கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3

god's existance

 

நண்பர் விவேக்,

உங்களின் பல பின்னூட்டங்களுக்குப் பிறகு தாமதமாக பதிலளிக்க நேர்வதற்கு வருந்துகிறேன். எழுதுவதை விட வேறு அலுவல்களுக்கு முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் தவிர்க்க இயலவில்லை. 

உங்களின் பல பின்னூட்டங்களின் கருத்தை தொகுத்தால் அது அறிவியல் குறித்தும் தத்துவம் குறித்துமான குழப்பத்துக்கே இட்டுச் செல்கிறது. தத்துவம் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக புரிந்து கொள்வதில் இருந்து தான் மேடா பிசிக்சின் அடிப்படை தொடங்குகிறது. நீங்கள் கூறும் விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை என்ன அடிப்படையின் கீழ் வகைப்படுத்துவீர்கள்?

நாம் இந்த கருத்துப் பரிமாற்றத்தை கடவுள் எனப்படுவது மெய்யா? பொய்யா? என்பதிலிருந்து தொடங்கினோம். ஒரு புரிதலுக்காக இப்படி வைத்துக் கொள்வோம், கடவுள் எனும் நிலை ஐயமான ஒன்று. இதற்கான தெளிவை எந்த அடிப்படையில் தேடுவது? இதில் என்னுடைய நிலைப்பாடு அறிவியலின் அடிப்படையிலேயே தேட முடியும் என்பது. ஏனென்றால் உலகின் அனைவரும் அறிவியலின் அடிப்படையிலேயே தங்களின் அனைத்து விளக்கங்களையும் பெறுகின்றனர்.  அவர்கள் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளும் ஆத்திகர்களானாலும், கடவுளின் இருப்பை மறுக்கும் நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆனாலும் அனைவருக்கும் அறிவியலே அனைத்துக்குமான அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஆத்திகர்கள் மட்டும் கடவுள் குறித்த விளக்கங்களின் போது மட்டும் அறிவியலை விடுத்து அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஏதேதோ நிலைகளில் தங்கள் அடிப்படைகளைக் கொள்கிறார்கள். ஆக, கடவுள் எனும் இடம் தவிர ஏனைய இடங்களின் காணாமல் போய்விடுகின்ற ஒன்றை, கடவுள் என்ற ஒன்றுக்காக மட்டுமே இயங்கும் ஒன்றை பொதுவான அடிப்படையாக கொள்ள முடியுமா? இது ஏன்? எப்படி சரி?  என்று சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

அறிவியல் என்பது அறிதலுக்கு உட்பட்டது அதாவது சோதனைகளுக்கு உட்பட்டது. ஆத்திகர்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக தாங்கள் கருதும் கடவுளை சோதனைக்கு ஆட்படுத்த விரும்புவதில்லை. அல்லது, சோதனைக்கு ஆட்படுத்தினால் கடவுள் காணாமல் போய்விடும் எனக் கருதுகிறார்கள். அதனால் அதன் இருப்பை ஏதோ ஒரு வழியில் மறுக்க முடியாததாக ஆக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் அறிவியலுக்கு அப்பாற்பட்ட வழியில் முயல்கிறார்கள். உங்களின் விளக்கங்களையும் நான் இந்த வகையில் தான் வகைப்படுத்துகிறேன். இது உங்கள் தரப்பை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள மறுக்கின்ற என்னுடைய நிலை அல்ல. மாறாக, நன்றாக புரிந்து கொண்டிருப்பதால் வந்தடைந்திருக்கும் என்னுடைய நிலை.

அனைத்தையும் அறிவியலின் துணை கொண்டே பார்ப்பவன் எனும் அடிப்படையில் தான் கடவுள் எனும் கருதுகோளையும் அறிவியலின் அடிப்படையில் பார்க்கிறேன். இப்போது கடவுள் என்பதற்கு நீங்கள் கூறும் விளக்கத்துக்கு வருவோம்

 \\\இருப்பது(That which is) தான் கடவுள். இருப்பது அனைத்துமே கடவுள். நம்முடைய ஐம்புலன்களால் அறிந்துகொள்ளக்கூடியவை மட்டுமல்லாமல் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எது எல்லாம் இருக்கிறதோ அவை அனைத்துமே கடவுள்தான். அதாவது பொருள் நிலையில் மட்டுமல்லாமல் பொருள் நிலைக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எது இருக்கிறதோ அது கடவுளாக இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று ஒரு குறிப்பு புள்ளி இல்லாததால் எது இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது; கடவுளின் ஒரு அங்கமாக இருக்கிறது. நம்முடைய பிரபஞ்சம் மட்டுமல்லாமல் மற்ற பல பிரபஞ்சங்களும் கடவுளுக்கு உள்ளே, கடவுளின் அங்கமாக, கடவுளாக இருக்கின்றன. ஆகவே கடவுள் இருப்பது உண்மையா என்று நீங்கள் கேட்டால், நீங்கள் இருப்பது உண்மை என்றால்; பிரபஞ்சம் இருப்பது உண்மை என்றால்; கடவுள் இருப்பதுவும் உண்மைதான் என்பதுதான் அதற்கு பதில்///

இந்த உங்களின் கடவுள் குறித்த விவரணையில் எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. கடவுள் என்றால் என்ன எனும் கேள்விக்கு, அனைத்துமே கடவுளுக்குள் இருப்பதால், கடவுளுக்கு வெளியே என்று எதுவுமே இல்லை என்பதால் இருக்கும் அனைத்துமே கடவுள். நீங்கள் இருப்பது உண்மையானால் கடவுள் இருப்பதும் உண்மை. இதைத்தான் குழப்பம் என்கிறேன். என்னுடைய இருப்பை யாரும் ஐயுற முடியாது. ஏனென்றால் என்னுடைய இருப்பை சோதனைக்கு உட்படுத்தி தெளிவை வந்தடைய முடியும். எனவே நான் இருக்கிறேன் என்பது மட்டுமே அல்லது பேரண்டம் இருக்கிறது என்பது மட்டுமே கடவுள் இருக்கிறது என்பதற்கு சான்றாக இருக்க முடியாது. அதற்கு அப்பாலும் சான்று தேவைப்படுகிறது. அந்த சான்று அறிவியல் சோதனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது, இன்னின்ன காரணங்களால் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும் தேவை இருக்கிறது எனும் விளக்கம் வேண்டும். இவை இல்லாத வரை கடவுள் இல்லை என்பதே முடிவு.

கடவுள் உண்மையா? என்பதற்கும், கடவுள் பற்றிய உண்மை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒருபோதும் யாராலும் பதில் தர முடியாது. ஏனென்றால், அது என்னவென்றே – ஆத்திகர்கள் உடபட – யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது என்பதை விட அவ்வாறு தெரிந்து கொள்ள முடியாது என்பதே கடவுளின் தகுதியாக இருக்கிறது. தெரிந்து கொள்ளவே, அறிந்து கொள்ளவே முடியாத ஒன்றை சோதிக்க முடியுமா? நண்பர் விவேக் கடவுள் குறித்து என்ன கூறுகிறார்? இருப்பது தான் கடவுள். இருப்பது என்பது எது? எதுவெல்லாம் புலன்களுக்கு உட்பட்ட அல்லது புலன்களுக்கு அப்பாற்பட்ட பொருளாக இருக்கிறதோ அதுவெல்லாம் கடவுளாக இருக்கிறது. நண்பர் கூற்றுப்படி கட்வுள் என்பது தனித்த ஒன்றாக இல்லை. தனித்த ஒன்றாக இல்லை என்றான பின் எவ்வாறு அதை அறிந்தீர்கள் அல்லது உணர்ந்தீர்கள். இதற்கு நண்பர் விவேக் சில கருவிகளைக் கூறுகிறார்.

