர்தால்கள் இன்றைக்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு. குரோமாக்னன்களும் நியாண்டர்தால்களும் அக்கம்பக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. நிர்வாணக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் ஆபாசமோ, அறுவறுப்போ துளியும் தோன்றாத வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது.

நியாண்டர்தால்களின் ஒரு இனக்குழு நெருப்பை அணைந்துவிடாமல் பாதுகாப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. ஏனென்றால், நெருப்பை எப்படி உண்டாக்குவது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இயற்கையாக ஏற்படும் நெருப்பை ஆண்டுக் கணக்கில் மழையிலும் வெயிலிலும் பனியிலும் அணைந்து விடாமல் பாதுகாப்பதில் தான் அவர்களின் வாழ்வே அடங்கியிருக்கிறது. இதை குறியீடாக ஒரு காட்சி உணர்த்துகிறது. நெருப்பு இருக்கும் போது எளிமையாக தங்களை பாதுகாத்துக் கொண்டு மிருகங்களை விரட்டியடிக்கும் மனிதன், நெருப்பு இல்லாதபோது அந்த மிருகங்களலேயே வேட்டையாடப்படுகிறான். இப்படி எல்லாமுமாக இருக்கும் நெருப்பை கவர்ந்து செல்ல இன்னொரு இனக்குழு வருகிறது. நடக்கும் போரில் கவர்ந்து செல்ல வந்த குழு தோற்கடிக்கப்படுகிறது என்றாலும், நெருப்பை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. விளைவு மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு நெருப்பைத்தேடி பயணம் தொடங்குகிறது. பயணத்தில் அவர்கள் பல்வேறு இனக்குழுக்களைக் கடந்து நெருப்பைக் கவர்ந்து திரும்பும் வழியில் குரோமாக்னன்களிடமிருந்து நெருப்பை உண்டாக்கும் கலையையும் கற்றுத் திரும்புகிறார்கள். இது தான் படத்தின் கதை. இதில் கோர்க்கப்பட்டிருக்கும் காட்சியமைப்புகள் வழியாக நியாண்டர்தால்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் சொல்லிச் சென்றிருப்பதுதான், இத்திரைப்படத்தை பார்க்க வேண்டிய படமாக மாற்றியிருக்கிறது.

மிகுந்த சிரமங்களுக்கிடையே கவர்ந்து வரப்படும் நெருப்பு, கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி அணைந்துபோவது எவ்வளவு வேதனைக்கும், வெறுப்புக்கும் உரியது. ஆனால் தவறுதலாக அவ்வாறு நீரில் மூழ்கடித்து அணைத்துவிடும் மனிதன் மீது ஏனையோர் குற்றப்படுத்துவது போலோ, கண்டிப்பது போலோ காட்சியமைக்கப் படவில்லை. உழைப்பின் பயன் பொதுவாய் இருக்கும் ஒரு சமூகத்தில் குற்றங்கள் தனிமனிதனை மட்டுமே சார்ந்ததாக கொள்ள முடியாது எனும் கருத்து அந்தக் காட்சியின் மீது கவிதையாய் படிந்திருக்கிறது என்று கொள்ளலாம். அதேநேரம் வேறொரு இனக்குழுவோடு சண்டையிட்டு நெருப்பைக் கவர்ந்து வரும்போது மிச்சமிருக்கும் நெருப்பு அவர்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆற்றில் எறிந்துவிட்டுப் போகும் காட்சி தனியுடமையின் படிமம். இந்த முரண்பாடான காட்சியமைப்பு, சொந்தக் குழுவுக்குள் பொதுவுடமையும் வேறு குழுவுக்கு எதிரான தனியுடமையுமாக அதன் வளர்ச்சியைக் கூறுகிறது.

தூரத்தில் மான்கள் திரிவதைப் பார்த்து எச்சில் ஊற ஓடுவதும், கொடூர விலங்குகளுக்கு பயந்து மரத்திலிருந்து இறங்க முடியாத நிர்ப்பந்த நிலையில் இலைகளை உண்பதுமான காட்சி சைவ அசைவ உணவு எந்தெந்த காலங்களில் உண்ணப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது. அதேநேரம் நரமாமிசம் உண்ணும் இனக்குழுவின் மிச்சத்தை பசி மிகுதியால் உண்ணத் தொடங்கி அது நரமாமிசம் எனத் தெரிந்ததும் துப்பிவிடுவது, வேறுவேறு இனக்குழுவினூடாக நரமாமிசத்தை உண்பதும் வெறுப்பதுமாய் தொடக்க கால மனிதன் உணவை எவ்வாறு கையாண்டிருக்கிறான் என்பதை காட்சிப்படுத்துகிறது.

உடலுறவு என்பது உணவுத் தேவையைப் போல் இன்றியமையாத, சாதாரணமான ஒன்று தான். நுகர்வுக் கலாச்சாரம் தான் அதை முன்னணியில் அறுவறுப்பானதாக, ஒழுக்கமாக முன்னிருத்திவிட்டு, பின்னணியில் ஆணாதிக்கத்துடன் பெண்களை வேட்டையாட வைத்திருக்கிறது. அருகில் புணர்ச்சி நடைபெறும் போது ஏனையவர்கள் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதும், அதேநேரம் அவர்களின் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக நடைபெறும் போது அதைக் கண்டு முகம் திருப்பிக் கொள்வதும் இயல்பான அழகுடன் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

நியாண்டர்தால்களே முதலில் வல்லொலிகளைத் தாண்டி பேச முனைந்தவர்கள் எனும் வரலாற்றை, வெகு சொற்பமான அவர்களின் பேச்சின் மூலமும்; அவர்களைவிட குரோமாக்னன்கள் சரளமாக பேசுவதாகவும் அமைத்திருப்பது சரியாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கிறது. மட்டுமல்லாது மருத்துவம் முதலான கலைகளை கண்டுபிடித்துக் காத்தது பெண்கள் தான் என்பதை குறிப்பால் உணர்த்தியிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.

ஊதி ஊதி பற்றவைக்க முயன்றும், கடைசி கனல் நெருப்பாய் பற்றிக் கொள்ளாமல் அணைந்து விடும்போது அவர்கள் வெளிக்காட்டும் ஏமாற்றமும், இயலாமையும் கலந்த உணர்ச்சி, நெருப்பைத் தேடிய பயணத்தில் முதலில் நெருப்பு அணைந்து போல சாம்பலே எஞ்சியதாய் கிடைக்கும் போது அதை உடலில் பூசிக் கொள்வதும், அதில் புறள்வதுமாக அவர்கள் காட்டும் உணர்ச்சி என கதை மாந்தர்களோடு நாமும் இயைந்து பயணப்படுவதற்கு காட்சியமைப்பும், இயல்பான நடிப்புத் திறனும் வெகுவாக உதவுகிறது.

என்றாலும், படத்தில் நெருடல்களும் இல்லாமலில்லை. பெண்ணின் தலைமைத்துவம் நீக்கப்பட்டு ஆண் சமூகத்தை வழிநடத்துபவனாக மாறிய பின்பும் பெண் சமூக முக்கியத்துவம் கொண்டவளாகவே நீடித்தாள். ஆனால், படம் நெடுக பெண் எந்த பக்களிப்பும் அற்றவளாக காட்டப்படுவது பெருங்குறையாகவே இருக்கிறது.

குரோமாக்னன் இனத்தைச் சேர்ந்த பெண் முதலில் நியாண்டர்தால்களுடன் வருவது காப்பாற்றியவர்கள் எனும் பயன்பாட்டுக் காரணம் இருந்தாலும்; அவள் தன்னுடைய இனத்துடன் சேர்ந்துவிட்ட பிறகு இரண்டாம் முறையும் நியாண்டர்தால்களுடன் சேர்ந்து செல்வது படத்தில் நிறைந்திருக்கும் இயல்பான தன்மைக்கு மாறாக துருத்திக் கொண்டு இருக்கிறது. ஏனென்றால், காதல் என்று கூறமுடியாதபடி காதல் பண்பாட்டு வளர்ச்சியை பெறாத சமூகம் அது. குடும்பம் என்றும் கூறமுடியாதபடி குரோமாக்னன்களின் சமூகம் தனிப்பட்ட குடும்ப உறவை எட்டாத நிலையையே காட்சியமைப்புகள் கூறுகின்றன.

நியாண்டர்தால்கள் குரோமாக்னன்களை பிடித்துவைத்து சித்திரவதை செய்வது போலும், குரோமாக்னன்களிடம் நியாண்டர்தால்கள் மாட்டிக் கொள்ளும் போது உபசரித்து பாதுகாப்பது போலும் காட்சிப்படுத்தியிருப்பது வரலாற்று முரணாகவே இருக்கிறது. குரோமாக்னன்களான நாம் ஆஸ்திரேலிய பழங்குடிகளையும், அமெரிக்க செவ்விந்தியர்களையும் துடிக்கத் துடிக்க கொன்றழித்த இரத்த கொடூரங்கள் வரலாறாய் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது தங்களிடம் மாட்டிக் கொண்ட நியாண்டர்தால்களை குரோமாக்னன்கள் உபசரித்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

நியாண்டர்தால்களும், குரோமாக்னன்களும் அருகருகே வாழ்ந்தவர்கள் என்பதும், நியாண்டர்தால்களைவிட குரோமாக்னன்கள் முன்னேறியவர்கள் என்பதிலும் கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை. ஆனால், நியாண்டர்தால்கள் மலைக்குகைகளில் வாழும் அதே காலத்தில் குரோமாக்னன்கள் வீடுகளை அமைத்து, தரையை சமப்படுத்தி, கனிகள் வகை உணவை அறிந்து, மட்பாண்டங்களை பயன்படுத்தி வாழ்ந்தார்கள் என்பது கொஞ்சம் அதிகமானதாகவே தெரிகிறது.

இதுபோன்று வெகுசில குறைகள் இருந்தாலும், பழங்கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என அறிய விரும்புபவர்கள் இந்த படத்தைப் பார்க்கலாம்.

பின்குறிப்பு: இந்தப் படத்திற்கு முன்னதாக விமர்சனம் எழுதிய எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கும், இந்தப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த தோழர் குருத்து அவர்களுக்கும் நன்றி.

 தொடர்புடைய பதிவுகள்

ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்

மாயன் நாட்காட்டி+நோவாவின்கப்பல்=2012

மௌனகுரு: அழுத்தமில்லாமல் மௌனமாய் சொல்லும் யதார்த்தம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்

சில நாட்களுக்கு முன் சிறகுகள் வலைப்பக்கத்தை நடத்துபவர்களில் ஒருவரான நண்பர் முகம்மது ரஃபி கேள்வி ஒன்றை மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு பதில் எழுதிவிட்டு பார்த்தால் சற்று நீளமாக இருந்தது. எனவே, அதை இன்னும் சற்று விரிவுபடுத்தி பதிவாக இட்டால் என்ன எனும் எண்ணமே இந்த பதிவு. மட்டுமல்லாது, வழக்கமாக கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை கேட்கும் அவர் எனக்கு ஏதும் சங்கடம் நேரக் கூடும் எனும் எண்ணத்தில் இந்த முறை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம் எனகருதுகிறேன். அவ்வாறான தயக்கமோ, சங்கடமோ யாரும் கொள்ளத் தேவையில்லை என்பதை வெளிப்படுத்துமுகமாகவும், நண்பரின் அனுமதியுடன் இது பதிவிடப்படுகிறது.

அன்புள்ள செங்கொடி,

பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூட ஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக  இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர். 

உதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி அல்லது ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள். 

நல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா? என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா? என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன?

நண்பர் ரஃபி,

இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன? வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன? இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.

முதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது? பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,

முதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.

ஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.

இன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.

அண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா? எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா? படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா? அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும்? என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா? கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது.

அடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா? அழகியல் உணர்ச்சியா? இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார்? அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது? நளினமாக கைகளை அசைத்தாரா? என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை? மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை? எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது? மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன? பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும்? வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா? மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

மறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்?

பொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.

ஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று.

