கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. சட்டப்படியான தீர்ப்பு, நியாயம், வரலாற்று உண்மை போன்றவைகளை மட்டும் அலகாபாத் கட்டப்பஞ்சாயத்து தகர்த்தெறியவில்லை, இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான இந்துத்துவ பார்ப்பனீய வெறித்தனத்தின் குறியீடான டிசம்பர் ஆறையும் கூட தகர்த்தெறிந்திருக்கிறது.
பாபர் என்றொரு மன்னன் இருந்தான் என்பதற்கு எல்லாவித ஆதாரங்களும் இருக்கின்றன. ராமன் என்றொருவன் இருந்தான் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஆனாலும் அவன் அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில் தான் பிறந்தான். இப்ராஹிம் லோடியால் தொடங்கப்பட்டு பாபரால் கட்டி முடிக்கப்பட்டது பாபரி மசூதி என்பதற்கு வரலாறு இருக்கிறது. அந்த மசூதி இந்து வெறியர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் கூட இருக்கிறது. ஆனாலும் அங்கு முஸ்லீம்களுக்கு இடமில்லை. பாபரி மசூதி சில நூற்றாண்டுகள் இருந்தது என்பதற்கு கண்ணால் கண்ட சாட்சிகள் கோடிப்பேர் உண்டு, கோவிலை இடித்துத்தான் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கு ஒற்றை ஒரு சான்று கூட இல்லை. ஆனாலும் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இந்த அயோக்கியத்தனத்தைத்தான் அலகாபாத் கட்டப்பஞ்சாயத்தின் அநீதிபதிகள் வெளித்தள்ளினார்கள். அமைதி இந்தியா முழுதும் மயான அமைதி.
தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்க வேண்டுமென அறிவு ஜீவிகள் தொடங்கி இடதுசாரிகள் என தங்களை அழைத்துக்கொள்வோர் வரை; நாளிதழ்கள் தொடங்கி நாடாள்பவர்கள் வரை அறிவுரை கூறினார்கள். சரியாக இருந்தால் ஏற்போம் தவறென்றால் கொதித்தெழுவோம் என எவரும் முழங்கவில்லை. நீதிமன்றங்களின் மீது நம்பிக்கையா? ஆண்டாண்டு காலமாக அம்மன்றங்களின் நீதிமீறல்களை கண்டுகொண்டிருந்த பின்னரும் நம்பிக்கை பிறந்ததெப்படி? அது நீதியல்ல காவி என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டிய பின்னரும் உப்புச்சப்பில்லாத வார்த்தைகளால் கடந்துபோக முடிந்ததெப்படி?
எந்த டிசம்பர் ஆறும் இடித்த வெறிக்கு ஈடான வீரியத்தை கொண்டிருந்ததில்லை. மனுப்போடும் உள்ளீட்டைப் போன்ற போராட்டங்கள் ஒப்புக்கு நடத்தப்பட்டன. ஒரு சடங்கைப்போல முடக்கப்பட்டன. காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அவர்களால் பல்வேறு வடிவங்களில் கோரிக்கை விடுக்க மட்டுமே முடிந்திருந்தது. ஆனால் இந்த டிசம்பர் ஆறில் உள்ளதும் கரைந்து போனது. டிசம்பர் ஆறைத் தொடர்வோம் என்பவர்களால் கூட என்ன சொல்லிப் போராடுவது எனத்தெரியாமல் மறுகுகிறார்கள். தீர்ப்பு சரியில்லை என முனக முடிந்தவர்களால், அதை ஏற்க முடியாது எனத் திமிர முடியவில்லை. காரணம் பார்ப்பனீய சட்டகங்களுக்குள் அடைபட்டிருக்கும் அரசியல் வடிவத்திற்குள் அடங்கிக் கிடப்பதே அவர்களுக்கும் விருப்பம்.
தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஜனவரி நான்கில் போராடப்போவதாக அறிவித்திருக்கிறது. அலகாபாத் அறிவித்தது தீர்ப்பல்ல கட்டப்பஞ்சாயத்து என அறிவிக்க வேண்டும், உச்சநீதிமன்றம் தானாகவே மேல்முறையீட்டை நடத்தி நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பது கோரிக்கைகளாம். அதுவும் டிசம்பர் ஆறில் போராடுவது அலகாபாத்திற்குப் பிறகு சடங்காகத் தெரியுமாம் அதனால் ஜனவரி நான்காம். கட்சித்தலைமைக்கு தலையாட்டியே பழக்கப்படுத்தப்பட்ட தொண்டனைப்போல், ஜமாத் தலைமை விளக்கமளித்துவிட்டால் அதை ஆறாம் கடமையாக வரித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், கேள்விகள் எழுவதில்லை. கடந்த பதினேழு ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒப்புக்கும் மதிக்காத நீதிமன்றங்கள் ஜனவரி நாலின் எழுச்சியை(!) மட்டும் புரிந்துகொள்ளுமா? கடந்த அறுபது ஆண்டுகளாக தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் சட்டத்தையும் நீதியையும் குப்பையில் வீசிவிட்டு காவிக்கு சாமரம் வீசியதை மௌனமாய் அங்கீகரித்துக்கொண்டிருந்த உச்சநீதிமன்றம் இந்த மேல் முறையீட்டில் மட்டும் சட்டப்படியான நீதியை வழங்கிவிடுமா? அப்படி நம்பிவிடக்கூட எந்த இடமும் இல்லாத நிலையில்; அலகாபாத்திற்குப் பிறகு டிசம்பர் ஆறு சடங்காய் தெரியும் வேறு ஒரு நாளில் என்றால் கவனிக்கப்படும் என்பதில் கொஞ்சமேனும் பொருள் இருக்க முடியுமா? இதுவரை டிசம்பர் ஆறு என்றால் முஸ்லீம்கள் எதிர்ப்புக்காட்டுவார்கள் எனும் எதிர்பார்ப்பில் ஒரு தொடர்ச்சி இருந்தது. ஜனவரி நான்கு போராட்டங்கள் தொடருமா? நாங்கள் கூறும் நீதியை அனுசரித்தால் வாழலாம் என பார்பனீயம் ஒருமுறையில் கூறுகிறது. அதையே வேறொரு முறையில் கூறுகிறது தௌஹீத் ஜமாத்.
டிசம்பர் ஆறு என்பது வெறுமனே ஒரு நிகழ்வு நடந்த நாளல்ல. அது ஒரு குறியீடு. பார்ப்பனீய அடக்குமுறையின் குறியீடு. தாமரை என்றதும் பாஜகவின் சின்னம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது புத்தரின் குறியீடு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தாமரை என்பது புத்தரைக் குறிக்கவே வரலாற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய தேர்தல் சின்னமாக்கியதன் மூலம் புத்தரிடமிருந்து அவரின் குறியீட்டை நீக்கியிருக்கிறது பார்ப்பனீயம். டிசம்பர் ஆறு என்றால் பாபரி மசூதி இடிக்கப்பட்ட நாள் என அனைவருக்கும் தெரியும். ஆனால் 1992 க்கு முன்னால் டிசம்பர் ஆறு என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? பார்ப்பனீயத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுதும் உழைத்த டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாள் அது. தன் வெறித்தனத்தைக்காட்ட அந்த நாளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அந்த நாள் அம்பேத்காரின் குறியீடாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திருக்கிறது பார்ப்பனீயம். ஆனால் அந்த டிசம்பர் ஆறு இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான பார்ப்பனீய அடக்குமுறையின் குறியீடாக கடந்த பதினேழு ஆண்டுகளாக முஸ்லீம்களால் பயன்படுத்தப்பட்டுவந்தது. அதை அழித்துக்கொள்ள பார்ப்பனீயத்திற்கு வாய்ப்பை வழங்குகின்றன இந்த மதவாதம் பேசும் அமைப்புகள். இந்தக் குறியீடு இல்லையென்றால் அடுத்த தலைமுறை பாபரி மசூதி இடிக்கப்பட்டதை மறக்கும், அதற்கடுத்த தலைமுறை பார்ப்பனீய வெறியாட்டத்தை மறக்கும். வரலாறு நெடுக பார்ப்பனியம் இப்படித்தான் தன்னை மறைத்து வந்திருக்கிறது. வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள், பௌத்தம் முதல் சாங்கியம் ஈறாக எத்தனை மதங்களை, கோட்பாடுகளை தின்று செரித்திருக்கிறது பார்ப்பனீயம் என்பதை.