\\\தியானம்(meditation), தெய்வீக பாலுறவு(divine sex), மந்திர உச்சாடனம்(chanting mantras), மெய்யுணர்வு செயல்(act of consciousness), சூட்சும உடல் பயணம்(astral body travel),மெய்யுணர்வு குவிப்பு(projection of consciousness),வேற்று பரிமாண ஜீவன்களுடன் பேசுவது(channeling),எண்ணம் மூலமாக தகவல் பரிமாறுவது(telepathy) போன்றவையே ஆன்மீக கருவிகள்///

இந்தக் கருவிகளைக் கொண்டு எப்படி கடவுளை உணர்ந்தீர்கள் என்று கேட்டால் நண்பர் விவேக் கூறும் பதிலில் கற்பனை மட்டுமே இருக்கும். எவ்வாறென்றால், அறிவியல் கருவிகள் கொண்டு ஒன்றை சோதிக்கிறோம் என்றால் சோதனையில் ஈடுபடும் யாரும் – அதாவது அந்தக் கருவிகளை ஏற்றுக் கொள்பவரும் ஏற்றுக் கொள்ளாதவரும் – வந்தடையும் முடிவு ஒரே மாதிரியானதாக இருக்கும். ஏனென்றால் அறிவியல் கருவிகள் புற உலகில் யதார்த்தமாக இருக்கும் பொருளை ஆய்வு செய்து அதன் இருப்பை உணர்த்துகிறது. எனவே சோதனை செய்பவனின் அக விருப்பம் எவ்வாறு இருந்தாலும் விடை வந்து விடும். ஆனால் நண்பர் விவேக் கூறும் கருவிகளைக் கொண்டு கடவுளை அளக்க அல்லது சோதிக்க அல்லது உணர வேண்டுமென்றால் அங்கு அக விருப்பம் இன்றியமையாதது. அகவிருப்பம் இல்லாத யாருக்கும் மேற்கண்ட கருவிகள் கொண்டு சோதிக்கும் போது எந்த விடையும் கிடைக்காது. என்றால் அந்தக் கருவிகள் சோதிப்பது எதை அகநிலை விருப்பத்தையா? புறநிலை யதார்த்தத்தையா? கடவுள் இருக்கிறதா? எனும் கேள்வி புறநிலை யதார்த்தத்தையே கோருகிறது. இதற்கு ஆன்மீகர்கள் கூறும் பதில், கடவுள் புறநிலை யதார்ததமாகத் தான் இருக்கிறது. ஆனால் அந்த புறநிலை யதார்த்தத்தை அறிய நடப்பு அறிவியல் கருவிகள் உதவாது என்பது தான். இதற்கு பகரமாக அவர்கள் முன்வைக்கும் கருவிகளோ அகநிலை விருப்பத்தை சோதிக்கின்றன. இதில் எங்கு பிழை இருக்கிறது என்பது புறிகிறதா? ஆகவே கடவுள் இருக்கிறது என்பது கற்பனை தான்.

உள்ளுணர்வு, தன்னையறிதல் போன்றவை எல்லாம் ஆன்மீகவாதிகள் அதிகம் பயன்படுத்தும் சொற்களாக இருக்கின்றன. இவை போன்ற சொற்களின் மீதான தெளிவின்மை என்பது கடவுள் குறித்த மயக்கத்தை பாமர மக்களுக்கு ஏற்படுத்துகிறது. தன்னையறிதல் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆன்மீகவாதிகள் இச் சொல்லுக்கு அளிக்கும் விளக்கம் என்ன? தான் எனும் செருக்கு கொள்ளாதே, இந்த பேரண்டத்தைப் பார், அதில் நுணுக்கமாக இருக்கும் ஒழுங்கைப் பார், மீச்சிறிய அளவில் இருக்கும் பொருட்களுக்குள்ளும் பேரண்டம் போன்ற செயல்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதைப் பார்.இவைகளோடெல்லாம் ஒப்பிட்டு உன்னை உணர்ந்து கொள்வது தான், அதாவது உன்னை நீ மிகை மதிப்பு கொண்டிராமல் அனைத்தையும் இயக்கும் ஒரு முழுமையின் முன் உன்னை தாழ்த்திக் கொள். இவ்வாறு உணர்வது தான் தன்னையறிவது என்பது ஆன்மீகவாதிகளின் விளக்கம். நாத்திகவாதிகளின் விளக்கமோ இதற்கு நேர் எதிராக இருக்கிறது.  பேரண்டம் என்றாலும், மீச்சிறிய பொருள் என்றாலும் அதன் செயல்படும் விதிகள் மனிதனால் கண்டறியப்பட்டிருக்கின்றன. மனிதனின் அறிவெல்லையை தாண்டியதாக இங்கு எதுவும் இல்லை. இயற்கையுடனான பொருதுதலில் மனிதனுக்கு ஏற்படும் காலதாமதங்களை புரியாத ஒன்றுடன் குழப்பிக் கொள்ளுதலிலிருந்து விடுதலை அடைந்து மனிதன் தன் வீச்சை உணர்ந்து கொள்வதே தன்னையறிவது என்கிறார்கள் நாத்திகவாதிகள். தன்னையறிதல் என்பதன் பொருள் இவை தானா?

மனிதன் ஒரு சமூக விலங்கு. தொடக்க காலத்தில் மனிதனின் அறிவும், விலங்கினங்களின் அறிவும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் தான் இருந்திருக்க முடியும். தெளிவாகச் சொன்னால் விலங்குகளிடமிருந்தே பல அறிதல்களை மனிதன் பெற்றிருக்கிறான். தொடர்ச்சியான உழைப்பின் பயன் மனிதனை பரிணாம ஏணியில் முதன்மையானவாக இருத்தியது. இன்று மனிதன் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் அனைத்தும் சமூகக் கூட்டுழைப்பின் மூலம் பெற்றவைகளே. தனிப்பட்ட ஒரு மனிதன் பெற்றிருக்கும் அறிவு என்பது சமூகக் கூட்டுழைப்பின் பலனாய் பெற்ற மரபு சார்ந்ததாகவும், தனிப்பட்ட சமூகச் சூழலைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. மனிதன் தான் செய்யும் அனைத்து செயல்களையும் தான் பெற்ற அறிவின் எதிர்வினையாகவே செய்கிறான். இப்படி மனிதன் செயல்படும் எதிர்வினைகளாலேயே அவன் மதிப்பிடப்படுகிறான். இப்போது குறிப்பிட்ட ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு சூழலில் என்ன மாதிரியான எதிர்வினைகளை ஆற்றுவான் என தெரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. பெரும்பாலான மக்கள் இதை இவ்விதமாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதில்லை.  மேலெழுந்தவாரியாக அந்தந்த நேரத்து உந்துதல்கள் மூலமே செயல்படுவதாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒருபோதும் மனிதனின் செயல்கள் அவனது அறிதல்கள், சமூகப் பார்வை, சிந்தனை முறைகளுக்கு அப்பாற்பட்டு செய்யப்படுவதே இல்லை. இதை அறிவது தான் தன்னையறிதல் என்பது. அதாவது குறிப்பிட்ட ஒரு சூழலில் தான் எப்படி நடந்து கொள்வேன் என கற்பனையாக முன்கூட்டியே சிந்திப்பதற்கும், மெய்யாக அந்த சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதற்குமான இடைவெளி தான் தன்னையறிதல் என்பதன் அளவுகோல்.

இதைப் போல் தான் உள்ளுணர்வு என்பதும். மனிதனின் மூளைக்குள் புறத் தூண்டுதல் இல்லாமல் உதிப்பு என்று எதுவும் தோன்ற முடியாது.  சமூகத்தில் மனிதன் அறிந்தவற்றின் விளைவாகவே தேவை கருதி சிந்தனை தோன்றுகிறது. இந்த சிந்தனைகளின் ஒழுங்கற்ற வடிவமே உள்ளுணர்வு.  எப்போதெல்லாம் உள்ளுணர்வு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அதை எழுதி வைத்துக் கொண்டு தொகுத்துப் பார்த்தால் நம்முடைய சிந்தனைக்கும், நாம் அறிந்தவற்றுக்கும் எவ்வளவு நெருக்கமானதாக உள்ளுணர்வு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.  இவ்வாறு தொகுத்துப் பார்க்காதவர்கள் அல்லது தொகுத்துப் பார்க்க விருப்பமில்லாதவர்கள் தான் தன்னுடைய அறிதலுக்கும் சமூகத்துக்கும் தொடர்பற்ற ஏதோ ஓர் ஆற்றல் தன்னுள் இந்த உள்ளுணர்வை ஏற்படுத்தியது என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இது போன்ற கற்பனைகளின் விரிவாக்கமாக, தங்களுடைய நிலப்பாட்டிற்கான கவசமாக ஆத்திகர்கள் பயன்படுத்தும் இன்னொரு இன்றியமையாததாக இருப்பது தான் அறிவியல் குறைபாடு உடையது எனும் கருத்து. அதாவது அறிவியல் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அது நிலையான ஒன்றல்ல. எனவே அதை அடிப்படையாக கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. அறிவியல் நிலையானதல்ல என கருத்து கொண்டிருக்கும் அனைவரும் தம் அன்றாட வாழ்வில் குறைபாடுகளுடையதாக அவர்கள் கருதும் அறிவியலைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் எனும் ஒன்றில் மட்டும் தான் அவர்களுக்கு அறிவியல் குறைபாடு உடையதாக இருக்கிறது.