 

தொடர்புடைய பதிவுகள்

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்

கம்யூனிசமே வெல்லும்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 22

டிராட்ஸ்கியம் என்பது, அரசியல் சதிகளை மூலமாக கொண்டது

 

டிராட்ஸ்கியும், நான்காம் அகிலமும் தமது அரசியல் உள்ளடக்கத்தில் சோவியத்யூனியன் பற்றி கூறும் போது சோவியத் யூனியனை சீரழிந்த தொழிலாளர் அரசு” என்றனர். டிராட்ஸ்கி தனது தொடர்ச்சியான எழுத்ததுகளில் ஸ்டாலின் அதிகாரத்துவத்துக்கும் அதன் மூலம் உலக ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார். ஆனால் அவர் அதிகாரத்துவம் தனது சொந்த நலன்களின் பேரில் சுரண்டும் சமூக அடிப்படைகளை பேனாமல் அதிகாரத்துக்குச் சேவை செய்ய முடியாது. அந்தளவுக்கு ஸ்டாலின் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துக்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்தும் அதிகாரத்துவத்தின் பொறுமையிழந்ததும் பேராசை கொண்டதுமான தட்டினரிடமிருந்து கூடப் பேணுகின்றார். எவ்வாறெனின் அவர் இந்த பாதுகாப்பினை சோவியத் சமுதாயத்தினை பொதுவாக ஒழித்துக் காட்டும் தயாரிப்பு நடவடிக்கைகளுடனேயே இதை அழுல் செய்கின்றார். சரியாக இதன் காரணமாகவே ஸ்டாலினிசக் கும்பல் தூக்கிவீசப்படவேண்டும்” என்று எழுதுகிறார். சீரழிந்த தொழிலாளர் அரசு என்று கண்மூடித்தனமாக புலம்பிய போது, அதன் வர்க்கத் தன்மையை பற்றி மூடிமறைக்கிறார். மறுபுறத்தில் முரண்பாடாக தனது தலைமைய அதன் மேல் நிறுவ, சோவியத் அமைப்பை பாட்டாளி வர்க்கத் தன்மை உடையது என்கின்றார். ஆனால் சீராழிந்த பாட்டாளி வர்க்கத் தன்மை என்கின்றார். இப்படி முரண்பாடான, மார்க்சியமல்லாத புலம்பல் ஒரு முதலாளித்துவ மீட்சிகான ஒருமுயற்சியே. இப்படி பிதற்றும் டிராட்ஸ்கியம் பற்றி லெனின் மார்க்சியத்தின் முக்கியப் பிரச்சனை எதிலும் டிராட்ஸ்கி ஒரு போதும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்ததில்லை. எந்தக் கருத்து வேறுபாட்டிலும் உள்ள விரிசல்களில் நுழைந்து கொள்ள எப்போதும் அவர் கடும் முயற்சி செய்கிறார். ஒரு சாராரைக் கைவிட்டு இன்னொரு சாராருடன் சேர்ந்து கொள்கின்றார்” என்றார். டிராட்ஸ்கிய கோட்பாடு இப்படி முரண்நிலையாகவும், தனது தனிப்பட்ட நலன்களை சார்ந்து விளக்கம் பெறும் போது, சோவியத்யூனியனில் சீராழிந்த தொழிலாளர் வர்க்க அரசு” ஒன்று நிலவுவதாக கூறுவது, அடிப்படை மார்க்சியத்தையை மறுப்பதாகும். வர்க்க சமுதாயத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது. இருக்க முடியாத நிலையில் அதை இருப்பதாக கூறுவது தான் டிராட்ஸ்கியமாக உள்ளது. எதார்த்தத்தின் உண்மையை யாரும் மறுத்து புனைய முடியாத நிலையில், முரண்நிலையில் புலம்புவது தொடங்குகின்றது. சோவியத் ஆட்சி பாட்டாளி வர்க்க ஆட்சியாக அல்லது முதலாளித்துவ அரசாக, இரண்டில் ஒன்றுதான் இருக்கமுடியும். இரண்டுமாக அல்லது இரண்டும் அல்லாததாக இருக்க முடியாது. இது வர்க்க அமைப்பு பற்றி அடிப்படையான மார்க்சிய ஆய்வுரையாகும். இதை மறுத்து தான் ஸ்டாலின் ஆட்சியை அகற்றி தனது தலைமையை நிறுவ டிராட்ஸ்கியம் கொள்கை விளக்கம் அளிக்கின்றது.

 

இதற்கு மாறாக சுய விமர்சனத்தை வளர்த்தெடுப்பதிலும் தமது பலவீனங்களையும் தவறுகளையும் போக்கிக் கொள்வதிலும்; நமக்கு இடையூறு விளைவிக்கின்ற – அதிகார வர்க்கத்தினரையே நான் குறிப்பிடகிறேன்.  நமது அமைப்புகளில் உள்ள அதிகார வர்க்கத்தனத்தை வெறும் வழக்கமான சிவப்பு நாடா முறை என்று கருதிவிடக் கூடாது. அதிகார வர்க்கமுறை என்பது நமது அமைப்புகளில் உள்ள முதலாளியச் செல்வாக்கின் வெளிப்பாடாகும்” என்றார் ஸ்டாலின். மிகவும் சரியான தெளிவான நிலையை மூடிமறைக்க, ஸ்டாலின் அதிகார வர்க்கத்துக்கும், எகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார் என்று கூறும் டிராட்ஸ்கி, அதை எப்படி என்று விளக்க முடியாது திணறுகின்றார். அதேநேரம் ஸ்டாலின் எகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளார் என்றும் எழுதுகிறார். அத்துடன் சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்த படி அதற்கு எதிராக ஸ்டாலின் செயல்படுவதாக ஒன்றுக்கு ஒன்று முரணாக புலம்புகின்றனர். எகாதிபத்தியத்துக்கு ஸ்டாலின் உதவுவதாக கூறும் இவர்கள், அதே நேரம் எகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக கூறுகின்றனர். இதை எப்படி மார்க்சியமாக விளங்கிக் கொள்வது? அதிகார வர்க்கத்தை பாதுகாப்பதாக கூறும் இவர், சுரண்டும் வர்க்கத்தை ஒழிப்பதாக கூறுகின்றார். இப்படி இவை ஒரு முரண்நிலைக் கூற்றாக இருந்த போது, டிராட்ஸ்கிய அரசியல் தன்னை சதிகள் மூலமும் ஸ்டாலினிய அவதூறுகள் மூலமும் மூடிமறைத்துக் கொள்கின்றது. ஸ்டாலினை இப்படி முரண் நிலையாக காட்டி, கோட்பாடற்ற வகையில் சதிகள் மூலம் அவரையும், சோவியத் சமூகத்தையும் ஒழித்துக்கட்ட கோருகின்றார். தனது ஆரூடங்களை கேள்வி இன்றி எற்றுக் கொண்டு, தனது தலைமையிலான ஆட்சியைக் கோரினார். தேசியமயமாக்கப்பட்ட சொத்துகளை ஸ்டாலின் பாதுகாப்பதாக கூறி, ஒட்டு மொத்தத்தில் ஸ்டாலின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் இடுகின்றார். எதற்காக அகற்றப்பட வேண்டும் என்பதை விளக்க முடிவதில்லை. இந்த ஆட்சியில் தான் அமர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதே டிராட்ஸ்கிய அரசியல். உண்மையில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சிக்கு மாறாக முதலாளித்துவ மீட்சியையே அவர்கள் கோரினர்.

 

பாட்டாளி வர்க்க அரசு பற்றியும், வர்க்கப் போராட்டம் பற்றியும் டிராட்ஸ்கி கூறும் போது அரசின் வர்க்கத் தன்மை தொடர்ந்து நிர்ணயம் செய்யப்படுவது அதன் அரசியல் வடிவங்களால் அன்றி, அதன் சமூக உள்ளடக்கத்தினாலாகும். அதாவது குறிக்கப்பட்ட அரசு காத்து, பேணிக் கொண்டுள்ள சொத்துவடிவங்களின் பண்பிலாகும். … பறிமுதல் செய்த தேசிய சொத்தினைக் காக்கும் ஆட்சியானது சுதந்திரமான அரசியல் வடிவங்களை – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினைக் கொண்டுள்ளது..” என்றார். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை, அதன் அடிப்படையை மறுக்கும் உள்ளடக்கம் தான் முதலாளித்துவ மீட்சியை மறுக்கின்றது. லெனினின் அரசியல் அணுகுமுறைக்கும், பொருளாதார அணுகுமுறைக்கும் இடையில் எப்படி பாட்டாளி வர்க்க ஆட்சி மற்றும் வர்க்க கண்ணோட்டம் தூக்கியெறியப்படும் என்பதை விளக்கும் போது அவர்கள் “பொருளாதார” அணுகுமுறையைப் பின்பற்றுகின்ற பொழுது நான் “அரசியல்” அணுகுமுறையைப் மேற்கொள்வதற்காகவும் அவர்கள் இருவருமே (டிராட்ஸ்கி மற்றும் புக்காரின்) என்னை இடித்துரைக்கின்றனர்…. இது வெளிப்படையான தத்துவார்த்த தவறாகும்; எனது “அரசியல்” அணுகுமுறை ஒரு மார்க்சியவாதிக்கு முரணான முறையில், ஏற்பில்லாத முறையில் இடித்துரைக்கப்பட்ருப்பதை முன்பே கேள்விப்பட்ட காரணத்தால் …. எல்லா வகைகளிலும் அரசியலே பொருளியலை விட தலைமையான முக்கியத்துவமுடையது. வேறு வகையான வாதம் செய்வது என்பது மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுத்துவிடுவதாகும்.

 

நான் எனது அரசியல் மதிப்பீட்டில் தவறு செய்துள்ளேனா? அப்படி நீங்கள் கருதினால் அதைக் கூறுங்கள் மற்றும் நிருபியுங்கள். ஆனால் அரசியல் அணுகுமுறை “பொருளாதார” அணுகுமுறைக்குச் சமமானது என்று நீங்கள் கூறும் போது, “இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்” என்று சொல்லும் போது நீங்கள் மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுத்து விடுகிறீர்கள்.வேறு சொற்களில் கூறினால், அரசியல் அணுகுமுறை என்பதன் அர்த்தம் என்ன? தொழிற்சங்களின் தவறான போக்கு சோவியத் ஆட்சி அதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்கும் என்பதே” அரசியல் அணுகுமுறைக்கு பதிலாக பொருளாதார அணுகுமுறையை வைத்து சமுகத்தை வழிநடத்தவும், மதிப்பிடவும் முனைந்த போது, லெனின் இதை அம்பலப்படுத்தினார். இது அம்பலமான போது அவர் இரண்டையும் சமநிலையில் வைத்து மதிப்பிட முடியும் என்றனர். லெனின் இது மார்க்சியத்தையே மறுப்பதாகும் என்றார். இப்படி டிராஸ்கியத்தை லெனின் அம்பலப்படுத்தியிருந்தார். ஸ்டாலின் ஆட்சியை மேல் இருந்து கவிழ்த்து தனது தலைமையை நிறுவக் கோரிய டிராஸ்கி மீண்டும் அதே அரசியலை ஸ்டாலினுக்கு எதிராக முன்னிறுத்தினார். அரசியல் அணுகுமுறையை பொருளாதார அணுகுமுறைக்கு கீழானதாக காட்டி, ஸ்டாலினை தூற்ற டிராட்ஸ்கி தயங்கவே இல்லை.

