நேற்று (18.02.2019) ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்திரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, உச்ச நீதி மன்றத்துக்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்றும் கூறியிருக்கிறது. இது போராடிய மக்களுக்கு தற்காலிக வெற்றி தான் இன்னும் வழக்கு நீள்கிறது. சிறப்புச் சட்டம் இயற்றுவதே தீர்வு என்பது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மக்களின் விருப்பம். நிற்க.
தீர்ப்பு வழங்கப்பட்ட இதே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கச் செயற்பாட்டாளர் முகிலன் திடீரென்று காணாமல் போய் விட்டார், அவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்பது தான் அந்த வழக்கு. திடீரென ஏன் அவர் காணாமல் போக வேண்டும்? அவர் காணாமல் போவதற்கு சில நேரத்திற்கு முன்பு ஓர் காணொளி ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, 16.02.2019 அன்று ஓர் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர்தான் முகிலன் காணாமல் போய் விட்டார். அவரை கண்டு பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சென்னை பெருநகர ஆணையருக்கும், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அது என்ன காணொளி ஆவணம்? மே 22 அன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணி ஒன்று துத்துக்குடி மக்களால் நடத்தப்பட்டது. அமைதியாக நடந்த இந்த பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு கலவரமாகி விட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் யார் சமூக அந்த விரோதிகள் என்பதற்குத் தான் அவரவர் தங்கள் வர்க்க நலன், ஓட்டு அரசியல் பலன்களுக்கு ஏற்ப உபநிடதம் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
யார் அந்த சமூக விரோதிகள்? என்ற மக்களுக்கு சந்தேகமே இல்லாமல் விடை தெரிந்த அந்தக் கேள்விக்குத் தான் காணொளி ஆதாரங்களுடன் பதில் கூறுகிறது அந்த ஆவணப் படம்.
அந்த ஆவணப் படத்தைக் கண்ட பிறகு யார் அந்த சமூக விரோதிகள் என்பதும், முகிலனை யார் கடத்தியிருப்பார்கள் என்பதும் உங்களுக்கே தெரியவரும்.