முதலில், மாறிக் கொண்டே இருக்கும் அனைத்தும் தவறானவை, மாறாமல் நிலையாக இருப்பது தான் சரியானது எனும் கருத்தை எடுத்துக் கொள்வோம். எந்த அடிப்படையிலிருந்து இந்தக் கருத்து உருவாகியிருக்கிறது?  இது கருத்துமுதல்வாதத்தின் ஒரு கூறு. விரிவாகச் சொன்னால், ஒன்றை மீளாய்வு செய்யும் போது அது சரியானதா? தவறானதா? எனும் தளத்தில் நின்று ஆய்வு செய்யாமல் அது சாதகமானதா? பாதகமானதா? எனும் தளத்தில் இருந்து ஆராயும் நிலை கொண்டது. எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள், மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். தேங்கி நிற்பதை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அந்த மாற்றம் தங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும். பாதகமான மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்கள் ஏனெனால் அது நிலையானதாக இல்லாமல் இருக்கிறது. இது ஒரு நச்சுச் சுழல். இப்படி முடிவு செய்யும் அனைவரும் தங்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார்கள். புறநிலை யதார்த்தம் தங்களுடைய விருப்பங்களுக்கு முரண்பாடாக இருக்கும் போது தோற்றுப் போகிறார்கள்.

மாறாக  ஒன்றை மீளாய்வு செய்யும் போது  சரியா தவறா என்று ஆராயும் போது எந்த அடிப்படையிலிருந்து சரி தவறை முடிவு செய்வது எனும் கேள்வி எழுகிறது. தன்னுடைய  நலனை அடிப்படையாக கொண்டால் அது சாதகமா பாதகமா எனும் எல்லையில் சென்று நிற்கும். எனவே, சரியா தவறா என்பதை சமூகத்தின் அடிப்படையிலில் இருந்து எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சமூகத்திற்கு சரியாக இருப்பதை ஏற்றுக் கொள்வோம் அது தனக்கு பாதகமாக இருந்த போதிலும்; சமூகத்துக்கு தவாறாக இருப்பதை ஏற்க மறுப்போம் அது தனக்கு சாதகமானதாக இருந்த போதிலும் எனும் நிலை ஏற்படுகிறது. இப்படியான நிலைப்பாடு வந்து விட்டால் அது குறிப்பிட்ட ஒருவனை மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூகத்தையும் சரியான வழியில் கொண்டு வந்து சேர்க்கிறது.  எனவே, ஒன்று மாறாமல் இருக்கிறதா? நிலையாக இருக்கிறதா? என்பது தெளிவை அடைய உதவாது. மாறினாலும் நிலையாக இருந்தாலும் அது சமூகத்துக்கு சரியாக இருக்கிறதா தவறாக இருக்கிறதா என்று பார்ப்பதே தெளிவைத் தரும், பொருத்தமானதாக இருக்கும்.

இப்போது அறிவியலுக்கு திரும்புவோம். அறிவியல் மாறிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை தான். இப்படி மாறுகிறது என்பதாலேயே அதை ஏற்றுக் கொள்ள இயலாது எனக் கூற முடியுமா? ஏன் மாறுகிறது என்று ஆராய வேண்டாமா? அறிவியல் என்பது என்ன என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இயற்கையை எதிர்கொண்டு இயற்கையோடு மோதி மனிதன் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறான். அவன் கற்றுக் கொண்டதை தொகுத்து வைக்கிறான். தேவைப்படும்போது தொகுப்பிலிருந்து எடுத்தாண்டு மேலும் அதனை செழுமைப் படுத்திக் கொள்கிறான். சுருக்கமாக இது தான் அறிவியல். இப்படி பெறப்படும் அறிவியல் முடிவுகள் மாற்றமடைகின்றன என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, இந்தப் பேரண்டத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மாற்றமடையாமல் எதுவுமே நிலையாக இல்லை.  இப்படி மாறிக் கொண்டே இருக்கும் இயற்கையை குறித்த தெளிவும் மாறிக் கொண்டே தானே இருக்க முடியும், இருக்க வேண்டும். மாறாமல் இருந்தால் அது தவறாகி விடும்.

இரண்டாவதாக, அறிவியல் என்பது புனிதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது நடைமுறையில் பயன்படுத்துவதற்கானது. நடைமுறையில் பயன்படுத்தும் போது அது பயன்படுத்தப்படும் நோக்கத்தை நிறைவேற்றாவிட்டால் அதை மாற்றத்துக்கு உட்படுத்தி தான் ஆக வேண்டும். அதற்குப் பெயர் தான் வளர்ச்சி. அறிவியல் வளர்ச்சியடைய வேண்டுமா? தேங்கி நிற்க வேண்டுமா?

இந்த இடத்தில் இன்னொரு ஐயம் ஏற்படலாம். அதை குறிப்பான எடுத்துக்காட்டின் மூலம் பார்ப்போம். பூமி தட்டையானது என்பது தொடக்க கால அறிவியல். பின்பு அது மாறி, உருண்டை என்றாகியது. பின்னர் மீண்டும் துருவப்பகுதிகளில் தட்டையான ஒருவித கோள வடிவம் என்றாகியது. இதில் தொடக்கத்தில் மனிதன் பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த போதும், அது இப்போதிருந்த வடிவத்தில் தானே இருந்தது. அப்படி என்றால் அறிவியல் அந்த இடத்தில் தவறான நிலைப்பாட்டைத் தானே கொண்டிருந்திருக்கிறது. இது எப்படி சரியாக இருக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால், அது தேங்கி நிற்கவில்லை சரியானதை நோக்கி மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியலின் எல்லை என்பது மனிதனின் அறிதல் உயரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் முடிவுகள் என்பவை  நடைமுறையில் எப்போதும் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த சோதனையில் முடிவுகள் தவறானவையாக இருக்கும் போது மாற்றம் தேவை என்பது உணரப்படுகிறது. பரிசோதனைகள் மூலம் முடிவு மாற்றப்படுகிறது. அறிவியல் முடிவுகள் ஒருபோதும் தவறானதின் மீது நிலைத்திருக்காது.

இந்த மாற்றங்களைத் தான் ஆன்மீகவாதிகள் அறிவியலின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். அதாவது, அறிவியல் தவறின் மீது நிலைத்திருக்கவில்லை, சரியானதை நோக்கி மாறிக் கொண்டே இருக்கிறது. நிலையானதாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பதனால் அது தவறானது என்கிறார்கள். இதற்கு மாற்றமாக ஆன்மீகவாதிகள் முன்வைக்கும் வேதப் புனிதங்கள் மீது எந்த வித ஆய்வுகளையும் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருப்பதில்லை. ஆய்வு நடத்த முன்வருவோரையும் புனிதங்களுக்கு களங்கம் என்ற பேரில் தாக்குதல் நடத்தி ஆய்வுகளை முடக்குகிறார்கள். இந்த இரண்டு விதங்களில் எதை சரியானதாக கைக் கொள்ள முடியும். இது சிந்திப்போரின் கவனத்திற்கு.

ஆக, கூட்டுழைப்பு, சமூகம், இயற்கையின் மீதான அறிதல்கள் ஆகியவைகளைக் கொண்டே மனிதன் உருவாகியிருக்கிறான்.  மனிதன் இன்றுவரை கண்டிருக்கும் அத்தனை வளர்ச்சிகளையும் இவைகளைக் கொண்டு தான் சாதித்திருக்கிறான். இவைகளைக் கொண்டு உருவான மனிதன் தன்னுடைய சிந்தனை முறைகளை இவைகளுக்கு உட்பட்டு அமைத்துக் கொள்வதே பொருத்தமானதாகவும், இனி தேவைப்படும் வளர்ச்சிகளுக்கு உவப்பானதாகவும் இருக்கும். இவைகளுக்கு மாற்றமான சிந்தனை முறை என்பது மனித இனத்தை தோல்வியிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த அடிப்படையிலிருந்து தான் மார்க்சியர்கள் தங்கள் சிந்தனைகளைச் செய்கிறார்கள். இந்த அடிப்படைகளிலிருந்து தான் கடவுள் என்பது மனிதனின் வளர்ச்சிக்குத் தேவையான சிந்தனைகளைத் தூண்டாமல் முடக்கும் சிந்தனைகளைத் தூண்டுகிறது எனும் முடிவுக்கு வருகிறார்கள். இந்த அடிப்படையில் இருந்து தான் ஆத்திகர்களுடன் பொருதுகிறார்கள்.