 

இதை விளக்கிய டிராட்ஸ்கி சொத்துரிமை எப்படி உள்ளது என்பதே, அரசின் வர்க்கத் தன்மையை  தீர்மானிக்கும் அரசியல் உள்ளடக்கம் என்றார். சொத்துக்கள் தேசியமயமாக்கபட்டால், அந்த  அரசை  பாட்டாளி வர்க்க அரசாக காணவேண்டும் என்றார். அரசின் வர்க்கத் தன்மை அவசியமற்ற ஒன்றாக  மறுத்துவிடுகின்றனர். இந்த அடிப்படையில் டிராட்ஸ்கி அரசின் வர்க்கத் தன்மை தொடர்ந்து நிர்ணயம் செய்யப்படுவது அதன் அரசியல் வடிவங்களால் அன்றி, அதன் சமூக உள்ளடக்கத்தினாலாகும். அதாவது குறிக்கப்பட்ட அரசு காத்து, பேணிக் கொண்டுள்ள சொத்துவடிவங்களின் பண்பிலாகும்” என்று கூறி மார்க்சியத்தையே மறுத்தார். அரசியல் வடிவங்கள் தான் ஆணையில் உள்ளது என்பதை மறுப்பது, டிராட்ஸ்கியத்தின் முதலாளித்துவ மீட்சிக்கான செயல்முறை கொண்ட அரசியல் அடிப்படையாக இருந்தது. அதாவது அரசியல் வடிவங்களில் பாட்டாளி வர்க்க போராட்டத்தை நடத்தாமலேயே, அரசு காத்து பேணிக் கொண்டுள்ள சொத்துவடிவங்களைக் கொண்டு, பாட்டாளி வர்க்க அரசு என நிர்ணயம் செய்ய போதுமானது என்கின்றனர். தேசிய சொத்துரிமை, பாட்டாளி வர்க்க அரசாக நிர்ணயம் செய்ய போதுமானது என்கின்றனர். இதுதான் முதாலாளித்துவ மீட்சி நிலவிய காலகட்டமாகும். சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக நீடிப்பதை டிராட்ஸ்கியம் மறுத்து, அதை பாதுகாப்பதற்கான அரசியல் உள்ளடக்கமாகவும் கூட இது இருந்தது.

 

உலகளவில் தேசியமயமாக்கபட்ட சொத்துகளை அரசுகள் பேணும் போது, தேசிய மயமாக்கும் போது, அதை சோசலிசமாக கடந்த காலத்தில் புனையப்பட்ட பல நிகழ்வுகள் டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த ஏகாதிபத்திய கோட்பாடாகும். தேசிய சொத்துகளின் வரலாறு என்பது மக்கள் நலனில் இருந்து உருவாக்கபட்டவையல்ல. மாறாக மூலதனத்தின் நலனுக்கு இசைவாக கையாளப்பட்டவைதான். விதிவிலக்காக மக்களின் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பவும், சொத்துக்களை தேசிய மயமாக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஆனால் இங்கு தனிச் சொத்துரிமை ஒழிக்கப்படவில்லை. அரசின் வர்க்க அணுகுமுறை பற்றிய மதிப்பிடு அவசியமற்றதாக இருந்தது. தனிச் சொத்துரிமையை ஒழிக்கும் அங்கமாக பாட்டாளி வர்க்கம் சொத்துகளை தேசியமயமாக்கிய போது, அதை அத்துடன் நிறுத்திவிடவில்லை. (நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் இங்கு டிராட்ஸ்கியமாகும்) தொடர்ந்தும் அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஈறாக தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் ஒரு அரசியல் இயக்கத்தை, மக்கள் திரள் வடிவத்தை முன்வைப்பதை சீரழிந்த சோசலிசம் என்கின்றனர். அரசு எந்த வர்க்கத்துக்கு சார்பாக எப்படி தொடர்ச்சியாக, வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றது என்பதைப் பொறுத்தே, அரசின் வர்க்கத் தன்மை தீர்மானமாகின்றது. மாறாக தொடர்ச்சியான போராட்டத்தை மறுத்து, சொத்துடமை எப்படி இருக்கின்றது என்பதை ஆணையில் வைக்கும் அணுகுமுறை அரசின் வர்க்கத் தன்மையை தீர்மானிப்பதில்லை. இது முதலாளித்துவ மீட்சிகான அடிப்படையை உருவாக்கி விடுகின்றது. ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் அரசியல் வடிவங்களால் அமைந்த வர்க்கப் போரட்டத்தின் மூலம் அரசின் வர்க்கத் தன்மையை முன்னிறுத்திய போது, டிராட்ஸ்கி சொத்துடமை வடிவங்கள் மூலம் முதலாளித்துவ மீட்சிக்கான அரசின் வர்க்கத் தன்மையை நிர்ணயம் செய்ய அறை கூவலை விடுத்தார்.

 

தேசியமயமாக்கப்பட்ட சொத்துரிமை பாதுகாப்பதற்கு வெளியில், தொடர்ச்சியான அரசியல் வடிவங்கள் மூலம் தனிச் சொத்துரிமை கண்ணோட்டத்தில் இருந்து சமூகத்தை மாற்றும் புரட்சிகரமான செயல் முறையைப் பொறுத்தே, அரசு பாட்டாளி வர்க்க அரசா அல்லது முதலாளித்துவ அரசா என்பதை தீர்மானிக்க முடியும். சோவியத் முதல் சீனா வரையிலான அரசுகளின் தேசியமயமான சொத்துரிமை அடிப்படையாக கொண்டு, பாட்டாளி வர்க்க அரசாக கருத முடியாது. தேசிய சொத்துரிமை பாட்டாளி வர்க்கத்தின் உயர்ந்த அரசியல் இலக்குடன் கூடிய போராட்டம் அல்ல. டிராட்ஸ்கியத்துக்கு அதுவே அரசியல் எல்லையாக இருப்பதால் தான், ஆட்சிக் கவிழ்ப்பை மேல் இருந்து மட்டும் சதிகள் மூலம் கோர முடிந்தது. இதை மிக துல்லியமாக புரிந்து கொள்ள உதாரணமாக கியூபாவை அல்லது வடகொரியாவை எடுத்தால் தேசிய சொத்துரிமையை பெரும்பாலும் அவை கொண்டு இருப்பதால், அது பாட்டாளி வர்க்க அரசு என்று மதிப்பிடப்படுவதில்லை. டிராட்ஸ்கியும், டிராட்ஸ்கியமும் இப்படித் தான் தனது அரசியலை பிதற்றுகிறது. கியூபா, வடகொரிய அரசுகள் தேசிய அரசாக இருக்கின்றதே ஒழிய, பாட்டாளி வர்க்க அரசாக அல்ல. பாட்டாளி வர்க்க அரசு என்பது வர்க்கப் போராட்டத்தை எப்படி தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கை மூலம், கையாளுகின்றது என்பதை அடிப்படையாக கொண்டது. அதாவது பாட்டாளி வர்க்க கட்சி, அரசு என எங்கும் வர்க்கப் போராட்டத்தை ஆணையில் வைத்து அதை நடைமுறை ரீதியாக தொடராத வரை, அது பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் சார்ந்தவையல்ல. அது முதலாளித்தவ கண்ணோட்டம் சார்ந்தாகவே இருக்கின்றது.

 

மேலும் டிராட்ஸ்கி வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் அரசியல் முரண்பாடுகளை பலப்படுத்துகின்றதே தவிர பலவீனப்படுத்தவில்லை” என்று சீனா பற்றி சீனப் புரட்சிக்கு முந்திய குறிப்பில் தூற்றுகிறார். இதன் மூலம் என்ன சொல்ல முனைகின்றார்? ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடக் கோரினார். சீனப் புரட்சி எகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. உண்மையில் எகாதிபத்தியம் பலவீனப்படுவதை டிராட்ஸ்கி எதிர்த்தார். இது தனிநாட்டில் சோசலிசத்தை நோக்கி முயற்சியாக, டிராட்ஸ்கியத்தின் அரசியல் பிதற்றலுக்கு சவால் விடுவதாக இருந்தது. இதை ஸ்டாலினிசமாக டிராட்ஸ்கியம் கருதியது.

 

ஸ்டாலின் என்ன சொன்னார். ஒரு நாட்டில் புரட்சி வெற்றியடைந்ததும், அதனை தன்னைத்தானே நிறைவு செய்து கொள்ளும் தனிப்பட்ட விசயமாகக் கருதமால் மற்றெல்லா நாடுகளிலும் பாட்டாளி வர்க்க வெற்றியை துரிதப் படுத்துவதற்கு உதவியாகவும் ஒரு சாதனமாகவும் கருத வேண்டும். எனெனின் ஒரு நாட்டில் புரட்சியின் வெற்றி, தற்போதைக்கு ரஷ்யாவில் அடைந்திருக்கும் வெற்றி ஏகாதிபத்தியத்தின் மென்மேலான அழிவின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியில் ஒரு விளைவாக மட்டுமல்லாமல் அதே சமயம் உலகப் புரட்சியின் தொடக்கமாகவும் முன்நிபந்தனையாகவும் இருக்கிறது” என்றார். மேலும் அவர் பல்வேறு நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கங்கள் ஒன்று சேர்ந்து முயற்சிகள் இல்லாமல், தனி ஒரு நாட்டில் அதனை விடுதலை செய்யும் சோசலிசத்தின் இறுதி வெற்றி சாத்தியமானதே அல்ல என்பது உண்மையே, ஆனால் அதே சமயம் இதர எல்லா நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் முதல் சோசலிச நாடு தரும் உதவி எவ்வளவு அதிகமாக பயனுள்ளதாக இருக்கிறதோ, அந்தளவு உலகப் புரட்சியை அருகில் கொண்டு வருவதும் மிகவும் துரிதமானதாகவும் செழுமையானதாகவும் இருக்கும் என்பது உண்மையே” என்றார். இதையே ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் கடைப்பிடித்தது. எகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக சோவியத் விளங்கியது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஆரம்பம் முதலே ஜெர்மனியை ஆயுதமயமாக்கிய ஏகாதிபத்தியங்கள், சோவியத்தை தாக்கியழிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் ஜெர்மனியினூடாக கையாண்டது. பல பிரதேசங்களை எகாதிபத்தியங்கள் நிபந்தனை இன்றியே ஜெர்மனிக்கு தரைவார்த்துக் கொடுத்தது. சோவித்யூனியன் பாசிசத்துக்கு எதிராக விடுத்த அனைத்து ஒன்றுபட்ட முயற்சியையும் ஏகாதிபத்தியங்கள் நிராகரித்தன. மாறாக ஏகாதிபத்தியங்கள் ஜெர்மனியுடன் பல தொடர்ச்சியான ஒப்பந்தங்களைச் செய்தது. சோவியத் யூனியனை தனிப்படுத்தி அழிக்கும் வகையில் பாசிச ஜெர்மனிக்கு இயன்ற அனைத்தையும் செய்தனர்.

 

இரண்டாம் உலக யுத்த முடிவில் சோவியத் யூனியனை அணுவாயுதம் மூலம் தீடிரென தாக்கி அழிக்க, அமெரிக்கா இராணுவ திட்டங்கள் போடப்பட்டன. அவை பற்றி இன்று விரிவான தகவல்கள் வெளிவந்துள்ளன, வெளிவருகின்றன. சோவியத் யூனியன் ஏகாதிபத்திய அமைப்பின் மீது கடுமையான வர்க்கப் போராட்டங்களை ஊக்குவித்தது. இது ஏகாதிபத்தியம் முதல் காலனிகள் வரை விரிந்த தளத்தில் வர்க்க எழுச்சிகள் முதல் தேசிய எழுச்சிகள் வரை தனது ஆதரவை வழங்கியது. உலகம் எங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற இலட்சியத்தை தனது ஆணையில் வைத்தது. ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சிக் காலம் உலகளவில் கடுமையான வர்க்க நெருக்கடிகளையும், வர்க்கப் போராட்டங்களையும் இதற்கு முன்போ பின்போ உலகம் சந்திக்கவில்லை. இதில் மிக தெளிவான கொள்கை வழிப்பட்ட போராட்டங்களாக அவை இருந்தன. இதனால் ஸ்டாலின் கடுமையான எதிரியாக ஏகாதிபத்தியம் முதல் பல வண்ண கோட்பாடளர்களின் முன் உயர்ந்து நின்றார். இது டிராட்ஸ்கிக்கு தனிப்பட விதிவிலக்கல்ல. இதனால் அவர் ஏகாதிபத்தியம் எதிரி என்பதையே மறுத்தார். மாறாக ஏகாதிபத்தியத்தக்கு எதிரான போராட்டம், வர்க்கப் போராட்டத்தை சிதைக்கின்றது பலவீனப்படுத்துகின்றது என்றார்.

