ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்

பல எச்சரிக்கை அறிகுறிகுறிகளும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெருமளவிலான ஆதாரங்களும் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதையே குறிக்கின்றன.கடந்த ஐம்பதாண்டுகளில், உலகம் முழுவதும் விந்து எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. அசாதாரண விந்தணு மாற்றங்களும், ஆண் மலட்டுத் தன்மையின் விகிதமும், பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது.

கேள்வி என்னவென்றால், “ஏன்”?

நாற்பதாண்டுகளாக ஃப்ளோரிடாவில் ஒரு மாசடைந்த ஏரியில் வாழும் அலிகேட்டர் முதலை இனத்தை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள், இத்தனை ஆண்டுகளில் அவற்றின் ஆண் தன்மை 90% குறைந்திருப்பதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலத்தில் அந்த ஏரி டிடிடீ போன்ற ரசாயண பூச்சிக் கொல்லிகளால் அசுத்தமானதும் பின்னர் வேறு பல ரசாயணப் பொருட்களும் சேர்ந்து மாசு அதிகரித்ததுமே என்கின்றனர். அலிகேட்டர் முதலைகளின் உடலமைப்பு அப்படியே ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்திப் போவதால் அவற்றுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஆண்களுக்கும் அப்படியே, அதே விதத்தில் நடந்திருக்கும் என்கிறார்கள்.

கடந்த சில பத்தாண்டுகளில், பாலின வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பியின் உற்பத்தி ஆண் குழந்தைகளிடையே பெருமளவு குறைந்திருக்கிறது. சில செயற்கை ரசாயணங்கள் இச்சுரப்பியின் உற்பத்தியை குறைக்கவும், முழுமையாகத் தடுக்கவும் வல்லதாக இருப்பதால் அவை அவர்களின் பாலின உறுப்பு வளர்ச்சியில் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். மனித உடலின் அமைப்பை மனிதனே தகர்த்துக் கொள்ளும் இந்நிலை, இருபதாம் நூற்றாண்டின் ரசாயணப் புரட்சியினால் ஏற்பட்ட எதிர்பாராப் பின்விளைவு.

இரசாயண உலகத்தின் ஆயுள் என்பது கடந்த 100 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அது இவ்வுலகை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. இரண்டாம் உலகப் போர் தான் புதிய பொருட்களுக்கான தேவையை துரிதப்படுத்தியது. புதிய மருந்துகள், உணவு சேர்க்கைப் பொருட்கள், செயற்கை ரப்பர் நைலான், பூச்சிக் கொல்லிகள், என்று எண்ணற்ற ரசாயணப் பொருட்கள் அதன் பின்பே உருவாக்கப்பட்டன. 1950களின் தொடக்கத்தில் தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கான புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கின. அது பின்னர் ஆயிரக்கணக்கான புதிய பொருட்களாக வளர்ந்தன. அவற்றில் ஒரு பொருள் நம் வாழ்க்கை முறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அது, ‘ப்ளாஸ்டிக்’.

நம் நவீன வாழ்க்கை முறையை எளிதாக்கிய அந்த ப்ளாஸ்டிக் தான் இன்று ஆண் இனத்தையே அழிக்கவல்ல ஒரு உயிர்க்கொல்லியாக மாறியிருக்கிறது. குறிப்பாக இதனால் பாதிக்கப்படுவது வளர்ந்த ஆண்கள் அல்ல, குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளே. ஆனால் இவர்களைக் காட்டிலும் அதிகம் பாதிப்படையக் கூடியவர்கள் இனி பிறக்கப் போகும் சிசுக்களே..

சமீப காலம் வரை தாயின் நஞ்சுக்கொடி தடுப்புச்சுவர் (placental barrier), மாசுக்கள் தாயிடமிருந்து குழந்தைக்குக் கடத்தப்படாமல் தடுக்கும் என்று மருத்துவர்கள் நம்பினார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

கரு உருவான பின்னான பல வாரங்களுக்கு கரு முட்டை ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பதில்லை. பாலின ஹார்மோன்களின் சுரப்பிற்குப் பின்னரான நிகழ்வில் தான் சிசுவின் பாலினம் இறுதியாகிறது. அதன் பின்னரே ஆண் இனப்பெருக்க உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன. அச்சமயம் அந்த ஆண் சிசு இரசாயணங்களுக்கு ஆட்படும்/வெளிப்படும் தன்மை 200% அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பின்னர், பிறப்புறுப்பு குறைபாடுகள் காரணமாகவும் மிகக் குறைந்த அளவிலான ஹார்மோன் சுரப்பு காரணமாகவும் ஒரு ஆண்பிள்ளை முழுமையான ஆண்தன்மை கொண்ட ஆணாக வளர முடியாத, சரி செய்ய முடியாத நிரந்தர பாதிப்புகளுக்கு உள்ளாவான் என்கிறார்கள்.