இதுவரை பார்த்ததெல்லாம் ஆத்திகர்களின் நம்பிக்கைகளான கடவுள், மதம், சொர்க்கம் நரகம், வழிபாடுகள், வழிகாட்டுதல்கள் எனும் அடிப்படையில். ஆனால் நண்பர் விவேக் தான் வேறொரு தளத்தில் நிற்பதாக தோற்றம் காட்ட விரும்புகிறார். அதாவது வணக்க வழிபாடுகள், தண்டனை, வெகுமதி போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாமல் ஒதுங்கியிருக்கும் கடவுள் குறித்து பேசுவதாக முகம் காட்டுகிறார்.  அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

25 thoughts on “கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3

  1. ஓரளவு சரியாக இருக்கலாம், *ஆனால் இறைவனை அறிவாற்றலால் வெல்லக்கூடிய அளவிற்கு உயிரினம் பூமியில் இல்லை*

  2. நண்பர் செங்கொடி,

    நீங்கள் கம்யூனிஸ்ட் ஆக இருப்பதால் பொருள்முதல்வாத அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். அதனால் உங்களால் ஆன்மீக விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் பொருள்நிலை சான்று வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது சாத்தியமில்லை என்று முன்பே நான் கூறிவிட்டேன். பொருள்முதவாதம் என்ற கூண்டுக்குள் இருந்துகொண்டு வெளி உலகம் ஒன்று இல்லை; அப்படி ஒன்று இருந்தால் அது இந்த கூண்டுக்குள்தான் இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள். இது வெறும் அறியாமை.

    உங்களுடைய மூன்றாம் பாகத்தில் நீங்கள் கூறிய விஷயங்களுக்கு என்னுடைய பதில்களை தருகிறேன். அவற்றை விமர்சனங்களாக பார்க்காமல், எனக்கு தெரிந்ததை நட்பு ரீதியாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

  3. செங்கொடி : உங்களின் பல பின்னூட்டங்களின் கருத்தை தொகுத்தால் அது அறிவியல் குறித்தும் தத்துவம் குறித்துமான குழப்பத்துக்கே இட்டுச் செல்கிறது.

    விவேக் அத்வைதி : இதில் குழப்பத்திற்கு இடமே இல்லை. நான் சொல்லும் விஷயங்கள் உங்களின் தற்காலத்திய வளர்ச்சி அடையாத அறிவியலுக்கும் மனிதன் இதுவரை உருவாக்கிய தத்துவத்திற்கும் மேலான அறிவை உள்ளடக்கியவை. இந்த உண்மைகள் உங்களின் பொருள்முதல்வாதம்(materialism) என்ற குறுகிய எல்லையை தாண்டிய மிகப்பெரும் வெளியை பற்றியது. அதனால்தான் இது உங்களுக்கு குழப்பமாக தோன்றுகிறது. நான் கூறும் விஷயங்கள் எவர்களுடைய ஆன்மாவுக்கு அறிவுப்பூர்வமாக, யதார்த்தம் பற்றிய ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறதோ அவர்கள் அந்த உண்மைகளை ஏற்பார்கள்.

  4. செங்கொடி : தத்துவம் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக புரிந்து கொள்வதில் இருந்து தான் மேடா பிசிக்சின் அடிப்படை தொடங்குகிறது.

    விவேக் அத்வைதி : பௌதீகம்(physics) எப்படி அறிவியலோ, அதேமாதிரி அபௌதீகமும்(meta physics) அறிவியல்தான். அபௌதீகம் தத்துவம் அல்ல. அதுவும் அறிவியல்தான். இதைத்தான் ஆன்மீக அறிவியல்(spiritual science) என்கிறோம். முற்றுமுதல் உலகத்திலிருந்து(absolute world) சார்பு உலகம்(relative world) படைக்கப்பட்டது. இந்த சார்பு உலகம் ஒரு சமன்பாடு(equation) என்றால், அதன் ஒரு பாதி பௌதீக உலகம்(பொருள் உலகம்). மற்ற பாதி அபௌதீக உலகம்(ஆவி உலகம்). ஒவ்வொரு பௌதீக அணுவுக்கும் இணையான அபௌதீக அணு உண்டு. பௌதீக அணுக்களால் ஆனது பௌதீக உலகம். அபௌதீக அணுக்களால் ஆனது அபௌதீக உலகம். பௌதீக கருவிகளைக்கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது. மெய்யுணர்வின்மூலம் மட்டுமே பௌதீக உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணரவோ காணவோ முடியும்.

  5. செங்கொடி : நீங்கள் கூறும் விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை என்ன அடிப்படையின் கீழ் வகைப்படுத்துவீர்கள்?

    விவேக் அத்வைதி : பொருள் உலகம்(material world) மற்றும் ஆவி உலகம்(spirit world) என்ற இரண்டு உலகங்களும் வெறும் மாயை(illusion). சார்பு உலகம் ஒரு மாயை. சுய விழிப்புணர்வு கொண்ட ஆற்றல்(self aware energy) என்பது சுத்தமான விழிப்புணர்வு நிலை(state of pure awareness). அதிலிருந்துதான் அனைத்தும் தோன்றுகிறது. அதற்குள்தான் அனைத்தும் ஒடுங்குகிறது. பொருள் உலகம் மற்றும் ஆவி உலகம் என்ற சார்பு உலகம், சுத்தமான விழிப்புணர்வு நிலை என்ற முற்றுமுதல் உலகத்திற்குள்(absolute world) தோன்றுகிறது, பின்பு அதற்குள் ஒடுங்குகிறது. எனவே விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை பௌதீகம்(physics) என்றோ அல்லது அபௌதீகம்(meta physics) என்றோ வகை படுத்த முடியாது. ஏனெனில் இந்த இரண்டு நிலைகளும் அதற்குள் அடக்கம்.

  6. செங்கொடி : கடவுள் எனும் நிலை ஐயமான ஒன்று. இதற்கான தெளிவை எந்த அடிப்படையில் தேடுவது? இதில் என்னுடைய நிலைப்பாடு அறிவியலின் அடிப்படையிலேயே தேட முடியும் என்பது.

    விவேக் அத்வைதி : பொருள் நிலையில் இருப்பதும் கடவுளே. பொருள் நிலையிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறது. அதுதான் பௌதீக பிரபஞ்சங்கள். இதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். பொருள்நிலை நிலை அறிவியல் சார்ந்த சோதனை மூலம் மட்டும் நீங்கள் ஆதாரம் என்று நினைப்பது கிடைக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் நீங்கள் என்றுமே கடவுளின் இருப்பை ஏற்கப்போவதில்லை. இது உங்களுக்கு நீங்களே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடு. ஆன்மீக அறிவியலின் மூலம் பல அறிய உண்மைகளை அறியலாம். இதை ஏற்க நீங்கள் தயாரில்லை. பிறகு எப்படி நீங்கள் உண்மையை உணரவோ அறியவோ முடியும்?

  7. நண்பர் விவேக்,

    முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுங்கள். இருக்கும் ஒன்றை ஏற்க மறுக்கிறேன் என்பதாக தோற்றம் காட்ட வேண்டாம். எது யதார்த்தமோ அதிலிருந்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் உட்பட பேரண்டம் இருப்பது என்பது பொது உண்மை. இதற்கு எந்த சான்றும் தேவைப்படாமல் அனைவரும் அறிந்தது தான். ஆனால் நீங்கள் கூறும் பல விசயங்கள் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியானது. முதலில் அதை நிரூபியுங்கள். அல்லது நடப்பு யதார்த்த உலகின் தளத்திலிருந்து அதை நிரூபிக்க முடியாது என்று நிங்கள் கருதினால், ஏன் அவ்வாறு முடியாது? அதற்கான காரணங்கள் என்ன என்பதை கூறுங்கள். அவைகளை பரிசீலித்து ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா? என முடிவு செய்வோம். கற்பனைகளாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் விசயங்களை அப்படியே நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

  8. நண்பர் செங்கொடி,

    உங்களுடைய கட்டுரையின் மூன்றாம் பகுதியில் நீங்கள் கூறியுள்ள பல கருத்துக்களுக்கு பதில் கூற வேண்டியிருக்கிறது. முதலில் அதை நிறைவு செய்கிறேன். பிறகு உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கிறேன்.