 

குறுகிய நோக்குடன் டிராட்ஸ்கி ஒரு சமூக இயக்கத்தின் உள்ளார்ந்த இயங்கியல் வர்க்க விதிகளை மறுத்தார். டிராட்ஸ்கி சீனாவில் உள்ளாந்த உறவுகளில் ஏகாதிபத்தியம் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்து கொண்டுள்ளது. இந்தச் சக்தியின் பிரதான மூலம்…. வெளிநாட்டு முதலாளித்துவத்துக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான பொருளாதார அரசியல் பந்தங்களே” என்றார். முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஜனநாயகப் புரட்சியின் உள்ளார்ந்த வர்க்க விதியை மறுத்தார். லெனின் கூறுவது போல் டிராட்ஸ்கி போல்ஷவியத்தைச் சிதைக்கிறார் ஏனெனில் ரசிய முதலாளி வர்க்கப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாதிரம் பற்றிய திட்டவட்டமான கண்ணோட்டங்கள் எதையும் உருவாக்குவதற்கான ஆற்றல் அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை” என்று அம்பலம் செய்கின்றார். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளின் வர்க்க போராட்ட உள்ளடகத்தை லெனின் கூறியது போல் என்றும் டிராட்ஸ்கி புரிந்து கொண்டது கிடையாது. மாறாக புரிந்து கொண்டவர்களை அரசியலற்ற கோசங்களால் தூற்றியே வாழமுடிந்தது. முதலாளித்துவ நாடுகளில் சோசலிசம் இல்லாத கம்யூனிசத்தை ஒரே பாச்சலில் அடைய முடியும் என்று சிலர் எப்படி வாதிடுகின்றரோ, அதே போல் ஜனநாயகப் புரட்சி இன்றி சோசலிசத்தை அடைய முடியும் என்பதே டிராட்ஸ்கியத்தின் உள்ளடக்கமாகும். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் ஜனநாயக சக்திகளை இனம் காண மறுப்பதும், அவர்களுடன் ஐக்கியப்பட்ட பாட்டாளி வர்க்க புரட்சியை மறுப்பதும், இதன் உள்ளார்ந்த ஏகாதிபத்திய சார்பு நிலையாகும். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஏகாதிபத்தியம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது காலனித்துவத்தை வைத்திருக்கின்றது. இந்த காலனித்துவத்தை, காலனித்துவத்தைச் சேர்ந்த சுதேசிகள் கூட்டம் ஒன்று முண்டு கொடுக்கின்றது. இது எல்லா காலனித்துவ வரலாற்று கட்டத்திலும் நடந்தன, நடந்து வருகின்றன. அதனால் காலனித்துவ மக்கள் தத்தம் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என்பது டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த பொய்யுரையாகும். தேசியம் என்பது தேசிய முதலாளித்துவ நலன்களைக் குறிக்கின்றது. இது ஏகாதிபத்திய நலனுக்கு நேரடியாக எதிரானது. ஏகாதிபத்தியத்தை முண்டு கொடுக்கும் சக்திகள் நிலபிரபுத்துவ வர்க்கமும், தரகு முதலாளித்துவ வர்க்கமுமே. இந்த வர்க்கங்கள் மட்டும் தான் ஏகாதிபத்திய காலனித்துவத்தில் லாபம் பெறுகின்றன. தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்திய சந்தையால் தனது சொந்த உற்பத்தியை இழக்கின்றது அல்லது ஒடுக்கப்படுகின்றது. இதனால் தான் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்றது. சுயநிர்ணயத்தை ஆதரித்து உயர்த்துகின்றது.

 

முதலாளித்துவ ஜனநாயக புரட்சி ஒன்றை எந்த வர்க்கங்கள் விரும்புகின்றன, எந்த வர்க்கங்கள் எதிர்க்கின்றன என்பதை பாகுத்தாய மறுப்பது மார்க்கசியம் அல்ல. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் வேறுபட்ட புரட்சிகர பணிகளை மறுப்பது வரட்டுவாதமாகும். டிராட்ஸ்கியும், டிராட்ஸ்கியமும் மார்க்சிய எதிர்ப்பிலும் வரட்டு வாதத்திலும் மார்க்சிய லெனினியத்தின் உள்ளார்ந்த அடிப்படைகளை தூற்றுகின்றனர். ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான முரண்பாடு” ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட கற்பனை பொருள் என டிராஸ்கியம் வாதிடுகிறது. டிராட்ஸ்கி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்தை பலப்படுத்தும் என்று கூற, அவர்களின் வாரிசுகள் ஏகாதிபத்தியம் என்பது ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பொருள் என்கின்றனர். ஸ்டாலின் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துக்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்தும் அதிகாரத்துவத்தின் பொறுமையிழந்ததும் பேராசை கொண்டதுமான தட்டினரிடமிருந்து கூடப் பேனுகின்றார்” என்று டிராட்ஸ்கி கூற்று ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருப்பதை சதிக்கான அரசியல் என்றும் கண்டு கொள்வதில்லை. ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான முரண்பாடு” இதை அடிப்படையில் ஆராய்ந்தால், குருச்சேவ் வைத்த ஏகாதிபத்தியத்துடனான சமாதான சக வாழ்வு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் முரண்பாடாடற்ற சோசலிச அமைப்பை அடிப்படையாக கொண்டது. சொந்த நாட்டில் சோசலிசத்தை கட்டுவது என்ற வர்க்கப் போராட்டத்தை நிராகரித்த டிராட்ஸ்கியம், ஏகாதிபத்தியம் என்பதையும் அதன் முரண்பாட்டையும் கற்பனையானது எனக் கூறுவது தவிர்க்க முடியாது. இதை ஸ்டாலினிசமாக முத்திரை குத்தி ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதும் தவிர்க்க முடியாது. சொந்த நாட்டில் வர்க்கப் போராட்டத்தை அதாவது சோசலிச கட்டுமானத்தை நிரகாரித்தவர்கள், ஸ்டாலினால் முன்னெடுக்கபட்ட சர்வதேச வர்க்கப் போராட்டத்தையும் நிராகரித்தனர். சர்வதேச ரீதியான வர்க்கப் போராட்டங்களை ஸ்டாலின் ஆதாரித்து ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தால், ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத்துக்கும் இடையிலான முரண்பாடு ஊச்சத்தை எட்டியது. இதை டிராட்ஸ்கியம் கற்பனையானது என்றனர். ஆனால் எதார்த்தம் டிராட்ஸ்கியத்துக்கு நேர் எதிராக இருந்தது.

 

நான்காம் அகிலம் மார்க்சியத்தை மறுத்து நிறுவும் விமர்சனத்தில் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட மாவோ, குருசேவில் இருந்துதான் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வுக் கொள்கை இடம் பெற்றதாக தனது குருநாதர் ஸ்டாலினைக் காப்பாற்றும் மூடிமறைப்பு வேலையில் ஈடுபட்டதுடன், சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக சீராழிந்து விட்டதாக அரிய கண்டு பிடிப்பபைச் செய்தார். அரசுடைமையாக்கப்பட்ட சொத்துடமையின் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் எங்கு வந்தது? என்பதையெல்லாம் மாவோ விளக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக, ஏகாதிபத்தியத்தின் லஞ்சத்துக்கு விலை போன தொழிலாளர் வர்க்கத்தின் மேல் தட்டுபற்றி குறிப்பிடும் போதே “சமூக ஏகாதிபத்தியம்” என்ற சொல்லை லெனின் பயன்படுத்தினார்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே தூற்றுகின்றது.

 

ஜனநாயகப் புரட்சியின் உள்ளடகத்தையே மறுப்பவர்கள், புதிய ஜனநாயகப் புரட்சியின் நட்பு சக்திகளை எதிர்நிலைக்கு தள்ளுகின்றனர். இது டிராட்ஸ்கியும், மென்ஸ்சுவிக்குகளும் லெனினுக்கு எதிராக நடத்திய பழைய சரக்கே. சோவியத்யூனியனில் ஜனநாயக புரட்சியை நிராகரித்து, நட்பு சக்திகளை எதிர்நிலைக்கு தள்ளிய போது, இதற்கு எதிராக லெனின 1905 இல், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள்” நூலையே எழுத வேண்டியிருந்தது. அதில் லெனின் “… சமூக-ஜனநாயகக் கட்சியால் ஒழுங்கமைக்கப் பெற்ற பாட்டாளி வர்க்கத்தை மட்டுமின்றி எங்களுடன் அக்கம் பக்கமாக வழிநடையிட திறமைபடைத்த இந்தச் சிறுமுதலாளி வர்க்கத்தினரையும் வழிகாட்டி நடத்திச் செல்ல…, பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ளவும் தலைமை தாங்கவும் மறுத்தால், புரட்சி பற்றிய சொற்தொடர்கள் வெற்றுரையாகவே எஞ்சும்”. இதைத் தான் டிராட்ஸ்கியம் செய்கின்றது.  விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட மாவோ” என்று கூறி ஜனநாயக புரட்சியின் உள்ளடகத்தையே சிறுமைப்படுத்த முனைகின்றனர். ஆனால் மாவோ ஒரு மார்க்சிய லெனினியவாதியாக எதார்த்த்ததில் அவர் லெனினிய வர்க்க உள்ளகத்தில் உயர்ந்த கட்டத்தை பரிசோதித்து வெற்றியும் பெற்றார். டிராட்ஸ்கியம் இந்த லெனினிய சிந்தனைக்கு முரணாக இருந்ததுடன், லெனின் பெயரை முறைகேடாக பயன்படுத்தியது. 

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி -  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி - 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்

 

தமிழ் திரைப்படங்கள் நடப்பு யதார்த்தங்களை களமாக கொண்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், இயக்குனர்களும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே. அதனால், சில படங்களில் அவர்கள் அறியாமல் கதைப்போக்கில் அது ஊடுருவி விடுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த மங்காத்தாவில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகளே திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கதை வெளிவந்து பரவலாக வரவேற்பை பெற்றது, இப்போது மௌனகுரு.

 

மங்காத்தாவுக்கும் மௌனகுருவுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசம் உண்டு. மங்காத்தாவில் அந்த யதார்த்தம் தான் கதைநாயகன், மௌனகுருவில் அது வில்லன். மங்காத்தாவில் கதையின் நகர்வே எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பது தான், மௌனகுருவில் அது கதைநாயகனின் துன்பத்திற்கான காரணம். ஆனாலும் கொள்ளையடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஆயத்தமாக இருக்கும் அவர்களின் கொடூரம், என்கவுண்டர்கள் நடத்தப்படும் விதம், நியாய உணர்ச்சி குறித்து எந்தக் கவலையும் இன்றி நிரபராதிகளை சிக்கவைப்பது, சித்திரவதை செய்வது, தப்பித்துக் கொள்வதற்காக மற்ற துறைகளோடு சேர்ந்து கூட்டுச் சதி செய்வது, மொத்த காவல்துறையும் அப்படித்தான் என்று குறிப்பால் உணர்த்துவது என்று காவல்துறை செய்துவரும் அயோக்கியத்தனங்களை விரிவாக எடுத்துரைப்பதால் மௌனகுரு கவனம் பெறுகிறது.

 

சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும், ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த காவல்துறையையும் பழிக்கக் கூடாது என்று. ஆனால் ஒட்டுமொத்த காவல்துறையும் அப்படித்தான் இருக்கிறது என்பதற்கு மெய்யில் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, திண்டி ரீட்டாமேரி, திருக்கோவிலூர் என்று எத்தனை பாலியல் வன்புணர்ச்சிகள். பரமக்குடி துப்பாக்கிச் சூடு, குஜராத் இனப்படுகொலைகள், காஷ்மீரில் அப்பாவி கிராமத்தவர்களை கொன்றுவிட்டு அவர்களை தீவிரவாதிகளாக காட்டி பதக்கங்கள் வாங்கி குத்திக் கொண்டது என எத்தனை கொடூரங்கள். தோழர் கிஷன் ஜி தொடங்கி சோராபுதீன் இர்ஷத் ஜஹான் ஈறாக எத்தனை எத்தனை என்கவுண்டர்கள். வீரப்பனை தேடுகிறோம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட வெறியாட்டம், சந்தனமரம் கடத்துகிறார்கள் என்று வாச்சாத்தியில் நடத்தப்பட்ட வெறியாட்டம் என்று இன்னும் எத்தனை வேண்டும். இத்தனைக்குப் பிறகும் யாரோ ஒருசிலர் என்று நினைப்பவர்களுக்கு, இருபது ஆண்டுகளுக்கு முன்பே ’காவல்துறை ஒரு சட்டபூர்வ கிரிமினல் கும்பல்’ என்றும் ’ஒருகூடை அழுகிய மீனில் ஒரு நல்ல மீனைத் தேடும் முட்டாள்தனம்’ என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய பதிலே போதுமானது. மேற்கூறப்பட்டவைகள் எல்லாம் வழக்கு பதியப்பட்டதனால் வெளிவந்தவைகள். வெளிவராமல் வழக்கு பதியப்பட்டாமல் ஏனையவை மூடி மறைக்கப்படுகின்றன. பதியப்பட்ட வழக்குகள் கூட குற்றம் நடந்துவிட்டது எனும் அடிப்படையில் பதியப்பட்டவைகள் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களும், மனித உரிமை அமைப்புகளும் போராடிய பிறகே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகும் கூட மக்கள் போராட்டங்களினாலேயே ஒவ்வொரு நகர்வும் நகர்த்தப்படுகின்றன.