ஆண் பிள்ளைகளுக்கு உண்டாகியிருக்கும் இந்த ரசாயண ஆபத்து ஒட்டுமொத்த மனித இனத்தின் இருத்தலுக்குமான ஆபத்தாக மாறக்கூடும். பல புதிய ஆராய்ச்சிகள், ஆண் சிசுக்களே அதிக கருச்சிதைவுகளுக்கு (miscarriages) ஆளாவதாகத் தெரிவிக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ரசாயணங்களுக்கு வெளிப்படுதல். ஒரு கருத்தரித்தலுக்கும் சிசுவாதலுக்கும் இடையில் பற்பல ஆண் குழந்தைகள் ஜனிக்காமலே மரணிக்கின்றன.

1970 முதல் மிகப் பெருமளவு பெருந்தொழில்மயமாக்கப்பட்ட 20 நாடுகளில் கூரிய அளவில் ஆண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. மாசு என்பது வெறும் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை மட்டுமே அல்ல. அது நம்முள் இருக்கிறது. நம் அனைவருள்ளும் குவிந்துகொண்டே இருக்கிறது. கிட்டதட்ட ஆண் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியை பாதிக்கும் அனைத்து ரசாயணப் பொருட்களும் பெட்ரோலியத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அதில் தாலேட்ஸ் (Pthalates) என்ற வகை ரசாயணம் நாம் தினமும் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் போன்ற அழகுசாதனப் பொருட்கள் முதல் மருத்துவ IV tube, உணவு பேக்கேஜிங் பொட்டலங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் வரை அனைத்திலும் இருக்கிறது.

தாலேட்ஸ் குறித்த அமெரிக்க CDCயின் ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்காவில் உள்ள அனைவர் உடலிலும் தாலேட்ஸ் இருப்பதாகச் சொல்கிறது. குறிப்பாக, இனப்பெருக்க காலத்தில் உள்ள பெண்களின் உடலில் அதிகம் இருக்கிறது, அதிலும் குறிப்பாக பிறக்கும் ஆண் குழந்தைகளின் உடலில் இன்றியமையாத பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பிரசவித்த தாயின் உடலுக்கும் தாய்ப்பாலுக்கும் பிறக்கும் ஆண் குழந்தையின் வழக்கமான பால் வளர்ச்சி மாறுபாடுகளுக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. தற்போது தாலேட் சிண்ட்ரோம் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் அது,

– சிறிய ஆண் குறியுடன் பிறத்தல்

– ஆண்மைக் குறைவு

– விதைப்பை இறக்கம்

ஆகியவற்றை உள்ளடக்கியது.

தாலேட்ஸ் சாஃப்ட் டாய்ஸ், ஷாம்பூ, கண்டீஷனர்கள், ஸ்கின் க்ரீம்கள் என நாம் தினம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் இருக்கிறது. “நான் ஒன்றும் அதை சாப்பிடவில்லையே, தோலில், முடியில் தானே பயன்படுத்துகிறேன்?” என்று நீங்கள் கேட்டால், யோசித்துப் பாருங்கள் நீங்கள் தோலில் தடவிய க்ரீம் எங்கே செல்கிறது? காற்றில் கரைந்து விடுகிறதா? உடல் தானே தானே அதை உறிஞ்சிக் கொள்கிறது??

இவற்றையெல்லாம்விட தாலேட்ஸ் மிக முக்கியமான ஒரு இடத்தில் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்பட்டு பிறந்த குழந்தையின் உடலில் பிறந்த உடனே உள் துளைத்துச் செல்கிறது.. எங்கு? எப்படி? என்பதையும், மேலும் தாலேட்ஸ் தவிர்த்து பிஸ்பீனால், பாலிவினைல் போன்ற ப்ளாஸ்டிக் பொருட்கள் நம் அன்றாடங்களின் மூலம் எதிர்கால ஆண் இனத்துக்கும், ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் எவ்வாறு உலை வைக்கிறது என்றும் தெரிந்துகொள்ள:

The Common Chemicals That Are Making Men Infertile – The disappearing Male என்ற 42 -நிமிட டாக்குமென்டரியை முழுமையாகப் பார்க்கவும்.

பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

முதற்பதிவு : முகநூல் (Anitha N Jayaram)

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்