  9. செங்கொடி : ஒரு புரிதலுக்காக இப்படி வைத்துக் கொள்வோம், கடவுள் எனும் நிலை ஐயமான ஒன்று. இதற்கான தெளிவை எந்த அடிப்படையில் தேடுவது? இதில் என்னுடைய நிலைப்பாடு அறிவியலின் அடிப்படையிலேயே தேட முடியும் என்பது. ஏனென்றால் உலகின் அனைவரும் அறிவியலின் அடிப்படையிலேயே தங்களின் அனைத்து விளக்கங்களையும் பெறுகின்றனர்.

    விவேக் அத்வைதி : கடவுளின் இருப்பை பற்றிய ஐயம் எங்களை போன்றவர்களுக்கு இல்லை. பௌதீக உடல் சார்ந்த ஐம்புலன்களுக்கு புலப்படாததால் கடவுளின் இருப்பு சந்தேகத்திற்கு உட்பட வேண்டியதில்லை. வேறுபட்ட பரிமாணத்தில் இருப்புநிலை சாத்தியம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. தற்காலத்திய அறிவியலே 12 பரிமாணங்கள் வரை இருக்கலாம் என்று கூறுகிறது. இந்த மூன்றாம் பரிமாணத்தில் இருந்துகொண்டு அதில் தெரியாத எதுவும் வேறு எங்கும் இருக்க முடியாது என்பது அறிவுக்கு ஏற்புடையது அல்ல.

    அறிவியலின் அடிப்படையில் கடவுளை தேட வேண்டும் என்கிறீர்கள். எந்த அறிவியலின் அடிப்படையில் என்பதுதான் என்னுடைய கேள்வி. பௌதீக அறிவியல் மற்றும் ஆன்மீக அறிவியல் என்ற இரண்டு அறிவியல் தளங்கள் இருக்கின்றன என்று கூறுகிறேன். பௌதீக விஷயங்களைத்தான் பௌதீக அறிவியலால் அறிய முடியும் என்கிறேன். ஆன்மீக விஷயங்களை ஆன்மீக அறிவியல் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும் என்கிறேன். கடவுள் எல்லா நிலைகளிலும் இருக்கிறது என்று கூறுகிறேன். பௌதீக உலகமாகவும் ஆவி உலகமாகவும் சூன்ய உலகமாகவும் கடவுள் இருக்கிறது என்கிறேன். அதாவது இருக்கிற அனைத்தும் கடவுள்தான் என்கிறேன். வேறு வகையில் சொல்வதென்றால், கடவுள் மட்டுமே இருக்கிறது, கடவுளை தவிர வேறு எதுவுமே இல்லை என்கிறேன். ஒன்றுதான் எல்லாமுமாக இருக்கிறது. எல்லாமே ஒன்றாக இருக்கிறது. பௌதீக உலகத்தில் இருந்துகொண்டு(நாம் பௌதீக உலகத்திலும் ஆவி உலகத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறோம்!), இந்த பௌதீகமும் கடவுளின் ஒரு வெளிப்பாடு என்பதையும் மறுத்துக்கொண்டு, கடவுள் என்பதற்கு வேறு ஏதோ ஒரு ஆதாரம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள். இதற்கு காரணம், கடவுள் வேறு படைப்பு வேறு என்கிற இறையியல் கோட்பாட்டின்(separation theology) அடிப்படையில் நீங்கள் சிந்திப்பதுதான். இது மத கோட்பாடு. ஆன்மீக கோட்பாடு அல்ல.

  10. ஆட்படுத்தினால் கடவுள் காணாமல் போய்விடும் எனக் கருதுகிறார்கள். அதனால் அதன் இருப்பை ஏதோ ஒரு வழியில் மறுக்க முடியாததாக ஆக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் அறிவியலுக்கு அப்பாற்பட்ட வழியில் முயல்கிறார்கள்.

    விவேக் அத்வைதி : கடவுள் தன்னுடைய ஆற்றலை தனக்கு உள்ளேயே பிரபஞ்சங்களாக படைத்திருக்கிறது. படைப்பும் படைப்பாளரும் ஒன்றே. படைப்புக்கு வெளியே கடவுள் இல்லை. கடவுளுக்கு வெளியே படைப்பு இல்லை. அதனால்தான் கடவுளை நாம் நமக்கு வெளியே தேடாமல் நமக்கு உள்ளே பார்க்க வேண்டும். நமக்கு வெளியே உள்ள உலகமும் கடவுள். நமக்குள்ளே உள்ள உலகமும் கடவுள். நமக்கு உள்ளே கடவுளை நாம் உணரும்போது, வெளியே இருந்து எந்த ஆதாரமும் அதற்கு தேவை இல்லை. உங்களுக்கு வெளியே கடவுளை அவதானிப்பது அவசியமென்றால், கடவுளை உணருவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது. உதாரணத்திற்கு, இனிப்பு என்பதை நீங்கள் ருசிக்கும்போதுதான் அதை உணர முடியும். அந்த ருசியை உங்களுக்குள்ளேதான் நீங்கள் உணர முடியும். உங்களுக்கு வெளியே உள்ள சர்க்கரையை ஒரு பொருளாகத்தான் உங்களால் அவதானிக்க முடியுமே தவிர, அதன் இனிப்பை உங்களால் உணர முடியாது. அதை உணர வேண்டும் என்றால், அதற்கு உள்ளார்ந்த அனுபவம் வேண்டும். வெளிப்புற அவதானிப்பால் அது முடியாது. இந்த உண்மையை உணராததால், அல்லது உணர மறுப்பதால், நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் என்பதற்கு வெளிப்புற அவதானிப்பின் மூலம் ஆதாரம் வேண்டும், அது கிடைக்காததால் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். கடவுள் என்பதை உள்ளார்ந்த அனுபவம் மூலம் அறிந்து கொள்ளலாமே தவிர வெளிப்புற அவதானிப்பின் மூலம் நிரூபிக்க முடியாது.

  11. செங்கொடி : ஆத்திகர்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக தாங்கள் கருதும் கடவுளை சோதனைக்கு ஆட்படுத்த விரும்புவதில்லை. அல்லது, சோதனைக்கு ஆட்படுத்தினால் கடவுள் காணாமல் போய்விடும் எனக் கருதுகிறார்கள். அதனால் அதன் இருப்பை ஏதோ ஒரு வழியில் மறுக்க முடியாததாக ஆக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் அறிவியலுக்கு அப்பாற்பட்ட வழியில் முயல்கிறார்கள்.

    விவேக் அத்வைதி : கடவுள் தன்னுடைய ஆற்றலை தனக்கு உள்ளேயே பிரபஞ்சங்களாக படைத்திருக்கிறது. படைப்பும் படைப்பாளரும் ஒன்றே. படைப்புக்கு வெளியே கடவுள் இல்லை. கடவுளுக்கு வெளியே படைப்பு இல்லை. அதனால்தான் கடவுளை நாம் நமக்கு வெளியே தேடாமல் நமக்கு உள்ளே பார்க்க வேண்டும். நமக்கு வெளியே உள்ள உலகமும் கடவுள். நமக்குள்ளே உள்ள உலகமும் கடவுள். நமக்கு உள்ளே கடவுளை நாம் உணரும்போது, வெளியே இருந்து எந்த ஆதாரமும் அதற்கு தேவை இல்லை. உங்களுக்கு வெளியே கடவுளை அவதானிப்பது அவசியமென்றால், கடவுளை உணருவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது. உதாரணத்திற்கு, இனிப்பு என்பதை நீங்கள் ருசிக்கும்போதுதான் அதை உணர முடியும். அந்த ருசியை உங்களுக்குள்ளேதான் நீங்கள் உணர முடியும். உங்களுக்கு வெளியே உள்ள சர்க்கரையை ஒரு பொருளாகத்தான் உங்களால் அவதானிக்க முடியுமே தவிர, அதன் இனிப்பை உங்களால் உணர முடியாது. அதை உணர வேண்டும் என்றால், அதற்கு உள்ளார்ந்த அனுபவம் வேண்டும். வெளிப்புற அவதானிப்பால் அது முடியாது. இந்த உண்மையை உணராததால், அல்லது உணர மறுப்பதால், நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் என்பதற்கு வெளிப்புற அவதானிப்பின் மூலம் ஆதாரம் வேண்டும், அது கிடைக்காததால் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். கடவுள் என்பதை உள்ளார்ந்த அனுபவம் மூலம் அறிந்து கொள்ளலாமே தவிர வெளிப்புற அவதானிப்பின் மூலம் நிரூபிக்க முடியாது.