 

இதற்கு முன்னரும் கூட பல படங்களில் காவல்துறையினரின் கிரிமினல்தனங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன என்றாலும், அவை அனுதாப உணர்ச்சியை கதையின் மீது ஏற்படுத்துவதற்காக மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. இந்தப் படத்திலும் அவ்வாறு தான் தொழிற்பட்டிருக்கிறது. இருப்பினும், கதையின் களமே காவல்துறையின் அந்த கிரிமினல்தனம் தான் என்பதும், அந்த கிரிமினல்கள் கடைசில் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று காட்டாமல் சட்டரீதியாக அவர்களை எதுவும் செய்யமுடியாது என்று காட்டியிருப்பதுமே ஏனைய படங்களிலிருந்து சற்று வித்தியாசப்படுத்துகிறது.

 

ஒரு வழக்கில் துப்பறிதல் என்பது உலகத்தில் இல்லாத சாகசம் போல துப்பாக்கிக் குழலின் ஆவியை ஊதிக் கொண்டு ’பூச்சி’ காட்டும் சூரத்தனத்தை எள்ளி நகையாடுயாடுவது போல் நடக்கவே சிரமப்படும் ஒரு நிறைமாத பெண்ணை துப்பறிய வைத்திருக்கும் இயக்குனருக்கு முதலில் பாராட்டுகளை கூறிவிடலாம். உச்சக்காட்சியில் அந்தப் பெண்ணின் மீது எதையாவது தூக்கிவீசி அல்லது கீழே விழவைத்து செண்டிமெண்ட் காட்சியில் நனைய வைத்துவிடுவாரோ என்று கடைசி வரையில் ஒரு பயம் இருந்தது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

 

படத்தில் கதை என்று சிறப்பாக ஒன்றுமில்லை, அண்ணன் தயவில் வாழும் ஒரு கல்லூரி மாணவன் எதிர்பாராமல் காவல்துறையினர் கொள்ளையடிக்கும் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டுவிட அதில் அவன் அடையும் சிரமங்களும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதும் தான் கதை. இதில் சில கிளைக் கதைகளை உருத்தாமல் சொல்லிச் சென்றிருப்பது ஈர்ப்புக் கவர்சியாகவே இருக்கிறது.

 

வெளிநாட்டு அழகு(!) கடற்கரைகளில் பாட்டு பாடாத ஒரு காதல். பணம் கிடைக்கிறது என்பதற்காக எந்த வேலையையும் செய்யாமல் மனம் அமைதியடையும் வேலையையே செய்ய வேண்டும் என்றும் யாரும் செல்லாத கிராமங்களுக்கு சென்று மருத்துவம் செய் என்று காதலியை வேண்டும் காதல்.

 

எதையும் பாராட்டி ஊக்கப்படுத்தாமல் சின்னச் சின்ன விசயங்களைக் கூட குறைகூறி குற்றப்படுத்தியதால் தான் உங்கள் முன் இன்று குற்றவாளியாய் நிற்கிறேன் என்று வாக்குமூலம் அளிக்கும் கல்லூரி முதல்வரின் மகன்.

 

ஒரு ரெய்டில் போலீஸ் அதிகாரியிடம் சிக்கிக் கொண்டு, அவனிடம் காசு வாங்க முடியாமல் வைப்பாட்டியாய் இருக்க நேரும் அவலத்திற்கு பழிவாங்க எண்ணி பரிதாபமாய் செத்துப்போகும் விபச்சாரி.

 

மனைவியின் தங்கையை வீட்டில் தங்க வைத்துவிட்டு சொந்த தம்பியை வீட்டில் இடமில்லை என்று ஹாஸ்டலில் தங்கவைத்தாலும், தன்னைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன் என்றாலும், சம்பாதிக்கும் மகன் என்பதால் மூத்த மகனை விட்டுவிட்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இரண்டாம் மகனை கண்டிக்கும் தாய்.

 

மனநல விடுதியில் மட்டிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் நண்பனுக்காக உதவி செய்து குண்டடிபட்டு செத்துப்போகும் பைத்தியக்கார நண்பன்.

 

மாணவர்களிடம் நண்பர்களைப் போல் பழகும், போலிஸ் மிரட்டினாலும் உணவை வீணாக்காதே என்று அறிவுரை கூறும், ”கருப்பா கைலி கட்டியிருந்தா விசாரிக்காம அடிப்பீங்களோ” என்று காவல்துறையிடம் சமூக கோபத்துடன் பொங்கும் பேராசிரியர். என்று சமூகத்தில் காணும் யதார்த்தங்களையும், விருப்பங்களையும் கிளைக்கதைகளாய் முன்வைத்திருப்பது நல்ல உத்தி.

 

இவையனைத்தும் இருந்தும் படம் வீரியமில்லாமல் இருப்பது தான் இந்தப் படந்தின் பெருங்குறை. காரணம், சமூகங்களில் நிலவும் யதார்த்தங்களை கதைக்கு இசைவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிற்தே தவிர அவை சமூகத்தின் மீதான விமர்சனமாக முன்வைக்கப் படவில்லை. கூர்மையான காட்சியமைப்புகள் மூலம் சமூகத்தின் மீதான விமர்சனமாக வைத்து, கதைநாயகனின் பாதிப்புகளையும் போராட்டங்களையும் அதனை கோர்க்கும் சரடாக நெய்திருந்தால் நிச்சயம் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

மங்காத்தா: அன்னா ஹஸாரேவை என்கவுண்டர் செய்த தல

பொன்னர் சங்கர் யாருக்காக

மாயன் நாட்காட்டி+நோவாவின் கப்பல்=2012

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

ஆட்டிய புயல், ஆடாத அரசு

 

கடந்த டிசம்பர் 30 ம் தேதி காலை புதுச்சேரி கடலூரைத் தாக்கிய தானே புயல் ஏறத்தாழ நாற்பது உயிர்களையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதங்களையும் ஏற்படுத்திவிட்டு வலுவிழந்திருக்கிறது. 90 முதல் 135 கிமி வேகத்தில் புயல் வீசியதாக அறிவித்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் அழிந்தன? யாயெல்லாம் எப்படியெல்லாம் பதிக்கப்பட்டார்கள்? என்னென சேதங்கள் எங்கெங்கு நிகழ்ந்திருக்கின்றன? யார் யாரெல்லாம் பதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்கள்? என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன? போன்ற இன்னபிற விபரங்களை கடந்த ஒரு வாரமாக அனைத்து ஊடகங்களும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. கடுமையான பாதிப்புகள் தானே புயலால் ஏற்பட்டிருப்பதை அறியமுடிகிறது.

 

தமிழக அரசு உடனடியாக 150 கோடியை புயல் நிவாரணங்களுக்காக விடுவிக்க உத்தரவிட்டது, பின்னர் மேலும் 700 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருவதாக ஆங்காங்கே அமைச்சர்கள் பேட்டியளிக்கிறார்கள். ஆனாலும் அரசு அலட்சியத்துடனே மிட்புப்பணிகளை அணுகுகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு மின்சாரம். புயல் ஓய்ந்து பத்து நாட்கள் கடந்திருந்தாலும் இன்னும் மின்சாரம் முழுமையாக எல்லா இடங்களுக்கும் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் விழுந்துவிட்டன என்று இதற்கு காரணம் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளுக்கு மின்சார வாரியமும், அரசும் ஆயத்த நிலையில் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே புயல் உருவாகியிருப்பது தெரியும். அது எந்த நேரத்தில், எவ்வளவு வேகத்தில், எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்பதும் தெரியும். புயல் கரையைக் கடக்கும் போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த டிசம்பர் 30 க்குப் பிறகு போதுமான எண்ணிக்கையில் மின்சார ஊழியர்கள் இல்லை, அவர்களுக்கும் சீரமைப்பு பணிகளுக்கு போதுமான கருவிகள் இல்லை, மாற்றுவதற்கு மின் ஒயர்கள் இல்லை. பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தாலும் சில இடங்களில் நிறுத்தப்படவில்லை. மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.

 

மீட்புப்பணிகளை கண்காணிக்கவும் துரிதப்படுத்தவும் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறதாம். திருச்சி இடைத்தேர்தலில் வார்டுக்கு ஒரு அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டு வேட்டையாடினார்கள். கடலூர் மாவட்டம் முழுமையாவும் மேலும் இரு மாவட்டங்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சி இடைத்தேர்தலை விட மூன்று மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது அரசுக்கு முக்கியமானதாக இல்லையா? அல்லது, முறிந்து கிடக்கும் மரங்களை சாலைகளிலிருந்து வெட்டி அப்புறப்படுத்திவிட்டால் அது புயல் நிவாரணத்திற்கு போதுமானதாகி விடுமா?

 

கருணாநிதி காரில் சென்று பார்த்தார், ஜெயலலிதா வானில் சென்று பார்த்தார், மத்திய அரசு வந்து பார்க்கவில்லை என்பதும், நிலஅளவை வைத்து சில ஆயிரங்களை கொடுப்பதும் ஓட்டுக் கட்சிகளின் பின்னே எத்தித்திரிபவர்களுக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் விவசாயிகளின் பாதிப்புகளுக்கு விவசாயம் என்பதன் பொருள் அறியாத ஐஏஎஸ் அதிகாரிகள் செய்யும் மதிப்பீடுகள் எப்படி பொருந்தும்? பலா, மா, முந்திரி போன்றவை பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கொடுப்பவைகள். ஆயிரக்கணக்கான மரங்களை ஒரு காலையில் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு, விவசாயிகளைக் கொண்டே மதிப்பீடு செய்து இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். விவசாயம் போலவே சிறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகள் விவசாயத்திற்கு எதிராகவும், குறுந்தொழில்களுக்கு எதிராகவும் இருப்பதால் ஏற்கனவே அவைகள் நிலைத்து நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இயற்கைச் சீற்றங்களும் அந்த மக்களின் தலையில் இடியாய் இறங்கியிருக்கின்றன.

 

 

பொதுவாக இயற்கைச் சீற்றங்கள் என வகைப்படுத்தினாலும் நுணுகிப் பார்த்தால் இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பலன்கள் முதலாளிகளுக்கும், இழப்புகள் மக்களுக்குமாக இருப்பதை உணரலாம். பெருவெள்ளம் வந்தால் பயிர்கள், குடியிருப்புகள் மூழ்கிப் போய் கடும் இன்னல்களை சந்திப்பது மக்கள், ஆனால் வெள்ளத்தினால் உயரும் நிலத்தடி நீரால் தண்ணீர் விற்கும் தனியார் நிறுவனங்கள் பலனடைகின்றன. வரட்சியிலும் இதுவே, குடிநீருக்காக மக்கள் அலைய, பாட்டிலில் அடைத்து விற்பவர்கள் கல்லா கட்டுகிறார்கள். சுனாமி வந்தது உறவினர்களையும், உறைவிடங்களையும் இழந்து தவித்தது மக்கள், மீள்கட்டுமானப் பணிகளால் பல்லாயிரம் கோடிகளில் பலனடைந்தது கட்டுமான நிறுவனங்கள். இந்த தானே யின் தாண்டவங்களிலும் பாதிக்கப்பட்டிருப்பது உழைக்கும் மக்கள், பதுக்கலின் மூலமும் மீள் கட்டுமானத்தின் மூலமும் கொள்ளையடிக்கப் போவது முதலாளிகள்.

