
செய்தி:
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பணி நியமனம் தொடர்பாக ஹரி கிஷன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு உரிய தகவல் அளிக்காத மத்திய தகவல் ஆணையம், ஹரி கிஷனுக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதிதது. இதனால், இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விண்ணப்பதாரரின் மகள் குடியரசு தலைவர் மாளிகையில் பணி வாய்ப்பிற்காக விண்ணப்பித்த தகவலை குறிப்பிடவில்லை. அவரது மகள் பணி வாய்ப்பு பெற முடியாததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மற்ற விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற விண்ணப்பித்து இருப்பது தெரிய வருகிறது. எனவே, விண்ணப்பதாரர் உள் நோக்கத்துடன் தகவல் ஆணையத்தை அணுகி உள்ளது தெரிய வருகிறது. எனவே, மத்திய தகவல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானது என்று தீர்ப்பளித்தார். மட்டுமல்லாமல், தகவல்கள் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பணி நியமனத்தில் 10 பேர் போலிச் சான்றிதழ்களுடன் பணி வாய்ப்பு பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியின் பின்னே:
த.அ.உ.ச (தகவல் அறியும் உரிமைச் சட்டம் RTI) என்ற ஒன்று இருப்பதே இந்த அரசில் மக்களுக்குத் தெரியாமல் ஏதேதோ நடக்கிறது என்பதை போட்டு உடைக்கிறது. இரகசிய காப்பு உறுதி மொழி என்பதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அதேநேரம், இந்த உரிமை மக்களுக்கு வேண்டும் எனும் மெய்யான காரணத்தினால் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. அரசு மக்களுக்காகத் தான் நடக்கிறது என்று படம் காட்ட வேண்டிய நெருக்கடி இருந்ததினால் ஏமாற்றாகத் தான் கொண்டுவரப்பட்டது. அதிலும் பாஜக வந்த பிறகு த.அ.உ.ச வை செயலற்றதாக்கும் அத்தனையும் திருத்தங்கள் என்ற பெயரில் ஏற்கனவே செய்துவிட்டிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாகத் தான் இந்தத் தீர்ப்பை பார்க்க வேண்டும்.
சிலர் போலிச் சான்றிதழ் கொடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய ஹரி கிசனின் மகளுக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் த.அ.உ.சவையும், பின்னர் நீதி மன்றத்தையும் நாடியிருக்கிறார். அப்படி நாடியிருப்பதாலேயே அவர் மகளிடம் வேலையில் சேர்வதற்கான தகுதி இருந்திருக்கிறது என்பதை உணரலாம். அப்படி இருந்ததால் தான் அவர் போராடியிருக்கிறார் என்று கொள்ளலாம். ஆனால் கிடைத்தது என்ன?
மத்திய தகவல் ஆணையம் 25,000 ரூபாய் தண்டத் தொகை விதித்திருக்கிறது. இதுவே அநீதி, இந்த அநீதியை எதிர்த்து நீதி மன்றம் சென்றிருக்கிறார். அங்கு தண்டத் தொகை விதித்தது சரிதான் என்று சொன்னதுடன் மட்டுமல்லாமல், இனி யாரும் காரணத்தை குறிப்பிடாமல் கேள்வி கேட்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார் நீதிபதி. என்னங்கடா இது .. .. ..?
அதாகப்பட்டது, “கொடும கொடுமன்னு கோவிலுக்கு போனானாம் ஒருத்தன், அங்க ரெண்டு கொடும ஜிங்கு ஜின்குன்னு ஆடிக்கிட்டு நிண்ணுச்சாம்” அம்புட்டுதேன், சொல்லிப்புட்டேன்.