இந்தியாவின் நிர்வாக அமைப்புகள் பார்ப்பனியமயமாக்கப்பட்டு நீண்டகாலமாகிறது. சட்டரீதியாக அதை எதிர்த்து முறியடிக்க முடியாத அளவிற்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக பலம் குன்றிய இடங்களில் கூட சட்டத்தை மீறி தன்னை நிலைப்படுத்தியிருக்கிறது என்பதற்கு பாபர் மசூதி வழக்கு உட்பட பலநூறு எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். முஸ்லீம்கள் மத அடிப்படையில் நடத்தும் அடையாளப் போராட்டங்களால் பார்ப்பனீயத்தை அசைத்துவிடக்கூட முடியாது. ஆனால் அதை வீழ்த்தி முடிக்காதவரை உழைக்கும் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை. இதில் முஸ்லீம்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தீண்டாமைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பொது நோக்கிற்காக மக்கள் ஒன்றுபடுவதை தடுத்துவிட உலகமயம் முயன்றுகொண்டே இருக்கிறது. இவைகளுக்கு எதிராக ஒன்றுபடாமல், சமரசமற்று போராடாமல் மத அடையாளங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஒப்புக்கு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களால் ஒரு பயனும் விளையப்போவதில்லை. ஒரு பள்ளிவாசல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு விடுவதால் ஏழை முஸ்லீம்களின் வாழ்வில் நிம்மதி மலர்ந்துவிடுமா? மக்கள் வாழ்வுக்கான வாய்ப்புகளைப் பறித்துச் சுரண்டும் உலகமயமும், மதரீதியாக மக்களை ஒடுக்க முயலும் பார்ப்பனீயமும் கைகோர்த்துச் செயல்படும் போது அவைகளை எதிர்க்கும் போராட்டம் மட்டும் வீரியமின்றி தனித்தனியாய் நடத்துவது யாருக்கு வாய்ப்பை வழங்கும்?
வாருங்கள் முஸ்லீம்களே! நம் வளமான வாழ்வுக்கு எதிராக நிற்கும் அனைத்தையும் நொறுக்கி வீழ்த்தும் போராட்டங்களை கட்டியமைத்து முன்னேறுவதற்கு நாம் ஒன்றிணையவேண்டியது அவசியம். மக்களாய் பாட்டாளிகளாய் களத்தில் நிற்பது மிக அவசியம்.
Dear Brother
I saw your article regarding 6th December.
A proverb for you and your concerns below:
aadu nanaiyuthe endru oonai aluthathaam
How is it ?
Regards,
quranist@aol.com
\\ ஒரு பள்ளிவாசல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு விடுவதால், ஏழை முஸ்லீம்களின் வாழ்வில் நிம்மதி மலர்ந்துவிடுமா? \\ இந்த முழு கட்டுரையில் இந்த வரிக்கு எனது சல்யூட். சில கெட்ட நிகழ்வுகளை மறந்து முன்னேற வேண்டிய தருணம் இது. ஒரு நல்ல நாளை நினைக்கலாம். ஒரு கெட்ட நாளை நினைக்கக் கூடாது. மறக்க வேண்டியது. மதத்தை மறப்போம். மனிதனை நினைப்போம். மதம் ஒழிந்தால் மனித நேயம் மலரும். சமத்துவம் மலர என்ன வழி என்பதை ஆராய்வோம். அதுவே அனைத்து பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளியாக அமையும். மதத்தால் இம்மண்ணில் மனிதனுக்கு ஒரு பயனும் இல்லை. வேண்டுமானால் சண்டைப்போட உதவும். மதம் மனிதனுக்கு எமன்.
அலகாபாத் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பைக் கண்டித்து இந்த டிசம்பர் 6 கருப்பு நாள் அன்று தமிழகம் முழுவதும் மகஇக வின் கண்டன ஆர்ப்பட்டம் ந்டைபெறுகிறது. அனவரும் கலந்துகொள்ள வாருங்கள்.
//ஒரு பள்ளிவாசல் கட்டி எழுப்பப்பட்டுவிடுவதால்,ஏழை முஸ்லிம்களின் வாழ்வில் நிம்மதி மலர்ந்துவிடுமா?//
அருமை தோழரே இப்பதிவில் என்னுள் பதிந்த வாரிகள். இதே கேள்வியைத்தான் ம(ந்)தவாதிகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். தெருவுக்குத் தெரு தலைவர்களின் சிலைகள் வைப்பதால் வறுமை ஒழிந்து விடுமா? பணம் தான் விரயமாகிறது என்று புலம்பித்தள்ளுகின்றனர். தெருவுக்கு ஒரு பள்ளிவாசல் கட்டும் சிலவா சிலைக்கு ஆகிறது? இப்புவியில் வாழ்ந்து மறைந்தவர்களுக்கு அவர்களின் நினைவாக சிலை வைப்பதில் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் அடையாளம் தெரியாத அட்ரஸ் இல்லாத பூமியில் சுவடே இல்லாத கடவுள்களுக்கெல்லாம் ஆலயம் கட்டுவது அறிவுடைய செயலா? முதலில் கடவுளை ஒழித்தால் தவிர மதம் ஒழியாது,இவ்விரண்டையும் சேர்த்தே ஒழித்தால்தான் மனித நேயம் வளரும்.