  12. செங்கொடி : என்னுடைய இருப்பை யாரும் ஐயுற முடியாது. ஏனென்றால் என்னுடைய இருப்பை சோதனைக்கு உட்படுத்தி தெளிவை வந்தடைய முடியும். எனவே நான் இருக்கிறேன் என்பது மட்டுமே அல்லது பேரண்டம் இருக்கிறது என்பது மட்டுமே கடவுள் இருக்கிறது என்பதற்கு சான்றாக இருக்க முடியாது. அதற்கு அப்பாலும் சான்று தேவைப்படுகிறது. அந்த சான்று அறிவியல் சோதனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது, இன்னின்ன காரணங்களால் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும் தேவை இருக்கிறது எனும் விளக்கம் வேண்டும். இவை இல்லாத வரை கடவுள் இல்லை என்பதே முடிவு.

    விவேக் அத்வைதி : ஆற்றல்தான் கடவுள்; ஆற்றல்தான் பிரபஞ்சங்களாக இருக்கிறது என்று கூறினேன். அந்த ஆற்றல் தன்னை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறது என்று சொன்னேன். ஆகவேதான் இந்த பேரண்டம் இருக்கிறது உண்மை என்றால் கடவுள் இருப்பதுவும் உண்மைதான் என்றேன். பொருள் என்பதும் ஆற்றலின் இன்னொரு வடிவம் என்றேன். அடிப்படையில் பொருள் வேறு, ஆற்றல் வேறு அல்ல. ஆற்றல் இருப்பது உண்மை; அந்த ஆற்றலே பொருளாக வெளிப்படுகிறது என்று அறிவியலும் கூறுகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா, இல்லையா? அதை ஏற்றால், வேறு என்ன சான்று வேண்டும்? ஆற்றலுக்கு தன்னை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது என்பதற்கு அறிவியல் சான்று வேண்டும் என்கிறீர்களா? அல்லது, ஆற்றலின் இருப்பை ஏற்கிறேன்; ஆனால் அதை கடவுள் என்று ஏற்க மாட்டேன் என்கிறீர்களா? இதற்கு பதில் கூறுங்கள். உங்களுக்கு மறுமொழி கூறுகிறேன்

  13. செங்கொடி : இந்தக் கருவிகளைக் கொண்டு எப்படி கடவுளை உணர்ந்தீர்கள் என்று கேட்டால் நண்பர் விவேக் கூறும் பதிலில் கற்பனை மட்டுமே இருக்கும்.

    விவேக் அத்வைதி : ஆன்மீக அனுபவம் தனிப்பட்ட ஒன்று. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். அனைவருக்கும் ஒரே அனுபவம் கிடைக்காததால் அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது. ஆன்மீக கருவிகளை பயன்படுத்தும்போது அதை பயன்படுபவருக்கு மட்டுமே அனுபவம் கிடைக்கும். அதை பயன்படுத்தாதவருக்கு அது கிடைக்காது. உதாரணத்திற்கு, நான் தியானம் செய்தால் அந்த அனுபவம் எனக்கு மட்டுமே கிடைக்கும். தியானம் செய்யாத நபருக்கு அந்த அனுபவம் எப்படி கிடைக்கும்? அந்த அனுபவம் பெறாத அந்த நபர் என்னுடைய அனுபவம் என்பது உண்மை இல்லை; அது வெறும் என்னுடைய கற்பனை என்ற முடிவுக்கு அவர் வருவது அறிவுக்கு ஏற்புடையதா? கடவுள் என்பதை உணர வேண்டுமானால் அதற்கு உள்ளார்ந்த அனுபவம் வேண்டும்; வெளிப்புற அவதானிப்பால் அது முடியாது என்று ஏற்கெனவே நான் கூறினேன்.

  14. செங்கொடி : எவ்வாறென்றால், அறிவியல் கருவிகள் கொண்டு ஒன்றை சோதிக்கிறோம் என்றால் சோதனையில் ஈடுபடும் யாரும் – அதாவது அந்தக் கருவிகளை ஏற்றுக் கொள்பவரும் ஏற்றுக் கொள்ளாதவரும் – வந்தடையும் முடிவு ஒரே மாதிரியானதாக இருக்கும். ஏனென்றால் அறிவியல் கருவிகள் புற உலகில் யதார்த்தமாக இருக்கும் பொருளை ஆய்வு செய்து அதன் இருப்பை உணர்த்துகிறது. எனவே சோதனை செய்பவனின் அக விருப்பம் எவ்வாறு இருந்தாலும் விடை வந்து விடும்.

    விவேக் அத்வைதி : புற உலகில் நீங்கள் காணுகிற எந்த பொருளும் அணுக்களால் ஆனது. அணுவை பிளந்துகொண்டே போனால் இறுதியில் அது ஆற்றலாக முடியும். இது அறிவியல் கூறுவது. இதை ஏற்கிறீர்கள் தானே? இங்கு அக விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அறிவியல் கூறும் ஆற்றலைத்தான் கடவுள் என்கிறேன். அதாவது, ஆற்றல் வடிவத்தையும் பொருள் வடிவத்தையும் கடவுள் என்கிறேன். ஆற்றல் இருப்பது உண்மை என்றால் கடவுள் இருப்பதும் உண்மைதான். ஏனென்றால் ஆற்றலும் கடவுள் ஒன்றே; வேறுவேறு அல்ல. பிறகு கடவுள் இருப்பை நிரூபிக்க உங்களுக்கு வேறு என்ன அறிவியல் சான்று வேண்டும்? ஆற்றலை கடவுள் என்று ஏற்க முடியாது என்பது உங்கள் நிலைப்பாடு என்றால், அதை தெரியப்படுத்தவும்.

  15. செங்கொடி : ஆனால் நண்பர் விவேக் கூறும் கருவிகளைக் கொண்டு கடவுளை அளக்க அல்லது சோதிக்க அல்லது உணர வேண்டுமென்றால் அங்கு அக விருப்பம் இன்றியமையாதது. அகவிருப்பம் இல்லாத யாருக்கும் மேற்கண்ட கருவிகள் கொண்டு சோதிக்கும் போது எந்த விடையும் கிடைக்காது. என்றால் அந்தக் கருவிகள் சோதிப்பது எதை அகநிலை விருப்பத்தையா? புறநிலை யதார்த்தத்தையா?

    விவேக் அத்வைதி : தியானம் போன்ற ஆன்மீக கருவிகளை சரியான முறையில் பயன்படுத்தினால் எவருக்கும் கடவுள் அனுபவம் கிடைக்கும். இங்கு குறிப்பிட்ட அக விருப்பம் எதுவும் தேவை இல்லை. கடவுள் இல்லை என்று சொல்பவரும் தொடர்ந்து தியானம் செய்தால் கடவுள் அனுபவம் பெறலாம்.

    இன்னொன்றையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அகநிலை விருப்பம்தான் புறநிலை யதார்த்தமாக உருவெடுக்கிறது. உங்களின் புறநிலை யதார்த்தத்தை நீங்கள்தான் உங்களின் அகநிலை விருப்பத்தால் படைக்கிறீர்கள். உங்களின் உலகத்தை நீங்கள்தான் படைக்கிறீர்கள். உங்களின் உள்ளே உங்களின் உணர்வாக என்ன இருக்கிறதோ அதுதான் உங்களுக்கு வெளியே புற யதார்த்தமாக இருக்கிறது.

  16. செங்கொடி : தன்னையறிதல் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆன்மீகவாதிகள் இச் சொல்லுக்கு அளிக்கும் விளக்கம் என்ன? தான் எனும் செருக்கு கொள்ளாதே, இந்த பேரண்டத்தைப் பார், அதில் நுணுக்கமாக இருக்கும் ஒழுங்கைப் பார், மீச்சிறிய அளவில் இருக்கும் பொருட்களுக்குள்ளும் பேரண்டம் போன்ற செயல்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதைப் பார்.இவைகளோடெல்லாம் ஒப்பிட்டு உன்னை உணர்ந்து கொள்வது தான், அதாவது உன்னை நீ மிகை மதிப்பு கொண்டிராமல் அனைத்தையும் இயக்கும் ஒரு முழுமையின் முன் உன்னை தாழ்த்திக் கொள். இவ்வாறு உணர்வது தான் தன்னையறிவது என்பது ஆன்மீகவாதிகளின் விளக்கம்.

