
செய்தி:
கோவை ஹோப்காலேஜை சேர்தவர் இளவரசன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, தட்டியால் அடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. மாநகராட்சி பேனர் வைத்த பின்னர், இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறி, எங்களை அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பேனர் வைத்திருந்தார். இதையடுத்து இளவரனுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசில், ”இளவரசன் மனைவிக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறினார். ஆனால், வெளியே சென்று டெஸ்ட் எடுத்திருக்கிறார். இளவரசனும், அவரது குடும்பத்தினரும் ஆரம்பத்தில் இருந்தே நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவில்லை”என்று கூறி இருந்தது. மேலும், மாநகராட்சியின் புகாரின் பேரில் இளவரசன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
செய்தியின் பின்னே:
அரசு நிறுவனங்கள், இப்படி தன்னிச்சையாக கொரோனா நோயாளிகளாக அறிவிப்பதும், முடக்கி வைப்பதும், தட்டியால் முற்றிலும் அடைத்து வீட்டுக் காவலில் இருப்பது போல் செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது? சமூக ஊடகங்களில், மனிதாபிமானம் இல்லாமல், இரக்கமே இல்லாமல் வீட்டை தட்டி வைத்து அடைத்திருக்கும் பலநூறு புகைப்படங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன.
முதலில், தனிமைப்படுத்துதல் என்றால் இப்படி தகரத் தட்டி வைத்து அடைத்து பேனர் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தது யார்? எந்த அடிப்படையில் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? அமித்ஷா தொடங்கி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் வீடு வரையில் அவர்களின் வீடுகளை தட்டி வைத்து மறைத்து பேனர் வைத்தார்களா?
இப்படி தட்டி வைத்து அடிபதற்கு ஒதுக்கப்படும் கொரோனா நிதியில் முறைகேடு செய்யப்படுகிறது என்று சமூக வலை தளங்களில் செய்தியாகவும், ஆதாரமாக தொடர்புடையவர்கள் பேசும் ஒலிப்பதிவுகளும் உலவுகின்றன. இதுவரையில் அரசாங்கமோ, அரசு அதிகாரிகளோ, அல்லது தொடர்புடையவர்களோ எதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?
அரசு எடுத்த சோதனையில் கொரோனா என்றும், தனியார் மருத்துவமனையில் எடுத்த சோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்திருக்கிறது என்றால், எது சரியான முடிவு? அதை யார் எப்படி உறுதிப்படுத்துவது? எவ்வளவு பேர் இதுவரை இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள்?
இளவரசனும் அவர் குடும்பத்தினரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று மாநகராட்சி அளித்த புகாரில் கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டை தட்டி வைத்து மறைத்திருக்கிறார்கள், பேனர் வைத்திருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன நோய்த் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை?
இதில் என்ன குற்ற நடவடிக்கை இருக்கிறது? எதற்காக இந்தக் கைது? தங்களுக்கு கொரோனா இல்லை என்று வந்த முடிவை பேனராக இளவரசன் வெளியிட்டிருக்கிறார். இது போல் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்று அரசு அறிவித்த முடிவை வெளியிடுமா? கொரோனா இல்லாத போது தங்களுக்கு கொரோனா என்று பேனர் வைத்ததற்கு எதிர் நடவடிக்கையாக எங்களுக்கு கொரோனா இல்லை என்று பேனர் வைத்திருக்கிறார். இது எப்படி தவறு? ஏன் அவர் கைது செய்யப்பட வேண்டும்?
என்னங்கடா இது? புறாவுக்கு போரா? பெரிய அக்கப் போராக அல்லவா இருக்கிறது.
அதாகப்பட்டது, “நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு ரெண்டாடு கேக்குமாம்” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 13/2020
அரசு செய்தது தவறு. வழக்கு நிற்காது. மருத்துவமனைக்குச் சென்றதை குற்றம் என்பது முட்டாள்தனமானது.