 

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1500 கோடி அளவுக்கு சேதமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். ஏனைய மாவட்டங்களையும் புதுவையையும் உள்ளடக்கினால் அது இன்னும் பல மடங்காக எகிரக் கூடும். ஆனால் இந்த மதிப்பீடுகளால் திட்டமிடப்படும் நிவாரணங்களும் திட்டங்களும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையுமா? சுனாமி வந்து ஆண்டுகள் ஏழு கடந்துவிட்டது, கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை விட கட்டியதாக காட்டி ஸ்வாஹா செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகம். அனைத்தையும் பணத்தால் அளக்கும் முதலாளித்துவ உறவுகள் லட்சம் பேர் இறந்த சுனாமியையே விட்டுவைக்காத போது தானேவை தள்ளி வைத்துவிடுமா என்ன? ஆக, இயற்கைச் சீற்றம் என்பது உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான். ஆளும் கும்பல்களுக்கோ கொள்ளையடிப்பதற்கு இயற்கை ஏற்படுத்தித் தந்திருக்கும் வாய்ப்பு.

 

புயல், பாதிப்பு என்று பொதுத்தன்மையில் நின்று பேசினாலும் புயலின் தாக்கம் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை. முட்கூடாக கிடக்கும் தன் முந்திரிக் காட்டை பார்த்து கண்களிலேயே உறைந்து போன கண்ணீரோடு ஒரு விவசாயி கூறுகிறார், “புள்ள மாதிரி பார்த்து பார்த்து வளர்ததுங்க” என்று. சோபாவில் உடம்பை மடித்து வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி கூறுகிறார், ”இன்னும் கரண்டு வரல, டிவி பார்க்க முடியல, போரடிக்குது” என்று. மூலையில் கிடந்த முனை மழுங்கிய அரிவாளுடன் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு வீரத்தோடும் ஈரத்தோடும் விழுந்து கிடக்கும் மரக்கிளைகளை வெட்டி நீக்குகிறார்கள் சில இளைஞர்கள். ஜெனரேட்டரை வைத்துக் கொண்டு ஒரு செல்லிடப் பேசிக்கு சார்ச் ஏற்ற ஐம்பது ரூபாய் வசூலிக்கிறார்கள் சில இளைஞர்கள். இயற்கையோடு இழைந்து வாழ்பவர்கள் வெகு விரைவாகவே தங்களை தாங்களே மீட்டமைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் இயற்கை தாக்குமேயன்றி தகர்க்காது என்று. இயற்கையையும் வியாபார பண்டமாக பார்ப்பவர்களிடமிருந்து தங்களை எப்படி மீட்டெடுத்துக் கொள்வது என்பதை மட்டுமே அவர்கள் கற்க வேண்டியுள்ளது. இயற்கை யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை என்பதெல்லாம் பழைய தத்துவம். இயற்கை தான் பிரித்துக் காட்டுகிறது, யார் மனிதர்கள், யார் அந்த போர்வையில் இருப்பவர்கள் என்று.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

 

தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள்.

 

மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வழங்கும் தொகை. இத்தொகையை மணமகள் தான் விரும்பும் அளவுக்கு கேட்டு வசூலித்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே இதை வசூலித்து பெண் தன்னுடைய பொறுப்பில் வைத்துக் கொள்வதால் இது பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். இதற்கு இந்தியாவில் நடக்கும் வரதட்சனை கொடுமைகளை துணையாக அழைத்துக் கொள்கிறார்கள்.

 

வரதட்சனையோ, தனதட்சனையோ இரண்டுமே தனியுடமையின் இருவேறு வெளிப்பாடுகள் தாம். பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. வரதட்சனை என்றாலும், தனதட்சனை என்றாலும் சமூகவியலாளர்கள் அதற்கு கொடுக்கும் விளக்கம், ஆணுக்கு சாதகமான பெண்ணின் இடப்பெயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது என்பதும், பெண்ணை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஆண் ஏற்றுக் கொள்வதால் அதற்கான ஈட்டு என்பதும் தான். ஆக திருமணத்தின் போது ஆண் கொடுத்தலும் பெற்றாலும் அதன் பொருள் பெண் ஆணின் சொத்தாக இருக்கிறாள் என்பது தான். இதில் வரதட்சனை சமூகச் சீர்கேடு, தனதட்சனை பெண்ணுக்கான உரிமை என்று பிரித்துக் காட்டுவது உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.

 

இந்தியாவில் வரதட்சனைக் கொடுமைகள் பரவலானவை. திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்பும் பணமோ, பொருளோ வாங்கி வருமாறு துன்புறுத்துவதில் தொடங்கி கொலை செய்வதுவரை நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம், முப்பதைக் கடந்த பின்பும் திருமணமாக வழியின்றி முதிர்கண்ணிகளாக நிற்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு மாற்று தனதட்சனையாக இருக்க முடியுமா? எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் திருமணத்திற்கு பொருள் சேர்ப்பதற்காகவே இளமையைச் செலவழிக்கும் முதிர்கண்ணன்கள் நாற்பதைக் கடந்தும் இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவில் நிகழும் கொடுமைப்படுத்தலும், கொலை புரிவதும் அந்த நாடுகளில் இல்லை. இது வரதட்சனை, தனதட்சனை வித்தியாசத்தால் நேர்ந்ததல்ல, ஆணாதிக்க சிந்தனையும், ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் விளைவு.

 

இந்த அடிப்படைகளை அறியாமல், சமூக, கலாச்சார ஆழங்களுக்குள் இதன் அடிவேர் புதைந்திருப்பதை புரிந்து கொள்ளாமல்; வரதட்சனை கொடூரங்களையும், ஸ்டவ் வெடிப்புகளையும் சுட்டிக் காட்டி, மரபு ரீதியான அரபு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இஸ்லாமிய மஹ்ர் தான் இதன் ஒரே தீர்வு என்றும், இதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறிவிட்டது என்றும் நீட்டி முழக்குவது மதவாதிகளின் மூன்றம் தர பரப்புரை உத்தியேயன்றி வேறொன்றுமில்லை.

 

பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை முன்னிட்டே மஹ்ர் தொகையை மணப்பெண்ணே தீர்மானித்து, வாங்கி, தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கான உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இவ்வுரிமையை இஸ்லாம் வழங்கியிருப்பது சமூகப் புரட்சியில்லையா? என்பது மதவாதிகள் முன்வைக்கும் கேள்விகளில் முதன்மையானது. இதை இரண்டு விதங்களில் அணுகலாம், 1. இஸ்லாம் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா? 2. உரிமையை முன்னிட்டுத் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா?

 

செமித்திய பிரிவின் அனைத்து இனங்களிலும் மணமகன் மணமகளுக்கு மணக்கொடை வழங்குவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வழக்கமாக இருக்கிறது. ஆப்ரஹாமின் ஊழியன் ரெபேக்காளுக்கு கொடுத்த மணக்கொடை குறித்து ஆதியாகமம் 24:53 கூறுகிறது. ஹம்முராபியின் சட்டங்களில் மணக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹீப்ரு மொழியில் மொஹர் என்றும், சிரிய மொழியில் மஹ்ரா என்றும் குறிப்பிடப்படும் மஹ்ர், அரபுக்கு மட்டுமல்லாது அந்தப் பகுதியின் அனைத்து மொழியிலும் குறிப்பிடப்படும் சொல்லாக இருப்பதே அனைத்து இனங்களிலும் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.

 

முகம்மதுவுக்கு முந்திய அரேபியாவில் சதாக் என்றும் மஹ்ர் என்றும் இரட்டை வழக்கங்கள் இருந்திருக்கின்றன. மஹ்ர் மணப்பெண்ணின் தந்தைக்கும், சதாக் மணப்பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. குரானின் 4:4 வசனம் மணக்கொடையை குறிப்பதற்கு ’சதக்கா’ எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. ‘ஷிகார்’ எனும் திருமண முறையை தடை செய்வதாக குரான் பேசுகிறது. கொண்டு கொடுக்கும் திருமண முறைக்குத் தான் ஷிகார் என்று பெயர். ஏன் இதை தடை செய்கிறது என்றால் இரண்டு பக்கமும் மஹ்ர் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக மஹ்ரை நீக்கிக் கொள்கிறார்கள் என்பதால், மஹ்ர் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டும் எனும் அடிப்படையில் ஷிகார் திருமணத்தை தடை செய்கிறது. இவைகளெல்லாம் முகம்மதின் காலத்திற்கு முன்பே திருமணத்தில் பெண்ணுக்கு மஹ்ர் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள். முகம்மது இதில் செய்ததெல்லாம் சதாக் என்றும் மஹ்ர் என்றும் தனித்தனியாக கொடுக்கப்பட்டு வந்ததை ஒன்றாக்கி மஹ்ர் மட்டும் என்று ஆக்கியது தான். முகம்மதின் காலத்தில் மஹ்ர் பெண்ணின் தந்தைக்கு உரியது என்பதால், இனி மஹ்ர் பெண்ணுக்கு உரியது என்பதை தனது குரானில் சற்றே அழுத்தத்துடன் குறிப்பிடுகிறார் முகம்மது. அந்த அழுத்தம் தான் பெண்ணுரிமையாக ஜோடனை செய்யப்படுகிறது.

 

மஹ்ர் என்பது எந்த அடிப்படையில் பெண்ணின் உரிமையாக பாதுகாப்பாக கருதப்படுகிறது? மணக்கொடையாக கொடுக்கப்படும் பணம் பெண்ணிடம் இருப்பதால் எதிர்காலத்தில் மணமுறிவு ஏற்பட்டாலோ, வேறு வகைகளில் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அந்த பணத்தைக் கொண்டு தன் எதிர்காலத்தை பெண் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனும் அடிப்படையிலேயே இதை பெண்ணுக்கான உரிமை, பெண்ணுக்கான பாதுகாப்பு என்பனபோல் விதந்து கொள்ளப்படுகிறது. ஆனால் மரபு வழி வழக்கம் என்பதைத் தவிர வேறொரு காரணம் இல்லை என்பதை குரானும், ஹதீஸ்களும் தெளிவாகவே நிருவுகின்றன.

 

….. அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். குரான் 4:4

…… மஹ்ரை பேசி முடித்தபின் அதை கூட்டவோ அல்லது குறைக்கவோ இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மீது குற்றமாகாது ….. குரான் 4:24

 

இந்த வசனங்களில் முதல் வசனம் மஹ்ர் கொடுத்து திருமணம் முடிந்தபின் அதை செலவு செய்வதற்கு அனுமதிக்கிறது. இரண்டாம் வசனமோ திருமணத்திற்கு முன்னரே இருவரும் பேசி தேவைப்பட்டால் கூட்டி குறைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இங்கு மஹ்ரின் நோக்கம் பெண்ணின் எதிர்கால பாதுகாப்பாக இருந்தால் அதை செலவு செய்வதற்கும், கூட்டிக் குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கியது என்ன பொருளில்?

 

“(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். ……. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார் “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள். முஸ்லிம் 2785

 

திருமணம் முடிக்க தன்னிடம் மணக்கொடையாக எதுவுமில்லை என்று கூறும் ஒருவரிடம் முகம்மது ஒரு இரும்பு மோதிரமாவது கொண்டுவாரும் எனக் கேட்க. அதுவும் இல்லை என்று தன்னுடைய ஆடையில் பாதியை கிழித்து தரட்டுமா என்றவர் வினவ, உனக்கு குரான் வசனங்கள் தெரியுமா என்று முகம்மது கேட்க, தெரியும் என்றதும் அந்த வசனங்களை இவளுக்கு கற்றுக் கொடுப்பது தான் நீ கொடுக்கும் மணக்கொடை என்று கூறி திருமணம் செய்து வைக்கிறார். இதுதான் நீண்ட அந்த ஹதீஸின் சுருக்கம். இந்த மணக்கொடையில் என்ன பாதுகாப்பு இருக்கிறது பெண்ணுக்கு? இது மட்டுமா? பேரீத்தம்பழம், காலணியைக் கூட மஹ்ராக கொடுப்பது அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவைகள் பெண்ணுக்கு என்னவிதமான எதிர்கால பாதுகாப்பை வழங்கும்?

 

ஆக, மஹ்ர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்பது அந்தக் காலத்தில் இருந்து முகம்மதால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடைமுறை வழக்கம். இதைத்தாண்டி அதில் பெண்ணின் உரிமையோ, சமூகப் புரட்சியோ இருப்பதாக யாரும் கூறக் கேட்டால் ஒருமுறை சப்தமாக சிரித்துக் கொள்ளலாம். அதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?

வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில், குஜராத்தில் என்று தனித்து குறிப்பிடும்படி இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் நிறைந்திருக்கிற அரச பயங்கரவாதத்தின் கோர முகம் கடந்த நவம்பர் 27ம் தேதி மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. அன்றுதான் தோழர் கிஷன் ஜி கொல்லப்பட்டார். வழக்கம் போல போலீஸை சுட்டார், அதனால் நாங்கள் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கட்டுக் கதைகள் பரப்பிவிடப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து போலீஸ் வெறிநாய்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் யாரானாலும் அவர்களை கடித்துக் குதறி கிழித்துப் போடுவது தான் அரசின் இலக்காகி இருக்கிறது. மக்களுக்காக போராடுபவர்கள் இது போன்ற கொடூரங்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். தொடர்ந்து அவர்கள் மக்களைத் திரட்டி முன்னேறுவார்கள். அதிகாரங்கள் மக்களின் கைகளில் மலரும் அந்த நாளில் இது போன்ற கொடூரங்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக ஈவிரக்கமின்றி பழிவாங்கப்படுவார்கள்.

வீர வணக்கம் தோழர் கிஷன் ஜி

 ****************************************************************

33 ஆண்டுகளாக பெற்ற தாயைக் கூட பார்க்க நேரமின்றி, ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்கும் உரிமை என சகல உரிமைக்காகவும் போராடிக் கொண்டே இருந்தார் கிஷன் ஜி.

 

ஒரு மூதாட்டி கிஷன் ஜியிடம் கேட்டள்”இப்படி ஊர் ஊராக போய் போராடிக் கொண்டிருக்கிறாயே, உன் வயதான அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டமா?” என்று. அதற்கு கிஷன் ஜி சொன்னார் “என் தாய்க்கு மூன்று பிள்ளைகள் …… ஒருவர் வீட்டுக்கு இருவர் நாட்டுக்கு” என்று. கிஷன் ஜியின் தம்பியும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தில் தான் இருக்கிறார்.

 

சுதந்திரப் போராட்ட தியாகியும், சுத்ந்திரத்திற்குப் பின் ஆந்திர மாநில துணை காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தவருமான வெங்கையா மதுரம்மா தம்பதிகளுக்கு மகனாக 26-11-1956ல் ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம், பெடப்பள்ளி என்ற சிற்றூரில் பிறந்தார் கிஷன் ஜி. இவரது இயற்பெயர் மல்லோஜுல கோடீஸ்வர ராவ். பள்ளிப் பருவத்திலிருந்தே குற்றங்களைக் கண்டால் சிங்கமெனச் சீறுவது அவரது பிறவிக் குணமாக இருந்திருக்கிறது.

1970 களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “மக்கள் போர்க்குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். கரீம் நகர் மாவட்டத்தில் மட்டும் 60000 பேர் மபோகுழுவில் உற்ப்பினர்களாக இணைந்தனர். இக்குழு தெலுங்கானா ஆதரவுப் போராட்டங்களில் தீவிரப் பங்காற்றியது. இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்ஸியின் போது சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கிஷன் ஜி.

 

1974ல் தனது மபோகுழுவை புரட்சிகர மார்க்ஸிய லெனினிய இயக்கத்தில் இணைத்து 1986 வரை ஆந்திர மக்களுக்காக போராடினார். அவரது வீரம் கண்டு மேற்கு வங்க புரட்சிகர இயக்கங்கள் தங்களுக்கு தலைமை தாங்க அழைத்தன. வங்காளம் பீஹாரில் சிதறுண்டு கிடந்த பல புரட்சிகர இயக்கங்களை ஒன்றாக்கி, ‘மாவோயிஸ்ட்’ என்ற வலிமையான அணியை உருவாக்கியதில் கிஷன் ஜியின் பங்கு முக்கியமானது.

 

மேற்கு வங்கத்தில் சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியின விவசாயிகளின் நிலங்களை இரும்பு கம்பனிகள் பங்குபோட முயன்றபோது வெகுண்டெழுந்த கிஷன் ஜியின் படையில் பழங்கிடியின பெண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். நந்திகிராம், லால்கர், சிங்கூர் நிலமீட்பு போராட்டங்களை திறம்பட நடத்தி வெற்றிபெற்று, மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் என்று சொல்கின்ற பொய்ப் பிரச்சாரத்தை தகர்த்து தவிடு பொடி ஆக்கினார் கிஷன் ஜி. அவரது கால்கள் படாத கிராமமே வங்கத்தில் இல்லை.

 

“ஆயுதங்களை கைவிட்டு வந்தால் மாவோயிஸ்டுகளுடன் சமாதான பேச்சு வார்த்தை” என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற கிஷன் ஜி ”பேச்சுவார்த்தை நடைபெறும் 72 நாட்களுக்கும் துப்பாக்கிப் போராட்டம் நிறுத்திவைப்பு” என்று அறிவித்தார். சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தவந்த இடத்தில் கிஷன் ஜி போலீஸ் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், அதனால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் சி.ஆர்.பி,எஃப் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார் கூற, சீறி எழுந்த ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கம், ஆந்திர மாநில குடியுரிமைச் சங்கம், பந்தி முத்தி கமிட்டி, டெல்லி ச்.உ.மக்கள் இயக்கம், ஆர்.எஸ்.வி.பி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 22 பிரதிநிதிகள் ஒன்றாகச் சேர்ந்து என்கவுண்டர் நடந்த இடத்தை டிசம்பர் 1 அன்று ஆய்வு செய்தனர்.

 

ஆய்வுக்குப் பின் நம்மிடம் பேசிய ஆந்திர மாநில குடியிரிமை சங்கத்தைச் சேர்ந்த சி.ஹெச். சந்திர சேகர் “30 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது அப்படி என்றால் எந்தப் போலீஸாரும் உயிரிழக்காதது ஏன்? கிஷன் ஜி மீது துப்பாக்கிச் சூடு நடந்திருந்தால் அவரது உடல் கிடந்த இடத்தில் இருந்த உயரமான கரையான் புற்றின் மேல் ஒரு குண்டு கூட பட்டிருக்காதா? அந்த புற்று சிதையாமல் அப்படியே இருப்பது எப்படி? மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குண்டு பட்ட காயங்களை மட்டுமே குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்தப் படங்களைப் பாருங்கள், இது என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற உடலா? அவரை தனியாக அழைத்துக் கொண்டு போய் சித்திரவதை செய்து கை கால்களை முறித்து காலில் தீவைத்து எரித்து, தாடையை உடைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கிறார்கள். எனவே இது என்கவுண்டர் இல்லை…. திட்டமிட்ட படுகொலை தான்” என்று ஆவேசத்துடன் கூறினார்.

 

அடித்து நொறுக்கப்பட்ட தாடை

தீவைத்து எரிக்கப்பட்ட பாதம்

உடைக்கப்பட்ட கால்

 

33 வருடங்களாக மகனைப் பார்க்காமல் இருந்த கிஷன் ஜியின் தாயார் இந்தக் கோலத்தில் தான் வெட்டி இணைத்தது போல் இருந்த கிஷன் ஜியின் சிதைந்த கருகிய உடலின் மேல் “என் மகனே கிஷன் ஜி” என்று கதறினார் தாய் மதுரம்மா. ஆறு மொழிகள் தெரிந்த, ஆறு புனைப் பெயர்கள் கொண்ட கிஷன் ஜியை பன்னிரு முறை கொன்றிருக்கிறது கொடூர போலீஸ்.

-    28/12/2011 நக்கீரன் இதழிலிருந்து.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

 

“சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து வந்ததால், உள்ளங்காலின் தோல் இளகி விட்டிருந்தது. செருப்பிலிருந்து எப்போதும் நழுவிக் கொண்டேயிருந்தது. நனைந்து விட்ட ஜட்டியின் பக்கவாட்டு எலாஸ்டிக் வார் ஒரு கூரான கத்தியைப் போல் உள் தொடையின் இடுக்கில் உராய்ந்து உராந்து புண்ணாக்கி விட்டிருந்தது; அவன் கால்களை அகட்டி வைத்து நடந்து கொண்டே பைக்கைத் தள்ள மிக சிரமப்பட்டான்.

 

நுரையீரல் காரமான சிகரெட்டுப் புகைக்கு மிகவும் ஏங்கியது. மழை நாளின் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஊரே கம்பளியினுள் முடங்கி விட்டிருந்ததால். கடைகளும் கூட கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களோடு ஒரு கடும் சண்டையைத் துவங்கியிருந்தது. சட்டு சட்டென்று கீழ் வரிசைப் பற்கள் தொடர்ந்து அடித்ததாலோ, இல்லை உச்சந்தலையில் தொடர்ந்து மழைத் துளிகள் இடித்ததாலோ மண்டையின் இரு பக்கமிருந்தும் ஒரு வலி புறப்பட்டு புருவ மத்தியில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டது. ஒரு மாதிரி பச்சை நிறத் திரையொன்று கண்களைச் சூழ்வதை உணர்ந்தான். குளிருக்கு இறுகிப் போயிருந்த அடிவயிற்றின் தசைகள் இடது பக்கமாக இழுத்துக் கொண்டது. இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம்; வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓரமாகப் படுத்து விடலாமா என்று யோசித்தான்… பச்சை நிறம் அடர் பச்சையானது. அதன் அடர்த்தி இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போய் ஆழமான இருளானது.

 

“என்ன சொல்றீங்க முரளி? தெரிஞ்சு தான் பேசறீங்களா? இது காலண்டர் இயர் எண்ட் தெரியுமில்லே? இன்னும் இந்த க்வாட்டருக்கான பில்லிங் முடியலை. அதுக்குள்ளே பொண்டாட்டி கூப்பிட்டா.. புள்ளைக்கு ஒடம்பு செரியில்லைன்னு… கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமெ பேசறீங்க? அதான் இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க” இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து அந்தக் குரல் எழுந்தது.

 

கீழே குனிந்தான். தரை கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புக்குக் கீழ் எல்லாமே இருளாய்க் கிடந்தது. மிக அதிசயமாகச் சற்றுத் தொலைவில் ஒரு மெர்குரி விளக்கு சோகையாய் எரிவது புலப்பட்டது. உடலின் எஞ்சிய சக்தியையெல்லாம் திரட்டி வண்டியைத் தள்ளினான். வண்டியின் முன் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடிக்கவும் இவன் அதைக் கீழே விட்டு சரியவும் சரியாக இருந்தது.

 

“ஹேய்.. தோ பாரேன். யாரோ கீழ விழுந்திடாங்க” எங்கிருந்தோ ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

“அப்பா.. அப்பா எழுந்திருப்பா யாரோ விழுந்திட்டாங்க” இன்னொரு கீச்சுக் குரல் தொடர்ந்து கேட்டது.

 

பச்சை நிறம் இருளின் மையத்திலிருந்து உற்பத்தியாகி முழுவதும் வியாபித்தது. சின்னச் சின்னக் குமிழாய் உற்பத்தியானது பச்சை. ஒவ்வொரு குமிழும் பெரிதாகி வெடித்தது. கண்களுக்குள் அடர் பச்சையும் இருளும் மாறி மாறி முன்னும் பின்னுமாய் வந்து கொண்டேயிருந்தது.ஏதேதோ சப்தங்கள் இன்ன திசையென்றில்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஈட்டியைப் போல் வந்து கொண்டேயிருந்தது. அந்த ஈட்டிகளின் மூலமும் இலக்கும் ஒன்றேதானோவென்று முரளி குழம்பிப் போனான்.

 

“அப்பா…எனக்கு எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் வேணும்ப்பா..” என்று குழைவாய் ஒன்று..

 

“இந்தாங்க… ஒங்களைத்தானே… தீபாவளி பர்ச்சேசுக்கு என்னிக்குங்க போலாம்?” என்று கொஞ்சலாய் ஒன்று..