\\ ஒரு பள்ளிவாசல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு விடுவதால், ஏழை முஸ்லீம்களின் வாழ்வில் நிம்மதி மலர்ந்துவிடுமா? //
உண்மைதான். ஆனாலும் அநீதியான முறையில் ஒரு சமுதாயத்தினரின் வழிபாட்டு இடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே இடத்தில் அவர்களுக்கு மீண்டும் மசூதி கட்டித் தரப்படவேண்டும். மற்றபடி அதனை மறக்கவெல்லாம் முடியாது. சிலர் நடந்ததைக் கெட்டக்கனவாக நினைத்து மறந்துவிடுங்கள் என்று நடந்திருப்பது அநீதி என்பதனை அவர்களாகவே ஒத்துக்கொள்கின்றனர். மறந்துவிடலாம்தான். அங்கு மீண்டும் மசூதி கட்டித்த்ரும் பட்சத்தில் இடித்ததை மறந்துவிடலாம்.
இங்கு, லாகூரில் அமைந்துள்ள குருத்வாராவிற்கு முஸ்லீகள் சொந்தம் கோரியபோது 1940ல் லாகூர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை நினைவில் கொள்ள வேண்டும். “குருத்வாரா அமைந்திருக்கு இடம் 1762 வரை தொழுகை நடத்தப்பட்ட இடம்தானென்றாலும் காலம்கடந்து நீதிமன்றத்திற்கு இப்பிரச்சினை வந்துள்ளமையால் இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அங்கு குருத்வாராவே நீடிக்கவேண்டும்” என்பதாக தீர்ப்புக் கூறினர். இது நீதியான தீர்ப்பா அல்லது அலகாபாத் நீதிமன்ற கோயல்சுபதிகள் அளித்தது நீதியான தீர்ப்பா!.
RSS எந்த நோக்கத்திற்காக டிசம்பர் 6ல் மசூதியை இடித்தது என்றாலும், நாம் அதனை தலித்துகளும் முஸ்லீம்களும் இணைந்து போராடும் நாளாக உருவாக்கவேண்டும். டிசம்பர் 6 ம் நாளை தலித்துகளும் முஸ்லீம்களும் இணைந்தே நினைவுக் கூறவேண்டும். தங்களது உரிமைகளைக் கோரும் நாளாக அந்நாளில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே நமது வஞ்சிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கமுடியும்.
\\ ஒரு பள்ளிவாசல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு விடுவதால், ஏழை முஸ்லீம்களின் வாழ்வில் நிம்மதி மலர்ந்துவிடுமா? //
கோவில் கட்டுவதால் மட்டும் இந்துக்களின் வாழ்வு மலர போகிறதா என்ன?
varikku vari paarppaneeyam entru ean ezhuthvaendum? sushmaa swaraaj paappaaththiyaa? neethimantra theerppai varavaerppoom eantru muthalil solvathu, pinbu theerppu vanthapin earkka maruppathu!! enna niyayam ithu?!!
Dear All,
Er.L.C.Nathan is Right.
quranist@aol.com
நாதன்,
தீர்ப்பு ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியுமா?
கலை நண்பரே,
இந்திய கார்பொரேட் இந்து அரசு இந்திய வரைபடத்தை தக்கவைத்துக்கொள்ள பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை பெற்று ஆட்சி செய்ய அதன் கைத்தடி மன்றம் எடுத்த மிக அருமையான தீர்ப்பு.இதை வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே.
சாத்தன் வேதம் ஓதுகிறது>>>>>>
இந்திய இந்துக்கார்பொரேட் இந்து அரசு இந்திய வரைபடத்தை தக்கவைத்துக்கொள்ள இந்துப்பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை பெற்று ராமராஜ்ஜியம் அமைக்க அதன் இந்துத்வ கைத்தடி வெறிமன்றம் எடுத்த மிக அருமையான இந்துத்தீர்ப்பு