    விவேக் அத்வைதி : தன்னை அறிதலை பற்றி மதம் பேசுவதில்லை; ஆன்மீகத்தில்தான் அது சொல்லப்படுகிறது. மேற்கண்ட உங்களின் கருத்து மதங்களின் அறிவுரை. மதவாதிகள்தான் அவ்வாறு பேசுவார்கள்; உண்மையான ஆன்மீகவாதிகள் அவ்வாறு கூறமாட்டார்கள். உண்மையை உணர்ந்தவர்கள் கடவுளும் படைப்பும் வெவ்வேறு அல்ல என்பதை அறிவார்கள். எனவே அவர்கள் கடவுளை வெளியே தேடுவதில்லை. அந்த வகையில் வெளியே ஒரு கடவுளுக்கு முன் தன்னை தாழ்த்திக்கொள்வது அல்லது உயர்த்திக்கொள்வது என்கிற கேள்வியே எழுவதில்லை. உடலின் ஒரு உறுப்பு மற்ற ஒரு உறுப்புக்கு மேல் தன்னை உயர்த்திக்கொள்வதோ அல்லது தன்னை தாழ்த்திக்கொள்வதோ அறிவுக்கு புறம்பான செயல் அல்ல. அதை போன்றதே படைப்பு தன்னை படைப்பாளருக்கு, அதாவது கடவுளுக்கு முன் தாழ்த்திக்கொள்வது அல்லது உயர்த்திக்கொள்வது.

    ஆன்மீகவாதிகளின் தன்னை அறிதல் குறித்த கருத்தை நீங்கள் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆன்மிகம் கூறும் தன்னை அறிதல் நீங்கள் குறிப்பிட்டதை போன்றது அல்ல. தான் உண்மையில் யார் என்பதை அறிதல்; தன்னுடைய ஆற்றல் என்பதை அனுபவப்பூர்வமாக அறிதல் என்பதுதான் தன்னை அறிதல். கடவுள் தன்னையே அறிதல்தான் இந்த படைப்பின் நோக்கம்.

  17. விவேக் அத்வைதி : தன்னை அறிதலை பற்றி மதம் பேசுவதில்லை; ஆன்மீகத்தில்தான் அது சொல்லப்படுகிறது. மேற்கண்ட உங்களின் கருத்து மதங்களின் அறிவுரை. மதவாதிகள்தான் அவ்வாறு பேசுவார்கள்; உண்மையான ஆன்மீகவாதிகள் அவ்வாறு கூறமாட்டார்கள். உண்மையை உணர்ந்தவர்கள் கடவுளும் படைப்பும் வெவ்வேறு அல்ல என்பதை அறிவார்கள். எனவே அவர்கள் கடவுளை வெளியே தேடுவதில்லை. அந்த வகையில் வெளியே ஒரு கடவுளுக்கு முன் தன்னை தாழ்த்திக்கொள்வது அல்லது உயர்த்திக்கொள்வது என்கிற கேள்வியே எழுவதில்லை.
    //உடலின் ஒரு உறுப்பு மற்ற ஒரு உறுப்புக்கு மேல் தன்னை உயர்த்திக்கொள்வதோ அல்லது தன்னை தாழ்த்திக்கொள்வதோ அறிவுக்கு புறம்பான செயல்.// அதை போன்றதே படைப்பு தன்னை படைப்பாளருக்கு, அதாவது கடவுளுக்கு முன் தாழ்த்திக்கொள்வது அல்லது உயர்த்திக்கொள்வது.

    ஆன்மீகவாதிகளின் தன்னை அறிதல் குறித்த கருத்தை நீங்கள் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆன்மிகம் கூறும் தன்னை அறிதல் நீங்கள் குறிப்பிட்டதை போன்றது அல்ல. தான் உண்மையில் யார் என்பதை அறிதல்; தன்னுடைய ஆற்றல் என்பதை அனுபவப்பூர்வமாக அறிதல் என்பதுதான் தன்னை அறிதல். கடவுள் தன்னையே அறிதல்தான் இந்த படைப்பின் நோக்கம்.

  18. செங்கொடி : மனிதன் ஒரு சமூக விலங்கு. தொடக்க காலத்தில் மனிதனின் அறிவும், விலங்கினங்களின் அறிவும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் தான் இருந்திருக்க முடியும். தெளிவாகச் சொன்னால் விலங்குகளிடமிருந்தே பல அறிதல்களை மனிதன் பெற்றிருக்கிறான்.

    விவேக் அத்வைதி : இதுவும் உண்மைக்கு புறம்பான கருத்து. டார்வினின் பரிணாமக்கொள்கையும் அதன் அடிப்படையிலான கம்யூனிச பார்வையும் மனிதனை அடிப்படையில் ஒரு விலங்காக சித்தரிக்கின்றன. மனிதன் சமூகமாக வாழ்வதால் அவனை ஒரு சமூக விலங்கு என்கின்றன. இது அறியாமையைத்தவிர வேறொன்றுமில்லை.

    மனித இனமும் விலங்கினமும் வெவ்வேறு தரமுடைய ஆற்றல்களால் உருவாக்கப்பட்டவை. கடவுள் பல்வேறு தரமுடைய ஆற்றல்களால் ஆனது. கடவுளுடைய ஆற்றல்களின் ஒவ்வொரு தரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகை படைப்பு படைக்கப்பட்டது. மனித இனம் உருவாக்கப்பட்ட ஆற்றல் உயர்ந்த தரமுடையது. அதைவிட குறைந்த தரமுடைய ஆற்றலைக்கொண்டு விலங்கினம் படைக்கப்பட்டது.

    விலங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. ஒவ்வொரு வகை படைப்பும் படைக்கப்பட்டபோதே பரிபூர்ண படைப்பாக உருவாக்கப்பட்டன. மனித இனம் படைக்கப்பட்டபோது இப்பொழுது இருப்பதைவிட பல வகையில் உன்னத நிலையில் இருந்தது. வீழ்ச்சிக்கான பாதையில் சென்றதால் இன்றைய நிலைக்கு மனித இனம் வீழ்ச்சியுற்றது.

  19. செங்கொடி : இப்போது குறிப்பிட்ட ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு சூழலில் என்ன மாதிரியான எதிர்வினைகளை ஆற்றுவான் என தெரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. பெரும்பாலான மக்கள் இதை இவ்விதமாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதில்லை. மேலெழுந்தவாரியாக அந்தந்த நேரத்து உந்துதல்கள் மூலமே செயல்படுவதாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒருபோதும் மனிதனின் செயல்கள் அவனது அறிதல்கள், சமூகப் பார்வை, சிந்தனை முறைகளுக்கு அப்பாற்பட்டு செய்யப்படுவதே இல்லை. இதை அறிவது தான் தன்னையறிதல் என்பது. அதாவது குறிப்பிட்ட ஒரு சூழலில் தான் எப்படி நடந்து கொள்வேன் என கற்பனையாக முன்கூட்டியே சிந்திப்பதற்கும், மெய்யாக அந்த சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதற்குமான இடைவெளி தான் தன்னையறிதல் என்பதன் அளவுகோல்.

    விவேக் அத்வைதி : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து அதன்படி ஒருவன் நடந்துகொள்வதே தன்னை அறிதல் என்று கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இது தன்னை அறிதல் அல்ல. மாறாக, தன்னையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை என்றுதான் அதை சொல்ல வேண்டும். குரு என்பவரின் தன்மைகளில் இதுவும் ஒன்று. இதை மெய்யுணர்வு வாழ்வு(conscious living) என்று கூறுகிறோம். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படும் உந்துதலின்படி எதிர்வினையாற்றுவது பழக்க வாழ்வு(habitual living) என்கிறோம்.

  20. செங்கொடி : இதைப் போல் தான் உள்ளுணர்வு என்பதும். மனிதனின் மூளைக்குள் புறத் தூண்டுதல் இல்லாமல் உதிப்பு என்று எதுவும் தோன்ற முடியாது. சமூகத்தில் மனிதன் அறிந்தவற்றின் விளைவாகவே தேவை கருதி சிந்தனை தோன்றுகிறது. இந்த சிந்தனைகளின் ஒழுங்கற்ற வடிவமே உள்ளுணர்வு. எப்போதெல்லாம் உள்ளுணர்வு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அதை எழுதி வைத்துக் கொண்டு தொகுத்துப் பார்த்தால் நம்முடைய சிந்தனைக்கும், நாம் அறிந்தவற்றுக்கும் எவ்வளவு நெருக்கமானதாக உள்ளுணர்வு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். இவ்வாறு தொகுத்துப் பார்க்காதவர்கள் அல்லது தொகுத்துப் பார்க்க விருப்பமில்லாதவர்கள் தான் தன்னுடைய அறிதலுக்கும் சமூகத்துக்கும் தொடர்பற்ற ஏதோ ஓர் ஆற்றல் தன்னுள் இந்த உள்ளுணர்வை ஏற்படுத்தியது என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்.