 

“இதப்பாருங்க.. வீட்டு ஓனரம்மா ரொம்பத்தான் பன்றாங்க; நமக்கே நமக்குன்னு ஒரு புறக்கூண்டாச்சும் பாருங்க” என்று அதட்டலாய் ஒன்று…

 

“முரளி.. இஃப் யு கான்ட்; ப்ளீஸ் க்விட். ப்ளீஸ் புட் இன் யுவர் பேப்பர்ஸ். நத்திங் மோர் டு ஸே..” என்று மிரட்டலாய்…

 

“அண்ணே… அவங்க அண்ணி வீட்லேர்ந்து அவரோட அண்ணனுக்கு கார் வாங்கித் தந்திருக்காங்கலாம்” என்று எதிர்பார்ப்போடு…

 

“யு ஆர் அவுட் டேட்டட் முரளி. ஸாரி டு ஸே திஸ். வீ நீட் சம் யெங் ப்ளட்..”  அதட்டலாய்…

 

“சார் ப்ளீஸ்… ஐ காட் மெனி கமிட்மென்ட்ஸ். ஐ வில் ட்ரை டு கிவ் மை பெஸ்ட்” கெஞ்சலாய்…

 

“ஓக்கே.. ஸ்பென்ட் சம் எக்ஸ்ட்ரா டைம். புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அக்கௌன்டிங் அப்ளிகேஷனை சேப்புக்கு மாத்திருக்கோம். படிங்க. நிறையப் படிங்க. நிறைய தெரிஞ்சுக்கங்க. வீ டோன்ட் சே யூ டோன்ட் வான்ட். பட் வீ நீட் திங்ஸ் டு மூவ்…” கட்டளையாய்…

 

முரளி ஒரு குதிரை. அப்படித்தான் அவன் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் ஓட வேண்டும். தங்கைக்காய், மனைவிக்காய், மகனுக்காய், கம்பெனிக்காய்…. உண்பதும் கழிவதும் உறங்குவதும் புணர்வதும் பினங்குவதும் சிரிப்பதும் அழுவதும் கூட ஓட்டத்தின் ஊடாகத்தான். ஓட்டம் வேறு குதிரை வேறல்ல. ஓடாதவொன்றைக் குதிரையல்ல. அவன் அப்படித்தான் நம்பினான். குதிரையின் கடிவாளம் உலகத்தை அதற்கு மறுத்து விடுகிறது. அம்மா, அப்பா, சகோதரி, மனைவி, பிள்ளை, அதிகாரி என்று கணக்கற்ற கடிவாளங்களைக் கட்டியிருந்தான்; அதையொரு வரமென்று நம்பினான்.

 

குளிர் கொஞ்சம் குறைவது போலிருந்தது. இருளின் நிறம் இப்போது வெளிர் பச்சையானது. மசமசப்பாய் ஏதேதோ உருவங்கள் தோன்றி பக்கவாட்டில் கடிவாளத்தின் மறைப்பில் ஒதுங்குவது தெரிந்தது. ஹோவென்ற கூச்சல் இருபுறமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வேகமான ஓட்டத்திற்கு ஆரவாரித்தது. வேகம் குறைந்த சமயங்களில் எள்ளலாய் ஒலித்தது. முரளி மிக வேகமாய் ஓட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். குடும்பம், சமூகம், கம்பெனி என்று அவன் மேல் மாறி மாறியும் ஒரே நேரத்திலும் சவாரி செய்தார்கள். மறுப்பது பாவம் என்று அவனது சமூகம் அவனுக்கு போதித்தது. காலில் விழுந்தாவது பணி உயர்வு பெற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்.எவன் காலையாவது வாரி விட்டு மேலே செல்வது புத்திசாலித்தனம்.  கடன்பட்டாவது கார் வாங்குவது கெட்டிக்காரத்தனம். அவன் சமூகம் அவனது ஓட்டத்தினூடாய் அவனுக்கு நிறைய போதித்தது.

 

வாழ்க்கைக்காக ஓட்டமில்லை; ஓட்டத்துக்காகவே வாழ்க்கை. வேலை செய்யவே வாழ்கை. தொண்டூழியம் செய்யவே வாழ்க்கை. முதலாளியின் கருணை பாக்கியம். அந்தக் கருணையை சம்பாதிக்க கொல்ல வேண்டுமா கொல்; திருட வேண்டுமா திருடு; பொய் பேச வேண்டுமா பேசு; காலில் விழ வேண்டுமா விழுந்து நக்கு. முரளி ஒரு குதிரை. எதிர்க் கேள்வி கேட்காமல் ஓடுவதற்கென்றே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை. அவன் சமூகம் அதைச் சாமர்த்தியம் என்றது. ‘பெஸ்ட் வொர்க்கர் அவர்டா’ என்று கொண்டாடியது.

 

அதற்கு அவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலை அவன் வாழ்க்கை.

 

பச்சை நிறத்தின் அடர்த்தி இன்னும் லேசானது. முரளிக்குக் கனவொன்று தோன்றியது. அது ஒரு நல்ல காலை. நிறைய கம்பளிப் புழுக்கள் ஓடிக் கொண்டிருக்கிறத.பெரிய கூட்டம். உலகின் கம்பளிப் புழுக்களெல்லாம் ஒன்றாய் திரண்டு விட்டதைப் போன்றதொரு ப்ரும்மாண்டப் பேரணி அது. வேகம் மிக வேகம். கூட்டத்தின் வேகத்திற்கு இணையாய் ஓடாத புழுக்கள் நசுங்கிச் செத்தன. பிணங்களின் மேல் ஏறிச் சென்றன பின் வந்த புழுக்கள். தனது கூட்டிலிருந்து தலை நீட்டிப் பார்க்கும் பச்சை நிறக் கம்பளிப் புழுவொன்று இன்னெதென்று தெரியாமல் அந்தக் கம்பளிக் கூட்டத்தைத் தொடர்கிறது.எங்கே ஓடுகிறோம்; தெரியவில்லை.ஏன் ஓடுகிறோம்; புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தது. அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம். நீண்ட ஓட்டத்தின் இறுதியில் ஒரு மைதானத்தை அந்தப் பேரணி அடைந்தது.

 

மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய கம்பம் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எல்லா புழுக்களும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தன.எதையோ பிடிக்கப் போகும் வேகம். பச்சை நிறப்புழுவும் அதன் மேல் வெறியோடு ஏறியது. முன்னே சென்ற புழுவைக் கீழே இழுத்துப் போட்டு; பின்னே வரும் புழுவின் தலையில் எட்டி நெம்பி.. சாமர்த்தியம் கொண்ட புழுக்களெல்லாம் அப்படித்தான் ஏறிக் கொண்டிருந்தன. மேலே ஏதோவொன்று இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். நிறைய புழுக்கள் அந்தக் கம்பத்தின் பாதிலேயே பிய்த்தெரியப்பட்டு கீழே விழுந்து செத்துப் போனது.எப்படியோ அடித்துப் பிடித்து உச்சியை அடைந்தது பச்சைப் புழு.

 

அங்கே கம்பத்தின் உச்சியில்… ஒன்றுமில்லை. வெறுமை. வானம். வெட்டவெளி. வேறெதுவுமில்லை. துணுக்குற்ற பச்சைப் புழு எதைத் தேடி இத்தனை வேகமாய் ஓடினோம் என்று திகைத்து அசைவற்று நின்றது. கம்பத்தின் உச்சியை தொட பின்னாலேயே வந்த அடுத்த புழு தனக்கான இடத்தைப் பிடிக்க, அசைவற்று நின்ற பச்சைப் புழுவை கம்பத்தினின்று இழுத்துக் கீழே எறிந்து விட்டு மேலே வந்தது. கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தது பச்சைப் புழு. பட்டென்று விழித்தான் முரளி.

 

“அம்மா இங்க பாரேன் இவரு முழிச்சுக் கிட்டாரு” கீச்சுக் குரல். சின்னப் பெண்.எண்ணை காணாத தலை முடி. முரளி மல்லாந்து படுத்திருந்தான். கீழே வழவழப்பான ப்ளாஸ்டிக் கித்தான் விரிக்கப்பட்டிருந்தது. தலைக்கு நேர் மேலே, மூன்றடி உயரத்தில் மரப்பலகையால் அடித்த கூரை தெரிந்தது. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டிரண்டு சைக்கிள் டயர்கள் தெரிந்தது. முரளி குழம்பினான். சுற்றிலும் தெரிந்த காட்சிகளில் லேசக பச்சை நிறம் ஒரு பாசம் போலப் படிந்திருந்தது. எழுந்து கொள்ள முயன்றான். முடியவில்லை

 

அது மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர சைக்கிள் வண்டி என்பது புரிந்தது. அதன் கீழே ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து ஒரு சின்னக் குடும்பம் ஒண்டிக் கொண்டிருந்தது. முன் பின் டயர்களின் இடையே வெள்ளை நிற சிமென்டு சாக்குப் பைகளில் துணிமணிகள் நிறைத்து செருகப்பட்டிருந்தது. கால்மாட்டில் ஒரு மண்ணென்னை ஸ்டவ்வும் மிகச் சில ஈயப்பாத்திரங்களும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இடதில் ஒரு சிருவனும், வலதில் ஒரு சிருமியும் குந்தவைத்திருந்தனர்.  அந்த வண்டியின் பின்பக்கமிருந்து ஹேன்டில் வரை மேல் புறமாக ஒரு ப்ளாஸ்டிக் கித்தான் மறைத்து நின்றது. முன் சக்கரத்தின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி குறுகி அமர்ந்திருந்தார்.  

 

முன் சக்கரத்தின் இடைவெளியில் கித்தான் கொஞ்சமாகப் பிளந்திருந்தது. அது வாயில். அதன் ஊடாகப் பார்த்த போது முரளியின் பைக் தெரிந்தது. முரளிக்கு இப்போது நினைவு தெளிவானது. கடைசியாக விழுந்த இடத்தின் அருகே இருந்த நடைமேடையின் மேலே நிறுத்தப்பட்டிருந்த பார வண்டியின் கீழே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.

 

” என்னா சார் பேசறீங்க. பாரு சார் எத்தினி மழ பேஞ்சிருக்கு. எத்தினி தண்ணி தேங்கிக் கிடக்கு. வண்டி வராது சார்”

 

“முனுசாமி.. இது ரொம்ப அர்ஜென்டு. இப்பயே லோடு போய்ச் சேரலைன்னா எனக்கு பத்தாயிரம் நட்டமாகும். பத்து வருசமா என் கடைக்கு நீ தான் லோடு அடிக்கிறே. இப்ப வர முடியாதுன்னு தகறாரு பண்ணாத. பின்ன நாளைக்கு நான் வேற வண்டி பாக்க வேண்டி இருக்கும். இப்ப நீ கிராக்கி பண்ணிட்டிருந்தா நாளைக்கு சோத்துல மண்ணு விழும். அவ்வளவு தான் சொல்ல முடியும்”

 

“சார்.. பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் வண்டிக்குக் கீழ தான் ஒண்டிக்கிட்டிருக்காங்க இன்னிக்கு. வண்டி இன்னிக்கு ராவுக்கு வராதுன்னா வராது சார். நீ வேற வண்டி பாக்கனும்னா பாத்துக்க. நான் ஒன்னியும் உன்னெ நம்பிப் பொழைக்கல. உன் கட இல்லேன்னா ஊர்ல எனக்கு ஆயிரம் கட இருக்கு. கைல வண்டி இருக்கு. ஒடம்பில தெம்பு இருக்கு.என்னோட சோறு நீ போட்டதில்ல. நான் ஒழைக்கறேன் நான் திங்கறேன். நீ ஒன்னும் எனக்குப் பிச்ச போடலை. மொதல்ல இப்ப எடத்தை காலி பண்ணு.எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”

 

தொடர்ந்து கார் இஞ்சின் ஒன்றின் ஆத்திரமான உருமல் கேட்டது. தார்ச் சாலையை ரப்பர் டயர்கள் கீறிப் புறப்படும் ஓசை கேட்டது.  முரளியின் கண்களைப் பீடித்திருந்த பச்சை நிறம் சட்டென்று மறைந்து ஒரு வெளிச்சம் பரவியது. பார்வையின் இரு பக்கத்தையும் மறைத்து நின்ற ஏதோவொன்று சட்டென்று விலகியது போல் இருந்தது.

 

குறிப்பு : இக்கதையின் நாயகன் முரளி இல்லை.

 

முதல் பதிவு: தோழர் கார்க்கி

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌
Follow

Get every new post delivered to your Inbox.

Join 243 other followers