அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இந்த ஆண்டின் மே நாள் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன்வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால் விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.
ஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உருப்புகள் அனைத்தும், அவற்றுக்கு உரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப் போய், எதிர்நிலை சக்திகளாக [Bankrupted, Failed, Collapsed and Opposite force] மாறிவிட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும், நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இது தான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்லும் கேள்வியாகும்.
மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர், மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினராகிய உயர் பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.
உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்த கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரது வாக்ஷ்ழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார வர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால் அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல் கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.
எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின் படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும் நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் லஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசுஅமைப்புகள் முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகிறது.
நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்க்கம், அன்னியச் செலவாணி பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படை பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல் நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள் பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம் நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்கு பயன்படுவதை விட பன்னாட்டு, உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.
ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்கமுடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரீகத்தின் உச்ச நிலையை எட்டி விட்டன. நாட்டின் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறி விட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பார்ப்பன பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரீகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலை குனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமியிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு, மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டு மொத்த சமூக, அரசியல், பண்பாட்டு கட்டமைப்பு முழுவதும் தீராத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காண முடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் தணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகாத் தனத்தையும், தோல்வியையுமே இவை காட்டுகின்றன.
இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப்பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்து வந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதிநெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்கு முறைகளும் கூட திவாலாகி தோற்றுப் போய்விட்டன என்பதையும், சித்தாந்த, பண்பாட்டு, அரசியல், ஆயுதங்கள், கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள்[Black hole] போய்க் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும், அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஒட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாய்வுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும் தான் இது தெளிவாகப்படம் பிடித்துக் காட்டுகிறது.
இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இது தான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்சநிலையை எட்டி விட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களுமாளும் தகுதியை இழந்து விட்டன.இனித் தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும் முழக்கங்களும் முன்வைத்து தனித் தனி இயக்கங்கள் நடத்தி தீர்வு காண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.
நமது பிரச்சனைக்கான தீர்வுகள் தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு வெளியே தான் உள்ளன!
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தை தட்டிக் கேட்க வேண்டும்!
அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விட வேண்டும்!
தங்களுக்கான அதிகார அமைப்புகளை மக்களே தாமே கட்டியெழுப்ப வேண்டும்!