    விவேக் அத்வைதி : உள்ளுணர்வு என்பது எது என்பதை பற்றிய உங்களின் மேற்கண்ட கருத்து பிழையானது. படைப்புகள் அனைத்தும் எப்பொழுதும் கடவுளோடு தொடர்பில் இருக்கின்றன. கடவுள் எல்லா படைப்புகளோடும் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கிறது. இது மூன்றுவகையான தொடர்பு முறைகளில் நடக்கிறது.அவை :1.உணர்ச்சி 2.எண்ணம் 3.வார்த்தை. இந்த மூன்றில் உணர்ச்சியே மிக சிறந்த தொடர்பு முறை. இந்த மூன்று முறைகளில் கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல்கள்தான் உள்ளுணர்வு.

  21. செங்கொடி : எனவே, ஒன்று மாறாமல் இருக்கிறதா? நிலையாக இருக்கிறதா? என்பது தெளிவை அடைய உதவாது. மாறினாலும் நிலையாக இருந்தாலும் அது சமூகத்துக்கு சரியாக இருக்கிறதா தவறாக இருக்கிறதா என்று பார்ப்பதே தெளிவைத் தரும், பொருத்தமானதாக இருக்கும்.

    விவேக் அத்வைதி : எது நிலையற்றதோ, மாறக்கூடியதோ அது உண்மையானது அல்ல; அது ஒரு மாயை(illusion). எது நிலையானதோ அதுவே உண்மையானது. உங்களின் வாதத்தின்படி, ஒன்று மாறக்கூடியதா, நிலையானதா என்று பார்ப்பது தெளிவை அடைய உதவாது என்றால், நீங்கள் எப்படி மாறக்கூடிய அறிவியல் அடிப்படையில் சான்று கிடைக்காததால் கடவுள் என்பது இல்லை என்கிற தெளிவை அடைந்தீர்கள் என்று கூறுங்கள்.

    தனி மனிதனுக்கோ அல்லது சமூகத்திற்கோ எது சரி, எது தவறு என்று பார்ப்பது சரியான பலனை தராது. ஏனெனில் சரி, தவறு(right or wrong) என்பது கிடையாது. எது வேலை செய்யக்கூடியது(what works), வேலை செய்யாதது(what does not work) என்பதை, அதாவது எது சரியான பலனை தரக்கூடியது, தராதது என்பதை பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்; வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

  22. செங்கொடி : இரண்டாவதாக, அறிவியல் என்பது புனிதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது நடைமுறையில் பயன்படுத்துவதற்கானது. நடைமுறையில் பயன்படுத்தும் போது அது பயன்படுத்தப்படும் நோக்கத்தை நிறைவேற்றாவிட்டால் அதை மாற்றத்துக்கு உட்படுத்தி தான் ஆக வேண்டும். அதற்குப் பெயர் தான் வளர்ச்சி. அறிவியல் வளர்ச்சியடைய வேண்டுமா? தேங்கி நிற்க வேண்டுமா?

    விவேக் அத்வைதி : அறிவியல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கக்கூடியது. அதன் வளர்ச்சிக்கு முடிவு இல்லை.என்றுமே இறுதியான வளர்ச்சியை அடையாத, அதாவது என்றுமே முழுமை பெறாத அறிவியலின் அடிப்படையில் நீங்கள் விரும்புகிற வகையில் சான்று கிடைக்காததால் கடவுள் என்ற ஒன்று இல்லை என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்? என்றுமே முழுமை அடையாத அறிவியலை பயன்படுத்தி நான் விரும்புகிற முறையில் சான்று கிடைக்காததால் கடவுள் இருக்கிறதா அல்லது அது இல்லையா என்று என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று நீங்கள் கூறலாமே தவிர, கடவுள் இல்லை என்ற ஒருதலைப்பட்சமான முடிவுக்கு நீங்கள் வர முடியாது. கடவுள் இல்லை என்று நீங்கள் முடிவு செய்தால் அந்த முடிவுக்கும் தர்க்க அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது உங்களின் தனிப்பட்ட, ஒருதலைப்பட்சமான முடிவு தானே அன்றி வேறொன்றுமில்லை.

  23. செங்கொடி : இந்த மாற்றங்களைத் தான் ஆன்மீகவாதிகள் அறிவியலின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். அதாவது, அறிவியல் தவறின் மீது நிலைத்திருக்கவில்லை, சரியானதை நோக்கி மாறிக் கொண்டே இருக்கிறது. நிலையானதாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பதனால் அது தவறானது என்கிறார்கள்.

    விவேக் அத்வைதி : ஆன்மீகவாதிகள் அறிவியலை ஒதுக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. மாறாக தற்கால அறிவியல் இன்னும் குழந்தை பருவத்தில் இருக்கிறது; நிறைய வளர வேண்டி இருக்கிறது என்கிறார்கள். அது வளர, வளர அது ஆன்மீகத்தில் போய் முடியும் என்கிறார்கள். அப்படி ஒரு வளர்ந்த நிலை அறிவியல்தான் ஆன்மீக அறிவியல் என்கிறார்கள். வளர்ந்த அறிவியல் மூலம் கண்ட உண்மைகளை வளராத அறிவியலோடு ஒப்பிட்டு உண்மையை மறுப்பது அறியாமை என்கிறார்கள்.

    செங்கொடி : இதற்கு மாற்றமாக ஆன்மீகவாதிகள் முன்வைக்கும் வேதப் புனிதங்கள் மீது எந்த வித ஆய்வுகளையும் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருப்பதில்லை. ஆய்வு நடத்த முன்வருவோரையும் புனிதங்களுக்கு களங்கம் என்ற பேரில் தாக்குதல் நடத்தி ஆய்வுகளை முடக்குகிறார்கள்.

    விவேக் அத்வைதி : ஆன்மீகவாதிகளுக்கு வேதப்புனிதங்கள் என்று எதுவும் இல்லை. மதங்களை பின்பற்றுபவர்கள் வேண்டுமானால் சில புத்தகங்களை புனிதங்களாக பாவிக்கலாமே தவிர உண்மையான ஆன்மீகவாதிகள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. உண்மை என்பது நிலையானது அல்ல. இது ஒன்றுதான் உண்மை என்று எதுவும் இல்லை. என்னுடைய உண்மையும் உங்களுடைய உண்மையும் வெவ்வேறாக இருக்க கூடும். எனவே மாறாத புனிதம் என்ற ஒன்று இல்லை என்பது ஆன்மீக உண்மை. கடவுளும் மாறிக்கொண்டே இருக்கிறது; பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது.

  24. செங்கொடி : ஆக, கூட்டுழைப்பு, சமூகம், இயற்கையின் மீதான அறிதல்கள் ஆகியவைகளைக் கொண்டே மனிதன் உருவாகியிருக்கிறான். மனிதன் இன்றுவரை கண்டிருக்கும் அத்தனை வளர்ச்சிகளையும் இவைகளைக் கொண்டு தான் சாதித்திருக்கிறான்.

    விவேக் அத்வைதி : இன்றைய அறிவியல் வளர்ச்சியை விட பல வகைகளில் உன்னத வளர்ச்சி அடைந்த நாகரிகங்கள் இந்த பூமியில் முன்பு இருந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, லெமூரியா, அட்லாண்டிஸ் நாகரிகங்கள். நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிற மனித இனம் ஹோமோ எரெக்டஸ் என்கிற இன்றைய மனித இனத்தைவிட பல வகையில் உயர் ஆன்மீக வளர்ச்சி பெற்று இருந்தது. உண்மையான வளர்ச்சியை தொழில்நுட்ப வளர்ச்சியை ஒப்பிட்டு தீர்மானிக்க முடியாது. உண்மையான வளர்ச்சி என்பது இயற்கையோடு இழைந்து வாழும் தன்மையில்தான் இருக்கிறது. ஆகவேதான் தொழில்நுட்பம் ஒரு கட்டத்திற்கு மேல் ஆபத்தானதாக மாறிவிடுகிறது. இன்றைய மனித இனத்தின் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி அடைந்த வேற்று கிரக, வேற்று பரிமாண ஜீவன்களின் உதவியால்தான் சாத்தியமானது.

  25. வணக்கம்!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை
    வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி!
    http://www.eppoluthu.blogspot.in

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s